காக்கிச்சட்டை குண்டர்கள்
காக்கிச்சட்டை குண்டர்கள்
அரசியலுக்காக ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளைப் புரிந்து கொள்ள முடியும்.
அவர்களுக்காக உயிரையும் பணையம் வைத்து எது வேண்டுமானாலும் செய்யும் அவர்கள் தொண்டர்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
அவர்களிடம் கைக்கூலி பெற்றுக்கொண்டு அடிதடியிலிறங்கும் ரவுடிகளை அறிய முடியும்.
கண்டும் காணாதது போல் விட்டுவிடும் ஒரு சில கயமைப் போலீஸைத் தெரியும்.
ஆனால்,..........,
தமிழகத்தையே வெட்கித் தலை குனிய வைக்கும், வெட்கக்கேடான, காட்டுமிராண்டித்தனமான சம்பவம் இன்று அரங்கேறியிருப்பது மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் கவலைப் பட்டு கூனிக் குறுக வேண்டிய ஒரு நிகழ்வு.
தமிழக வரலாற்றில் இது ஒரு கறுப்பு வெள்ளிகிழைமை என்றால் மிகையில்லை.
பதவி வெறி எந்த அளவிற்கு ஆட்டுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை.
ஒட்டுமொத்த போலீஸும் இந்த அவமானகரமான நிகழ்வில், கட்டளைக்குக் கட்டுப்பட்டு, ஈடுபடுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை அறியும் போது, தமிழக போலீஸின் மானம் எங்கே இருக்கிறது என்று அதல பாதாளத்தில் கூடத் தேடிப் பிடிக்க முடியவில்லை.
மாநகர காவல் அதிகாரி இதற்கு முழுப் பொறுப்பேற்று உடனே பதவி விலகினால், நாளை அவரது பெண்டு பிள்ளைகள் மதிப்பார்கள் .
செய்வாரா?
சிறையில் இருக்கும் கைதிகள் கூட வெளியில் வந்து ஓட்டுச் சாவடியைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடச் செய்வதில் போலீஸின் துணை இல்லையென்று மறுக்க முடியுமா?
சென்னை மத்தியச் சிறைத் தலைமை அதிகாரி உப்பு போட்டு சோறு தின்பவர் என்றால், உடனடியாக பதவி விலக வேண்டும்.
மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உடனடி பதவி நீக்கம் செய்யப் பட வேண்டும்.
சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் உடனே ராஜிநாமா செய்ய வேண்டும்.
முழுப் பொறுப்பேற்று உடனடியாக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆளுநர் என்று ஒருவர் இருக்கிறாரே, அவர் உடனடியாக நடந்தவைகளை மத்திய அரசுக்கு, தார்மீக பொறுப்பேற்று, இந்த ஆட்சியைக் கலைக்கப் பரிந்துரை செய்ய வேண்டும்.
மன் மோஹன் சிங் உடனடியாக இந்த அரசைக் கலைக்க வேண்டும்.
அப்துல் கலாம் என்னும் பெரிய மனிதர் அலங்காரப் பொம்மையாக இல்லாமல், உடனடியாக ஆளுநரை தில்லிக்கு வரக் கட்டளையிட்டு, நடந்ததற்கு முழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவையெல்லாம் நடக்க வில்லையெனின்,....
தமிழன் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாக வேண்டும் !
"இதெல்லாம் தமிழகத்தில் இருந்து, குறிப்பாக சென்னையில் இருந்து, எனக்கு வந்த சில மனக் குமுறல்கள்."
நடந்ததைக் கேள்விப்பட்டு மனது பெரிதும் வருந்துகிறது.
தப்பிக்கும் , மற்றவர் மேல் பழி சுமத்தும் அரசின் போக்கினைக் கண்டு மனம் வெதும்புகிறது.
அனைத்து வலைப்பதிவர்களும் தமிழர் மானம் கருதி ஒரே குரல் கொடுக்க வேண்டும், கட்சி பேதமின்றி என உள்ளம் விரும்புகிறது!
நடக்குமா?
முருகன் அருள் முன்னிற்கும்!
காக்க காக்க கனக வேல் காக்க!
[தயவு செய்து, இப்பதிவைக் கேலி செய்து பின்னூட்டங்கள் இட வேண்டாம். மட்டுறுத்தப் படும்.]