Friday, August 01, 2008

"குசேலன்"--"ரஜினிக்கு ஒரு திறந்த கடிதம்!"

"குசேலன்"--"ரஜினிக்கு ஒரு திறந்த கடிதம்!"




அன்புள்ள ரஜினி அவர்களுக்கு,

வணக்கம்!
நான் உங்களது படங்களின் தீவிர ரசிகன்.
முதல் நாள் முதல் ஷோ என சிவாஜிக்குப் பிறகு வழக்கப்படுத்திக் கொண்டது உங்கள் படங்களுக்கு மட்டுமே!


உங்க ஸ்டைல், நடிப்பு இதெல்லாமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதைத் தவிர, ஒரு சில தனிப்பட்ட.... ஆன்மீகம் சம்பந்தப்பட்ட...... விஷயங்களில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடும் எனக்குப் பிடிக்கும்.


இப்போதெல்லாம் உங்க படங்கள் அடிக்கடி வருவதில்லை.
அதுவே என்னைப் போன்ற பல கோடி ரசிகர்களுக்கு, உங்க படம் வந்தவுடனேயே பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலையும், ...ஏன்?...சிலருக்கு வெறியையே!.... உண்டாக்குகிறது என்பது உங்களுக்கும் தெரியும்.


அதற்காக எவ்வளவு உழைக்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும்
உங்களோட ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் பரிசு தந்த இந்த அப்பாவி, மடத்தனமான ரசிகர்களை, ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.
ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என நினைக்கிறீர்களா?
"குசேலன்" பார்த்துவிட்டு இப்பத்தான் வந்தேன்.

இதன் மூலமான 'கத பறையும் போள்' என்ற மலையாளப் படத்தையும் பார்த்திருக்கிறேன்.
இதில் நீங்கள் நடிக்கிறீர்கள் எனக் கேட்டபோது இது இன்னமும் சிறப்பாக வரும் என நம்பினேன்.
ஏனென்றால், இது ஒரு கெடுக்க முடியாத கதை.
அப்படி எதுவும் கிடையாது... மனது வைத்தால் அதுவும் முடியும் என டைரக்டர் பி. வாசு நிரூபித்திருக்கிறார்.
உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தவிர, வேறு எதைப் பற்றியும் நீங்களோ, அவரோ கவலைப்படவில்லையோ எனத் தோன்றுகிறது!

படமா சார் இது?
நீங்க நடிக்கிறீங்களேன்னு பார்க்க வரும் அத்தனை பேரையும் மனதில் வைத்தாவது, நீங்கள் இதன் தயாரிப்பில் இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இதை ஆலோசனையாக அல்ல; ஒரு குற்றச்சாட்டாகவே உங்கள் மீது சுமத்துகிறேன்!

தயாரிப்பாளர், இயக்குநர் சம்பந்தப்பட்ட விஷயம் இது என நீங்கள் ஒதுங்கிக் கொள்ள முடியாது.
உங்களுக்கு கொட்டித்தரக் காத்திருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமை இது.
அதை செய்யத் தவறி விட்டீர்கள், ரஜினி சார்!

நீங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிகச் சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறீர்கள் என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன்.
அதுவும் அந்தக் கடைசி பதினைந்து நிமிடங்கள்!!
அடடா! மிகச் சிறந்த நடிப்பைக் காட்டி, இதற்காகவே ஒரு விருது கொடுக்கலாம் என்னும் அளவுக்கு நடித்திருக்கிறீர்கள்.
ஸ்டைலிலும் ஒன்றும் குறைவு வைக்கவில்லை!
அசத்தியிருக்கிறீர்கள்!

ஆனால், இது மட்டும் போதுமா?
வருவதே வெறும் அறுபது நிமிடங்கள் என முன்னரே சொல்லி விட்டதால், என்னைப் போன்றவர்கள் அதிகமாக உங்களிடமிருந்து எதிர்பாக்கவில்லை.
ஆனால், நீங்கள் இல்லாத நேரங்களுக்கான கதையமைப்பில் சுத்தமாக சொதப்பி விட்டார் பி.வாசு!

அவரவர் கடமையை அவரவர் செய்யவேண்டும், என் வேலையை ஒழுங்காக நான் செய்துவிடுகிறேன் என நினைக்கும் உங்களை நினைத்து பரிதாபப்படுவதா, இல்லை, என்னை நம்பி இருக்கும் ரசிகர்களுக்கு, என் நடிப்புக் காலம் முடியப்போகிற இந்த நேரத்தில் பெருமைப்படும் விதமாய் படம் கொடுக்கணும் என்ற நினைப்பு துளியும் இல்லாத உணர்வை... அதை அலட்சியம் என்றும் சொல்லலாம்... எண்ணிக் கோபப்படுவதா எனப் புரியவில்லை.

படம் முடித்து வெளியே வரும்போது கனத்த இதயத்தோடு வெளிவந்தேன்.
அந்தக் கடைசி காட்சிகளில் நீங்கள் காட்டிய நடிப்பால் மட்டுமல்ல!
இப்படி ஏமாற்றி விட்டீர்களே என்ற ஆதங்கத்தாலும்!

ஏதோ கொஞ்ச நேரம் சொதப்பலாக இருந்தால் பரவாயில்லை.
இரண்டரை மணி நேரப் படத்தில், முதல் இரண்டு மணி நேரத்துக்கா இப்படி பாழாக்குவது! ? :(


நட்பைப் போற்றும் ஒரு கதையை எப்படியெல்லாம் சொல்லியிருக்க முடியும்!

இல்லை, அது வேண்டாம் என்றால், ஒரு காட்சி எடுக்க எவ்வளவு உழைக்க வேண்டும் திரைப்படங்களில் என்ற செய்தியைக் காட்டி இருக்கலாமே!

செய்யாமல் விட்டுவிட்டார்களே!

சம்பந்தமே இல்லாத காட்சிகள், திரும்பத் திரும்ப ஒரே நிகழ்வை அரைத்த மாவை அரைப்பது போல வரும் நிகழ்வுகள், செயற்கையான நடிப்பு, 'என்ன வேணும்னாலும் பண்ணிக்கங்கப்பா! ரஜினி இருக்கார் படத்துல! போட்ட பணம் கிடைச்சிரும்'ன்னு விட்டுவிட்டது போன்ற இயக்குநரின் அலட்சியம், கே. பாலச்சந்தர் போன்ற அனுபவம் மிக்க ஒருவரின் தயாரிப்பா இது! என்ன செய்து கொண்டிருந்தார் அவர் எனக் கேட்க வைக்கும் கோபம், எரிச்சல் வரவழைக்கும் நகைச்சுவை எல்லாமாகச் சேர்ந்து இப்படி ஒரு மோசமான படத்தைப் பார்த்ததே இல்லை எனச் சொல்லவைத்துவிட்டது என்பதை வருத்தத்துடனும், கோபத்துடனும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இசை, ஒளிப்பதிவு எல்லாம் தரமாக இருந்தது. பசுபதி ஏமாற்றினாரா? ஏமாற்றப் பட்டாரா? மீனா, நயன்தாரா, வடிவேலு,விஜயகுமார், லிவிங்ஸ்டன், சந்தானம், பாஸ்கர், என ஒரு நட்சத்திரப் பட்டாளம்! வடிவேலு சூப்பர் ஸ்டாரைச் சந்திக்கும் அந்த ஒரு காட்சியில் அசத்தி இருக்கிறார்! என்ன பிரயோஜனம்? எல்லாம் விழலுக்கிறைத்த நீராய்ப் போயிற்று.


கடைசியாக ஒரு வேண்டுகோள்!
இன்னமும் உங்கள் படங்களைப் பார்க்க ஆசைப்படுகிறேன்!

ஆனால், இது போலத்தான் படம் தருவீங்கன்னா, ...வேண்டாம் சாமி! பேசாம இமயமலைக்கே போயிடுங்க! ஒருதுளிக்கு ஒரு பவுன் கொடுக்கும் உங்கள் தமிழ் ரசிகர்களை வாழவிடுங்கள்!

இறுதியாக, படத்தைப் பற்றி ஒரு வரி விமரிசனம்!
"மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேளுங்கள், ரஜினி சார்! இந்தமுறை தமிழ் ரசிகர்களிடம்!"

நன்றி.

இப்படிக்கு,
மனம் நொந்த
உங்கள் ரசிகன்.

[இதை யாராவது ரஜினிக்கு அனுப்பி வைத்தால் நன்ன்றியுடையவனாக இருப்பேன்!!]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP