Friday, April 28, 2006

வெற்றி முரசு


கேப்டன்" விஜயகாந்த்தின் பேட்டி - கோடை வெயிலுக்குச் சற்றும் சளைக்காத சூட்டுடன்....

உங்கள் வேட்பாளர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீங்க?

"என்னோட கட்சி வேட்பாளர்கள் எளிமையானவர்கள். திறமையானவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். இவங்க உங்க கூடவே இருந்து, உங்களில் ஒருத்தராக இருப்பாங்கன்னு மக்கள்கிட்டே பகிரங்கமாகச் சொல்லிட்டு வர்றேன். உண்மை, உழைப்பு, நேர்மை, கல்வித்தகுதி எல்லாத்தையும் கவனத்தில் வச்சேன். டாக்டர்கள், என்ஜினீயர்கள், பட்டம் பெற்றவர்கள் இப்படி பலவிதமாக களத்தில் இருக்காங்க. பெண்களுக்குப் பெரிய பங்கு இருக்கு."

மிகவும் ஆரம்ப நிலையில் இருக்கிற ஒரு கட்சி. அதோடு தேர்தல் களத்துக்கும் வந்தாச்சு. 234 தொகுதிக்கும், வேட்பாளர், பயணம், பிரசாரம், மேடைகள், கூட்டங்கள் மலைப்பாக இருக்கு. செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீங்க?

"நான் சினிமாவில் நடிச்சு வந்ததெல்லாம், மக்கள் என்மேல் வைச்ச அன்பினால் வந்த பணம். அதையும் கட்சி நடத்த செலவழிக்கிறேன். அதுவும் பெரிய பணம் அல்ல. கட்சிக்காரர்கள் முடிந்த அளவுக்குத் தங்களுடைய பணத்தைக் கட்சிக்கும், தேர்தலுக்கும் செலவழிக்கிறாங்க. பூந்தோட்டத்திற்கு எதுக்கு சார் விளம்பரம்? நல்லது செய்கிறவங்களுக்கு ஓட்டா? நாட்டை ஏமாத்தறவங்களுக்கு ஓட்டான்னு கேக்குறேன். இதுக்கு எதுக்குப் பணம்?"

திடீர் தலைவர்னு உங்களைப் பற்றிய கிண்டல் இப்பவும் இருக்கிறதே?

"இப்படிப் பேசுறவங்களுக்கு நான் சொல்கிற அறிவுரை ஒன்றே ஒன்றுதான். உங்கள் மூளையைக் கொஞ்சம் பயன்படுத்தி, நடந்த விஷயங்களை யோசிச்சுப் பாருங்க. அறிஞர்அண்ணாவிற்குப் பிறகு, கலைஞர் முதல்வர் ஆனது திடீர் என்றுதானே?

சோனியாகாந்திதான் பிரதமர்னு நினைச்சுதானே மக்கள் ஓட்டுப்போட்டாங்க. மன்மோகன்சிங் எப்படி வந்தார்? சோனியா காந்தியே திடீர் தலைவர்தானே? அ.தி.மு.க. ஜெயிச்சு பிரச்னை வந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வந்தாரே? அவர் திடீர் தலைவர் இல்லையா? இப்படி ஒவ்வொரு கட்சியும் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்திட்டு எங்கிட்ட வாங்க. யார் தலைவன்னு நம்மளை நாமளே
சொல்லிக்கிறதில்லைங்க.. மக்கள்தான் முடிவு பண்றாங்க."

வைகோ அ.தி.மு.க. கூட்டணிக்குப் போயிடுவார்னு, நீங்கள் முன்பே பேட்டியில் தெளிவாகச் சொல்லியிருக்கீங்க. எப்படி இந்த அனுமானம்?

"ஒரு சின்ன கணக்குதான். வைகோவோட ம.தி.மு.க. என்பதே வாரிசு அரசியலை எதிர்க்கிறதுதான். இதைத் தாவல்னு சொல்றாங்க. அவமானப்படுத்தி விட்டார்கள் என்கிறார்கள். அவருக்கு என்ன அவமானப்படுத்தப்படுவது புதுசா? ஏற்கெனவே தன்னை அவமானப்படுத்திட்டாங்க என்றுதானே தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறினார். நான் மக்கள்கிட்டே சொல்றது இதுதான். பாருங்க, யாராவது உங்களோட பிரச்னைக்குச் சண்டை போட்டுட்டு கூட்டணியை மாத்தி இருக்கிறார்களா? எவ்வளவு கேட்டும் என் தொகுதிக்குத் தண்ணி வரலைன்னு சொல்லிட்டு, எந்த எம்.எல்.ஏ. யாவது கட்சி மாறியிருக்காங்களா? இப்படி மாறி மாறி ஓட்டுப்போட்டு, இந்த இரண்டு துருப்பிடிச்ச கட்சிகளை ஆதரிக்கப் போறீங்களா?

வாரிசு அரசியலை நீங்க ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? உங்க குடும்பத்து ஆட்களும் உங்க கட்சியில் பங்கெடுக்கறாங்களே?

"அமெரிக்க அதிபர் புஷ்ஷோட அப்பா யாரு? இந்திரா அம்மையார் யாரு? ராஜிவ் காந்தி யாரு? சோனியா காந்தி யாரு? ஜி.கே. வாசன் யாரு? ஒரு கட்சித்தலைவருக்கு மகனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக யாரையும் ஒதுக்கிவிட முடியாது. அவரோட அர்ப்பணிப்பும், கட்சிக்கான உழைப்பும்தான் முக்கியமானது. ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவராக ஏன் வரக்கூடாது? அவர் தொடர்ந்து அந்தக் கட்சிக்காக வருஷக் கணக்காக உழைக்கிறாரே! காலங்காலமாக கட்சிக்கு உழைச்ச தி.மு.க.காரன் வயித்துல துண்டை
போட்டுட்டு, திடீர்னு புதுசாக எங்கேயிருந்தோ கொண்டு வந்து திணிக்கிறாங்க இல்லையா? அதை எதிர்க்கிறேன். மத்தபடி, எங்க வீட்டில் எனக்குச் செய்வது உதவி. பையன் பரீட்சைக்கு படிச்சா, அம்மா நாலு மணிக்கே எழுந்து டீ போட்டுக் கொடுத்து பக்கத்துல உட்கார்ந்து பார்த்துக்கிறதில்லையா? அப்படித்தான் என் வீடு."

தி.மு.க., அ.தி.மு.க. பேச்சாளர்கள் உங்களைத் தாக்கிப் பேசுகிறார்கள். ஆனால், தி.மு.க. தலைவரோ, அ.தி.மு.க. தலைவரோ அப்படி நேரடியாகத் தாக்குகிற மாதிரி தெரியவில்லையே?

"இரண்டு கழகத்தின் தலைவர்களுக்கும் என் பலம் புரிந்திருக்கிறது போல."

கடைசி வரைக்கும் அ.தி.மு.க. விற்குப் போய்விடுவீர்கள் என்று ஒரு செய்தி இருந்ததே?

"ஆரம்பத்திலிருந்து நான் மட்டும்தான் தனியாக நிற்கிறேன் என்று ஒரே வார்த்தையில் நின்னேன். அப்படியேதான் இப்பவும் இருக்கேன். இடையில் எல்லாக் கட்சியும் பேசிப்பார்த்தாங்க. நாங்க எங்க வேலையைப் பார்த்தோம். உளவுத்துறையும் நிறைய வேலை செய்தது."

இந்தக் கல்யாண மண்டபம் எந்த அளவில், எப்படி இருக்கு?

"விஜயகாந்த் எதிரின்னு நினைச்ச உடனே தி.மு.க. மண்டபத்தை இடிச்சு சந்தோஷப்பட பாத்தாங்க. காலம் மாறின உடனே, ஒரு புது ப்ளான் போட்டுக் கொடுத்தால் இடிக்காமல் விடுவதைப் பற்றிப் பார்க்கலாம்னு டி.ஆர்.பாலு சொன்னார். ஆனால், நான் ஒரு புது ப்ளானை இன்ஜினீயர்களை வச்சுப்போட்டு டி.ஆர். பாலுவிற்கு அனுப்பியிருக்கேன். இதுவரைக்கும் பதில் இல்லை. அனுப்பலைன்னா நீங்கதான் அனுப்பலைன்னு சொல்லிவிடுவாங்க. இதோ அனுப்பியாச்சு... பாலம் மண்டபத்துக்கு மேல போகுதா? இல்லை மண்டபத்து
மேலேயே போகுதான்னு பார்ப்போம்."

நீங்கள் எம்.ஜி.ஆரின் விசுவாசி. அ.தி.மு.க.வில் கூட அந்த மாதிரி விசுவாசிகள் இருக்காங்களே?

"ராமாபுரம் பக்கம் போனால் தோட்டத்தைப் பாருங்க. எப்பேர்ப்பட்ட வள்ளல்! எப்படி வாழ்ந்தது அந்த மனித மாணிக்கம்! வீடும் தோட்டமும் கவனிக்க ஆள் இல்லாமல் சிதைஞ்சு கிடக்கு. பாக்க நெஞ்சு அடைக்குது சார்... இன்னிக்கு அவர் போட்ட சாப்பாடு, வேலை, உடை, கட்சி, கௌரவம்னு வாழறவங்க நிறையப்பேர் இருக்காங்க. அவங்க உருவாக்கின கட்சி, கோடிகளில் கொண்டாட்டமாக இருக்கு. ஆனால், அவர் நடந்து வாழ்ந்த மண்? எம்.ஜி.ஆர். ஆத்மா இவர்களை மன்னிக்காது. ஜானகி அம்மா பள்ளிக்கு அப்ப 25,000 ரூபாய் கொடுத்தேன். இப்ப அவங்க கூட இல்லை. ஆனால் 50,000 ரூபாய் வருஷத்திற்குக் கொடுக்கிறேன்.
எம்.ஜி.ஆர். பெயரைச்சொல்லி வாழறவங்க எங்கே? அந்த விசுவாசிகள் எங்கே? மறந்த அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? கடவுள் கவனிச்சுக்கிட்டே இருக்கார்."

கட்சி ஆரம்பிச்சீங்க. கூட்டம் கூட்டமாக மக்கள் வர்றாங்க. தொடர் பயணம் எல்லாம் சரி. இன்னும் உங்க சின்னம் தெரியலை. தெரிய வைக்க என்ன செய்யப்போறீங்க?

"நாம நல்லது பண்ணுவோம்னு தெரிஞ்சால் மக்கள் நம்ம சின்னத்தையே தேடி வருவாங்க. மக்களுக்கு விஜயகாந்தைத் தெரியும். அவங்களுக்கு விஜயகாந்தின் சின்னத்தைத் தெரிஞ்சுக்கிறது சுலபம். ஓட்டு நல்ல ஆட்சிக்குத்தானே தவிர, பழகின சின்னத்திற்கு அல்ல. எம்.ஜி.ஆருக்கு திடீரென்று இரட்டை இலை கிடைச்சு ஜெயிக்கலையா? சின்னம் ரீச் ஆயிட்டால் ஜெயிக்கலாம்னா, போன
பார்லிமெண்ட் தேர்தலில் அ.தி.மு.க. ஏன் படுதோல்வி அடைந்தது? இலை ரீச் ஆகலையா? சார், மக்களுக்கு நல்லது பண்ணினால் கொண்டாடுவாங்க நிச்சயமாக."

ஒரே வார்த்தையில் சொல்லுங்க. என்ன சொல்லி இந்த இரண்டு கட்சியையும் எதிர்க்கப்போறீங்க?

"ஊழல்தான்... இவங்க இரண்டுபேரும் பெரிசு பெரிசா ஊழல் பண்ணி, எக்கச்சக்கமாகச் சொத்து சேர்த்து வைச்சிருக்காங்க. கொஞ்சம் ரெஸ்ட் குடுங்க. அந்தப் பணத்தை எல்லாம் எண்ணி முடிக்கவே, அடுத்த ஐந்து வருஷம் ஆகும். அதுவரைக்கும் ஆட்சியை விஜயகாந்த் கையில் கொடுங்க. நீங்க திரும்ப இறக்கிவிட முடியாத அளவுக்கு வேண்டியது எல்லாம் செய்கிறேன்."

Read more...

Thursday, April 27, 2006

" கொட்டு முரசே" !!

6.
வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு 'முரசே' !!

"பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்" என்னும் பழமொழிக்கேற்ப,
"யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும்" என்னும் முதுமொழிக்கேற்ப,
"உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டாய்" என்று, பொறாமையில் வளர்ந்தவர்கள் கடைசியில் அழுவது போல,

இரு கழகங்களும், 'இந்தமுறை எப்போதும் போல நமக்கு நாம்தான் போட்டி; நம் பங்கீட்டுக்குள் அடுத்தவனுக்கு கொஞ்சம் காட்டி விட்டு, நாமே சுருட்டிக்கொள்வோம்', என நினைத்த கணக்கெல்லாம் பொய்யாக,

நினைத்தபடி 'அலை' ஒன்றும் வீசாத நிலை கண்டு,
மனம் புழுங்கி,
உளம் வெதும்பி,
என்ன செய்வது என அறியாமல்,
ஏனிப்படி ஆயிற்று?
யார் காரணம்?என
தலையைச் சொறிந்து கொண்டும்,

விடை ஒன்றும் கிடைக்காமல்,
திகைத்து நிற்கின்ற நேரத்தில்,
தேர்தலுக்குப் பத்து நாட்கள் மட்டுமே உள்ள இந்த நேரத்தில்,
என்ன செய்யலாம்,
யாரைத் திட்டலாம் என்று புரியாது,
அரண்டு போயிருக்கும் நிலையில்,

இவனைத் திட்டுவதாக நினைத்து,
யாரையோ உசுப்பி விட்டோமே!
தேர்தல் நெருங்கும் போது தென்னாட்டில்
"சிங்கத்தையும், சிறுத்தையையும்" தூண்டி விட்டுவிட்டோமே என்று,
இல்லாத முடியைப் பிய்த்துக் கொண்டிருக்கும்
கலைஞர் ஒரு புறம்,

பெண்ணென்பதை மறந்து பேயாட்டம் போட்டோமே,
நல்லோரையும், எளியோரையும் உள்ளே வைத்தோமே,
வல்லாரையும், எல்லாரையும் காலில் விழ வைத்தோமே,
அந்தப் பாவங்கள் எல்லாம் இப்போது வந்து சூழ்ந்து ,

"சிலம்பில்" சொன்ன படி,
'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்'என்னும்
உன்னத வாக்கியம் உண்மையாக
உரு முன்னே தோன்றுவதைப் பார்த்து,
தலைவியும், தோழியும் மயங்க,

கறுப்புச்சிங்கம் 'விஜய'நடை போட்டு வர,
தென்னகத்தில் 'தேவர்மகன்' துள்ளி எழுந்து வர,
தென்கோடியில் சத்தமின்றி,
முல்லைப்பெரியார் மக்களெல்லாம்
மனமுவந்து கூடிவர,

தமிழகத்தில்,
தலைவிரித்து,
முப்பதாண்டுக் காலம் மோசடி செய்த
கழகங்களின் ஆட்சிக்காலம்
முடிவுக்கு வருகுதென,

'விஜய'மெனக் 'காந்தம்'ஒன்று வேகமாகப் பரவுகின்ற
'முரசு'க்கே ஓட்டென்று கொட்டு முரசே!
வீணர் ஆட்டம் ஓய்ந்ததென்று கொட்டு முரசே!
வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு 'முரசே' !!


""வினைக்குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரியனாகச் செயல்." [குறள் 518]

[ஒருவன் ஒரு செயலுக்குத் தகுதியுடையவனாதலை ஆராய்ந்து துணிந்த பின்னர், அவனை அச்செயல் செய்தற்கு உரியவனாக அச்செயலில் அமர்த்துதல் வேண்டும்.]





Read more...

Saturday, April 22, 2006

"இரண்டு கூட்டணிகளும் தோற்க வேண்டும் என ஏன் சொல்லுகிறேன்?"

"இரண்டு கூட்டணிகளும் தோற்க வேண்டும் என ஏன் சொல்லுகிறேன்?"


சமீப காலமாக இந்தத் தலைப்பில் கண்ட வாக்கியத்தை நான் சொல்லி வருவது கண்டு,

சிரிப்பவர் சிலர்!
சீண்டிப் பார்ப்பவர் சிலர்!
சீறுபவர் சிலர்!
சிணுங்குபவர் சிலர்!
சிந்திப்பவர் சிலர்?

இதை ஏன் சொல்லுகிறேன்?

கூட்டத்தோடு கோவிந்தா போடுவது போல இரண்டில் ஏதாவது ஒரு கூட்டணியை ஆதரித்து விட்டுப் போவதுதானே என கேலியும், கிண்டலும், கும்மாளமுமாக தமிழ்மணம் ரொம்பவே மணக்கிறது!

முப்பதாண்டுகளுக்கும் மேலாக, தமிழ் மக்கள் கடந்த 55 ஆண்டு கால குடியரசு ஆட்சிக் காலத்தில், இந்த இரு கழகங்களையும் நம்பி,
"இவர்கள் நமது நலனை மட்டுமே கருத்தில் கொண்டவர்கள்,
பிராந்தியக் கட்சியை ஆதரித்தால், நமக்கும், நம் சந்ததியருக்கும், பயன் இருக்கும்"
என மனப்பூர்வமாக நம்பி, மாறி, மாறி, இவ்விரு கழகங்களையும் நம்மை ஆளவைத்ததில், நாம் கண்ட நன்மைகள் என்ன, தீமைகள் என்னென்ன என்று பார்த்தால்,தீமைக்கணக்கே விஞ்சி நிற்கிறது!

அரிசியைக் காட்டியே ஆட்சிக்கு வந்த இந்த கபடவேடதாரிகள், இன்றும், ... 2006-இலும், ...அதே அரிசியை இன்னமும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றால்,
எந்தப் பிரச்சினையைக் காட்டி வந்தனரோ, அந்தப் பிரச்சினை இன்னமும் சரி செய்யப் படாமல் இருக்கிறது என்றுதானே உணரப்பட வேண்டும்?

40 விழுக்காடுக்கும் மேற்பட்ட மக்களை வறுமைக்கோட்டுக்குக் கீழே வைத்திருப்பது ஒன்றே நாம் திரும்பத் திரும்ப , மாறி, மாறி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் வழி என்னும் ஒரு எழுத்தில் இல்லா, இரகசிய உடன்படிக்கையாகவே இவ்விரு கழகங்களும் கொண்டுள்ளன என்று தெரிய வில்லையா?

மாநிலத்திலும், மத்தியிலும் தொடர்ந்து ஆட்சி, மற்றும் அமைச்சுப் பொறுப்பில் இருக்கும் வாய்ப்பினைப் பெற்றும், சொந்த தமிழ் மக்களை முன்னேற்றாமல், சொந்த மக்களை மட்டும் முன்னேற்றத் துடிக்கும் இவர்களை நம்பி மீண்டும் ஆட்சிப் பொறுப்பைக் கொடுக்க எப்படி நம் மனசாட்சி இடம் கொடுக்கும்?

10 பைசாவுக்கு வக்கில்லாமல் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள் எல்லாம், இன்று பல கோடி ரூபாய் சொத்துக் கணக்கு காட்டுகிறார்களெ; இதெல்லாம் எப்படி வெறும் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் சம்பளத்தில் சாத்தியமாகும் என தமிழ்கமே, இப்போதாவது சிந்திக்க ஆரம்பி!

இலவசங்களைக் காட்டி, உன்னை பிச்சைக்காரனாய்ப் பார்க்கும் இந்த கேடு கெட்ட கழகங்களின் கோரப்பிடியினின்று நீ விடுபடும் நேரம் வந்துவிட்டது!

தனியாய் நிற்பவனும் இலவசங்களைக் காட்ட வில்லையா என , உடனே ஒரு கூட்டம் வால் பிடித்து ஓடி வரும்!
அவர்களுக்கு இதோ என் பதில்!

VK 15 கிலோ அரிசி இலவசம் என்றதும் சிரித்த அதே கூட்டம்தான் இன்று பொருளாதார ரீதியில் இது சாத்தியமே என்று கூறுவதை கேட்டு ஆர்ப்பரிக்கும் கூட்டம்!
இது சாத்தியம் என்பது உண்மையானால்,
ஏன் இன்றுவரை அ.தி.மு.க. அதைச் செய்யவில்லை?

ஏன் இந்த ஆலோசனையை, ப.சி.யும், மு.க.வும் இதுவரை கொடுக்க வில்லை?எப்படி அய்யா இது மே 9-ம் தேதிக்குப் பிறகு சாத்தியமாகும்.....இதுவரை ஏன் செய்யவில்லை?

நீங்கள் இருவரும் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருப்பவர்தாமே?
ஓட்டுக்காக இப்படிச் சொல்ல வெட்கமாயில்லை?
கட்சி ஆரம்பித்த 2-ம் நாளிலிருந்தெ கேப்டன் சொல்லிவருவது இதைதானே?இது முடியும் என்று சொன்னவர்தான், இப்போது ஆட்சிக்கு வந்தால் நடத்திக் காட்டுவேன் என்கிறார்.

"அளகேசா! ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?"
என்று அப்போது ஒப்பாரி வைத்து ஆட்சிக்கு வந்தவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்...

"கலைஞரே! ஆண்டது போதாதா? மக்கள் காய்ந்தது போதாதா?"
"அம்மாவே! ஆண்டது போதாதா? மக்கள் அலைந்தது போதாதா?"

இவர்களொடு வால் பிடித்து வளர்ந்து விட்டு, இவர்கள் தயவால் ஒரு வளர்ச்சியைப் பெற்ற பின்னர், இன்று ஆலவட்டம் ஆடும் உதிரிக் கட்சிகளுக்கு இருக்கும் வெட்கம், மானம் பற்றி யாரும் சொல்லித் தரத் தேவையில்லை.
இந்த அடிவருடிகளை மிதியடியாக்குங்கள்!

ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு நல்லவராவது இருப்பர், வேட்பாளராக!கூடியமட்டில், கட்சி வித்தியாசம் பார்க்காமல் அந்த நல்லவருக்கு ஓட்டுப் போடுங்கள்!
என்னடா! கடைசியில் இப்படி சொல்லுகிறானே என்று வியக்காதீர்கள்!நிச்சயமாக, அந்த நல்லவர் இவ்விரு கழகங்களிலும் 'பொதுவாக' இருக்க அதிகம் வாய்ப்பில்லை என்ற துணிவில் தான் அப்படிச் சொல்லுகிறேன்!

தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாளெடுத்தவனுக்கு வாளாலேதான் மரணம்!
அது போல,அரிசியால் ஆட்சிக்கு வந்தவர்கள்,
அதே அரிசியால் இந்தத் தேர்தலில், வீழ்வது உறுதி!

வீழ்வது இவ்விரு கழகக் கூட்டணிகளாக இருக்கட்டும்!
வெல்வது தமிழக மக்களாக இருக்கட்டும்!

Read more...

Tuesday, April 18, 2006

arasiyal!


"அரிசியல்"
அனா ஆவன்னா படித்தாலும் சரி

படிக்க வில்லையாயினும் சரி
மானமிழக்க மனமுண்டா?

இதோ உனக்கு ஒரு சீட்டு!

அரசியலில் ஒரு எழவும் தெரியாதா?
அரசியல் என்றாலே புரியாதா?
சசிகலா வம்சத்தின் உடன் பிறப்பா?

இதோ உனக்கு ஒரு சீட்டு!

வாரிசு முறையில் பிணக்குண்டா?
"பெரிசின்" பேச்சில் விருப்புண்டா?
தீக்குளிக்கத் தயாரா நீ?

இதோ உனக்கு ஒரு சீட்டு!

அரசியல் என்பது யாருக்கு வேண்டும்?
அரசியல் இனிமேல் யாருக்கு வேண்டும்?
"அரிசியல்" தெரியுமா உனக்கு?

இதோ உனக்கு ஒரு சீட்டு!

மானமிழந்து தமிழர் இங்கே
மானமின்றிப் பின் செல்கின்றார்
மானமுள்ள எவனும் இனிமேல்
மானம் காத்து மறுத்திடுவாரோ
ஈனமில்லா இவ்விரு கழகங்களையும்?

உப்பு போட்டுத் தின்கின்ற அனைவரும்
முப்பதாண்டு சுயநல ஆட்சியை
இப்போதிங்கு ஒதுக்கா விட்டால்
எப்போதும் இனி விடிவில்லை நமக்கு!

'அரிசியல்' பேசி அவமானப் படுத்துகிறார்.
'அரிசியல்' மூலமே ஆட்சி பிடிக்க எண்ணுகிறார்.
'அரிசியல்'ஆல் ஆட்சிக்கு வந்தவர்
'அரிசியல்'ஆல் அழிவதுதானே முறை!

அரசு அன்று கொல்லும்!
அது பழைய மொழி!
"அரிசி" இன்று கொல்லும்!
இது புது மொழி!!

ரசிகர் கூட்டங்கள் உடனே வருமென்று
சரியாகத் தெரியும்எனக்கு!
'என்னெஸ்'சும் மற்றோரும்
உடனிங்கு வந்திடுங்கள்!

Read more...

Saturday, April 01, 2006

"நனாக் காலம்"!!

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள்!
அவை தொடர்ந்திடத் தொடர்ந்திட என்னென்ன நம்பிக்கைகள்!
அது ஒரு அழகிய "நனாக்காலம்"!
கழகங்கள் விரைவினில் வெளியேறும்!
'உதிரிகள்' சேர்ந்திங்கு சரித்திர்ம் படைத்திடும்!
அது ஒரு பொற்காலம்!

பொய்களைத் திருப்பித் திருப்பி சொல்வதானாலேயே,உண்மைகளை மறைத்திடலாம் என்றகோயபல்ஸின் தத்துவத்திற்கேற்ப,
இரு கழகங்களை விட்டால் வேறு கதியில்லை என,

"ஓலமிடும் மானிடரே!
உண்மைகள் தெரிந்து விடும்-உம்
மயக்கமும் கலைந்து விடும்!
எனவே,

"துணிந்த பின் மனமே!
துயரம் கொள்ளாதே!
சோகம் பொல்லாதே!

அலையும் காற்றில்
அகல் விளக்கேற்றி--கழகங்களை
காத்திட முடியாது!
வீழ்வது நிஜமே
நீ ஏன் வீணாய்
சஞ்சலப் பேய் வசமானாய்!- எனவே
துணிந்த பின் மனமே!
துயரம் கொள்ளாதே!
சோகம் பொல்லாதே!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP