Sunday, December 17, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [4]

"பரிசேலோர் எம்பாவாய்" [4]

4.
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ


எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்

உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 4

தோழியர்: முத்துப் போன்ற ஒளிவீசும் புன்னகை உடைய பெண்ணே!
உனக்கு இன்னுமா பொழுது விடியவில்லை?

படுத்திருப்பவள்: கிள்ளை மொழி பேசும் நம் தோழியர் அனைவரும்
வந்து சேர்ந்தனரோ? கொஞ்சம் எண்ணிப் பார்த்துச் சொல்லுங்களேன்!

தோழியர்: உள்ளவரை உள்ளபடி எண்ணித்தான் சொல்கின்றோம்
ஏதேதோ கள்ளம் சொல்லி வீணாகக் காலத்தைப்
போக்காமல் எழுந்திடுவாய் அவ்வளவினிலே!
விண்ணவரும் தம் துயருக்கு மருந்தெனவே போற்றிடும்
அனைத்து வேதங்களுக்கும் மேன்மையாய் விளங்கிடும்
முழு முதற் பொருளாகி, காட்சிக்கு இனியவனாம் சிவனாரை
முறையாகப் பாடி, கண்ணீர் மல்கி, எங்கள் உள்ளம் உருகிடப்
பாட வந்திருக்கும் நாங்களோ இது போலும் கள்ளமெலாம் செய்வோம்!
எங்கள்மேல் நம்பிக்கை இல்லையெனில், எழுந்து வந்து நீயே
எண்ணிப் பார்த்துக் கொள்! அப்படி எண்ணிக்கை குறைந்திருப்பின்
மீண்டும் உன் மலர்ப்படுக்கை சென்று வேண்டுமானால்
திரும்பவும் தூங்கச் செல்லடி! என் பெண்ணே!

அருஞ்சொற்பொருள்:
ஒண்ணித்திலநகையாய் - முத்துப் போன்ற புன்னகையாய் (ஒள் நித்தில நகையாய்); அவமே - வீணாக

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP