Friday, June 13, 2008

தசாவதாரம் - விமரிசனம்

தசாவதாரம் - விமரிசனம்



அதென்னமோ, சின்னவயசுலேர்ந்தே முதல் நாள் முதல் காட்சி பார்த்துப் பார்த்து பழக்கப்பட்ட அனுபவம் நேத்தும் புடிச்சு தள்ளிரிச்சு, அரங்கத்துக்கு.
இரவு எட்டேகாலுக்குப் படம்னு சொன்னாங்க. எட்டேமுக்காலுக்குத்தான் ஆரம்பிச்சாங்க.
சுமார் 300 பேர் அமரக்கூடிய அரங்கத்தில், ஒரு 30 - 40 சீட்தான் காலியாயிருந்திருக்கும்.
டிக்கட் விலை வழக்கமான 15 டாலர்தான்!

ஏத்திவிட்டு, ஏத்திவிட்டு, வரிசையா ஊத்திகிட்ட கமல் படங்களைப் பார்த்து ஏமாந்து போனதால, இந்தப் படத்துக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமத்தான் போனேன்.
சொல்லப்போனா, இது வெற்றியடையணும்னு கூட நினைச்சேன் .

படம் தொடங்கி, கமல் பேரு வந்ததும் வழக்கம்போல விசில் சத்தம்!

மொத சீனே, ஒரு ஏரியல் ஷாட்! அப்படியே சென்னையை, ஒரு விமானம் தரையிறங்கறப்போ எப்படி இருக்கும்னு காட்டறாங்க! ரொம்ப நல்லா இருந்திச்சு
தொடர்ந்து நேரு அரங்கத்துல, கலைஞர், பிரதமர், அமெரிக்க அதிபர் இவங்களுக்கு மத்தியில, உலகநாயகன், இந்த உலகத்தையே ஒரு பெரிய ஆபத்துலேர்ந்து காப்பாத்தினதுக்காக விருது வாங்கறாரு.

அப்படியே ஒரு ஃப்ளாஷ் பேக்!

சோழர் காலத்துக்கு.....
வேறு மதங்கள் இல்லாததுனால, எப்படியும் சண்டை போட்டே ஆவணும்னு இருக்கற மனுசன், சிவனா, பெருமாளான்னு சண்டை போட்டுகிட்டு இருந்தாங்களாம். சிதம்பரத்துல இருந்த ரங்கநாதர் சிலையை, சோழ மன்னன் தூக்கிக் கடல்ல போட ஆளனுப்பறான்.
ராமானுஜதாசன்ற ஒரு வைஷ்ணவர் [க- 1]இதைத் தடுக்க முயற்சி பண்ணி, தோத்துப் போயி, அவரும் பெருமாளோட கடலுக்குள்ள போயிடறாரு. அவ்ளோதான். இதெல்லாம் ஒரு பத்து நிமிஷத்துல முடிஞ்சுருது.

ஆனா, காட்சியோட பிரம்மாண்டம் அப்படியே ஆளை உலுக்கிடுது. சரி, ஒரு நல்ல வேட்டை இருக்குன்னு நிமிர்ந்து உட்கார்ந்தேன்!

அப்படியே நேரா 2004 அமெரிக்காவுக்கு வர்றோம்.
கமல் இப்ப ஒரு உயிரியல் நுட்பொருள் விஞ்ஞானி. கோவிந்தராஜன்னு பேரு [க- 2] உலகத்தையே அழிக்கக்கூடிய ஒரு வைரஸ் கிருமியை ஒரு இத்துனூண்டு டப்பால போட்டு அடைச்சு வைச்சிருக்காரு. இவருக்கு ஒரு பாஸ்... திருட்டாளு அவரு. இதை வேற எவனுக்கோ வித்துறணும்னு திட்டம் போடறாரு.

அப்போத்தான், நம்ம புஷ்ஷு.. அதாங்க அமெரிக்க அதிபரு.. [க- 3] அவரு டிவியில வந்து, அமெரிக்காவைக் காப்பாத்த நாமளும் இதுபோல ஆயுதம் வைச்சுக்கணும்னு சொல்றாரு. திருட்டு பாஸ் ஒரு ப்ளான் போட, நம்ம கோவிந்தராசு அதை முறியடிச்சு, வைரஸை லவுட்டிகிட்டு, தன்னோட நண்பன் வீட்டுல வந்து ஒளிஞ்சுக்கிறாரு.......

இப்ப கதையை எதுக்கு சொல்றே? படத்தைப் பத்திச் சொல்லுன்னு தானே அடிக்க வர்றீங்க! இதோ பிடிங்க.

முதல் 15 நிமிஷம் ஒரு மாபெரும் சரித்திரப்படத்தைப் பார்க்கற மாதிரி இருக்கு. கொஞ்சம் கொஞ்சம் ஹே ராம் வாசனை அடிச்சாலும் கூட.

கமலோட 10 அவதாரத்துல,[ரங்கராஜன் நம்பி, கோவிந்தராஜன், புஷ், அமெரிக்க ஆர்னால்ட், ஜப்பானிய அண்ணன், அவ்தார் சிங்,பாட்டி, பல்ராம் நாயுடு, பூவராகன், காலிஃபுல்லா] மனசுல நிக்கறது ரெண்டே ரெண்டு பேர்தான்.
பல்ராம் நாயுடு, பூவராகன்.

இத்தனை ரோலையும் இவரே செஞ்சிருக்கணுமான்னு மனசுல பட்டுகிட்டே இருந்திச்சு.

இதைப் பிரகாஷ்ராஜ் நல்லாப் பண்ணியிருப்பாரே, இதை நாஸர் பிச்சு ஒதறியிருப்பாரே, ஒரு லக்ஷ்மியோ, சுகுமாரியோ இதைப் பண்ணியிருக்கலாமேன்னு தோணிச்சு.

இவ்வளவு கஷ்டப்பட்டு, என்ன பிரமாதமாகச் செய்துவிட்டார்னு பார்த்தா, மனசுல ஒரு வெறுமைதான் மிஞ்சியது.

செங்கல்பட்டு தாண்டி இருக்கும் மக்களைப் பற்றி இவர் கவலைப் படவே இல்லையோ எனத் தோன்றுகிறது.

முதல் 15 நிமிடங்களுக்குப் பிறகு, அடுத்து ஒரு அரை மணிக்கு வரும் காட்சிகள் தெளிவாகப் புரியவைக்க இயக்குநர் தவறிவிட்டார்.

அதைத் தொடர்ந்து வருகின்ற துரத்தல் காட்சிகள், ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு இருப்பதை ஒத்துக் கொண்டாலும், இதை அவர்களே இன்னமும் நல்லாச் செய்வாங்களே என்ற எண்ணமே மிஞ்சுகிறது.

ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுப்பது என்றால், அவர்களைக் காப்பி அடிப்பதல்ல. நம்மவர் கதையை அந்தத் தொழில்நுட்பத் தரத்தில் சொல்லுவது என்பதைக் கமலும் கூட உணர்ந்துகொள்ளாதது நம் துரதிர்ஷ்டமே!

ஒரு 'சேஸ்' கதையில் இத்தனை பாத்திரங்கள் வருகிறார்கள். இவை அத்தனையையும் ஒருவரே செய்திருக்க வேண்டுமா, என்ற கேள்விக்கு கமல் பதில் சொல்லித்தான் தீர வேண்டும்.
பல்வேறு நடிகர்கள் நடித்திருந்தால் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும் எனவே நான் கருதுகிறேன்.

நவராத்திரியில் நடிகர் திலகம் நடித்ததற்கும், தசாவதாரத்தில் கமலின் பத்து வேடங்களுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.

அசினின் பாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. கொஞ்ச நேரத்திற்குப் பின் அவர் 'பெருமாளே' எனச் சொல்லும்போதெல்லாம் ஓங்கி அறையலாமா என எரிச்சலே வருகிறது.

பலராம் நாயுடு பாத்திரத்தில் கமல் கலக்கியிருக்கிறார். அதுகூட கொஞ்ச நேரத்துக்குப் பிறகு பாலையாவை நினைவூட்டுகிறது. இருந்தாலும் சுகமாக ரசிக்கலாம்.

பூவராகன் பாத்திரம், நன்றாகவே செய்திருந்தாலும், கதைக்குத் தேவையே இல்லாத ஒன்றாக ஒட்டாமல், தனிக்கதையாகப் போய்விடுவது பெரிய சோகம். கபிலனின் கவிதை வரிகள் இதம்!

இசை மிகப் பெரிய ஏமாற்றம். மல்லிகா ஷெராவத் பாடும் பாடலின் ஒரு குறிப்பிட்ட வரிகளைக் கேட்கும் போதெல்லாம்,
"எந்தத் தொழில் செய்தாலென்ன, செய்யும் தொழில் தெய்வம் என்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னாரே" என்னும் 'தேவுடா தேவுடா' பாடல் நினைவில் வந்து தொலைக்கிறது.

பின்னணி இசை தேவி பிரசாத். காட்சிகளுக்குத் தக்கவாறு ஒலியெழுப்பி விறுவிறுப்பை அதிகப்படுத்தியிருக்கிறார். அசத்தி இருக்க்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

கமல் மிகவும் உழைத்திருக்கிறார்; கஷ்டப்பட்டிருக்கிறார்; கடைசியில் வரும், 'உலக்க நாயகனே' பாடலின் போது இதை வேறு காட்டி நம்மையும் கஷ்டப்படுத்துகிறார் ரவிக்குமார்! இவ்வளவு தடிமனான தோலை முகத்தில் மறைத்தபின் என்ன முகபாவம் அதிலிருந்து கமலால் காட்டமுடியும்? ஏதோ வெளுத்த பிரேதத்தைப் பார்ப்பது போலத்தான் இருந்தது.[கமல் ரசிகர்கள் மன்னிக்க!]

காமிரா பிரமாதம். ஒவ்வொரு கோணமும் மனுஷன் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார். சுனாமி சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக நன்றாக வந்திருக்கின்றன.

கதை, திரைக்கதை, வசனம் "கமல்" எனப் போட்டிருக்கிறது. பல இடங்களில் கிரேஸி மோஹனின் கைவண்ணம் தெரிகிறது.

அந்தக் கடைசி வசனம், 'நான் எப்ப கடவுள் இல்லைன்னு சொன்னேன்' எனச் சொல்லி நிறுத்திவிட்டு, '.... இருந்தா நல்லா இருக்கும்னு தானே சொல்றேன்' என முகத்தைத் திருப்பிக் கொண்டு சொல்வது தூள்!

பெருமாள் சிலையைப் பந்தாடியிருப்பது ஒருசிலருக்கு உவப்பாயிருக்கலாம்.
தவிர்த்திருக்கலாம். ஆனால், அது அவரது கொள்கை வெளிப்பாடு என்பதால் கண்டுக்காம விட்டுறலாம். புஷ் பாத்திரத்தைக் கோமாளியாகச் சித்தரிப்பதும் அவ்வகைப் பட்டதே!

தனக்காகப் படம் எடுக்கட்டும் கமல்! அது அவரது உரிமை! அதற்காக நம்மையெல்லாம் இப்படி கஷ்டப்படுத்த வேண்டாம் என ஒரு தாழ்மையான வேண்டுகோளை விடுக்கிறேன்.
அவர் மீது எனக்கிருக்கும் நல்லெண்ணத்தினால், கைப்பணத்தை இப்படிக் கரியாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

அவரிடம் இருக்கும் திறமைக்கு, அவர் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
நல்ல கதையம்சம் உள்ளஒரு எளிமையான படம்!
சொன்னாலும் சொல்லலைன்னாலும் இதுதான் அவரது தீவிர ரசிகர்கள் அவரிடமிருந்து விரும்புவது.

இடைவேளைக்குப் பின் தியேட்டரில் இருந்த நிசப்தம் இதைத்தான் சொல்லியது.

வெளியே வரும்போது ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP