Thursday, December 22, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 41 [இரண்டாம் பகுதி]

                                                                     உ
"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 41 [இரண்டாம் பகுதி]
39.
[முதல் பகுதியையும் படிக்கவும்!]

 
மாவேழ் சனனங் கெடமா யைவிடா



மூவே டணையென் றுமுடிந் திடுமோ


கோவே குறமின் கொடிதோள் புணரும்


தேவே சிவசங் கரதே சிகனே.


அடுத்த இரு வரிகளுக்கு மன்னார் என்ன சொல்லப் போகிறான் என்னும் ஆவலில் நிமிர்ந்து உட்கார்ந்தேன். நாயரும் கண்களைத் திறந்து பார்த்தான். சாஸ்திரிகள் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்துகொண்டிருந்தது. மயிலை மன்னார் சொல்லத் தொடங்கினான்.

'இப்ப ஒனக்கு கொஞ்சம் துட்டு வேணும்னு வையி. நீ ஆருகிட்ட போவே? துட்டு இருக்கறவங்கிட்ட போவே! ஆனாக்காண்டிக்கு, துட்டு வைச்சுக்கினு க்கீறவன்லாம் குடுத்துருவானா?


இன்னா, ஏதுன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டுட்டு, அப்பறமா வா, பாக்கலாம்னு சொல்லிருவான் மனசில்லாதவன். அவங்கையுல துட்டு இருந்தும் ஒண்ணும் 'யூஸ்' இல்ல!


அதுனால நீ இன்னா பண்ணுவே? துட்டு மட்டும் வைச்சிருந்தாப் போறாது. குடுக்கற மனசும் க்கீறவனாப் பாத்து போவே.


அதுவும் பத்தாம, அவனோட கொணம் தெரிஞ்சு அந்த டயத்துக்காப் போவணும்! அப்பத்தான் காரியம் கெலிக்கும். இன்னா? சர்த்தானே நான் சொல்றது.' என்றான்.


நான் ஆமாம், ஆமாம் என்பதுபோலத் தலையாட்டினேன்.


வெறும் துட்டு சமாச்சாரத்துக்கே இத்தினி பாக்கணும்னா, இப்ப அருணகிரியாரு கேக்கற சமாச்சாரத்துக்கு இன்னால்லாம் தோணும் அவருக்கு!


பொறவியே இனிமே கூடாதாம்! இந்த மூணு விதமான ஆசையும் தொலையணுமாம்!


இத்தக் கேக்கப் போறச்சே, ஆரு இதுக்குத் தோதானா ஆளுன்னு பாக்கறாரு.


சரி, பொறவிதானே வேணாம்னு சொன்னே. அதுக்கென்ன இனிமே நீ பூமியுல பொறக்கமாட்டே! அதுக்குப் பதிலா என்னோட ஒலகத்துக்கு வந்து குந்திக்கன்னு சொல்ற சாமியை இவர் தேடலை!

எந்த சாமிக்கு எல்லா ஒலகமும் கட்டுப்படுதுன்னு சுத்துமுத்தும் பாக்கறாரு.


எதுத்தாப்புல வந்து நிக்கறான் முருகன்!

'ஆகா! இவர்தானே அல்லா ஒலகத்துக்கும் தலைவன்'னு புரியுது!

கைலாஸம், வைகுண்டம், சத்தியலோகம், சக்திபீடம்னு நாலு ஊருங்க இருக்கு. அததுக்கு ஒரு சாமி தெய்வமா நின்னு அந்தந்த ஊருங்களைப் பாதுகாக்குது.

ஆனாக்க, இந்த முருகனோட பெருமையே தனி!


ஒனக்குக் கூட நெனைப்பிருக்குமே! ஓம்முன்ற வார்த்தைக்குப் பொருள் தெரியலைன்னு, பிரம்மாவைத் தூக்கி ஜெயில்ல போட்டுட்டு இவரு இன்னா பண்ணினாருன்னு!

அல்லாத் தொளி[ழி]லையும் இவர் ஒர்த்தரே பாத்துக்கறேன்னு சொல்லிட்டு, அப்பிடியே செஞ்சும் காட்டினாரு!

இதெல்லாம் நெனைப்புல வரவும், மொதல் வார்த்தையைப் போட்டுக் கூப்பிடறாரு!

'கோவே'ன்னு!


'கோ'ன்ன ரொம்பப் பெரிய ராசான்னு அர்த்தம். இல்லியா சாமி?' என சாஸ்திரிகளைப் பார்த்ததும், உடனே புரிந்த சாம்பு சாஸ்திரிகள்,


'இதைப்பத்தி, 'திருமுருகாற்றுப்படை'ங்கற அற்புதமான நூலுல நக்கீரர் ரொம்ப அழகாச் சொல்றார்.


" நால் பெரு தெய்வத்து நல் நகர் நிலை இய
உலகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கை" ன்னு.


கிட்டத்தட்ட இப்ப நீ சொன்ன அதே குணத்தைத்தான் கந்தஸ்வாமிக்குச் சொல்லி அழகு பார்க்கறார் நக்கீரர்' என்றார்.

ஒரு திருப்தி கலந்த சந்தோஷத்துடன் அவரைப் பார்த்துவிட்டு மேலே தொடங்கலானான் மன்னார்.


'ஆச்சா? இப்ப மொத வார்த்தை கிடைச்சாச்சு! அல்லா ஒலகமும் இவருக்கு வசப்படுதுன்னு புரிஞ்சுபோச்சு!

இப்ப நேரம் எப்பிடின்னு கொஞ்சம் யோசிக்கறாரு அருணகிரி.
எப்பவுமே ஒர்த்தர் ரொம்ப சந்தோஷமா க்கீற நேரத்துல போய்க் கேட்டா, அநேகமா அந்தக் காரியம் பள[ழ]மாயிரும்.

அப்பிடி இந்தக் குமரனுக்கு எந்த நேரம் நல்ல நேரம்னு நெனைச்சுப் பாக்கறாரு.
அடுத்த வரி பொறக்குது!

'குறமின் கொடி தோள் புணரும் தேவே'ன்னு கூப்பிடறாரு.


வள்ளியம்மாவோட இடுப்பு ரொம்பச் சின்னதா ஒரு மின்னல்கொடி போல இருக்குமாம். அந்த அம்மாவோட இவரு க்கீற நேரமெல்லாமே சந்தோசமான நேரந்தான். அதுனால, இந்த வார்த்தையைச் சொன்னதும், அந்தக் 'கோ'வுக்கு, 'தே'வுக்கு... ரொம்பவே சந்தோசமாப் பூடுது!


கடசியா, ஒரு சொல்லு வைக்கறாரு 'சிவசங்கர தேசிகனே'ன்னு!

முன்னாடி சொன்ன பிரம்மா கதையோட முடிவு ஒனக்குத் தெரியுந்தானே! அவரை விட்டுருப்பான்னு நைனா கபாலி வந்து கேக்கக்கொள்ள, அப்பிடீன்னா அதுக்கு பொருள் சொல்லு நைனான்னு இவரு பர்த்திக்குக் கேக்க, 'ஒனக்குத் தெரிஞ்சா நீயே சொல்லுன்னு கபாலி கேக்க, 'ஆங்! அதெல்லாம் ஒளுங்கா ஒரு வாத்தியார்கிட்டக் கேக்கறமாரி பணிவாக் கேக்கணும்'னு முருகன் சொல்ல, அப்பிடிச் சொன்னதுதான் அந்த ஒபதேசம்!


அதுனாலத்தான் இவரு சிவசங்கர தேசிகன்.
தேசிகன்னா குருன்னு அர்த்தம்.


இந்த வார்த்தை எதுக்காவப் போட்டருன்னா, ஆருக்குமே தெரியாததுல்லாம் ஒனக்கு மட்டுந்தான் தெரியும் முருகா! அதுனால, இந்த பொறப்பும், மூணு ஆசைங்களும் எப்ப முடியும்ன்றதையும் கொஞ்சம் பாத்துச் சொல்லு கண்ணு'ன்னு நைஸாக் கேக்கறாரு!


நான் மொதல்லியே சொன்னமாரி, ஆரு கையுல அல்லாமே க்கீதோ, ஆருக்கு குடுக்கற மனசு க்கீதோ, அவர்கையுல நேரம் பாத்துக் கேட்டா, கேட்டதுக்கு மேலியே கிடைச்சிரும்!


இந்த மூணு ஆசைங்களுக்கும் கீளே சொன்ன மூணு பேருங்களுக்கும்ங்கூட ஒரு பொருத்தம் க்கீது!


அல்லா ஒலகத்துக்கும் ராசா... மண்ணு
வள்ளியம்மாவைக் கண்ணாலம் கட்டிக்கினவரு....பொண்ணு
ரொம்பவே மதிப்பான தங்கத்தைப் போல, ரொம்பப் பெரிய விசயத்தைத் தெரிஞ்சு வைச்சிருக்கவரு,... பொன்னு!


இப்பிடியும் அர்த்தம் பண்ணிக்கினு இந்தப் பாட்டை ரொம்பவே ரசிக்கலாம்.

ஆகக்கூடி, நேரம் காலம் பாக்காம, எப்பவும் இவனோட பேரைச் சொல்லிக்கினே இரு! அதான் இதுக்கெல்லாம் ஒரே வளி[ழி]ன்னு இந்தப் பாட்டு மூலமா, அருணையாரு நமக்கெல்லாம் அருள் பண்றாரு' எனச் சொல்லிவிட்டு, எழுந்து நின்று ஒரு சோம்பல் முறித்தான் மயிலை மன்னார்!

மீண்டும் இந்தப் பாட்டைப் படித்துப் பார்த்தேன்!


மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவே டணையென் றுமுடிந் திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங் கரதே சிகனே.


'ஓம் சரவணபவ' தொடரலாயிற்று!

**************************
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP