Friday, December 15, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [2]


"பரிசேலோர் எம்பாவாய்" [2]


2.
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே

நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி

ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்

தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய். 2


தோழிகள்: "பாசமென்னும் எனது உணர்வெல்லாம் பரஞ்சோதியாம் சிவனாருக்கே"என
இரவும் பகலும் எப்போது சொல்லித் திரிவாயே, ஏ சீரான உடல் கொண்ட பெண்ணே!
பேசியதெல்லாம் மறந்துபோய் இப்போது இந்த மணம்தரும் மலர்ப் படுக்கைக்கே
உன் அன்பையெல்லாம் காட்டி ஆசையும் வைத்துவிட்டாயோ நேரிழையே!

படுத்திருப்பவள்: ஏ பெண்களே! சீ! சீ! இவையெல்லாமா நீவிர் பேசுவது?

தோழியர்: விளையாடி உன்னை பழிப்பதற்கோ நாங்கள் வந்தோம்? அதற்கான இடம்
இதுவோ?
விண்ணவரும் கண்டு தம் சிறுமையும் இதன்தன் பெருமையும் எண்ணி
வணங்கிடக் கூசுகின்ற மலர்ப்பாதங்களை நமக்குத் தந்தருளிட வருகின்ற
ஒளியுருவான, சிவலோகத்தை ஆளுகின்ற தில்லைச் சிற்றம்பலத்தே ஆடுகின்ற
ஈசனுக்கு அன்பு செலுத்துவது எவர்? இங்கே உறங்கும்,
உறங்கும் உன்னை எழுப்பும் நாமெல்லாம் யார்? சொல்லடி என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:

நேரிழை - சீரான உடல் கொண்ட பெண்; போது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளியுருவன்.

"பரிசேலோர் எம்பாவாய்" [1]



"பரிசேலோர் எம்பாவாய்" [1]

வழக்கம் போல நண்பர் ரவி கண்ணபிரானின் பதிவிற்குச் சென்றபோது மாதங்களில் சிறந்த மார்கழி பிறப்பதை முன்னிட்டு, தனது சுப்ரபாதம் தொடரை சற்றே நிறுத்தி, கோதை புகழ் பாடப் போவதாகச் சொல்லியிருந்தார்!

அதைப் படித்ததும் நாம் ஏன் சிவனாரை எழுப்பும் திருவெம்பாவையைப் பதிவிடக்கூடாது என ஒரு எண்ணம் எழுந்தது!

இது சமயக்குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் அருளியது.

தினம் ஒரு பாடல் என்னால் முடிந்த அளவு விளக்கத்துடன் வரும்!
இனி பாடலைப் பார்ப்போம்!

1.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். !

முதலும் முடிவும் இல்லா அரிய பெரிய
சோதியை நாங்கள் பாடுவதைக் கேட்டும் வாள் போலும் அழகிய கண்ணுடைய
நீ இன்னும் தூங்குகிறாயே! உணர்வற்றுப் போனதோ உன் செவிகள்?
சிவபெருமானின் சீரடிகளை வாழ்த்துகின்ற வாழ்த்தொலிகள் வந்து
வீதியின் துவக்கத்தில் கேட்டபோதிலேயே விம்மி விம்மி தன் உணர்விழந்து
தானிருக்கும் மலர்ப் படுக்கையிலேயே புரண்டும் எழுந்தும் அதிலே
ஏதொன்றும் செய்வதறியாது தன்னை மறந்து கிடப்பவளின் திறம்தான் என்னே!
என் தோழியே!இதுவோ நீ செய்வது? அதை எமக்குக் கூறுவாய்!


அருஞ்சொற்பொருள்:


மாது - பெண்; வளருதி - தூங்குகின்றாய்; போது - மலர்;
அமளி - படுக்கை.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP