Tuesday, September 30, 2008

"விநாயகர் அகவல்" -- 13

"விநாயகர் அகவல்" -- 13



முந்தைய பதிவு

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி [68]



சிவனை உணர்ந்து சிவத்தில் திளையும்

திருவடி பணியும் அடியவர் எல்லாம்

அடியவர் என்பதைக் காட்டிடும் புனிதத்

தவமுனி வேடமும் தவத்திரு நீறும்

தாங்கியே தம்மைக் காட்டிக் கொள்வர்


ஆனைமுகனின் அருள்வழி அடைந்த

ஔவைப்பாட்டியும் தானும் அதுபோல்

தவநிறை வேடம் தாங்கிடச் செய்து

மந்திரமாகும் சுந்தர நீற்றைத்

தன்னில் அணிந்து தன்னைப் போலும்

இறையருள் நிறைந்த அடியவர் கூட்டம்

என்றும் தன்னுடன் தங்கிட வேண்டி

தாயினும் சிறந்த தயாவாய் ஆளும்

சங்கரன்மகனின் தாள்பணிகின்றாள்



அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் [70]


ஐந்தெழுத்து மந்திரத்தின் சுந்தரத்தைச் சொல்லிடுவோம்


'ந'கரமிங்கு மறைக்கும்பொருள்

'ம'கரமிங்கு மும்மலங்கள்

'சி'கரமென்னும் பதி உண்மை

'வ'கரமவன் அருட்கருணை

'ய'கரமது பசுவுண்மை


சொந்தமான பதியை விட்டுப்

பிரிந்துவந்த பசு ஆன்மா

திரும்ப அதை அடையாவண்ணம்

மறைந்திருந்து அதைத் தாக்கும்

மலமென்னும் மகரம் இங்கு!


பதியவனின் அருட்கருணை

பாய்ந்துவந்து தடையழிக்க

மறைப்பிங்கு விலகியோடி

பசுவிங்கு பதி அறியும்!

நமசிவயவின் பொருளிதுவே


ஐந்தெழுத்து மந்திரத்தை

அனுதினமும் இடைவிடாது

அன்புடனே ஓதிவரின்

அழுந்திவரும் ஆன்மாவும்

பேரின்பப் பேறடையும்


ஓமென்னும் பிரணவத்தின்

துணையின்றி தனியாக

ஓதுகின்ற பெருமையிங்கு

பஞ்சக்கரம் ஒன்றுக்கே

இருப்பதனை உணர்ந்திடுவோம்


இத்தகைய பேறுடைய

பஞ்சக்கர மந்திரத்தின்

உட்பொருளை கணபதியும்

ஔவைக்கு விளக்கிவிட

அன்னையிவள் ஆர்ப்பரிக்கிறாள்!


[பஞ்சக்கரம்= பஞ்ச+ அக்கரம்= பஞ்ச அக்ஷரம்= நமசிவய]



"சிவாய எனச் சொல்லி மூச்சிழுத்து நிறுத்திவிட்டு

நம:வெனச் சொல்லியதை வெளியினிலே விட்டுவிட

பலகாலப் பயிற்சியினால் தொங்கிநிற்கும் குண்டலினி

தானாகக் கிளர்ந்தெழுந்து மூலாதாரச் சக்கரத்தில்

தானாக நிலைகொண்டு ஒவ்வொன்றாய் மேலெழும்பி

சஹஸ்ராரம் சென்றடைய, சத்தத்தில் சதாசிவமும்

சித்தத்தில் சிவலிங்கமும் தானாகத் தோன்றிவிட

மூண்டெழுந்த முக்கோணச்சுடரினிலே மலமெல்லாம் சாம்பலாகும்

திருநீறாய் அதைக்கொண்டு நிர்மலனாய்த் திகழ்ந்திடுவாய்"

எனவந்த ஆனைமுகன் அருட்கருணைத் திறத்தினிலே

ஔவையிவள் அகமகிழ்ந்து ஆழ்நிலையில் அமிழ்கின்றாள்!



தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே! [72]



"தானே அது" வென்னும் தத்துவத்தின் பொருளாகி

நாடிவந்த எவருக்கும் அருள்வழங்கும் அன்பனிவன்

வாடிநின்ற எவர்துயரும் பொடியாக்கிப் போக்கிடுவன்

ஆனைமுகக் கடவுளிவன் அறுகம்புல் அணிந்திடுவான்


எளியனான என்றனையும் ஏற்றிவிடக் கருணைகொண்டு

தவஞானத் தத்துவத்தை வித்தகனாய் எனக்குரைத்து

அருள்ஞான உபதேசம் தந்தென்னை ஆட்கொண்ட

நின்னடியைப் பணிந்திங்கு திருவடியில் சரண்புகுந்தேன்


என்றிங்கு முடிக்கின்றாள் தமிழன்னை ஔவைப்பாட்டி

திருவடியில் நூல் தொடங்கி திருவடியில் தாள்முடித்தாள்

கருணையுளம் மிகக்கொண்டு தமிழரெலாம் வாழவென்று

கருத்தெல்லாம் பாட்டாகக் கவினுறவே சொல்லிவைத்தாள்


செந்தமிழின் செல்வமென எமக்கெல்லாம் வந்தயிவள்

தாளடியை யான் பணிந்து தெரிந்தவரை சொல்லிவைத்தேன்

சொல்லவைத்த ஔவைக்கு என்வணக்கம் சொல்லிவைத்தேன்

சொலப்பணித்த கணபதியின் தாளிணையில் நான் பணிந்தேன்


சொற்குற்றம் பொருட்குற்றம் இதிலிங்கு இருக்குமெனில்

குற்றமெலாம் எனக்கெனவே எனசொல்லிப் பணிகின்றேன்

நிறையெதுவும் இதிலிருப்பின் முன்சொன்ன பெரியோர்க்கு

அத்தனையும் சேருமென்று சொல்லியிங்கு முடிக்கின்றேன்!



"வித்தக விநாயகன் விரைகழல் சரணே!"


"விநாயகர் அகவல்" முற்றிற்று.


[நாளை நிறைவுறும்!]

Read more...

Sunday, September 21, 2008

"விநாயகர் அகவல்" -- 12

"விநாயகர் அகவல்" -- 12
முந்தைய பதிவு

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி [64]



உருவாய் வந்து திருவருள் செய்தவன்

குருவாய் வந்து அகவிருள் தொலைத்தவன்

அருவுருவாகி அகத்துள் ஆடுவான்

அவனே உருவிலா சதாசிவம் ஆகும்


சிவமாய், சக்தியாய், விந்துவாய், நாதமாய்

அருவம் காட்டி ஐந்தொழில் புரிபவன்

சதாசிவமாகி விண்வெளி நிற்பான்

உள்ளிலும் புறத்திலும் இவனே நிறைவான்


ஆக்கல் காத்தல், அழித்தல், மறைத்தல்,

அருளல் என்னும் ஐந்தொழில் யாவும்

செய்திடும் அருவுரு சதாசிவம் என்பான்

விண்வெளியதனில் நாதமாய் ஒலிப்பான்


கண்ணில் தெரிந்தவன் சத்தத்தில் நிறைந்து

சதாசிவமாக அண்டத்தில் ஒலிப்பான்

சித்தத்தில் அவனே சிவலிங்கம் ஆவான்

வானத்திலாடும் மயில் குயிலாச்சு!


யோகம் என்னும் ஞானம் பெற்றோர்

அண்டத்துள் அறிவது சதாசிவத்தை

உள்ளம் என்னும் பிண்டத்தில் அறிவது

சிவலிங்கம் என்னும் அதுவே ஆகும்


அகமும் புறமும் யோகமும் போகமும்

இவரருளாலே நிறைந்திடக் கண்டு

கணபதி தந்த நற்கொடை அருளிது

மழையாய்ப் பொழிவதில் ஔவை நனைகிறாள்!


அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி [66]



இறையவன் திருவுரு கொள்வதற்கும் அரியது

சின்னஞ்சிறிய அணுவுள்ளும் அணுவாய் இருப்பான்

அண்டபகிரண்டம் முழுதுக்குமாய் விரிந்துமிருப்பான்

எங்கெங்கு நோக்கினும் சக்தியடா எனப்பாடிய

பாரதியின் சொல்போல காணுமிடமெல்லாம்

நீக்கமற நிறைந்திருக்கும் அவனருளைப் பருகுவது


இறையருள் தனக்குக் கொடுத்திட்ட நிலையை

எவரும் புரிந்திடத் திருவுளம் கொண்டு

அனைவரும் அறிந்திடும் ஒருபொருள் எடுத்து

அதனின் மூலம் எமக்கு உரைக்கிறாள்


பாலும்,தெளிதேனும், பாகும் பருப்பும்

கரும்பும், ஒரு முக்கனியும் சொற்சுவை சேர்க்கும்!

கணுக்களெல்லாம் முற்றிக் கனிந்து

கருப்பஞ்சாறு தன்னில் நிறைந்து

இனிப்பெனவே இருக்கின்ற கரும்புபோல

என இந்தக் கரும்பைச் சுவைக்கிறாள் ஔவை
********************************************
[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 11

"விநாயகர் அகவல்" -- 11

முந்தைய பதிவு

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) [58]



சொல்லிய சொல்லும், எண்ணிய எண்ணமும்

பாசம் என்னும் அறிவின் விளைவுகள்!

பாசமறுக்க இறையருள் வேண்டும்!

இறையருள் வருவது குருவருள் மூலம்!


சொல்லும், எண்ணமும் அறவே அறுத்து

மனத்துள் ஒடுங்கிட இன்பம் பிறக்கும்

பாசமறுத்து பசுவெனும் அறிவை

உள்ளில் அறியும் நிலையைக் காட்டிட

இறையே இங்கு குருவாய் வந்த

இனிமைக் களிப்பில் ஔவை சிலிர்க்கிறாள்!



இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் [60]



இருளைக் காண்பதும் ஒளியைக் காண்பதும்

கண் எனும் ஒன்றே புரிந்திடும் செயலாம்!


ஞானம் பிறப்பதும் அறியாமை இருப்பதும்

சிவமயம் என்னும் பேரருள் ஆணை!


இதனை அறிந்து, அறிந்தோம் என்னும்

எண்ணமும் அகன்று இறையருள் தன்னில்

தானே இறையாய் இருப்பது என்னும்

மூன்றாம் நிலையாம் சாரூபம் தன்னில்!


அருளே வடிவாம் கணபதி அருளால்

அறிவும் அறிவின்மையும் பிறக்கும் இடமும்

ஒன்றே என்னும் தெளிவில் பிறக்கும்

இன்பநிலையினில் சாரூபம் கண்டாள்!



எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் [62]



இத்தனை வந்ததும் எல்லாம் மறையும்

தானே இறையெனும் உணர்வும் மறையும்


எல்லையில்லாப் பெருவெளியதனில்

எல்லைகள் ஏது எண்ணங்கள் ஏது


எல்லா நலனும் இழந்தே போயினும்

எல்லையில்லா இன்பமே நிலைக்கும்


நாலாம் நிலையாம் சாயுச்சியம் எனும்

சொல்லா நிலையில் சுகமே விளையும்


இம்மை மறுமை பிறப்பு இறப்பெனும்

எல்லாத் துயரும் அடியோடழிந்து


அல்லல்கள் யாவும் நில்லாதொழிந்து

கணபதி அருள்வழி ஒன்றே தெளிந்து

ஆனந்த நிலையினில் ஔவை திளைக்கிறாள்!
***********************************************
[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 10

"விநாயகர் அகவல்" -- 10




முந்தைய பதிவு

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி [54]



இறையின் தரிசனம் தியான முடிவினில்

மும்மலம் விளைத்த அகவிருள் விலகி

ஆன்மா ஒளியினைக் காணும் வேளையில்

சாதகன் சிரசின் மேலொரு ஒளியின்

காட்சியும் கிட்டும் என்பர் யோகியர்

நால்வகை நிலையுள் சாலோகமென்னும்

முதல்நிலை
இதுவென ஆன்றோர் அறிவர்

சரியை என்னும் யோகம் சித்திக்க

சாலோகநிலையினில் பேரொளி தரிசனம்

இறையருள் கிட்டிய பெருமித மகிழ்வில்

ஔவைப்பாட்டி குதித்தாடுகிறாள்!



என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து [56]



ஆன்மா தன்னை அறியும்போது

இறையின் அருகில் இருப்பதை உணரும்

இறையருள் இன்றி இது நிகழாது

பேரொளிவெள்ளம் உள்ளில் தெரிய

ஆனைமுகனும் அருகில் தெரிவான்

ஐம்புலன் ஆளுகை தன்னை மறைக்க

ஆன்மா எதுவென தனக்கே மறக்க

அமலன் அருளால் தன்னை அறிந்திட

ஞானம் பிறந்த நன்னெறி நிலையில்

சாமீபமென்னும் இரண்டாம் நிலையினை

ஆனைமுகனின் அருகில் இருப்பதை

அறியும் ஔவை அகமகிழ்கின்றாள்!


சுழுமுனை வரையினில் கனலை எழுப்பி

நாடிகள் பத்தையும் சுத்தப்படுத்தி

அமுதநிலையையும் அறிந்து மகிழ்ந்து

ஆயுளை நீட்டும் வழியடைந்தாலும்,


ஆனைமுகனின் அருளால் கிட்டும்

இந்நிலை ஞானம் கைகூடாவிடின்,

தன்னை அறியும் நிலை கிட்டாவிடின்,

ஏதொருபயனும் இல்லை என்பதை

உணர்ந்திட்ட ஔவை இவ்வண்ணம் மகிழ்கிறாள்!


இவையெலாம் முறையே தன்னில் நிகழ்ந்திட

முன்னை வினைகள் முதலில் மாயணும்!

காலம் காலமாய்ப் பிறவியெடுத்து

கணக்கில்லாது வினைகள் புரிந்து

கணக்கினை மேலும் மேலுமாய்க் கூட்டி

ஆன்மா உள்ளின் அடியில் அழுந்தி

சுமைகளைக் குறைக்கும் வழிதெரியாமல்

அலைந்திட்ட ஆன்மா விடுதலை பெற்று

முந்தைய வினைகளை முழுதுமாய்க் களைந்து

பேரொளி கண்டு தன்னை அறிந்து

மகிழ்வில் ஆழ்ந்திடும் காட்சியைக் கண்டாள்!
*******************************************
[தொடரும்]

அடுத்த பதிவு


Read more...

"விநாயகர் அகவல்" -- 9

"விநாயகர் அகவல்" -- 9


முந்தைய பதிவு

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி [46]


செய்துவரும் பயிற்சியதும் மென்மேலும் முதிர்ந்துவர

ஆனந்தம் உள்ளினிலே அமுதமெனப் பொங்கிவரும்!

சூரியனும் சந்திரனும் இசைந்திருந்து இளகவைக்கும்

செயல்திறனைச் சூட்சுமமாய் ஔவையிங்கு சொல்லிநின்றாள்


[மேலிதனைச் சொல்லுதற்கு குருவினருள் எமக்குவேண்டும்!]

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச் [48]


ஆதாரம் ஆறினிடை அமர்ந்திருந்து இயக்குகிற

பதினாறு கலைகளையே பாட்டியிங்கு சொல்லுகிறாள்

மேலிருக்கும்
ஸஹஸ்ராரம், ஆதாரம் ஆறு,

லலாடபிந்து, அர்த்த சந்திரன், ரோகிணி,

நாதம், நாதாந்தம், சக்தி, வியாபிகா,

சமனா, உன்மனா
என்னுமிந்தப் பதினாறு

நிலைகளையே கடந்தவரே உத்தமத் தவத்தோர்

ஆதாரச் சக்கரங்கள் ஓராறும்,

சூரிய சந்திரக் கலையிரன்டும்

சேர்ந்திங்கு உடற்சக்கரம் எட்டானது

உள்ளிருக்கும் சக்கரத்தை

உள்ளிருக்கும் கணபதிதான்

உள்ளபடி காட்டுகிறான்


சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப் [50]


உருவினைச் சமைக்க ஆறுமுகம் கொள்வர்

பருப்பொருள் இலக்கணம் அதுவே ஆகும்

வடிவம், உயரம், நீளம், அகலம்,

திண்மை, பருமை எனவும் சொல்வர்

நான்முகம் என்பது நுண்பொருள் இயல்பு

இயந்திரவடிவில் இதனை அமைப்பர்

இறையவன் உருவினை அறிந்திட உதவிடும்

பத்து குணங்களும் எண்ணிடச் செய்து

உள்ளில் காட்டும் யோகியர் நிலையினை

கணபதி காட்டித் தருவான் என்றாள்


புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் [52]


ஐம்புலன் ஐந்தும், மனம், புத்தி

அகங்காரம் எனும் மூன்றும் சேர்ந்த

சூக்கும உடலின் எட்டுநிலைகளும்,

உள்ளிருக்கும் ஆறு ஆதாரங்கள்

நிராதராம், மீதானம் எனும்

எட்டுநிலைகளாய் விரிந்திருக்கும்

அற்புதத்தை
எனக்குப் புரியவைத்தனையே

என ஔவையின் மகிழ்ச்சி அதிகமாகிறது!
******************************************

[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 8

"விநாயகர் அகவல்" -- 8





முந்தைய பதிவு

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் [40]


ஆதாரங்கள் ஆறும் இங்கே

இரண்டிரண்டாய்ப் பிணைந்திருக்கும்

மூலாதாரமும் சுவாதிட்டானமும்

அக்கினிமண்டலம் எனவாகும்

மணிபூரகமும் அநாகதமும்

சூரியமண்டலம் என விளங்கும்

விசுத்தி, ஆக்கினை இரண்டும் சேர்ந்து

சந்திரமண்டலம் என விளங்கும்


குண்டலினி என்னும் பரிக்ரக சக்தி

பாம்பின் உருவம் தனைக்கொண்டு

மூலாதார மடியினில் தன்னைச்

சுருட்டிவைத்துத் தொங்கிநிற்கும்

முறையுடன் புரியும் யோகசாதகன்

சுருண்டிருக்கும் அரவம் இதனை

மூன்று மண்டல வாயில் வழியே

ஆக்கினைவரையில் தானெழுப்பி

மந்திரச் சொல்லை நாவில் உணர்ந்து

ஆன்மா இதனை உணரச் செய்யும்


குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து [42]

பேசாதொலிக்கும் மந்திர சத்தம்

சுவாசச் சுழலின் துணையால் நிகழும்

இடகலை பிங்கலை சுழுமுனை மூலம்

சுழலும் ஒலியே அஜபா எனப்படும்!

உட்செலும் பிராணன் 'ஸோ' எனும் ஒலியையும்

கும்பகம் நிற்கும் வாயுவில் 'ஹம்'எனும் ஒலியும்

கூடச்சேர்ந்து 'ஸோஹம்' எனவாகும்!



ஸோஹம் என்பதே சிவோஹம் ஆகும்!


சிவோஹம் என்னும் சொல்லாமந்திரம்

ஒவ்வொரு சுவாசம் நிகழும் போதும்

ஒவ்வொருவர்க்குள்ளும் நிகழ்ந்தே இருக்கும்

அறிந்தவர் இதனைப் பிடித்துக்கொண்டு

சாதகம் என்னும் பயிற்சி செய்யின்

உள்ளே மூளும் கனலின் வெம்மை

தன்னில் உணரும் ஞானம் பிறக்கும்

[அசபை= அஜபா]

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே [44]


இத்தனை இதுவரை காட்டிய கணேசன்

மூலத்தினின்று முளைத்தெழும் சோதியைக்

கிளப்பிவிட்டு மேலெழும்பச் செய்திருந்து

சுழுமுனை மார்க்கமாய் கொண்டுசெல்லும் வழியினைக்



காற்றெனும் பிராணன் வழியினைச் சொல்லி

காட்டித்தந்த அருள்திறத்தைப் பாடுகிறாள்!

[கால்=காற்று, பிராணன்]
*******************
[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 7

"விநாயகர் அகவல்" -- 7


[முந்தைய பதிவு]

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி [34]

ஐம்புலன் அவஸ்தை கருவிகள் நிகழ்த்தும்!

'கண் செவி மூக்கு வாய் தொடுபுலன்' என்னும்

ஐம்புலன் ஆட்சி-- இரு கண், இரு செவி,

இரு துளை நாசி, ஒருவாய், ஆண்குறி,

ஆசனவாய்-- எனும் ஒன்பது வாயில்

வழியே நிகழும் வகையினை அறிந்து

வாசல் திறக்கும் கதவினை ஓம் எனும்

மந்திரச் சொல்லால் அடைத்திடும் வழியை

எனக்கு இன்புடன் அருளிக் காட்டி,

ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே [36]


ஆழ்நிலை தியானம் புரிந்திடும் தவத்தோர்

ஆறாதாரங்கள் வழியினில் செலுத்தி

பிராணனை ஒடுக்கும் வித்தையை அறிவர்!

மூலாதாரம் என்னும் முதல்நிலை

குதம்,குறி இவற்றின் நடுவே இருக்கு

கணபதி இங்கே ஆளுமைசெய்து

சாதகன் தன்னை வழிநடத்திடுவார்

குறிமூலம் தன்னில் சுவாதிட்டானம்

பிரமன் இங்கு அமர்ந்திருப்பார்

உந்திக் கமலம் தன்னில் மணிபூரகம்

திருமால் இதிலே வாசம் செய்கிறார்

இதயநாடியில் அநாகதம் உளது

உருத்திரர் இதனின் தலைவர் ஆவார்

கண்டம் நடுவே விசுத்தி ஆகும்

மகேசர் தலைமையில் இயக்கம் நடக்கும்

புருவமத்தியில் ஆக்ஞை எனப்படும்

சுழுமுனை என்பதும் இதுவேதான்

ஆளுமை செய்பவர் சதாசிவர் ஆவார்

மூலம் தொடங்கி மேலே எழும்பி

பிராணன் இவற்றின் வழியே கடந்து

சுழுமுனை வரையில் சுழன்று செல்லும்

இந்நிலை வந்தவர் இகத்தை மறப்பர்

ஆன்ம உணர்வினில் எல்லாம் மறந்த

இனிமை அனுபவம் தன்னில் திளைப்பர்

இவ்வகை செய்திடும் யோகப்பயிற்சி

ஆதாரயோகம் என்பர் ஆன்றோர்

தன்னை மறந்தவன் இறையினை உணரும்\


இன்னொருநிலையே நிராதாரம் என்பர்


இவ்வகை யோகம் கைகூடிவிட

பிராணன் வீணே செலவாகாமல்

இடம் வலம் என்னும் இரண்டும் அடக்கி

ஆனையைப் பழக்கும் அங்குசம்போல

ஆனைமுகனும் மூலத்தில் நின்று

அன்புடன் அருள்வார் அவரைத் துதித்தால்!

இந்நிலை கைவரின் பேச்சும் ஒழியும்

ஆன்மா என்றும் ஒருநிலை நிற்கும்


இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி [38]


சூரியன், சந்திரன், அக்கினி என்னும்

மூவகை நாடிகள் உடலில் உள்ளன.

பிங்கலை என்னும் சூரியநாடி

வலப்பக்க நாசியின் வழியே செல்லும்

இடகலை என்னும் சந்திரநாடி

இடப்பக்க நாசியின் வழியினில் செல்லும்

சுழுமுனை என்னும் அக்கினிநாடி

உடலின் நடுவில் உயிர்த்து நிற்கும்

வல, இடம் வாயு சென்றுவருவதில்

உடலின் இயக்கம் நிகழ்கிறது

பிராணனின் வாயு உள்ளே செல்வது

பூரகம் என்னும் சொல்லால் அறியும்

உள்ளே சென்றதை உடலிருத்துவது

கும்பகம் என்னும் சொல்லால் அறியும்

வெளியே சென்றிடும் வாயுவின் செயலை

இரேசகம் என்னும் சொல்லால் அறிக

ஓமெனும் சொல்லைப் பிரித்துப் பார்த்தால்

அகரம் உகரம் மகரம் புரியும்


பிங்கலைக்குரியது அகரம் ஆகும்

உகரமும் மகரமும் இடகலை சுழுமுனை

இரண்டையும் குறிக்கும் எழுத்துகள் ஆகும்

மூலத்தில் எழுந்திடும் முக்கோண ஜோதியை

மேலே எழுப்பிச் சிரசில் கொணர்ந்தால்

ஆயிரம் இதழுடை தாமரை ஒன்று

அகலவிரிவதை ஆன்றோர் உணர்வர்

இவ்வகை வழிகளின் முறைகள் யாவையும்

குருமுகம் அறிவது சாலச் சிறந்தது


இடகலை பிங்கலை இரண்டும் நிறுத்தி

சுழுமுனைவழியே சிரசைக் காட்டிட

கணபதி அருள ஔவை மகிழ்கிறாள்!


************************************************

[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

Friday, September 19, 2008

"விநாயகர் அகவல்" -- 6

"விநாயகர் அகவல்" -- 6




[முந்தைய பதிவு]

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் [28]



இன்பம் என்பது இன்னது என்று

தன்னையுணரா மாந்தர் இங்கு

இன்பம் என்பது புலனில் என்று

நின்னை மறந்து தன்னை அழிப்பர்

கண்டதைக் கண்டு காமம் கொண்டு

கருத்தொழிபட்டு மதியை இழந்து

புலனில் அடக்கம் கொள்ளாதிருந்து

பொய்வழி சென்று மெய்வழி மறப்பர்

சுவை ஒளி ஊறு ஓசை மணம் என்னும்

ஐம்புலன் மீது கொண்டிட்ட அவாவில்

தன்னிலைகெட்டு தறிகெட்டலைந்து

செயல்வழி மறந்து சிந்தை குலைவர்

இதனைவிடுத்து சிவனில் இழைந்து

அவனை நினைந்து அகத்துள் மலர்ந்து

நற்செயல் செய்யும் பண்பு வளர்ந்து

அருளொளி படர பிறவிருள் அகல

கணபதி தானே தன்னுள் வந்து

மாயை அறுக்கும் வழிகளைக் காட்டி

இன்பம் அறுத்துப் பேரின்பம் தந்திட

புலனை அடக்கும் வழிகளைக் காட்டி



கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து [30]


தத்துவங்கள் எனச் சொல்லப்படும் முப்பத்தாறும்

உணர்வுடனிருக்கையில் உபத்திரவம் செய்திடும்

இறையருள் கூடி குருவருள் நாடி

ஞானம் பிறந்து ஒன்றன்பின் ஒன்றாய்

ஒடுங்கிடச் செய்யும் வித்தை அறிந்து

ஒவ்வொரு விளக்காய் உள்ளுள் ஒடுங்க

எல்லையில்லா இன்பம் பிறக்கும்!


ஆம்!


எல்லா விளக்கும் அணைந்தபின்னே


எல்லையில்லாப் பெருவெளி தெரியும்!

நல்வினை தீவினை இரண்டின் பயனால்

இன்பம் துன்பம் என்பன நிகழும்

இவற்றின் விளைவால் பிறவிகள் எடுக்க

ஆன்மா இங்கே அலைந்து கிடக்கும்

திருவருள் கூடிய பேரின்பநிலையில்

அனைத்தும் இங்கே அகன்றிடத் துடிக்கும்

அறுகம்புல்லோன் அருளால் இருவினை இரண்டின்

பயனும் ஒழிந்து ஆணவமென்னும் இருளும் மறைந்து



தலமொரு நான்கும் தந்தெனக் கருளி [31]


இறைவனை அடைய நால்வழி உண்டு

பணிவழி, மகன்வழி, நட்புவழி, காதல்வழி

என்பன இவற்றின் வகைகள் ஆகும்!

சரியை கிரியை யோகம் ஞானம்

என்னும் பெயரும் இவற்றுக்குண்டு


இறைபணி செய்து அடியரைப் பணிந்து

முதல்வழிமூலம் அடைவது சாலோகம்


இறையிடம் அமைத்து அவரை வழிபடல்

திரவியம் சேர்த்துத் திருப்பணி செய்தல்

மகனெனும் வழியிது அடைவது சாமீப்யம்


பொறிகளையடக்கி புலனை அடக்கல்

அன்புடன் அவனை அனுதினம் எண்ணல்

யோக வழியினில் பெறுவது சாரூபம்


தன்னையிழந்து தன்னை மறந்து

இறையில் கலந்து தானே இறையும்

என்றே கசிந்து காதல் மல்கிட

கனிவது காதல் வழியெனச் சொல்வர்

கிடைப்பதோ என்றும் சாயுச்சியம்


இவ்வழி நான்கும் எனக்கென அருளி


ஈசனவன் அடியரோடு தானும் கலந்திருந்து

அவ்வுலகில் வாழ்ந்திடலே சாலோகம் ஆகும்


ஈசனது அடிபற்றி அவனுக்கு அருகாமையில்

மகிழ்வுடன் இருத்தல் சாமீப்யம் ஆகும்


ஈசன் வடிவினையே தானும் அடைந்து

ஈசனாகவே வாழ்வதுவோ சாரூபம் ஆகும்


ஈசனே தானாகி தன்னுள்ளே அவன் கலந்து

ஒன்றாக வாழ்ந்திடலே சாயுச்சியம் எனச் சொல்வர்.


மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே [32]


உலகில் பிறக்கும் ஆன்மா அனைத்தும்

ஆணவம் கன்மம் மாயை என்னும்

மும்மல வசத்தால் அல்லல் கொள்ளும்

இவற்றில் இருந்து பிறக்கும் மயக்கம்

என்றும் அண்டாமல் அடியோடகற்றி
************************************
[தொடரும்]


அடுத்த பதிவு

Read more...

Sunday, September 14, 2008

"விநாயகர் அகவல்" -- 5

"விநாயகர் அகவல்" -- 5



முந்தைய பதிவு

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென [22]

தன்னைத் தானே உணரும் பேறு

எல்லாருக்கும் வாய்ப்பதுமில்லை

தன்னையுணரச் செய்திட இங்கு

குருவென ஒருவன் வந்திடல் வேண்டும்

இறையருள் கூடி ஞானம் பிறந்திடக்

குருவே எமக்குத் திருவருள் புரிவான்

இதுவே உண்மை இதுவே மெய்யென

நல்லவை உணர்த்தித் திருவடி தருவான்

ஐந்தெழுத்தை அகத்தில் வைத்து

அனுதினம் நின்னை எண்ணித் துதித்திட

அன்புக்கணபதி நீயே என் குருவாய் வந்து



வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே [24]


இதுவரை இங்கு வாடியதெல்லாம்

தீர்ந்தது என்று அருளினை வழங்கி

கையினில் ஏந்திய தந்தக்கோலால்

முந்தைவினைகளை முழுதுமாய் அழித்து

மகிழ்வாய் என்றன் கலியினைத் தீர்த்து



உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி [26]


எத்தனை முறை யான் கேட்டபோதிலும்

முன்னிலும் இனிப்பாய்த் திகட்டாச் சொல்லை

பாவங்கள் போக்கிடும் திருமந்திரத்தை

உய்த்திடச் செய்திடும் உபதேசத்தை

என்றன் செவியில் அன்புடன் ஓதி

நூல்பல ஓதி கிடைக்கா ஞானம்

நீயே வந்து உரைத்திட்ட ஞானம்

யானெனும் செருக்கை ஒழித்திட்ட ஞானம்

திருவடி வைத்துத் தந்திட்ட ஞானம்

என்றும் எனக்குத் தெவிட்டா ஞானம்

அதனை அறிந்ததில் தெளிந்தது ஆன்மா
******************************************
[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 4

"விநாயகர் அகவல்" -- 4





முந்தைய பதிவு

முப்பழ நுகரும் மூஷிக வாகன! 15


தோல், விதை, கொட்டை ஏதும் தள்ளாது

அனைத்தும் கொள்வது ஆனையின் குணமே

அன்பால் பழுத்த அடியவர்தம்மில்

குற்றம் குறைகள் ஏதுமிருப்பினும்

அப்புறம் தள்ளா அருட்பெருங்கடலிவன்!

ஆனை வடிவம் கனத்ததோர் உருவம்

ஆயினும் அமர்வதோ பெருச்சாளி மேலே

எவரும் தாங்கிடும் வண்ணம் மென்மை

அருளைப் பொழிபவன் என்பதை உணர்த்தும்

“குண்டலியோகம் செய்பவர் உள்ளில்

குறுகுறுவெனவோர் உணர்வும் ஓடும்

பெருச்சாளி ஒன்று ஓடுதல்போல

அவ்வுணர்விருக்கும்”-
இது ஆன்றோர் வாக்கு!

மூலம் தொடங்கி மேலே ஏறிடும்

குண்டலிக் கனலின் உச்சியில் இருப்பவர்

விநாயகன்
என்றும் அறிந்தவர் சொல்லுவர்!



இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் [18]



எத்தனைதான் பட்டாலும் வாடியிங்கு நொந்தாலும்

மீண்டுமிந்தப் பிறவியெனும் ஆழ்கடலில் உழல்வதுவே

வாழுகின்ற உயிர்க்கெல்லாம் வாடிக்கை ஆகிப்போச்சு!

போதுமிந்தப் பிறவியென மனமிங்கு நினைக்கையிலே

சூது மிகுந்த வாழ்க்கையினிப் போதுமென எண்ணுகையில்

மாயமிந்தப் பிறவியென மனமுணரும் நேரத்தில்

தாயாக நீ வந்து தயை செய்து காத்திடவே

நாயாக நானிங்கு உழலாமல் பிறப்பறுத்து

நீயாக என்முன்னே இப்போதே எழுந்துவந்து

அடியேனை ஆட்கொள்ள வேண்டுமெனும் என்கதறல்



திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து [20]



பிறவிப்பயனின் விளைவாய்ச் சிறிது சிறிதாய்க்

குறைந்திருந்து, நின்றன் கருணை என்னில் தெரிந்து

நின்னையே நாடி ஐந்தெழுத்தை அன்புடன் ஓத

மூலாதாரம் முதலில் கிளம்பி, சுவாதிட்டானம்

நாபி, இதயம், கண்டம் புருவமத்தி
என்னும் இடங்களில்

சுழுமுனை வழியே நின்று துதிக்கும்

பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவம்

என்னும் ஐவரும் ஒவ்வொரு எழுத்திலும் நின்றிருந்து

ஓதும் நாமம் நாதமாய் மாறிட

கதறல் கேட்ட கணபதி அதனில்

ஓம் எனும் நாதமாய் வருவான்

நற்றுணை புரிவான் இதயம் பொருந்தத்

தன் திருவருள் தருவான் கணபதி.
*******************************************
[தொடரும்]

[நீலக் கணபதியை மேலே தரிசியுங்கள்!!]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 3

"விநாயகர் அகவல்" --- 3




முந்தைய பதிவு இங்கே

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் [8]


படைத்தல் காத்தல், அழித்தல்,

மறைத்தல், அருளல் என்றே உலகில்

இறையவன் செய்திடும் ஐந்தொழிலாகும்

நான்கு கரங்கள், எட்டுக்கைகள்

பன்னிரு தோளெனக் கடவுளர் உண்டு

ஐங்கரம் கொண்டு ஐந்தொழில் செய்யும்

அருள்நிறைக் கடவுள் கணபதி இவனே

முன் ஒருகையில் ஒடித்த தந்தம்

எழுத்தாணி எனவே அதனைக்கொண்டு

படைக்கும் தொழிலைச் செய்கின்றான்

இன்னொரு கரத்தில் மோதகம் ஏந்தி

அனைத்தையும் காக்கும் காப்புத் தொழிலையும்

மூன்றாம் கரத்தில் அங்குசம் ஏந்தி

அழித்தல் தொழிலையும் புரிகின்றான்

நாலாம் கரத்தில் பாசம் தாங்கி

மறைக்கும் கருமம் நிகழ்த்துகிறான்

ஐந்தாம் கரமாம் தும்பிக்கையினில்

அமுதக் கலசம் அதனைத் தாங்கி

அருளினை எமக்கு வாரித்தருகிறான்

ஆனையின் நிறமோ கருமை ஆகும்

ஆடையுடுத்ததோ வெண்மை ஆகும்

இரண்டும் கலந்தால் நீலம் ஆகும்

கண்ணுக்குக் குளுமை நீல நிறமே

தனியே தன்னந்தனியே......

அகத்தில் இவனைத் தனியே நிறுத்தி

வெளியன் இவனை வழிபடும் அன்பர்

அழியாநலனைப் பெற்றிடுவார் எனும்

நம்பியாண்டான் நம்பி சொன்னது

நீலத்திரு மேனியின் எழிலின்

தன்மைகுறித்தே என்றே கொள்க.


நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் [10]


அடியவர் நெஞ்சினில் அன்புடன் அருளும்

மந்திரம் யாவையும் சொல்லிடும் வண்ணம்

நாயகன் வாயும் தொங்கிய வண்ணம்!

ஆனையின் வாயினைப் போலே கீழே

தொங்கிடும் வாயின் பெருமை இதுவே!

நாலிரு புயமெனில் எட்டென வேண்டா

இருபுயம் என்பது வலிமையைக் குறிக்கும்

நுதலில் இருந்து வளர்ந்திடும் துதிக்கை

தோளெனத் தனியே அமைவது இல்லை

எனவே கணபதி வலிமை பொருந்திய

நான்கு புயங்களைத் தன்னில் கொண்டான்!

பகலவன், முழுமதி, அக்கினி எனவே

மூன்று கண்களைக் கொண்டவன் நாயகன்

மும்மதம் என்னும் ஆன்மவினைகளின்

பாவம் கழுவிடும் மதநீர் சுரப்பால்

முகத்தில் தழும்பாய்க் கோடினை உடையவன்

[நான்ற= தொங்குகிற; சுவடு= தழும்பு]



இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் [12]


எவர்க்கும் உண்டிங்கு இருசெவிகள்

இருந்தும் பயனற்று வாழ்கின்றார்

செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்

என்று பாடினான் வள்ளுவன் இங்கு!

செவியின் பயனைச் சரியாய் உணரா

இழிநிலை மாந்தர் தன்னிலை மறந்தார்

நாயகன் புகழைக் கேட்பது ஒன்றே

செவிகள் செய்யும் புண்ணியம் என்று

அதனைச் செய்திடும் உயர்நிலை தவத்தோர்

அருளைப் பாடி அவனடி பணிய

அவனிரு செவிகளும் அசைந்து கொடுக்கும்!

ஆம்!~

கணபதி திருச்செவி மட்டுமே இங்கு

அசையும் தன்மை உடையனவாகும்!

வேறெவர் செவியும் அசைவது இல்லை

ஆனையின் செவிகள் மட்டுமே புரியும்!

ஆனைப்பாகன் ஆனையின் மீது

ஏறிடப் பற்றிடும் ஒருபொருள் செவியே!

கணபதி செவிகளைப் பற்றியவண்ணம்

பிறவித்துயரை ஒழித்திட முடியும்

அத்தகு பெருமை வாய்ந்திட்ட செவிகளை

ஔவை இங்கே அழகுறப் போற்றினார்!

மூவுலகுயிரும் ஒன்றாய் வணங்கிடும்

முழுமுதற்கடவுள் கணேசன் ஆவான்

அவனது முடியினில் பொலிவாய்த் திகழும்

பொன்முடி இவனே அரசன் என்னும்!

ஓமெனும் பிரணவ மந்திரம் காட்டும்

முப்புரிநூலைத் திருமார்பில் தாங்கி

ஒளியெனும் அறிவை எமக்குத் தருபவன்

விநாயகன் என்றே இச்சொல் உணர்த்தும்!



சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே! [14]



அறிவுறை மாந்தர் பகுத்தறிவென்னும்

ஒருநிலைநின்று வாதம்செய்து நாளைக்கடத்துவர்

உண்மை அறிவுடை உயர்நிலை தவத்தோர்

உண்மை எதுவெனப் புரிந்தே இருப்பர்


ஐம்புலன் ஆசையில் அகப்பட்ட ஆன்மா

விழித்திரும்போது சூழ்நிலை அறிந்து

வேதனைகொள்ளும் நிலையினை ஆன்றோர்

ஜாக்கிராவஸ்தை என்று சொல்லுவர்

கனவுலகில் சென்று அலையும் ஆன்மா

விரும்பிய இடங்களைத் தானே அடைந்து

எங்கும் பரவி உணர்வுகள் கொள்ளும்

நிலையினை சொப்பனாவஸ்தை எனபர் அறிந்தோர்!

இவ்விரு நிலையிலும் சொற்களின் ஆட்சி

அதிகம் இருக்கும் என்பதை உணர்க!

ஆழ்நிலைத் துயிலில் சுழுத்தியில் அடங்கிய

சொற்கள் தம்மின் வலிமை இழக்கும்

பேசாநிலையில் ஆன்மாஇருந்தும்

இதுவோர் மறதிநிலையே!

இதனால் பெரிதும் பயனேதுமில்லை!

மனத்தை அடக்கி பிராணனில் ஒடுக்கி

சித்தம் தன்னை அவனில் நிறுத்தி

இருக்கும் நிலையைத் துரியம் என்பர்

ஆன்மா இங்கே இறையை உணரும்

காலமும் நேரமும் கடந்து நின்று

இன்பமும் துன்பமும் ஒழிந்து சென்று

பிறப்பும் இறப்பும் இல்லா நிலையிது

இந்நிலைதன்னில் இருப்பவன் கணேசன்

அனைத்தையும் தந்திடும் கற்பகத் தரு அவன்!

யானை அதிலும் ஆண்யானையாம்!

அதனால் கற்பகக் களிறே என்கிறார்!



[தொடரும்]


*********************


அடுத்த பதிவு





Read more...

"விநாயகர் அகவல்" --- 2

"விநாயகர் அகவல்" --- 2




ஔவையார் அருளிச்செய்த "விநாயகர் அகவல்"

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாடப் [2]




குளிர்நிறை சந்தனம் பூசிய கழல்கள்

தாமரை மலரினைப் போலச் சிவந்தவை

கால்களில் குலுங்கும் பாதச் சிலம்புகள்

பேரொலி எழுப்பும் இன்னிசை ஒலிகள்

திருவடி அதனில் பிரபஞ்சம் பிறந்தது

நாத ஒலியினில் நானிலம் பிறந்தது

அனைத்தும் இவனின் அடிகளில் பிறந்தன

ஒவ்வொரு ஒலிக்கும் புதிதுபுதிதாய்

இசையொலி எழுப்ப யுகங்கள் பிறந்தன

மூலாதாரக் கனலினைக் கிளப்பும்

நாயகன் கழல்கள் நாதம் எழுப்பும்

நாதத்திலிருந்து அனைத்துமே பிறக்கும்

[சீதம்= குளிர்; களபம்= சந்தனம்]





பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் [4]



பொன்னால் ஆகிய அரைஞாண் கயிறும்

பூவினைப் போலும் மென்மை தவழும்

வெண்ணிறப் பட்டில் மின்னும் ஆடையும்

பெருத்த இடுப்பில் பாங்குடன் மிளிர

[பூந்துகில்= மென்மையான வெண்ணிறப்பட்டு; மருங்கு= இடை, இடுப்பு; எறிப்ப= ஒளிபரப்ப]


பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும் [6]



திருவடி தொடங்கி இடைவரை வந்தவர்

அண்டசராசரம் அனைத்தும் அடங்கும்

ஆனைமுகத்தோன் பானைவயிற்றில்

பெட்டியைப் போலும் பெருநிறை வயிற்றில்

சற்றே கனிந்து அதைப் பாடுகின்றார்.

ஆனைமுகத்தோன் அதனால் இங்கு

கனத்த முகத்தோன் ஒற்றைக் கொம்பன்

அழகுறை நெற்றியில் சிவந்ததோர் பொட்டு

சிந்தூரம் எனவே அதனைச் சொல்வர்

திருவடி துவங்கி முகநிறை தரிசனம்

ஔவை செய்விக்கும் ஆனந்த தரிசனம்!

[பேழை= பெட்டி; பாரம்= கனம்; கோடு= தந்தம்; வேழம்= யானை; சிந்தூரம்= சிவப்புப் பொட்டு]

Read more...

"விநாயகர் அகவல்" --- 1

"விநாயகர் அகவல்" --- 1
என் இனிய அன்பான நண்பர்களே,

ஔவையார் அருளிய விநாயகர் அகவல் நான் தினமும் ஓதும் ஒரு பனுவல்.

சேரமான் நம்பி கைலாயம் செல்ல விரைகிறார்!

ஔவையாரையும் உடனழைக்க, தன் பிள்ளையார் பூஜையை முடித்த பின்னே வர முடியும் என்கிறார் ஔவையார்.

காத்திராமல் நம்பி விரைய, ஔவையார் பூஜையைத் தொடர்கிறார்.

அப்போது பிறந்ததுதான் விநாயகர் அகவல்!

அகவலைப் பாடி முடித்ததும், தன் தும்பிக்கை மூலம், விநாயகப் பெருமான் ஔவையாரை நேராக ஒரு நொடியில் கைலாயம் கொண்டு சேர்த்ததாக வரலாறு!

அதாவது, இதில் சொல்லியபடி செய்தால், இறைவனடி சேரலாம் என்பது கருத்து!!

இதெல்லாம் தெரியாமலேயே, இதன் இனிமையும் சந்தமும் என்னை மிகவும் கவர்ந்தது.

பொருள் முழுதும் அறியாமலேயே இதனைச் சொல்லி வந்திருந்தேன்.

தமிழ்மணத்தில் பதிவெழுதத் தொடங்கியபின், இதனை மேலும் ஆழ்ந்து படிக்கத் துவங்கினேன்.


அகவல் என்றால் "அழைப்பது" எனப் பொருள்!

என் முருகனின் மயிலும் அகவும்!!

எனவே, இது மேலும் என்னைக் கவர்ந்தது!

இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின!

இதனை என் மொழியில் சொல்ல வேண்டும் என்ற ஆசையை என்னுள் ஏற்படுத்தியது முருகனருள்.

எழுதி முடித்ததும், நான் மிகவும் மதிக்கும் ஒரு பெரியவரிடம் இதை அனுப்பினேன்.

பத்து நாட்களாகியும் அவரிடமிருந்து பதிலில்லை.

இன்று காலை ஒரு மடல்...... பதியச் சொல்லி!

தாமதம் இல்லாது, இதோ உங்கள் பார்வைக்கு.

சொல்ல வேண்டிய செய்திகள் அனைத்தையும்,....... சொல்லப்போகும் அவையின் மனமறிந்து, ....... சொல்லி இருக்கிறேன் என நினைக்கிறேன்

திங்கள் முதல் வெள்ளி வரை, தினம் ஒரு பதிவாகத் தொடர்ந்து வரும்.

வழக்கம் போல் நீட்டி முழக்கித்தான்!

படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்!



வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்!


அனைவர்க்கும் முருகனருள் முன்னிற்கும்!

*******************************************************




Read more...

Saturday, September 06, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 23 "ஊழ்"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 23 "ஊழ்"


இன்னிக்கு எப்படியும் மன்னாரைப் பார்த்திடுவேன்னு ஒரு 'நம்பிக்கை'யோட மயிலாப்பூர் குளத்தை வலம் வந்து கொண்டிருந்தேன்!

[அட! ஆமாங்க! நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது! நாயர் கடையில முதல்லியே கேட்டாச்சு! ]

'சரி! நம்ம விதி அவ்ளோதான்! இன்னிக்கு மன்னாரைப் பார்க்கற விதி இல்லைன்னு ஒரு முடிவோட..... சில பேரு அதை அவநம்பிக்கைன்னு சொல்லுவாங்க!!..... வீடு திரும்ப எண்ணி பஸ்ஸைப் பிடிக்க பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றேன்.

அப்போது.... என் எதிரே ஒரு ஆட்டோ வந்து நின்றது!

ஒரு கை என்னை இழுத்து உள்ளே தள்ளியது!

மயிலை மன்னார்!

என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை!

விதி இன்னிக்கு நல்லாவே இருக்குன்னு நினைக்கிறேன் என சந்தோஷமாகச் சிரித்தேன்!

விதின்னா என்ன? அது உன் நம்பிக்கைதானே? ஒண்ணு நடந்தா அது விதின்றே! நடக்கலியா ... அதையும் விதின்றே! என்னைப் பாக்கணும்னு வந்தே! நான் இல்லேன்னதும் உன் நம்பிக்கை இடிஞ்சு போச்சு! விதி சதி பண்ணிச்சுன்னு நினைச்சே! இப்ப என்னைப் பாத்ததும், விதி நீ நினைச்ச மாரியே பண்ணிருச்சுன்னு சந்தோசப் படறே! இந்த விதியைப் பத்தி ஐயன் சொன்னதைச் சொல்றேன் கேளு! எளுதிக்கோ! எனச் சொல்லிச் சிரித்தான் மன்னார்!

நான் நோட்புக்கைப் பிரித்தேன்!

இனி வருவது மன்னாரின் குறள் விளக்கம்!!

"அதிகாரம் 38 -- ஊழ்"

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. [371]

ஒருத்தனுக்குப் பணம் வரணும்னு விதி இருந்திச்சுன்னா, அவனுக்குள்ல ஒரு புது சக்தி பிறக்கும்..... எதுனாச்சும் பண்ணனும்ன்ற வெறி வரும். என்னமாச்சும் பண்ணி பணக்காரனாயிடுவான். அவனுக்குள்ளேயே ஒரு தனி முயற்சி பிறக்கும்.
அதே, அவனோட நேரம்.. அதாம்ப்பா.. விதி..... விதி சரியில்லேன்னா, 'சரி, போ! அப்புறமாப் பார்த்துக்கலாம்'னு சோம்பேறித்தனமா இருந்திருவான்.
இப்ப இதுக்கு ஒரு ஒதாரணம் வேணும்னா.....

நேரம் நல்லா இருந்ததுனால, எம்ஜியார் கரீட்டா தேர்தல் நேரத்துல குண்டடி பட்டு திமுகவை கெலிக்க வைச்சாரு. இப்ப இன்னாமா துட்டு பாத்துட்டாங்க பாரு அவங்கள்லாம்!
அதே, நேரம்.... விதி சரியா இல்லாததுனால, ஆனானப்பட்ட காமராஜரே, 'படுத்துகிட்டே ஜெயிப்பேன்னு, சோம்பேறித்தனமா இருந்து தோத்துட்டாரு!
அவ்ளோதான்!
அதுக்கப்புறம், காங்கிரஸுக் கட்சி நம்ம ஊருல தலை தூக்கவே முடியல!
அதாவது, இன்னும் அதுக்கு நேரம் சரியா அமையலை!
:)) ஆகூழ்னா நல்ல விதி, போகூழ்னா கெட்ட நேரம்னு பொருள்.

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. [372]

அதேமாரி, பொல்லாத விதி உனக்கு இருந்திச்சுன்னா, அதாவது கெட்ட நேரம்னா, ஒன்னோட புத்தியும் கெட்டுத்தான் போவுமாம். நல்ல விதி இருந்திச்சுன்னா, அறிவு நல்லாவே வேலை செய்யுமாம்.

தோ! மேலே சொன்னதையே எடுத்துக்கோயேன்!

எம்ஜியாரை ராதாஅண்ணன் சொந்த விரோதத்துல சுட்டாரு.
அதியே, அரசியலாக்கி அண்ணதொரை, அவரு ஃபோட்டோவைக் காட்டியே ஜெயிச்சாரு தேர்தல்ல! அதான் அவரோட நல்ல புத்தி!... விதி சரியா வொர்க்கவுட் ஆச்சு!


காங்கிரஸு... ....... ஒனக்கே புரியுமின்னு நெனைக்கறேன்!:))

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும். [373]


இப்ப ஒரு கூட்டத்துல நிக்கற நீ! ரொம்பவே படிச்சவந்தான் நீ! எத்தக் கேட்டாலும், டக்கு டக்குன்னு சொல்லிடுவேதான்! ஆனாக்காடியும், ஒனக்கு நேரம் சரியா இல்லேன்னா, சரியான நேரத்துல நீ சொல்லணும்னு நெனைக்கறது உனக்குத் தோணாமலியே பூடும்! அதான் உண்மை அறிவுன்னு ஐயன் நக்கலா சொல்லிக் காமிக்கறாரு!

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. [374]

இப்ப நீயே பாக்கற...! சிலபேரு ரொம்பவே மெத்தப் படிச்சவனா இருப்பான். ஆனாக்க, பரம ஏழையா இருப்பான்.
இன்னும் சிலபேரு ஒண்ணுமே படிக்கலேன்னாலும், பெரிய பணக்காரனா இருப்பான்.
இதெல்லாம் எப்பிடீன்றே?
அல்லாம் விதிப்பா.... விதி!
ஒன் தலயில இன்னா எளுதியிருக்கோ, அதும்படித்தான் நடக்கும்.

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. [375]

ஒன்னோட விதி சரியா இல்லேன்னா... கெட்ட நேரந்தான் ஒனக்குன்னா... நீ ஒரு நல்ல காரியம் பண்ணினாக்கூட கெட்டதாவே முடியும் அது!

காருல அடிபட்டு விளுந்திருக்கானேன்னு போய் எதுனாச்சும் ஒதவி பண்ணலாம்னு நெனைச்சு அவனைத் தூக்குவே! பொசுக்குன்னு ஒன் மடியில மண்டையைப் போட்டுருவான் அவன்! போலீஸு, கேஸு, சாட்சின்னு நீ அலைய வேண்டிவந்து, ஏண்டா போனோம்னு வெறுத்துருவே நீ!

ஒண்ணுமே தப்பு நெனைக்காம ஒரு சொல்லு சொல்லுவே ஒன்னோட தோஸ்த்துகிட்ட.... இன்னாமா அத்த நீ சொல்லப் போச்சுன்னு பொலுபொலுன்னு பிடிச்சு உலுக்கிடுவான் உன்னிய!

அதே சமயம், நல்ல விதி இருந்திச்சுன்னா, அதே ஆள சரியான நேரத்துல காப்பாத்தினேன்னு ஜனாதிபதி பதக்கமே ஒன்னியத் தேடி வரும்!
ஆஹா! இன்னாமா ஒரு சொல்லு சொன்னே கண்ணுன்னு ஒன்னோட நண்பன் ஒன்னியத் தூக்கிக் கொண்டாடிருவான்.


அல்லாம் விதிப்பா.... விதி!:))

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. [376]


கெட்ட நேரம் ஒனக்கு வந்திருச்சுன்னா, இன்னாதான் வருந்தி வருந்தி ஒரு பொருளை நீ வைச்சுக் காப்பாத்தினாலும், அது ஒங்கிட்ட நிக்காம போயிரும்.

அதே, ஒன்னோட ஒரு பொருளையே வேண்டாமின்னு வெளியே போயிக் கொட்டினாலும், அது ஒங்கிட்டியே திரும்பி வந்து சேர்ந்திரும்.
அல்லாத்துக்கும் இந்த விதிதான் காரணம்னு ஐயன் சொல்றாரு.


வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. [377]

நீ இன்னாதான் கஸ்டப்பட்டு, கோடி கோடியா சேர்த்து வைச்சாலும், விதி ஒனக்கு சரியா இல்லேன்னா, ஒத்தப் பைசா கூட அதுலேர்ந்து அனுபவிக்க முடியாது. சுளி சரியா இருக்கனும் கண்ணு அதுக்கெல்லாம்!

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின். [378]


இப்ப, ஒண்ணுமே இல்லாம ஏளையா இருக்கறவன்லாம் இன்னாத் தும்பம் வந்தாலும் சகிச்சுகிட்டு இருக்கானே! அது ஏன்னு யோசிச்சியா? இது வரும்.... அப்பிடியே சீக்கிரமே போயிரும்னு விதி மேல ஒரு நம்பிக்கை வைச்சுகிட்டு காலத்தை ஓட்டறான் அவன். அது மட்டும் இல்லேன்னா எப்பவோ சன்னியாசம் வாங்கிகிட்டு துறவியாப் போயிருப்பான்!

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன். [379]

ஒனக்கு ஒரு நல்லது நடக்குது! ரொம்ப ரொம்ப சந்தோசமா அத்த அனுபவிக்கற! திடீருன்னு ஒருநாளு அத்தினியும் சட்டுன்னு பூடுது! ரொம்பவே கஸ்டம் வந்திருது ஒனக்கு. அதையும் சந்தோசமா அனுபவிக்காம, ஐயோ அல்லாம் பூடுச்சேன்னு இன்னத்துக்கு அளுவறே நீ?

ஆனாக்க, இப்பிடி இல்லாம அதைக்கூட சந்தோசமா அனுபவிச்ச ஒரு ஆளை ஒனக்குத் தெரியுமா?

அவருதான் காமராசரு! மவராசன் அல்லாம் இருந்தப்பவும் சிரிச்சுக்கிட்டுத்தான் இருந்தாரு. அல்லாம் போனபோதும் அப்பிடியேதான் இருந்தாரு.

விதிய மீறி வாள்ந்து காமிச்சவரு அவரு!

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். [380]

மந்திரம் கால்; மதி முக்கால்னு சொல்லுவாங்க!
விதிய மதியால வெல்லலாம்னும் சொல்லுவாங்க!
ஆனா, அல்லாம் தெரிஞ்ச சித்தன் நம்ம ஐயன் இன்னா சொல்றாருன்னா,
நீ இன்னாத்தான் புத்திசாலின்னு நெனைச்சுகிட்டு செஞ்சாலும், அதையெல்லாம் தாண்டிகிட்டு, விதி முன்னாடி வந்து நிக்குமாம்!
ஒரு ரயிலைப் பிடிக்கனும்னு நெனைக்கறே! இப்ப நேரம் ஒனக்கு சரியில்லேன்னு ஜோசியன் சொன்னாண்ட்டு, ரெண்டு மணி நேரம் முன்னாடியே ஆட்டோவைப் பிடிச்சு ஏறிடுறே!
அப்பாடா! அல்லாம் சரியாப் பண்ணிட்டோம்னு நெனைக்கறப்ப, வருது ஒரு ட்ராஃபிக் ஜாம்!
ஆட்டோ ட்ரைவர் கையில ஒரு அம்பது ருப்பாய அளுத்தி ஸ்டேஷனுக்கு ஓட்டச் சொல்ற!
அவரும், குறுக்கால குறுக்கால புகுந்து கொண்டுபோய் விட்டுடறாரு.
ஓட்ட ஓட்டமா ஓடி ட்ரெயினைப் பிடிச்சுடற!
ஒன்னோட ஸீட்டும் கிடைச்சுருது.
ஆஹா, விதியை கெலிச்சிட்டொம்னு நெனைச்சுப் படுக்கற.
எளுந்து பார்க்கறப்ப.......... ஒன்னோட பர்ஸ் காலி!
அதான் விதி!


இப்பப் பாரேன்!
என்னைப் பார்க்க நீ வந்தே! இல்லேன்னதும், கொஞ்சம் மயங்கினே! சரி போலாம்னு முடிவு பண்ணின! ஆனாக்கூட நீ விதிய நம்பி இங்கியே சுத்திகிட்டு இருந்தே! ஒன்னோட நம்பிக்கை உண்மையாச்சு! விதியை நம்பு! நல்லதே நடக்கும்! நடக்கறதெல்லாமே நல்லதுன்னு நம்பு! இப்ப வடையைத் துண்ணு! டீயைக் குடி! சந்தோசமா இரு!' எனச் சொல்லிச் சிரித்தான் மயிலை மன்னார்!

விதியை வாழ்த்தி அவனைத் தழுவிக் கொண்டேன் நான்!


**********************************

Read more...

Thursday, September 04, 2008

"பிள்ளையாரே பிள்ளையார்!"

"பிள்ளையாரே பிள்ளையார்!"
பிள்ளை யார்? பிள்ளை யார்? என ஒருமொழி கேட்டால்
பிள்ளையாரே பிள்ளையார் என மறுமொழி வந்திடும்!

தாயைக் காத்திட தான் அவதரித்தான்
தாயைக் காத்திட வாயிலில் நின்றான்
சிவனே ஆயினும் விலகிடு என்றான்
தாயைக் காத்திட போரும் செய்தான்
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
என்பதன் பொருளே இன்பப் பிள்ளையார்!


தந்தையும் தாயும் தெய்வம் என்றான்
தம்பியாம் முருகன் உலகைச் சுற்றிட
தந்தை தாயை வலமும் வந்தான்
தந்தை தந்த மோதகம் வென்றான்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
என்னும் சொல்லின் இலக்கணம் பிள்ளையார்!

தந்தைக்காக கயிலையில் நின்றான்
தந்தை தந்த ஆத்மலிங்கம்
தசமுகராவணன் தவத்தால் கொள்ள
தந்திரமாகத் திரும்பவும் கொணர்ந்தான்
தந்தைசொல் மிக்க மந்திரமில்லை
என்னும் சொல்லின் நாயகன் பிள்ளையார்!

குறமகள் வள்ளியை மணந்திடும் ஆவலில்
தன்னை வணங்காத் தம்பியின் துயரை
ஆனையாய் வந்து துணையும் புரிந்தான்
தன்பலம் தெரிந்தும் தம்பிக்காக
சொன்னபடி கேட்டான் சுகமே புரிந்தான்
உறவின் உயிராய் நின்றவன் பிள்ளையார்!

ஓமெனும் பிரணவப் பொருளை வேண்டி
சிவனார் பணிந்து தனயனைக் கேட்க
சுப்பிர மணியன் பாடம் சொன்னான்
என்னவன் சொன்னான் என்றே உணர்ந்தால்
ஓமெனும் வடிவாய் இருப்பவன் அண்ணன்
அவனே ஓம்நவ சக்திப் பிள்ளையார்!

உலகைச் சமனிட அகத்தியன் சென்றான்
தென்புலம் நோக்கிக் குறுமுனி நடந்தான்
குடத்தில் கூடவே காவிரி சென்றாள்
தென்புலம் வாழக் காவிரி தரவே
காகமாய் வந்து கமண்டலம் கவிழ்த்தான்
கருணையின் வடிவம் கற்பகப் பிள்ளையார்!

பிள்ளை என்பதன் இலக்கணம் காட்ட
அரும்பெருஞ் செயல்கள் பலவும் செய்தான்
உலகினில் உள்ள பிள்ளைகள் யார்க்கும்
வழிமுறை காட்டிட கருத்தினில் நின்றான்
இவனைப் போலொரு பிள்ளை எவரெனச்
சொல்லும் வண்ணம் திகழ்பவன் பிள்ளையார்!

உலகில் உள்ள பிள்ளைகள் அனைவரும்
வணங்கிடும் தெய்வம் அன்புப் பிள்ளையார்
ஆற்றங்கரையின் அருகிலும் இருப்பான்
அரசமரத்தின் அடியிலும் இருப்பான்
மண்ணிலும் இருப்பான் மஞ்சளிலும் இருப்பான்
வடிவம் எதுவும் இல்லாப் பிள்ளையார்!

தடைகளை உடைப்பான் தயவினைக் கொடுப்பான்
எடுக்கும் காரியம் எதிலும் வெற்றி
என்பது இவனை வணங்கிட நிகழும்
ஆனையின் வடிவம் கொண்டவன் இவனே
தும்பிக் கையால் துன்பங்கள் தொலைப்பான்
துணிவும் தருவான் செல்வப் பிள்ளையார்!

அருகம் புல்லில் உள்ளம் மகிழ்வான்
தோப்புக்கரணம் போட்டால் அருள்வான்
தலையில் குட்டிட அறிவும் தருவான்
கொழுக்கட்டை படைத்திட குவலயம் கொடுப்பான்
மந்திரம் எதுவும் சொல்லிடவேண்டாம்
அருள்வாய் என்றால் தருவான் பிள்ளையார்!

விஜயகணபதி வெற்றிகள் தருவான்!
செல்வக்கணபதி சுகங்கள் தருவான்
மூஷிகவாகனன் முக்தியைத் தருவான்!
மோஹனக்கணபதி மகிழ்ச்சியைத் தருவான்!
செந்தமிழ்க்கணபதி சொற்சுவை தருவான்!
மங்கல கணபதி மங்கலம் அருள்வான்!

பிள்ளையார் என்னும் பொருளைச் சொன்னேன்
பிள்ளை யாரெனத் தெரிந்திடும் இங்கு!
பிள்ளைகள் நாமும் அவன்புகழ் பாடி
அவனடி பணிவோம் அனைத்தும் பெறுவோம்!
நற்செயல் புரிய அவனிடம் கேட்போம்!
அவன்புகழ்பாடி அனுமனில் முடிப்போம்!

**************************************************

Read more...

Tuesday, September 02, 2008

" பாம்புகளின் கூடல்"

" பாம்புகளின் கூடல்"
நாகப்பாம்பும், சாரைப்பாம்பும் பிணையும், இணையும் எனப் பலவிதக் கருத்துகள் நிலவி வருகின்றன! இதில் உண்மை ஏதாவது இருக்கிறதா என ஆராய்ந்தபோது கிடைத்த சில உண்மைகளை இங்கு உங்கள் முன் வைக்கிறேன்!

உயிர்வாழும் எந்தவொரு இனத்துக்கும் இரு அத்தியாவசியமான தேவைகள், முதல் உணர்வுகள் [Primal instincts] இருக்கின்றன.

'தான் உயிர் வாழ்வது'[ survival of the self] ; 'இனப்பெருக்கம் செய்வது'[survival of the species as awhole]

'தான் உயிர் வாழ்வது' என்னும் முதல் உணர்வில், தன் உணவுக்கு அலைவது, இருப்பிடம் தேடிக் கொள்வது, எதிர்ப்பு சக்திகளில் இருந்து தன்னைக் காத்துக் கொள்வது, எதிர்ப்பது என்பவை அடங்கும்.

'இனப்பெருக்கம் செய்வது' என்பதில், வருடாந்திர நிகழ்வுகளான, 'தனக்கான ஒரு துணையைத் தேடுவது, அதனுடன் புணர்வது, தன் இனத்தைப் பெருக்கிக் கொள்வது' இவை அடங்கும்.

பாம்புகளின் வாழ்க்கையில், முதலாவது பெருமளவிலும், இரண்டாவது சற்று குறுகிய அளவிலும் நிகழ்கின்றன.

தான் எப்படி உயிரோடு பத்திரமாக இருப்பது என்பதில்தான் பாம்புகள் பெரும் கவனம் செலுத்துகின்றன.... பெரும்பாலும்.

தானுண்டு தன் தேவைகள் உண்டு என்பது மட்டுமே இவைகளுக்கு முக்கியமாகிப் போகிறது.

மற்ற பாம்புகளைப் பற்றி இதற்குக் கவலை இல்லை!

அடுத்த பாம்போடு சேர்ந்தால், தன் உணவில் பங்கு போட வருமே என்ற மனப்பான்மையில் வாழும் இனம் இது!

அதற்காக நாய்கள் மாதிரியோ, காகங்கள் மாதிரியோ, தன் இனத்தோடு சண்டை போட்டுத் துரத்துவதுமில்லை!

எப்போதாவது சந்தித்தால், ஒரு 'ஹலோ' சொல்லிவிட்டு நகர்ந்துவிடும்!!
பாம்புகள் நாமெல்லாம் கற்பனை செய்து போற்றிவரும் தாய்களும் அல்ல!
பெற்றவுடன் விட்டு விலகிவிடும்!

குட்டிகள் தம்மைத் தாமேதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்!

"எப்படி உடலுறவு கொள்கின்றன?"

வெயில் காலத்தில் வாலிப வயது வந்த கிளர்ந்தெழும் பாம்புகள் [sexually active snakes] தன் கண்ணில் தென்படும் எந்தவொரு பாம்பையும் அணுகும்!
ஆம்!

"எந்தவொரு பாம்பையும்!" அது எந்த ஜாதி எனப் பார்க்காமலேயே!

தான் எதிர்கொண்ட பாம்பின் வரவேற்பைப் பொறுத்து இதன் அடுத்த நடப்பு[encounter] இருக்கும்!

இது எதிர்கொண்ட பாம்பு ஒரு ஆணாக இருந்தால்... ஆம்... பாம்புகளுக்கு இது ஆண் இது பெண் எனக்கூடத் தெரியாது!... உடனடியாக ஒரு சண்டை நிகழும்! இந்தச் சண்டை இனத்துக்கு இனம் வேறுபடும்.

சிலவகைப் பாம்புகள் [Elapids and Vipers]கடிக்காமலும், சில வகைகள் [Colubrids] பயங்கரமாகக் கடித்துக் கொண்டும் சண்டையிடும்!

இப்படி ஏதும் நிகழவில்லையெனில், ஆண் பாம்பு உடலுறவு கொள்ள முன்னேற்பாடுகளைச் செய்யத் துவங்கும்.

தன் நாக்கில் இருக்கும் ஒரு உணர்வலைகளின் மூலம், தன் இணையவிருக்கும் பாம்பு எந்த ஜாதி, ஆணா, பெண்ணா, என அறிகிறது.

இது தனக்கு ஒவ்வாத ஒன்று என அறிந்தவுடன், உடனே அவ்விடத்தை விட்டு அகன்றுவிடும்!....

அடுத்த இணையைத் தேடி!!

தனக்கு இணையென உணர்ந்தவுடன், ஆண்பாம்பு அதனுடன் கூட விழையும்.
தன் தலையை அதன் உடல் மீது வைக்கிறது.
வாலால் உடலைப் பிணைக்கிறது.
தனது உறுப்பை அதன் உறுப்புடன் இணைக்க முயல்கிறது.

இப்படி எளிதாக இது நிகழ, பெண் பாம்பு அனுமதிப்பதில்லை!
வழுக்கிக் கொண்டு விலகி ஓடும்.
ஆண்பாம்பு துரத்தி, மீண்டும் பிணைய முயலும்.
இது சில மணி நேரமோ.... அல்லது சில நாட்களோ கூட ஆகலாம்!

ஆண் பாம்புக்கு இரு ஆணுறுப்புகள்! [hemepenes] என இது அழைக்கப்படும்.

வளையக்கூடிய எலும்புகளைக்[flexible spines] கொண்டது இது!

பெண்ணுறுப்புக்குள் நுழைந்தவுடன், தன் இரு எலும்புகளால் இறுகப் பிடித்துக் கொள்கிறது......

ஒரு மணி.. இரண்டு மணி... சிலசமயம் ஒரு சில நிமிடங்களில் கூட இது முடியும்!

இரு பாம்புகளும் ஒரு அசைவும் இல்லாது, அப்படியே இந்த நிகழ்வின் போது இருக்கும்.

சில சமயம், பெண்பாம்பு தன் மீது கவிந்த ஆணை இழுத்துக் கொண்டு நகரும்.
சில நேரம், ஆண்பாம்பு தன் துணையுடன் சில நாட்கள் கூடவே இருந்து, மீண்டும் கூடும் நிகழ்வும் நடக்கலாம்.

சரி... இப்படி நிகழ்ந்ததும்........

எது முதலில் வரும்?
முட்டையா? பாம்பா?

கேட்டால் சொல்கிறேன்!

ஆனால், இதன் மூலம் புரிவது என்னவெனில்,....

பாம்பு சாரையுடன் பிணையும்!
ஆனால்,....
இணையாது!
:))))))))))))))))


*****************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP