Sunday, October 14, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 16

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 16

முந்தைய பதிவு இங்கே!

14.


"இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி


மாசறு காட்சி யவர்க்கு." [352]







எங்கேயோ பார்த்த முகமா இருக்கே என ஒரு கணம் நினைத்தான்.

அதற்குள் அந்த ஆள் இவனைக் கடந்து சென்றான்.

சிறிது தூரம் சென்றவன், சட்டென ஒரு பொறி தட்டினாற்போல் திரும்பினான்!

இவன் மீது மோதியவன் தூரத்தில் இருந்து இவனைப் பார்த்துச் சிரித்துக் கண்ணடித்தபடியே மறைந்தான்.

'அவனேதான்!' அன்று இவன் பணத்தை ரெயில்வே ஸ்டேஷனில் பறித்துச் சென்ற அதே இளைஞன்!

சட்டென கால் சட்டைப்பைக்குள் கையை விட்டான்!

கற்கள் தட்டுப் பட்டன!

'இது ஒரு சகுனம்!

எனக்கு இந்த நேரத்தில் நான் செய்ய வேண்டியது என்னவெனச் சுட்டிக்காட்டும் தருணம்!

இல்லையென்றால், இத்தனை நாளாய் இல்லாமல், இன்று அவன் என் கண்ணில் படுவானேன்?

எந்த ஒரு கனவைத் தொடர்ந்து நான் இங்கே வந்தேனோ, அந்தக் கனவு கனவாகவே இதுவரை போனதற்குக் காரணமானவன்!

இன்று, அதைவிட, அதிகமாகப் பணம் என்னிடம் இருப்பதற்கு இவனே காரணம்!

அன்னிக்கு எனக்கு ஒலகம் தெரியாது.

ஆனா, இன்னிக்கு, அண்ணாச்சி தயவால, கொஞ்சம் நெளிவு சுளிவு தெரிஞ்சிருக்கு!

எதையும் சமாளிக்கலாம்னு ஒரு தைரியம் வந்திருக்கு.

ஒருவேளை இதெல்லாம் வரணும்னுதான் அன்னிக்கு இவன் பணத்தை அடிச்சுகிட்டுப் போனானோ?

அப்படீன்னா இவனும் எனக்கு உதவிதான் பண்ணியிருக்கான்.

அப்படிப் பார்த்தா, நான் திரும்பவும் ஊருக்குத் போய், ஆடு மேய்க்கப் போறதுல என்ன லாபம்?

ஒன்னோட கனவை நீ தொடருன்னு சொல்றதுக்காகவே இப்ப இவன் வந்து எம்மேல மோதிட்டுப் போறானோ?'


திடீரென ஒரு புத்துணர்ச்சி பிறந்தது கந்தனுக்குள்!

மனசு சந்தோஷமாகி, லேசாத் துள்ளியது!

'நான் எப்ப வேணும்னாலும் திரும்பவும் ஆடு மேய்க்கப் போலாம். இல்லேன்னா ஒரு ஓட்டல் கூட நடத்த முடியும்! ஆனாக்க,
என்னியப் பர்த்து ஒரு ராசா, மார்ல தங்க மாலை போட்ட ராசா, உனக்குப் புதையல் கிடைக்கும்னு சொல்லியிருக்காரு.
இது எல்லாருக்கும் நடக்கற ஒண்ணு இல்லை. எனக்கு நடந்திருக்கு. இப்ப நான், அத்த வுட்டுட்டு, திரும்பவும் ஊரைப் பாக்கப்
போனேன்னா, இதுக்கெல்லம் அர்த்தமே இல்லாமப் போயிரும்.'

ஒரு புது வேகத்துடன் கந்தன் நடை போட்டான்.

'மஹாபலிபுரம் போவணும்.

அதுக்கு முன்னாடி, வாத்தியார் சொன்ன மாரி, பார்க்க வேண்டிய ஊரையெல்லாம் பார்க்கணும்.

இப்பக் கிடைச்ச மாரி, இன்னும் எத்தினியோ அனுபவம் எனக்குக் கிடைக்கும்.

இனிமே அதான் நான் செய்ய வேண்டியது'
என முடிவு செய்தான்.

பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான்!

கண்ணில் பட்ட முதல் பேருந்தில் ஏறினான்.

'தம்பிக்கு எந்த ஊருக்கு டிக்கட்டு?' கண்டக்டர் கேட்டார்.

இந்த பஸ்ஸு எங்கே போவுதோ, அங்கே!' என்றான்.

அவனை வினோதமாகப் பார்த்துக் கொண்டே, சேலத்துக்கு ஒரு டிக்கட் கிழித்தார்.

ஜன்னல் வழியே,' அண்ணே, அண்ணே! எட்டு பிஞ்சு 2 ரூவாண்ணே! வாங்கிக்கங்கண்ணே!' எனக் கூவினான் ஒரு சிறுவன்!


'இவனுக்கு என்ன கனவோ? எதை சாதிக்க வேண்டி, இப்படியெல்லாம் கூவி விற்கிறானோ?' என ஒரு நினைப்பு மனதில் ஓட,
ரெண்டு கட்டு வாங்கிக் கொண்டு ஒரு ஐந்து ரூபாய்த்தாளை அவனிடம் கொடுத்து, 'மிச்சத்த நீயே வெச்சுக்கோ' என்றான்.

சிறுவன் மகிழ்ச்சியுடன் சிரித்தான்.

'நீங்க நல்லா இருக்கணும்ண்ணே!' என வாழ்த்தினான்.

பஸ் கிளம்பும் போது, அவசர அவசரமாக ஒரு வெள்ளைக்காரன் ஏறினான்.

முதுகில் மாட்டியிருந்த தன் பையை மேலே வைத்துவிட்டு, இவன் அருகில் உட்கார்ந்தான்.

'சேலம்தானே போவுது?' என அரைகுறைத் தமிழில் வினவினான்.

கந்தன் அவனை அதிசயமாகப் பார்த்தபடியே, 'ஆம்!' என்றான்.

பஸ் புறப்பட்டது.

[தொடரும்]
*****************************



அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 15

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 15



முந்தைய பதிவு இங்கே!


13.



"வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று." [678]



இரண்டு மாதம் போனது.

"மீனாட்சி பவன்" என்ற இரண்டு மாடி ஓட்டல் ஜங்ஷனுக்குப் பக்கத்தில் புதிதாக எழுந்தது.

மேல்மாடி ஏ/சி செய்யப்பட்டு, புதுப் பொலிவுடன் திகழ்ந்தது.

பெட்டிக்கடை இப்போது பெரிதாக விரிவாக்கப் பட்டு, தினசரிப் பத்திரிக்கைகள், கல்கி, குமுதம், விகடன் குங்குமம் என வாரப்பத்திரிக்கைகள்,
எனப் பெரிதாகியது.

ஓட்டலில் எப்போதும் அலை மோதும் கூட்டம்.

இப்படியே தொடர்ந்தால், இன்னும் ஆறு மாதத்தில் தேவையான பணத்தைச் சேர்த்துக் கொண்டு, ஊர் திரும்பலாம் என கந்தன் முடிவு செய்தான்.

"உனக்கு என்ன வேண்டுமோ, அது எப்போதும் உனக்குத் தெரிய வேண்டும்" பெரியவரின் வாக்கு கேட்டது!

'இங்கு வந்து ஒரு ஆண்டாகியும் இந்தக் கல்லுங்களைக் கேட்க வேண்டிய நிலைமையே வரலை! ஒருவேளை, ஒத்தைக்காசு செலவில்லாம, நாம்
ஒண்ணுமே பண்ணாம, என்கிட்ட இருந்ததைவிட, ரெட்டைப்பங்கு பணக்காரனா ஊரு திரும்பி, முன்னே இருந்ததைவிட அதிகமா ஆடு மாடுங்களை
வாங்கணும்னுதான் விதி இருந்திருக்கோ என்னமோ!' கந்தன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

'ஏங்க! கோவில்ல அம்மனுக்கு ஒரு கல்யாணம் பண்ணனும்னு ஒரு பிரார்த்தனை. ஆரைப் பாக்கணும் அதுக்கு?' பதட்டத்துடன் ஒரு யாத்ரீகர் கேட்டார்.

'அதுக்கென்ன! செஞ்சிருலாம்!' எனக் கந்தன் சொன்னான்.

கடை ஆள் ஒருவனை அழைத்தான். ' ஐயாவைக் கூட்டிகிட்டுப் போயி, அவருக்கு வேணும்ன்றதைச் செஞ்சு கொடு' என அனுப்பிவைத்தான்.

அவர் சந்தோஷமாகத் திரும்பி வந்து கந்தன் கையில் ஒரு நூறு ரூபாயைக் கொடுத்து, அவனைப் பாராட்டிச் சென்றார்.

'இங்க வர்றவங்களுக்கு நாம் தேவையான வசதி செஞ்சு கொடுக்கணும்.'நம்ம லாட்ஜுக்கு வர்றவங்களுக்கு, திரும்பிப் போறவரைக்கும் எல்லா
வசதியும் செஞ்சு கொடுக்கணும்.' எனச் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

2 மாதங்களுக்குப் பிறகு, ஒரு நாள் காலை! கந்தன் கண் விழித்தான்.

பெட்டியில் சேர்த்து வைத்த பணத்தை எண்ணிப் பார்த்தான்!

'அம்பது ஆடு வாங்கலாம். பத்து எருமை மாடுகூட வாங்கலாம். அவ்ளோ பணம் சேர்ந்திருக்கு.' என நினைத்தான்.

அண்ணாச்சி எழுந்து வந்து ஒரு பீடி பத்த வைத்தார்.

இவனைப் பார்த்தார்.

'என்ன இன்னிக்கு வெள்ளனவே எளுந்தாச்சு போல! எதுனாச்சும் வேலையா?' என்றார் அன்பாக.

'இன்னிக்கு நான் கிளம்பறேன். ஆடு மாடு வாங்கத் தேவையான பணம் சேந்திருச்சு. நீங்களும் எப்ப வேணும்னாலும் காசிக்குப் போவலாம்.
மாணிக்கம் இப்ப நல்லாவே தேறிட்டான். கடையப் பாத்துக்குவான்' என்றான் கந்தன்.

அண்ணாச்சி ஒன்றும் பேசாமல் அவனைப் பார்த்தார்.

'எனக்கு ஆசி சொல்லி அனுப்புங்க! நீங்க இல்லேன்னா, நான் என்ன பண்ணியிருப்பேன்னே தெரியாது!' எனக் கலங்கினான் கந்தன்.

'நாந்தேன் உனக்கு நன்றி சொல்லணும். என்னையே எனக்குப் புரிய வெச்சவன் நீ! ஒனக்கே தெரியும்... நா காசிக்கெல்லாம்
போவப் போறதில்லன்னு! என் காலம் இங்கியே இந்த மதுரைலதான்! அதேமாரி, நீயும் ஆடு மாடெல்லாம் வாங்கப் போறதில்லைன்னும்
எனக்குத் தெரியும்'
என்றார் அண்ணாச்சி!

'ஆரு சொன்னாங்க உங்களுக்கு?' என ஆச்சரியத்துடன் வினவினான்.

'ம்ம்ம்!...ஒரு ராசா கனவுல வந்து சொன்னாரு' எனச் சிரித்தார் அண்ணாச்சி!

தன் கண்கள் கலங்குவதைக் கந்தன் பாராத வண்ணம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்!
***********

கந்தன் தன் துணிமணிகளை ஒரு பெட்டியில் எடுத்து அடுக்கினான்.

ஒரு மூலையில் கிடந்த பழைய துணிப்பை அவன் கண்களில் பட்டது!

ஆவலோடு அதை எடுத்துப் பிரித்தான்.

உள்ளே ஒரு பழைய வேட்டியும்.... ஒரு கசங்கிய துண்டில் சுற்றி வைத்திருந்த இரண்டு கற்களும்!!!

பெரியவர் கொடுத்த கருப்பு வெள்ளைக் கற்கள்!

இத்தனை நாட்களாய் மறந்தே போயிருந்தான் இந்தக் கற்களை!

'உன் கனவை ஒரு நாளும் மறக்காதே' பெரியவர் சொன்னது நினைவுக்கு வந்தது.

'கனவா? எல்லாம் கனவாவேப் போச்சு! எங்கேருந்து வந்தேனோ, அங்கியே திரும்பவும் போகப் போறேன். இந்தக் கல்லுங்களை
தெருவுல ஆருக்காச்சும் கொடுத்திறணும்' என முடிவெடுத்து மீண்டும் அவைகளை ஒரு முறை பார்த்தான்.

......"நீ எதுனாச்சும் ஒண்ணை... அது சந்தோசமோ, துக்கமோ, இல்லை பொறமையோ எதுன்னாலும் சரி,... தீர்மானமா விரும்பினியானா
அந்த ஆத்மா உன்கூடவே இருந்துகிட்டு, அதை உனக்கு கிடைக்க ஒதவும். இதான் சூட்சுமம்."....... கிழவர் சொன்னது காதில் கேட்டது.


'ஆமா! உன் ஆடுங்களை வித்து வர்ற பணத்தை ஒர்த்தன் திருடிட்டு போயிருவான். சோறு போட ஒர்த்தன் வருவான். அவனோட சேர்ந்து
நீ பெரிய ஆளா வருவே! முன்னே இருந்த ஆடுங்களை விட இன்னும் அதிகமா வாங்கற அளவுக்குப்
பணம் கிடைக்கும்னு கூடத்தான் அவரு சொல்லலை!' என்று முணுமுணுத்தான்!

'எல்லாம் மாயை! நாமதான் நமக்கு உதவி!' என்றபடியே பெட்டியைத் தூக்கிக் கொண்டு வாசலுக்கு வந்தான்.

அண்ணாச்சியைப் பார்த்தான்.

யாரோ ஒரு ஆளோடு பேசிக் கொண்டிருந்தார்!

அவரைப் பார்த்ததும், ஏனோ பெரியவரின் நினைவு வந்தது கந்தனுக்கு!

........"அவனோட விடாமுயற்சியப் பாத்த நான், ஒரு பெரிய சிப்பியா என்னை மாத்திகிட்டு, அந்த சல்லடையில போயி விளுந்தேன்.
அவனுக்கா ஒரே கோவம்!
வெறுப்புல என்னைத் தூக்கி ஒரு கல்லு மேல எறிஞ்சான்.
சிப்பி உடைஞ்சுது.
உள்ளேருந்து இம்மாம் சைசுல ஒரு பெரிய நல்முத்து!
இன்னிக்கு அவன் பெரிய பணக்காரன்!
இன்னமும் சல்லடை போடறான்.... ஆளுங்களை வெச்சு!" என்றர் கிழவரின் சொற்கள் மனதில் கேட்டது!

அண்ணாச்சியிடம் சொல்லிக் கொள்ளாமலேயே வெளியில் வந்தான்.

இன்னுமொரு முறை பார்த்தால், அழுது விடுவொமெனத் தோன்றியது அவனுக்கு.

திரும்பி, மீனாட்சி பவனை மீண்டும் ஒருமுறை பார்த்தான்!

இதையெல்லாம் விட்டுப் போகிறோமே எனத் துக்கமாக வந்தது!

'இப்ப எங்கே போகப் போறேன்? நான் பொறந்து வளர்ந்த எடத்துக்குத்தானே! மறுபடியும் ஆடு மாடுங்களை மேய்ச்சுகிட்டு!'
ஒரு தீர்மானத்துடன் நடந்தான்.

ஆனால், மனதில் ஒரு திருப்தி இல்லை!

'எதுக்காவ வந்தேனோ, அது நடக்கலை. அண்ணாச்சி காசிக்குப் போகப் போறதில்லைன்ற மாரி, நானும் புதையலைப் பாக்கப் போறதுஇல்லை!'

யோசித்துக் கொண்டே நடந்தவன் மீது எவனோ மோதினான்!!



[தொடரும்]
*******************************


அடுத்த அத்தியாயம்

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP