"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 16
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 16
முந்தைய பதிவு இங்கே!
14.
"இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு." [352]
எங்கேயோ பார்த்த முகமா இருக்கே என ஒரு கணம் நினைத்தான்.
அதற்குள் அந்த ஆள் இவனைக் கடந்து சென்றான்.
சிறிது தூரம் சென்றவன், சட்டென ஒரு பொறி தட்டினாற்போல் திரும்பினான்!
இவன் மீது மோதியவன் தூரத்தில் இருந்து இவனைப் பார்த்துச் சிரித்துக் கண்ணடித்தபடியே மறைந்தான்.
'அவனேதான்!' அன்று இவன் பணத்தை ரெயில்வே ஸ்டேஷனில் பறித்துச் சென்ற அதே இளைஞன்!
சட்டென கால் சட்டைப்பைக்குள் கையை விட்டான்!
கற்கள் தட்டுப் பட்டன!
'இது ஒரு சகுனம்!
எனக்கு இந்த நேரத்தில் நான் செய்ய வேண்டியது என்னவெனச் சுட்டிக்காட்டும் தருணம்!
இல்லையென்றால், இத்தனை நாளாய் இல்லாமல், இன்று அவன் என் கண்ணில் படுவானேன்?
எந்த ஒரு கனவைத் தொடர்ந்து நான் இங்கே வந்தேனோ, அந்தக் கனவு கனவாகவே இதுவரை போனதற்குக் காரணமானவன்!
இன்று, அதைவிட, அதிகமாகப் பணம் என்னிடம் இருப்பதற்கு இவனே காரணம்!
அன்னிக்கு எனக்கு ஒலகம் தெரியாது.
ஆனா, இன்னிக்கு, அண்ணாச்சி தயவால, கொஞ்சம் நெளிவு சுளிவு தெரிஞ்சிருக்கு!
எதையும் சமாளிக்கலாம்னு ஒரு தைரியம் வந்திருக்கு.
ஒருவேளை இதெல்லாம் வரணும்னுதான் அன்னிக்கு இவன் பணத்தை அடிச்சுகிட்டுப் போனானோ?
அப்படீன்னா இவனும் எனக்கு உதவிதான் பண்ணியிருக்கான்.
அப்படிப் பார்த்தா, நான் திரும்பவும் ஊருக்குத் போய், ஆடு மேய்க்கப் போறதுல என்ன லாபம்?
ஒன்னோட கனவை நீ தொடருன்னு சொல்றதுக்காகவே இப்ப இவன் வந்து எம்மேல மோதிட்டுப் போறானோ?'
திடீரென ஒரு புத்துணர்ச்சி பிறந்தது கந்தனுக்குள்!
மனசு சந்தோஷமாகி, லேசாத் துள்ளியது!
'நான் எப்ப வேணும்னாலும் திரும்பவும் ஆடு மேய்க்கப் போலாம். இல்லேன்னா ஒரு ஓட்டல் கூட நடத்த முடியும்! ஆனாக்க,
என்னியப் பர்த்து ஒரு ராசா, மார்ல தங்க மாலை போட்ட ராசா, உனக்குப் புதையல் கிடைக்கும்னு சொல்லியிருக்காரு.
இது எல்லாருக்கும் நடக்கற ஒண்ணு இல்லை. எனக்கு நடந்திருக்கு. இப்ப நான், அத்த வுட்டுட்டு, திரும்பவும் ஊரைப் பாக்கப்
போனேன்னா, இதுக்கெல்லம் அர்த்தமே இல்லாமப் போயிரும்.'
ஒரு புது வேகத்துடன் கந்தன் நடை போட்டான்.
'மஹாபலிபுரம் போவணும்.
அதுக்கு முன்னாடி, வாத்தியார் சொன்ன மாரி, பார்க்க வேண்டிய ஊரையெல்லாம் பார்க்கணும்.
இப்பக் கிடைச்ச மாரி, இன்னும் எத்தினியோ அனுபவம் எனக்குக் கிடைக்கும்.
இனிமே அதான் நான் செய்ய வேண்டியது' என முடிவு செய்தான்.
பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான்!
கண்ணில் பட்ட முதல் பேருந்தில் ஏறினான்.
'தம்பிக்கு எந்த ஊருக்கு டிக்கட்டு?' கண்டக்டர் கேட்டார்.
இந்த பஸ்ஸு எங்கே போவுதோ, அங்கே!' என்றான்.
அவனை வினோதமாகப் பார்த்துக் கொண்டே, சேலத்துக்கு ஒரு டிக்கட் கிழித்தார்.
ஜன்னல் வழியே,' அண்ணே, அண்ணே! எட்டு பிஞ்சு 2 ரூவாண்ணே! வாங்கிக்கங்கண்ணே!' எனக் கூவினான் ஒரு சிறுவன்!
'இவனுக்கு என்ன கனவோ? எதை சாதிக்க வேண்டி, இப்படியெல்லாம் கூவி விற்கிறானோ?' என ஒரு நினைப்பு மனதில் ஓட,
ரெண்டு கட்டு வாங்கிக் கொண்டு ஒரு ஐந்து ரூபாய்த்தாளை அவனிடம் கொடுத்து, 'மிச்சத்த நீயே வெச்சுக்கோ' என்றான்.
சிறுவன் மகிழ்ச்சியுடன் சிரித்தான்.
'நீங்க நல்லா இருக்கணும்ண்ணே!' என வாழ்த்தினான்.
பஸ் கிளம்பும் போது, அவசர அவசரமாக ஒரு வெள்ளைக்காரன் ஏறினான்.
முதுகில் மாட்டியிருந்த தன் பையை மேலே வைத்துவிட்டு, இவன் அருகில் உட்கார்ந்தான்.
'சேலம்தானே போவுது?' என அரைகுறைத் தமிழில் வினவினான்.
கந்தன் அவனை அதிசயமாகப் பார்த்தபடியே, 'ஆம்!' என்றான்.
பஸ் புறப்பட்டது.
[தொடரும்]
*****************************
அடுத்த அத்தியாயம்