அருள் செய்ய வா முருகா!
தைப்பூச நன்நாளில் ஒரு முருகன் பதிவு இட்டு உங்கள் புதுக் கணக்கைத் துவங்கலாமே என என் அன்பு நண்பர் திரு.ரவி கண்ணபிரான் சொன்னதிற்கிணங்க இதோ என் முருகன் மீதான ஒரு சுய பதிவு. படித்தவர்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
அருள் செய்ய வா முருகா!
பாராளும் மன்னனிவன்
சீராளன் செல்வனிவன்
கார்போலப் பொழிந்துவரும்
கருணைமழை நாதனிவன்
வேதனைகள் யாவினையும்
வேரறுக்கும் விநாயகனை
பாதமலர் நான் தொழுது
குமரன்புகழ் பாடிடுவேன்
சிவனாரின் தீப்பொறியில்
சுயமாக தோன்றிநின்றான்
கார்த்திகையில் தான்பிறந்தான்
கமலத்தில் உருவெடுத்தான்
அறுவர்முலைப் பால்குடித்தான்
சரவணத்தில் தான்மிதந்தான்
அன்னைவந்து அணைத்திடவே
அறுமுகனாய் அவதரித்தான்!
அண்ணனிடம் தோற்றதனால்
அருங்கனியைத் தவறவிட்டான்
அறுமலையில் முதல்மலையாய்
ஆவினன்குடி சென்றுநின்றான்
ஆண்டிக்கோலத்தில் தண்டெடுத்து
ஆங்கவனும் தான்நிற்க
தண்டபாணி என்றபெயர்
தாங்கியவன் சிரித்திருந்தான்!
நான்முகனின் செருக்கடக்க
பிரணவத்தின் பொருள்கேட்டு
விடைதெரியா பிரமனையும்
வெஞ்சிறையில் தானடைத்தான்
விடுவிக்க வேண்டிநின்ற
விடையனார் விடைகேட்க
தந்தைக்கே குருவானான்
ஏரகத்தில் தானமர்ந்தான்!
தேவர்குறை நீக்கிடவே
தான்பிறந்த காரணத்தை
நாதனவன் நயமுரைக்க
மாதரசி வேலளிக்க
சூரனவன் துடுக்கடக்கி
மாமரத்தைக் கூர்பிளந்து
சேவலும் மயிலுமாய்
சீரலைவாயில் சிரித்து நின்றான்!
இந்திரனும் மனமகிழ்ந்து
குஞ்சரியை குலமகளைக்
குமரனுக்கு மணமுடிக்க
தேவரெலாம் வாழ்த்திவர
மாதேவன் உமையவளும்
மங்கலமாய் நாணெடுத்து
மைந்தனவன் கைகொடுக்க
பரங்குன்றில் மணமுடித்தான்!
சூரனவன் கதைமுடித்த
கோபமது தானடங்க
ஒருகுன்றில் வந்தமர்ந்தான்
தனித்தங்கு நின்றிருந்தான்
தணியாத கோபமது
தணித்தவொரு மலையதனால்
நரமுனிவர் வாழ்த்திவரும்
தணிகைமலை தானமர்ந்தான்!
தினைப்புனத்தைக் காத்துவந்த
குறவள்ளி தனைமணக்க
வேடனாய், விருத்தனாய்
வேங்கைமர வித்தகனாய்
பலவேடம் தானணிந்து
மனவள்ளி மாலைசூட
சோலையெலாம் தவழ்ந்துவந்தான்
குன்றுதோறும் ஆடிநின்றான்!
தைப்பூச நன்நாளில்
பக்தரெலாம் கூடிநின்று
பால்காவடி பன்னீர்க்காவடி
புஷ்பக்காவடி சந்தனக்காவடி
பலவிதமாய்க் காவடிகள்
தெருவெல்லாம் ஆடிவர
மயில்மீது நீயமர்ந்து
அருள் செய்ய வா முருகா!
பாலாலே அபிஷேகம்
பன்னீரால் அபிஷேகம்
சந்தனத்தால் அபிஷேகம்
பஞ்சாமிர்த அபிஷேகம்
வெண்ணீறால் அபிஷேகம்
அத்தனையும் தாங்கிநின்று
அழகாக நீ சிரித்து
அருள் செய்ய வா முருகா!
முருகனருள் முன்னிற்கும்!!