Saturday, September 23, 2006

"அ.அ.திருப்புகழ்" -- 10 "கருவடைந்து" [4]

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 10 -- "கருவடைந்து" [4]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.
இதை சற்று விளக்கமாகச் சொல்ல விழைகிறேன்! [வழக்கத்தை விட!!].
நான்கு பதிவாக வரும்!!!
அருள் கூர்ந்து பொறுத்தருள்க!

..............பாடல்..............

கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் "குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த
முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை
யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ"

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி
னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த
அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கிட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து
உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

****************************************************************

.................பொருள்.....................[நான்காம் பகுதி]

"குழந்தை வடிவாகி கழுவி அங்கு எடுத்து,
சுரந்தமுலை அருந்துவிக்கக் கிடந்து,கதறி,
அங்கு கை கொட்டித் தவழ்ந்து, நடமாடி,
அரைவடங்கள் கட்டி, சதங்கை,இடுகுதம்பை, பொற்சுட்டி, தண்டைஅவையணிந்து,, முற்றிக் கிளர்ந்து "

குழந்தையென வந்துதித்த பின்னர்
அதனைக் கழுவிக் குளிப்பாட்டி,
தாயின் முலையினின்று சுரந்திட்ட
பாலருந்த பக்கவாட்டில் கிடந்து,

ஓர் கணம் கதறலும், உடனேயே
கைகொட்டிச் சிரித்தலும் மாறி மாறிச் செய்து
பின்னர் உடல் திருப்பி,மார்பினால் தவழ்ந்து,
இன்னும் உடலெழுப்பி நின்று நடை பழகி,

துணையென்று ஒலிகேட்கத் தாயவளும்

இதன் இடையில் அரைவடம், கால்களிலே சதங்கை
காதசையக் காதணிகள், கைவிரலில் மோதிரம்
இவையெல்லாம் அணிவித்து அழகு பார்த்து

பசியறிந்து, தன் ருசியறிந்து
உடல் வலு சேர்க்க பதம் அறிந்து
தாயவள் ஊட்டிய அன்புச் சோற்றினால்
உடல் நன்கு முற்றி வலுவடையும் அந்த,

"வயதேறி அரிய பெண்கள் நட்பைப் புணர்ந்து"

பதினாறு வயதினிலே, தான் பிறந்த
பயனறியாது, காலத்தின் உயர்வறியாது,
உய்யக் கரை சேரும் வழி அறியாது
பருவக்கிளர்ச்சியால் மனம் சஞ்சலித்து

கண்ணில் படுகின்ற பெண்களின் கருத்தைக்
கவர எண்ணி அதுபற்றியே சிந்தித்து
அவருடன் இணக்கமாக வழியனைத்தும்
தேடுவதில் காலத்தைச் செலவிட்டு,

"பிணியுழன்று சுற்றித் திரிந்தது அமையும்"

பல்வேறு வகையாலும் பாவச் செயல்களைப் புரிந்து
அதனாலே பல்வேறு விதமாய நோய்நொடி அடைந்து
துன்புற்று, பாவ, புண்ணியங்களால் மீண்டும் மீண்டும்
இப்பூவுலகில் வந்து உழற்படா வண்ணம் அருளுகின்ற

"உன் க்ருபைச் சித்தம் என்று பெறுவேனோ ?"

நின்னுடைய கருணைத் திறனை
நான் பெறும் நாள்தான் எந்நாளோ?

[இத்துடன் இந்த சிறிய தொடர் நிறைவுற்றது!
இதில் சொன்ன பல நிகழ்வுகள் உங்களுக்கு ஒரு வாரத்திற்கு சிந்திக்க உதவும் என்னும் நம்பிக்கையுடன் தாற்காலிகமாக உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்!
பின்னூட்டங்கள் இடவும்!
அவை படித்து பிரசுரிக்கப் படும்!
திரும்பி வந்ததும் விரிவாக பதிலிட முயலுவேன்!]

முருகனருள் முன்னிற்கும்!

வேலும் மயிலும் துணை!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!

Read more...

"அ.அ.திருப்புகழ்" -- 10 "கருவடைந்து" [3]

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"-- 10 -- "கருவடைந்து" [3]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.
இதை சற்று விளக்கமாகச் சொல்ல விழைகிறேன்! [வழக்கத்தை விட!!].
நான்கு பதிவாக வரும்!!!
இது மூன்றாம் பகுதி! [முதல் இரு பகுதிகளும் படித்தாயிற்றா?!]
[பொருள் சொல்லும் வரிகள் வண்ண எழுத்தில்!]
அருள் கூர்ந்து பொறுத்தருள்க!

..............பாடல்..............

"கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த

முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை

யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து

பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி

னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த

அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று

அசுரர்தங்கி ளைக்கிட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து

உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

****************************************************************

.................பொருள்.....................[மூன்றாம் பகுதி]

"கருவடைந்து பத்துற்ற திங்கள்வயிறிருந்து முற்றி"

[இந்த ஐந்து சொற்களுக்கு ஒரு அழகிய விளக்கம் கண்டேன்!
எந்தவொரு விஞ்ஞான வசதிகளும் இல்லாத அக்காலத்தில், எவ்வளவு சரியாக இதைச் சொல்லியிருக்கிறார்கள் என எண்ணியதால், அதை இங்கு எடுத்துரைக்க விழைகிறேன்.]

தாம் செய்த நல்வினையும் தீவினையும்
அதன் பயனும் நுகர்ந்த பின்னர்,
கலப்பான வினைப்பயனை நுகர்தல் பொருட்டு
விண்ணினின்று மழை வழியே, இறைவனாணையால்

பூவுலகம் வருகின்ற உயிர்களனைத்தும்
காய், கனி, மலர், நீர், தானியம்
இவற்றினுள்ளே கலந்து நின்று,
அதையுண்ட ஆணிடம் கலந்த வண்ணம்,

அறுபது நாள் அவன் கருவில் இருந்தபின் விந்தாகி
பெண்ணுடனே சேருகின்ற காலத்தில்
கருமுட்டையுடன் கலக்கின்ற விந்தையினை
அருணையாரும் சுருங்கக்கூறி விளக்குகின்றார்

கருப்பம் உண்டாகும் நற்காலம்
ருதுவென்று பெயர் விளங்கும்
மாதவிடாய் ஆன நாள்முதல்
பன்னிரன்டு நாட்கள்வரை ருதுவாகும்

விலக்கு முதல் நான்கு நாட்கள்
சங்கமித்தல் ஆகாது
ஐந்து முதல் பதினைந்து வரை
ஒற்றைப்படை நாட்களிலே சங்கமித்தால்
பெண் மகவு பெற்றிடலாம்

இரட்டையான நாட்களிலோ, அதாவது,
ஆறு முதல் பதினாறு வரை நாட்களில்
சங்கமமோ ஆண் குழந்தை
பிறக்குமென்று சொல்லி வைத்தார்.

கருப்பையின் வாய் அங்கு
குவிந்து போவதனால்
அதன் பின்னர் கருத்தரிக்கும்
வாய்ப்பெதுவும் இருப்பதில்லை.

ருது கழிந்த நான்காம் நாளினிலும்
பகற்பொழுதிலும் சேர்ந்தங்கே
கருவொன்று வருமாயின் ஆயுள், அறிவு,
செல்வம் இவை குறைந்த மகவு தோன்றும்.

ஐந்தம் நாள் கருத்தரிக்கின்
பெண் மகவு தோன்றி வரும்
ஆறாம் நாள் கருத்தரிக்கின்
மத்திமமாய்ப் பிள்ளை வரும்

ஏழாம் நாள் பெரும்பாலும்
கருவொன்றும் வருவதில்லை
எட்டாம் நாளோ குணமிக்க
பெண்மகவு உருவாகும்

ஒன்பதம் நாள் கருவுறின்
நலம் சேர்க்கும் பெண் வந்திடும்
பத்தாம் நாளில் பார் புகழும்
உயர்ந்த ஆண்மகன் வருவான்

பதினோராம் நாள் கருத்தரித்தால்
தரம் குறைந்த தருமமற்ற
பெண் மகவு வந்து உதிக்கும்
பனிரண்டாம் நாளன்று உத்தமனும் வந்திடுவான்

பதிமூணாம் நாள் வரும் பெண்ணோ
பலரை விரும்பும் குணமுடையாள்
பதினாலாம் நாளன்று ஜனிப்பவனும்
உலகாளும் நன்றியுள்ள மகனாவான்

பதினைந்தாம் நாளுதிக்கும் பெண்ணவளோ
பார்புகழும் பேரரசன் பத்தினியாய்
பல்வகைப் பெருமயெலாம் பெற்றிட்டு
உத்தம புத்திரரும் பெறுவாள்

பதினாறாம் நாள் திருக்குமரன்
கல்வி கலைகளிலே தேர்ச்சி பெற்று
நல்லொழுக்கம் மிக்கோனாய்ப் பலராலும்
விரும்புகின்ற பாக்கியவானாய் ஆவானாம்.

முழுநிலவோ, கருநிலவோ,
அட்டமியோ, சஷ்டியோ, துவாதசியோ
இந்நாளில் அமையுமாயின்
அந்நாளில் சேர்க்கை தவிர்த்திடவும்.

கருவொன்று உதித்த பின்னர்
அது வளரும் நிலையினையை
முன்னோர்கள் சொன்ன
வாக்கைஇப்போது காண்போம்!

விந்தும் முட்டையும் சேர்ந்த கரு
இரண்டும் கலந்ததாலே திரவமாகி நிற்கும்
ஏழாம் நாளினில் அது ஒரு மலர் போல விரியும்
பதினந்தாம் நாளினில் அது சற்றே இறுகிவரும்

ஒரு மாதம் போனபின்னர் இன்னும் கடினமாகி
இரண்டாம் மாதத்தில் தலையொன்று முளைத்துவரும்
மூன்றாம் திங்களிலே கால்கள் தோன்றவரும்
நாலாம் திங்களிலே விரல், வயிறு, இடுப்பென

தனித்தனியே பிரிந்து உருத் தோன்றும்
ஐந்தாம் மாதத்தில் முதுகெலும்பு ஊன்றிவரும்
ஆறாம் திங்களிலே கண், மூக்கு, செவி உதிக்கும்
ஏழாம் மாதம் ஜீவன் வந்துதிக்கும் [Viable]

எட்டாம் மதத்தில் அங்கமெல்லாம் வளர்ச்ச்சி பெறும்
ஒன்பதாம் திங்களிலே முன் ஜென்ம நினைவு வரும்
மீண்டும் இந்த பிறப்பு இறப்பென்னும்
துன்பமதில் விதித்தாயே என்னிறைவா என வருந்தும்

தன் துன்பம் மிக நினைத்து தானங்கே வாடுகின்ற
ஒன்பதாம் மாதத்தில் இறைவனிடம் முறையிட்டிடினும்
யோனித்துவாரம் வழி வருகையில் ஏற்படும் துன்பத்தால்
அவை அழிந்து, முன் நினைவு மறந்து போகுமாம்.

பத்தாம் திங்களிலே, தனஞ்சயன் எனும்
வாயுவால் தள்ளப்பட்டுத், தலைகீழாய்
சிசுவங்கே வெளிவரும் நேரத்தில்,
மலையினின்றுஉருட்டப்படும் துன்பத்தை அனுபவிக்கும்.

[மீதி வரிகளுக்கு அடுத்த பதிவில் பொருள் விளக்கமளித்து முடித்து விடலாம்!]

முருகனருள் முன்னிற்கும்!

வேலும் மயிலும் துணை!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!

Read more...

Friday, September 22, 2006

"அ.அ.திருப்புகழ்" -- "கருவடைந்து" 10 [2]

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் " -- 10 "கருவடைந்து" [2]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.
இதன் விளக்கம் மிகவும் நீண்டதாக இருக்கும்.
நான்கு பதிவாக நான்கு நாட்களில் வரும்!!!
முதல் பகுதி படித்து இங்கு வந்தால் நலமாயிருக்கும்!
இது இரண்டாம் பாகம்.
[ஒவ்வொரு பதிவிலும் பொருள் சொல்லும் வரிகள் வண்ண எழுத்தில்!]
அருள் கூர்ந்து பொறுத்தருள்க!
*************************************************************

..............பாடல்..............

கருவடைந்து பத்துற்ற திங்கள்

வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த

முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை

யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து

பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி

னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த

அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று

அசுரர்தங்கி ளைக்கிட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து

உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

.****************************************************************

.................பொருள்.....................[இரண்டாம் பகுதி]

"அயனையும் புடைத்துச் சினந்து"

வெள்ளிமலையாம் கயிலயங்கிரியில்
விளையாடல் முடித்த குமரன்
இலக்கத்தொன்பான் படை புடைசூழ
ஒளிபொங்க வீற்றிக்குங்காலை ஓர்-நாள்

ஆயிரமாயிரம் தேவர் கூட்டம்
அடிபணிந்து பின்னே வர
படைப்புக் கடவுளாம் பிரமனும்
சிவனை வணங்குதற் பொருட்டு வந்தனர்

யான் எனும் செருக்கின்றி வந்த அனைவரும்
சிவனை வணங்கியபின் சுற்றிவரும் வேளையில்
ஆங்கே வருள்பொழியும் குமரனை வணங்கிச் செல்ல
"இவன் இளைஞனன்றோ"வென செருக்குற்ற பிரமன் மட்டும்

இறுமாந்து தாண்டிச் செல்ல, குமரனும் அவரது
அறியாமைச் செருக்கடக்கி, சிவனும் முருகனும் ஒன்றெனும்
உண்மையினை, அவர்க்குப் புகட்டவெண்ணி, தருக்குடன் செல்லும்
பிரமனைத் தன்பக்கல் வரச் சொல்லவும்,


இன்னும் செருக்கடங்கா பிரமரும் அலட்சியமாய் வந்து
பாவனையாய் வணங்கி நிற்க, கந்தனும் "யாவன்" என வினவ
"படைத்தலினால் யான் பிரமன்" என அச்சங்கொண்ட பிரமரும்
பதிலிறுக்க, "அங்ஙனமாயின் வேதம்வருமோ?" எனக் கேட்க,

"வேதம் பிறந்தது நம்மிடத்தில், எமக்கு வரும்" எனப்
பணிவுடன் தெரிவிக்கலும், "நன்று! அப்படியாயின் முதல் வேதமாம்
இருக்கு வேதம் பகருக" எனப் பணிக்கலும்,"ஓம்" என பிரமன் தொடங்க
இளம் பூரணனாம் எம்பிரான் நகைத்து, திருக்கரமமைத்து,

"பிரமனே! நிற்றி; நிற்றி! முதலிற் கூறிய ஓம் எனும்
பிரணவத்தின் பொருள் கூறி மேலே தொடங்கலாம்"
என்னலும், பிரம்மதேவரும் திகைத்து, கண்கள் சுழன்று
தான் எனும் ஆணவம் அடங்கி, குமரனைப் பணிந்து,

"ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளுணரேன் யான்!" என வணங்க,
"இம்முதலெழுத்தின் பொருள் அறியா நீவிர் எங்ஙனம்
படைப்புதொழிலினைச் செவ்வனே செய்திடல்ஆகும்?" எனப்பகர்ந்து
நான்குதலைகளும் குலுங்குமாறு ஓங்கி குட்டினார்!

அகம் அழியவென அங்கத்தில் தன் திருவடியால்
ஓர் உதையும் கொடுத்தனர்! பிரமனும் மூர்ச்சையாகி
நிலத்தில் வீழ்ந்து பட கருணைக் கடவுளும் தம்
பரிவாரம் அழைத்து அவரைச் சிறையினிலும் இட்டனர்!"

"உலகமும் படைத்துப் பரிந்து
அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே."

படைப்புக் கடவுள் இல்லாமையால்
உலகினில் சிருட்டித்தல் நின்றுவிட,
அதனையும் தானே செய்திடத் திருவுளம்
கொண்டு பரிவுடன் பரங்குன்றில் அமர்ந்து
"காத்தும் படைத்தும் கரந்தும்" செயல் புரிந்த
குமரன் எனும் பெயர் கொண்ட பெருமையுடையோனே!



[இதன் தொடர் நாளை வரும்!!]" [2]

முருகனருள் முன்னிற்கும்!

வேலும் மயிலும் துணை!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!



Read more...

Thursday, September 21, 2006

"அ.அ.திருப்புகழ்" -- "கருவடைந்து"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் " -- 10 "கருவடைந்து" [1]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.

இதன் விளக்கம் மிகவும் நீண்டதாக இருக்கும்.

நான்கு பதிவாக நான்கு நாட்களில் வரும்!!!

[ஒவ்வொரு பதிவிலும் பொருள் சொல்லும் வரிகள் வண்ண எழுத்தில்!]

அருள் கூர்ந்து பொறுத்தருள்க!

..............பாடல்..............

கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த
முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை
யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி
னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த
அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து
உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

****************************************************************

.................பொருள்......................

[பின் - முன்!!]

"இரவி இந்திரன் வெற்றிக் குரங்கின்அரசர் என்றும்
ஒப்பற்ற உந்தி இறைவன் எண்கு இனக்கர்த்தன் என்றும்
நெடுநீலன் எரியது என்றும் ருத்ரர் சிறந்தஅனுமன் என்றும்
ஒப்பற்ற அண்டர் எவரும் இந்த வர்க்கத்தின் வந்து புனம் ஏவ"

இராவணாதி அசுரரின் கொடுமையால் வருந்தி
பிரமாதிதேவரும் அரவணைச் செல்வனாம்
அச்சுதன்பால் சென்று வணங்கிப் பணிந்து
ஆலிலைச்சயனா! அன்பர்கள் ஏறே!

இராவணாதி அசுரரின் துன்பமழித்து
எங்களைக் காத்தருள வேண்டுமென வேண்ட
அரங்கன்மாலும் அருள்கூர்ந்து அவர்பால் இரங்கி
நானுங்கள் துன்பம் தீர்ப்பேனென வரமளித்து

எவராலும் மரணம் நிகழலாகாதுவெனச் சொன்ன
இராவணன் அற்பமென நினைத்து மனிதரையும்
வானரத்தையும் கேட்க மறந்து போனான்
அதுவே நும்மைக் காக்கும் உபாயம் என்றறிவீர்!

நிருதரை நீறாக்குதற்கு சூரிய குலத்தில்
தயரதன் மகனாய் நாம் பிறப்போம்
எம் கையில் துலங்கிடும் சங்கும் திகிரியும்
யாம் படுத்துறங்கும் ஆதி சேஷனும்

எமக்கு இளையவராய்ப் பிறக்க அருள்கிறோம்
இவருடன் நால்வராய் யாம் பிறந்து
நும் துன்பம் நீக்கும் அருள் புரிந்தோம்
அஞ்சுதல் அகற்றி நும்பணி செய்திடுவீர்

எனவே மொழியவும், பிரமன் ஜாம்பவானையும்
இந்திரன் வாலியெனும் வலியதோர் வீரனையும்
பகலவன் அம்சமாய் சுக்ரீவனெனும் தம்பியையும்
அக்கினியும் தன் பங்கிற்கு அழகிய நீலனையும்

வாயுவும் சிவனைவேண்டி அவனது ஒரு துளியாம்
உருத்திரன் அம்சமும் கலந்து அனுமனையும்
இந்திரனின் தம்பி உபேந்திரன் அங்கதனாயும்
தேவசிற்பி விசுவகர்மா நளனெனும் வானரமாயும்

இவர்களால் உந்தப்பட்டு தேவரும் கந்தருவரும்
மலைபோலும் உடலுடனும், அளவிடா ஆற்றலோடும்
ஆயிரமாயிரம் வானரராய்ப் பிறந்து
மலைசூழும் கிஷ்கிந்தாவினில் அவதரிக்கவும்,

"அரிய தன் படைக்கர்த்தர் என்று
அசுரர்தம் கிளைக்கட்டை வென்ற
அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே"

இவ்வண்ணம் அங்கிருந்த வானரக் கூட்டங்களை
தன்பணிக்கு உதவிடவே சேனையாக ஏற்று
இரவாணாதி அரக்கரை அழித்து வெற்றிகொண்ட
பாவம் நீக்கி, முக்தியைத் தந்தருளும்

இராமனாய் அவதரித்த இவ்வுலகைக் காப்போனும்
தான் அழித்த இராவணனுக்கு பத்துத் தலையே
ஆயின் என் மருகனோ, ஆயிரம் தலை கொண்ட சிங்கமுகனை அரைநொடியில் வேல்விடுத்து அழித்த தீரத்தினையும்

பாறைகளைப் புரட்டி, தான் கடலினை தாண்டிச் சென்றதுவும்
மருகனோ அக்கடலினையே வற்றச் செய்த மாண்பினையும்
தாம் அம்பெடுத்து அழித்த வீரர் கணக்கினையும்
தன் மருகன் வெறும் பார்வையிலும், சிரிப்பினாலும் மட்டுமே

எரித்தழித்த மேன்மையினை எண்ணி எண்ணி
என்றென்றும் அரிமுகுந்தன் அளப்பரிய
ஆனந்தம் அடைந்து தன் மருகனை
மெச்சுகின்ற பச்சைப் புயலின் மருகோனே!

[இன்னும் வரும்!]" [1]

Read more...

Sunday, September 17, 2006

"அலையும் ஒருவன்" [ஒரு உருவகக் க[வி]தை]

"அலை"யும் ஒருவன்" [ஒரு உருவகக் க[வி]தை]


கடலில் குளிக்க மறுத்து ஒருவன் கரையினில் கத்தி நின்றான்!
"அலையே! நீ நில்லு! உன் பேயலைகளின் சத்தம் என் காதைக் கிழிக்கிறது!


அவற்றின் சீற்றம் என்னைப் பயமுறுத்துகிறது!
நான் குளிக்கவேண்டும்!நீ நில்லாமல் நான் குளிக்க முடியாது!"


அலைகள் கேட்கவில்லை!
அவை பாட்டுக்கு அடித்துக் கொண்டே இருந்தன!

இவன் சத்தமும் நிற்கவில்லை!
கத்திக் கொண்டே இருந்தான்!

ஒரு சிற்றலை வந்து அவ்ன் காலைத் தொட்டது!
சிலீரென்று எழுந்து நின்றான்!

"இதோ பார்! அலைகளின் சீற்றம் இப்போதைக்கு அட்ங்காது!
அடங்கியதாகவும் வரலாறு இல்லை!"

"அப்போது ஏன் என்னிடம் வந்து அதைச் சொல்லுகிறாய்!
நான் தான் அவைகளின் சத்தம் நிற்காமல் குளிப்பதில்லை எனச் சபதம் செய்திருக்கிறேனே!"

"அவை நின்று, நீ குளிக்கவேண்டுமென ஏன் பிடிவாதம் பிடிக்கிறாய்?
நீ குளிக்க வேண்டுமா, இல்லையா, சொல்!"

"அதெப்படி? அவை நிற்க வேண்டும்!
இல்லாவிடில் நான் குளிக்க முடியாது!"

"ஏனப்படிச் சொல்லுகிறாய்?அவை நிற்பதற்கும்,
நீ குளிப்பதற்கும் என்ன சம்பந்தம்?"

"என் பாட்டன் அலை அடித்து மாண்டான்.
என் அப்பனைக் கடல் இழுத்துச் சென்றது!"

கலங்கி நின்றான் அந்த மானுடன்!
சிற்றலை அவனைப் பார்த்துக் கனிவுடன் சொன்னது

"கடலில் குளிக்க ஆசையிருந்தால் என்னிடம் வா!
மணல்களைக் குவித்து, மரபை உடைத்து, மேடு கட்டியிருக்கிறேன்.

அலைகளின் சீற்றம் அங்கே செல்லாது.
கவலையின்றிக் குளிக்கலாம் நீ!"

"ஏமாற்றுகிறாயே, நீயும் கடல்தானே!
உன்னை எப்படி நான் நம்புவது!?"

அவன் மீண்டும் கத்தினான்!
சிற்றலை பரிவுடன் அவனைப் பார்த்தது.

"என்னிடம் ஆழம் இல்லை, அலையும் மெல்லவே வீசும்.
உன்னை விழுங்க மாட்டேன்! உல்லாசமாய் என்னுடன் இருக்கலாம்!"

"அதெல்லாம் சரிதான்! ஆனால் நீ மாறி வருவாயா?
அலைகளைத் துறந்து என் போல ஆவாயா?"

அலை நான்; உன்னை அணைக்கத் தயக்கமில்லை!
என்னை ஏன் மறுத்து ஒதுங்குகிறாய்?"

மனிதன் திரும்பினான்; மணலை நோக்கினான்.
"மக்களே யாரும் கடலில் குளிக்கப் போக வேண்டாம்.

அலைகளின் சீற்றம் உங்களுக்குத் தெரியாது
சிற்றலை நாடகத்தை நம்பவேண்டாம்."

கடலலை எப்போதும்போல் ஆர்ப்பரித்து நின்றது
மகிழ்வுடன் சென்று மக்கள் குளித்தனர்

பேரலைபக்கம் பயமின்றி சிலர் சென்றனர்
சிற்றலை மேட்டில் குழந்தைகள் குதூகலித்தன!

சிற்றலை மீண்டும் அவனிடம் வந்தது
"நாடகம் எனச் சொல்லி எத்தனை நாள் மயங்குவாய்?

கடலில் குளிக்க ஆசையிருந்தும், வழியுமிருந்தும்,
மனது மயங்கி மகிழ்வை ஏன் துறக்கிறாய்?"

அவன் கேட்காமல் கத்திக் கொண்டிருந்தான்
"மனிதர்களே அலை நில்லாமல் கடலில் குளிக்க வேண்டாம்"

மனிதர்கள் மகிழ்வுடன் குளித்துத் திரும்பினர்
கடலில் குளிக்க மறுத்து அவன் மட்டும் கரையினில் கத்தி நின்றான்!

சிற்றலை அவனை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

Read more...

Wednesday, September 13, 2006

மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 5

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 5


"இன்னா, டல்லா இருக்கே?" என்று வாஞ்சையுடன் தோளில் கை போட்டான் மன்னார்!

"ஒண்ணும் இல்லை; ஒரு காரியம் தொடங்கணும். அதைச் செய்யலாமா, வேண்டாமா என்று ஒரு சஞ்சலம். என்ன பண்றதுன்னு தெரியலை! ஒரே யோசனையா இருக்கு!கூடவே, எதிரிங்க தொந்தரவு வேற. சரி, உன்னைக் கேட்டா ஒரு தெளிவு வருமேன்னு இங்கே வந்தேன்" என்றேன்.

"இன்னா விசயம் ? நம்ம கையில சொல்லு! அல்லாத்தையும் முடிச்சுறலாம்! ஏன் கெடந்து பம்மற இதுக்கு? இன்னா, இன்னா?" எனக் கேட்டான் மயிலை மன்னார்.

"ஒரு புதுத் தொழில் தொடங்கலாம்னு நினைத்துக் கொண்டிருக்கிறேன். திட்டமெல்லாம் தயாராக இருக்கிறது. நடுவில் சிலர் பிரச்சினை பண்ணுகிறார்கள். அதனால, செய்யலாமா விட்டுறலாமான்னு குழப்பமா இருக்கு. நீ என்ன சொல்றே?" என ஆவலுடன் அவன் முகத்தைப் பார்த்தேன்.

"இதுக்கா இம்மாந் தயக்கம். சரி, நீ ஒண்ணும் சொல்ல வேணாம். இது மாரி கொயம்பறது எனக்கு புடிக்காது. கொயம்பறவங்களையும் புடிக்காது. நீ ஒண்ணும் சொல்லத் தாவயில்ல. இதப்பத்தி ஐயன் இன்னா சொல்றார்னு சொல்றேன் கேட்டுக்கோ. பொறவால, ஒனக்கு இஸ்டமிருந்தா, " மன்னாரு, இது பலான பலான விசயம்னு சொல்லு. எதுனாச்சும் பண்ணுவம். சரியா" என்றான்.

68ல இன்னா சொல்றருன்னா, என நீட்டி முழக்கியவாறு அவன் ஆரம்பித்ததும், "அட, நாம கேக்காமலேயெ ஒரு பதிவுக்கு விஷயம் கிடைக்கிறதே" என்ற அற்ப சந்தோஷம் மனதைத் தழுவ, அவசர அவசரமாக பேப்பரையும், பேனாவையும் எடுத்தேன்!!

இனி வருவது, அவன் சொன்னதும், நான் எழுதியதும்!!

அதிகாரம் - 68 "வினை செயல்வகை"

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. [671]

ஒரு காரியம் பண்ணனும்னு நெனச்சு, அல்லா ப்ளானும் பண்ணி ஒரு முடிவுக்கு வந்துட்டேன்னா, அதுக்கப்புறம் இப்ப பண்ணலாமா, அப்ப பண்ணலாமா, இவன் கை கொடுப்பானா, அவன் கால வாருவான, அந்த லைசென்ஸுக்கு எம்மாம் துட்டு செலவாகும், அப்டீன்னுல்லாம் யோசனை பண்ணிக்கிட்டு காலத்த கடத்தினேன்னு வயி, மவனே, அத்தப்போல மகா தப்பு ஒலகத்துலியே கெடையாது. இந்தா யோசனையெல்லாம் மொதல்லியே முடிச்சுறனும். முடிச்சுட்டா, பொறவு தயங்கக் கூடாது. ஆம்மாம்!

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. [672]

நம்ம ஐயனுக்கு இது ஒரு வெள்ளாட்டு! ஒரு வார்த்த புடிச்சுப் போயிடுச்சுன்னா, சும்மா அத்தயே போட்டு பின்னி பின்னி எடுப்பாரு! இதுல கூட பாரு, இந்த 'தூங்கு' அப்ப்டீங்கற வார்த்தய இன்னா சொளட்டு சொளட்டறாரு! சரி, விசயத்துக்கு வருவோம்!

ஒரு திட்டம் போட்டுட்டே நீ. அது மெதுவா ஆற அமர பண்ன வேண்டிய காரியமா, அப்போ, மெதுவா பொறுமையா அல்லா ஆங்கிளையும் கவர் பண்ணிட்டு, அப்பறந்தான் அத்த செய்ய வரணும். அதுவே சட்டுன்னு ஒரு மூணு மாசம், ஆறு மாசம் ப்ராஜெடா,.... டப்பு டப்புன்னு முடிக்கணும். மெதுவா செய்யறத மெதுவா செய்யு. வெரசலா செய்யறத வெரசலா பண்ணி முடி! ஓகேவா!

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். [673]

ஒரு காரியம் பண்ண ஆரம்பிக்கறே நீ. நீ இப்ப இன்னா பண்ண போறியோ எதுவோ, எனக்கு ஒண்ணும் தெரியாது. ஏதோ ஒரு காரியம் பண்ணலாம்னு நெனச்சுக்கிட்டு இங்க வந்துருக்க. அத ஆரம்பி தயங்காம.
நீ நெனச்ச மாரியே டக்கு டக்குன்னு ஒண்ணொண்ணும் நடக்குதா, போயிக்கினே இரு.
இல்ல ஒரு எடத்துல டொக்கு விளுதா.? தாண்டிப் போவாதே! நில்லு. ஷ்டாப்!நிதானி. இப்ப எதுக்காவ இங்க ஒரு தடங்கல் வந்துச்சுன்னு யோசி. அத்த ஸால்வ் பண்ணு. பொறவு அடுத்த படிக்கு போ! ஒன் காரியம் கெலிச்சுரும்.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். [674]

ஒரு காரியத்த ஆரம்பிச்ச பின்னால, பாதில வுட்டதும்,
ஒனக்கு இருக்கற ஒரு எதிராளிய அப்பறம் பாத்துக்கலாம்னு வுட்டுடறதும், ரெண்டும் சரி,
நீ ஒரு நெருப்ப கொளுத்திட்டு கவனிக்காம போயிட்டேன்னா, எப்படி அது தானே வளந்து பெருசாயி ஊரையே அளிச்சிடுமோ, அப்படி ஒன்னைக் கெடுத்துரும்!
ரெண்டையும் ஒண்ணு, வெட்டிறணும்; இல்ல முடிச்சிறணும்.

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். [675]

ஒரு காரியம் செய்யறதுக்கு இன்னா வேணும்? ஒரு அஞ்சு விசயத்த மனசுல வெச்சுக்கணும்.

1.இத்த செய்யறதுக்கு ஒன்னிட்ட தேவையான பணம் இருக்கா,
2.இதுக்குத் தேவையான மெஷின்லாம் கெடைக்குமா,
3.இப்ப அதுக்கு சரியான நேரமா, போட்டா போணியாவுமா,
4.செய்யறதுக்கு ப்ளானு, ஆளுல்லாம் ரெடியா,
5.அதுக்கு எடம் தோதா இருக்கா

இதெல்லாத்தயும் கவனமா, சந்தேகமில்லாம முடிவு பண்ணிறனும். அப்பாலதான் அத்த செய்யறதுக்கே போவணும்.


முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். [676]

இந்த காரியத்த பண்றதுக்கு ஒனக்கு இன்னா செய்யணும், அதுக்கு எங்கேர்ந்தெல்லாம் போட்டி, ப்ளாக்கெல்லாம்[Block] வரும்,
சரி, இத்தனையும் தாண்டி முடிச்சா அதுல இம்மாம் லாபம் வரும்? அத்தினையும் தெரிஞ்சு வெச்சுக்கிட்டுத்தான் அதுல எறங்கப் போவணும்.

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். [677]

ஒண்ணு பண்ண ஆரம்பிச்சேன்னா,
இதுமாரி செஞ்சவனோட, செய்யறவனோட,.... இது மாரி ஒரு நூறு பேரு கெடைப்பான் ஒனக்கு,.....
அவனுங்களை கலந்துகிட்டு அப்பாலதான் செய்யவே ஆரம்பிக்கணும்.

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. [678]

இப்ப ஒரு காரியம் பண்ணும் போதே, அத வெச்சி, அதேமாரி அடுத்த ஒரு காரியத்த ரெடி பண்ணி வெச்சுக்கணும்.
இப்ப, ஒரு யானைய வெச்சுத்தானே இன்னோரு யானையக் கட்றாங்க, பளக்கறாங்க; அதுமாரின்னு வெச்சுக்கோயேன்!அப்பத்தன் ஒனக்குஒரு கன்டினிடி[Continuity] இருக்கும்!

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல். [679]

இப்ப சொல்றதத்தான் நீ ரொம்ப கவனமா கேக்கணும்.
ஒனக்கு வேண்டியவங்களுக்கு நீ இன்னா செஞ்சாலும் சரி, செய்யாட்டாலும் சரி, ஒனக்கு இந்தத் தொளில்ல போட்டியா இருக்கறவனோட சேராம இருக்கான் பாரு, அவுனுகளையெல்லாம், டக்கு டக்குன்னு போயி ஃப்ரெண்ட்சிப் பண்ணிக்கணும். அப்பத்தான் அவன் ஒனக்கு துரோகம் பண்ண மாட்டான். அவனோட போய் சேர மாட்டான்!

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து. [680]

இப்ப நீ ஒரு காரியம் பண்ண ஆரம்பிக்கற.
ஒன்ன விட ஒர்த்தன்,.... பிஸ்தா,... வர்றான்,
இந்த தியேட்டரை 35 எம்மெம் எதுக்கு, நான் 70 எம்மெம்ல கட்டித்தர்றேன்னு. இப்ப நீ இன்னா பண்ணனும். ஒன்கிட்ட ஒரு 30 - 40 பேரு தொளில் தெரிஞ்சவன் இருக்கான்.
நீ. "அடடா, இன்னாது இப்படி இவன் வந்து காரியத்த கெடுத்துட்டானேன்னு" ஒக்காந்தேன்னு வையி, மவனே அவ்ளோதான்! நீ திரும்பிப் பாக்கரச்செ ஒரு பய ஒன்னோட இருக்க மாட்டான்.
இப்ப நீ இன்னா பண்ணனும்? கலங்கக்கூடாது. ஒன் பயலுவ எவனும் சுதாரிச்சுக்கரதுக்குள்ள நீ போயி அந்த பிஸ்தாவ பாத்து,
"ராசா! நீயே பண்ணு! ஆனக்க பாதி வேலைய எனக்குக் கொடுத்துரு. 70எம்மெம்மை நீயே போட்டுக்க! எனக்குகீளே இத்தினி ஆளுங்க இருக்காங்க. என்னால இதுல பேர்பாதி பண்ணிக் கொடுக்க முடியும்"னு ஒரு டீல் போட்டுக்க.
அவனுக்கும் லாபம்; ஒனக்கும் லாபம்; ஒன் ஆளுன்ஙளும் ஒன்னிய வுட்டுப் போவ மாட்டங்க!
புரியுதா? நா சொல்றது?
இது எப்படீ இருக்குன்னா, ஒரு பெரிய ராசா ஒன் நாட்டு மேல படை எடுத்து வர்றான்னா, அவனோட சண்டை போட்டு நீ சாவறது முக்கியமா, இல்ல சமாதானமாப் போயி நீயும் லாபம் சம்பாதிக்கறது முக்கியமா; அது போலத்தான் இதுவும்.

என்று சொல்லிய பின், "இப்போ ஒன்னோட ப்ராஜெக்ட் இன்னா, இன்னா கேக்கணும்னு நெனச்சே? எனக் கேட்டான் மன்னார்.

கலக்கம் நீங்கியவனாக, "நீ ஒண்ணும் சொல்ல வேணாம், எல்லாம் ஐயன் சொல்லி விட்டார்" எனச் சொல்லி நடையைக் கட்டினேன் நான்.

கடகடவெனச் சிரித்த மன்னாரின் குரல் கேட்டுத் திரும்பினேன்.

"நீ புத்திசாலிப் புள்ள. சொன்ன பக்குன்னு புடிச்சுப்பேன்னு தெரியும்!
அதான் 68 -ஐ சொன்னேன் " எனச் சொல்லிக் கண் சிமிட்டினான் மயிலை மன்னார்.
"நாயர்! ரெண்டு டீ என் கணக்குல!" என்று திமிராகச் சொல்லியபடியே மன்னாரின் தோளில் கை போட்டேன் நான்!!

Read more...

Monday, September 11, 2006

அ.அ. திருப்புகழ் -- 9 "தொந்தி சரிய'

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 9 "தொந்தி சரிய"


"ஆவி பிரியுங்கால் மயில் மீது வந்து எனையாள்!"

.............பாடல்.............

தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன -- தனதான

தொந்திசரிய மயிரே வெளிற நிரை
தந்தமசைய முதுகே வளைய இதழ்
தொங்கவொருகை தடிமேல்வர மகளிர் -- நகையாடி

தொண்டுகிழவ னிவனாரென இருமல்
கிண்கிணெனமு னுரையே குழறவிழி
துஞ்சுகுருடு படவே செவிடுபடு -- செவியாகி

வந்தபிணியு மதிலே மிடையுமொரு
பண்டிதனுமெ யுறுவே தனையுமிள
மைந்தருடைமை கடனே தெனமுடுகு -- துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்றிசருவ மலமே யொழுகவுயிர்
மங்குபொழுது கடிதே மயிலின்மிசை -- வரவேணும்

எந்தைவருக ரகுநா யகவருக
மைந்தவருக மகனே யினிவருக
என் கண்வருக எனதா ருயிர்வருக -- அபிராம

இங்குவருக அரசே வருகமுலை
யுண்கவருக மலர்சூ டிடவருக
என்றுபரிவி னொடுகோ சலைபுகல -- வருமாயன்

சிந்தைமகிழு மருகா குறவரிள
வஞ்சிமருவு மழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய -- அதிதீரா

திங்களரவு நதிசூ டியபரமர்
தந்தகுமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர் -- பெருமாளே.
00000000000000000000000000000000000000000000000000000000000
சைவம், வைணவம் இவற்றில் பேதம் ஒன்றுமில்லை எனப் பகரும் அற்புதக் கவிதை இது!
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


...........பொருள்.................

[வழக்கம் போல் பின் பார்த்து முன் பார்க்கலாம் !]

"எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என்கண் வருக எனது ஆருயிர் வருக
அபிராம இங்கு வருக அரசே வருக
முலைஉண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவினோடு கோசலை புகல
வருமாயன்சிந்தை மகிழு மருகா"

பலவாறு தவம் செய்துவேண்டியதின் விளைவாய்
மன்னு புகழ் கோசலைதன்மணிவயிறு வாய்த்த
ரகுகுலம் தழைக்க வந்தஎந்தையே வருக!

'மைந்த வருக' வென அழைத்ததற்கோர்
காரணமும் இங்குண்டு!

தனக்குரிய வயது வந்தும்
தன் கையை நம்பாமல்
தந்தையின் வருவாய் அறியாமலும்,
அவர் அணைப்பில் இருக்கிறவன் 'பாலன்'.

வயதான தந்தையங்கு
வருவாயைக் கொன்டுவர,
தானதற்கு உதவிடாமல்
தான் தோன்றியாய் இருப்பவன் 'பிள்ளை'.

தந்தைக்கே ஞானம் உரைக்கும்
அறிவு பெற்றவன் 'குமாரன்'.

தந்தை தாயின் நலம் பேணி
அவர்க்குக் கருமம் செய்தங்கே
நற்கதிக்கு அனுப்புபவன் 'புத்திரன்'.

இருக்கும் காலத்தில்
பெற்றவர் நலம் பேணி
நற்செயல்கள் புரிபவன் 'புதல்வன்'.

தன் குடும்ப நலன் பேணி
தந்தையவன் கடனேற்று
ஆலமரம் போல் காப்பவ்னே 'மகன்'.

தன் குடும்பம், தன் தாய்
தந்தையர் குடும்பம்
குருவின் குடும்பம் மற்றும்தம்
நண்பரின் குடும்பம்
இவையனைத்தும்
தன் குடும்பம் போல்காப்பவனோ 'மைந்தன்'!

இராமனோ தன் குடும்பம் மட்டுமின்றி
குகன், சுக்ரீவன், விபீடணன்குடும்பமதையும்
காத்திடுவான் நாளை என அறிந்து
'மைந்த வருக' வென வழைத்து,
பின், தன் குடும்ப மானமும்
காப்பவனும் இவனெனத் தெளிந்து
'இனி மகனே வருக' வெனவும்
அழைத்திட்டாள் மாதரசி கோசலை!

எனது கண்ணின் மணியே வருவாய்!
என் ஆருயிர்க்கு நிகரானவனே வருவாய்!
அழகிற் சிறந்தவனே வருவாய்!
இம்மாநிலத்தின் அரசனே வருவாய்!

தான் அந்தக் குண நலன்கள்
தன்னங்கே கொண்டதனால்,
தாயின் முலைப்பாலைக் குடிக்கின்ற
அவனுக்கும் அந்நலங்கள் வரட்டுமென
'முலையுண்க வருக'
வெனவும் அழைக்கின்றாள்!

மணக்கும் இந்த நறுமலரைச்
சூடிடவே வருவாய்!

என அன்னையாம் கோசலையும்
மகிழ்ந்து கொண்டாடி
மனம் குளிர அழைக்கின்ற
மாயவனாம் இராமனெனும்
அவதாரமாய் வந்த அந்தநாராயணனும் ,

தானங்கு மாயத்தால் கோசலையின் அன்பிற்குக்
கட்டுண்டு கிடந்த நிலை போலே
இங்கிந்த சரவணனும் கார்த்திகைப்
பெண்டிர் அழைத்திடவே அறுமுலையுண்ணும்
காட்சியினைக் கண்டே மனம் மகிழும் படி
திருவிளையாடும் முருகா!

"குறவர் இளவஞ்சி மருவும் அழகா"

அழகன் இவனே எனத் தெளிந்து
உனை அணைக்க வருகின்ற
குறவள்ளியின் மணாளனே!

"அமரர் சிறை சிந்த,
அசுரர் கிளை வேரொடு மடிய அதிதீரா"

பல யுகமாய் சிறையில் உழன்று
நெடுந்துயர் அடைந்திட்ட
தேவரெனும் நற்குணங்கள்
அசதி, சோம்பல் எனும்
தாமச குணம் என்னும்
அசுரரால் வருந்தி நிற்க
அயர்வை அகற்றி, நல்லுணர்வை அளிக்க,
அசுரரை வாட்டி, தேவரை சிறை மீட்ட
பெருவீரம் படைத்த முருகா!

"திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர"

நீயே சரணமெனத் தனை
நாடி வந்த சந்திரனையும்,
உனைக் கொல்வேன் எனச் சபதம் செய்து
ஓடி வந்த பாம்பினையும்,
ஒரு சேர அன்பு கொண்டு அபயமளித்து,
பாய்ந்து வந்த கங்கையின்
சீற்றமடக்கிக் கருணையினால்,
தன் தலையில் இன்பமுடன்
சூடிக்கொண்ட சிவனாரின் திருக்குமரா!

"அலையே கரை பொருத செந்தில் நகரில்
இனிதே மருவி வளர் பெருமாளே"

பல்வகையாம் எண்ணமெனும்
பெருஅலைகள் ஓடிவந்து
தன்னடியில் கலந்தங்கே
தாம் அமைதி எய்துமாறு
செந்திலம்பதியினிலே
உறைகின்ற பெரிய கடவுளே!

"தொந்தி சரிய, மயிரே வெளிற,நிரை தந்தம் அசைய,
முதுகே வளைய,இதழ் தொங்க, ஒரு கை தடி மேல் வர
மகளிர் நகையாடி தொண்டு கிழவன் இவன் ஆர் என"

என் வயது ஏறிடும் காலத்தே
வயிறங்கே பெருத்து முன்னே
தொந்தியெனச் சரியவும்,

கருநிறமாய் நான் காத்த
முடியங்கு வெளுத்துப் போய்
நரைமுடியாய் ஆகிடவும்,

உறுதியாய் நான் தேய்த்து
நிதம் வளர்த்த பற்களும்
அங்கங்கே அசைந்திடவும்,

வீரமாய் நிமிர்ந்தங்கு காட்டிய முதுகும்
பல்லக்கு போலின்று வளைந்திடவும்,

பவழம் போல் விரிந்திருந்த
உதடதுவும் தொங்கிடவும்,

இருகரம் வீசி நடந்த நான் இன்று
ஒருகரத்தில் தடி ஒன்றை ஊன்றி
நடக்கவே நேர்ந்திடவும்,

அதைக்கண்டு இளவயது
மங்கையரெலாம் 'யார் இந்தத்
தொண்டு கிழவன் இங்கே' என நகைத்திடவும்,

"இருமல் கிண்கிணென
முன் உரையே குழற
விழி துஞ்சு குருடு படவே
செவிடுபடு செவியாகி
வந்த பிணியும்
அதிலே மிடையும் ஒரு பண்டிதனும்
மெய் உறு வேதனையும்"

இருமல் எனும் கொடும்பாவி
'கிண் கிண்' எனஓசையுடன் வெளிக்கிளம்பி,

இதுகாறும் திருத்தமாய்ப்
பேசிய பேச்சுகளும் குழறிப்போய்,

ஒளியுடன் விளங்கிய கண்பார்வை
இன்று தூங்குதல் போலே மங்கிடவும்,

துல்லியமாய் இதுவரையில்
கேட்டுவந்த காதுகளும்இன்று
பஞ்சடைத்து செவிடாகவும்,

மிடுக்கென வாழ்ந்த தேகம் இன்று
நொடிக்கொரு நோயென ஆட்பட்டு,

அதனாலதை அகற்றவே ஒரு வைத்தியனும்
நிதம் எந்தன் வீடு தேடி வந்திடலும்,

நோயின் துயரால் என் மேனி வாடுதலும்,

"இள மைந்தர் உடைமை கடன் ஏதென,
முடுகு -- துயர்மேவி, மங்கை அழுது விழவே,
யமபடர்கள் நின்று சருவ,
மலமே யொழுக,உயிர் மங்குபொழுது,
கடிதே மயிலின் மிசை வரவேணும்."

என்னுயிர் போதல் நிச்சயமெனத் தெளிந்து,
தன் தந்தை இன்னுமென்ன கடன் விட்டுச் செல்கிறான் என
என் இளவயது மக்களும் கணக்கிட்டு நின்றிடவும்,

வாய் பேச வழியின்றி, இதனை நான் கேட்டே
மனது துயர் பெருகி மயங்கிடவும்,

என் மனையாள் ஓவெனக் கதறி
என்மீது விழுந்து அழுதிடவும்,

எமதூதர் வந்தங்கு என்னுயிர் பற்றிடவே
எதிர்பார்ப்பாய் வந்திடவும்,

என் மலம் அங்கு நீர் போல் ஒழுகிடவும்,
என் உயிர் சற்றே எனை விட்டுப் போகின்ற

நேரமதில் முருகா நீ
அழகான மயில் மீதேறி
எனை வந்து காத்திட வேண்டுகிறேன்!
0000000000000000000000000000000000000000000000000000000000000000

அருஞ்சொற்பொருள்:

தந்தம்= பல்
துஞ்சு= தூங்குதல்
மிடையும்= நெருங்கும்
முடுகு= இதனால் ஆகிய
கடிதே= விரைவாக
அபிராம= அழகிற் சிறந்தவன்

------------------------------------------------------------------------------------------------

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!


**************************************************************************

Read more...

Friday, September 08, 2006

“மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 4”

“மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 4”


பயந்த மாதிரியே நடந்தது!

கொஞ்சம் கோபம், வருத்தம், மகிழ்ச்சி எல்லாம் கலந்த ஒரு பார்வையை என் மேல் வீசிவிட்டு, ‘நாயர், நம்ம ஐயருக்கு ஒரு ஷ்ட்ராங் டீ யும் , ரெண்டு மசால் வடையும் ரெடி பண்ணு’ என்று அதோடு தனது வழக்கமான அன்பையும் விடாமல் சொல்லித் திரும்பினான் மயிலை மன்னார்!

‘என்ன இது? புதுசா ஐயர் என்றெல்லாம் சொல்கிறாயே?’ என்று கேட்டேன்!

‘உன்னை எல்லாம் இப்ப அப்படித்தானே கூப்புடறாங்களாம் நீ எளுதற வலையில! அத்தான் நானும் சொல்லிப் பாக்கலாமேன்னு ….’ என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்தான் மன்னார்.

ஏதோ கந்தசாமி புகளை எளுதினே, சரி,; ஐயன் குறளுக்கு விளக்கம் என்னைக் கேட்டு சொன்னே அதுவும் சரி; அப்பொறம் புச்சா ஏதோ கொளந்தங்களுக்கு பெத்தவங்க எத்தையெல்லாம் சொல்லணும்னு வேற ஆரம்பிச்சேன்னு கேள்விப்பட்டேன்!
ஸரி; நம்ம புள்ளையாண்டான் ஏதோ உருப்படியா செய்றானேன்னு இருக்கக்கொள்ளே, இப்போ புச்சா இன்னாமோ ஒர்த்தருக்கு பதில் கவுத எளுதி செமத்தியா வாங்கிக் கட்டிக்கினியாமே! அது இன்னாத்துக்கு ஒனக்குன்னு நெனச்சேன். இப்படி எதனாச்சும் வெவகாரத்துல மாட்டிக்கினு எங்கையில தான் வந்து நிப்பேன்னு நெனச்சேன்.
பொறவால, அத்தைப் படிச்சேன். நல்ல விசயத்த தான் சொல்லியிருக்கே நீ. ஆனா, அது எம்மாம்பேருக்கு புரியுண்ற நீ? ஆனாக்காண்டியும், சொல்லணும்னு நெனச்சத தெகிரியமா சொன்னே பாரு, அத்தான் நமக்கு ரொம்ப புடிச்சுது நண்பா!” என ஒரு நீண்ட சொற்பொழிவே ஆற்றி விட்டு,

“சரி, சரி! டீ ஆறிப்போவுது! சீக்கிரமாக் குடி! அப்பால ஒனக்கு இத்த பத்தி நம்ம ஐயன் இன்னா சொல்லியிருக்காருன்றதச் சொல்றேன்” எனச் சொல்லி என் ஆர்வத்தைத் தூண்டினான் மன்னார்.

அவசர அவசரமாக டீயையும் மசால் வடையையும் முடித்துவிட்டு, ஆவலுடன் அவனைப் பார்த்தேன்.

சிரித்தவாறே, “இப்ப ஸொல்லணும்னு நெனச்சத தயங்காம சொன்னேல்ல! அதப்பத்தி நம்ம ஐயன் நிறைய இடத்துல ஸொல்லியிருக்காரு. அல்லாத்தையும் இப்ப ஸொல்ல முடியாது! அந்த 73 – வது அதிகாரத்தப் பொறட்டு! நா ஸொல்றத எளுதிக்கோ!” என்றான் கம்பீரமாக!

இனி வருவது, குறளும், மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம் எண் 73 “அவை அஞ்சாமை”

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். [721]

கரீட்டா வந்திருக்கும்மா மொதக் குறளே! இப்ப நீ பலான பலான விசயம்லாம் நடந்திச்சின்னு ஒன் பதிவுல சொல்றேன்னு வையி! அதத் தப்பில்லாம சொல்லணும் ஒரு சபையில போயி ஸொல்றப்ப!
எப்படி ஸொல்லணும்னு தெரிஞவன், எந்த ஆளுங்க நடுவுல பேசணும்னு தெரிஞ்சிகிட்டு, தப்பா ஸொல்ல மாட்டான்.

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். [722]

படிச்சவங்கள்லாம் இருக்கற ஒரு எடத்துல போயி, உனக்குத் தெரிஞ்சதை அவங்க ஏத்துக்கற மாதிரி சொல்லணும். அப்போதான் ஒன்னிய படிச்சவன்னு சொல்லுவாங்க.
அல்லாரும் ஏத்துப்பாங்கன்னு நம்பிறாத அதுக்காவ. ! அங்கியும் சிலபேரு வருவாங்க, இது தப்பு, அது நொள்ளையின்னு சொல்லிகிட்டு, மெஜாரிட்டியா ஏத்துக்கறாங்களா, அதப்பாரு!

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர். [723]

சண்டை போட்டு சாவறதுக்கு ஆயிரம் பேர் வருவான். ஆனாக்க, ஒரு சபையில நின்னு தெம்பா பயமில்லாம ஸொல்றதுக்கு வர்றவன் கொஞ்சப் பேருதான் கிடைப்பான்.
பின்னாடி நின்னுகிட்டு வீரமா சவடால், பீலாவெல்லாம் வுடுவான். ஒரு மேடைல ஏத்து! ஸும்மா, கிடுகிடுன்னு தொடையெல்லாம் ஆடும்!

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்
கற்றமிக்காருள் மிக்க கொளல். [724]

அப்படி ஒருக்கா, ஒரு சபையில போயி ஒனக்குத் தெரிஞ்சத சொல்லிட்டு அப்டியே அம்பேல் ஆயிடக்கூடாது.
அங்கே இன்னும் ஒன்ன விட ஜாஸ்தியா படிச்சவங்ககிட்டேர்ந்து அல்லா விசயத்தையும் கறந்துக்கணும்!

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு. [725]

ஒன் எடத்துல நீ சொல்றது சரி. ஒனக்கு எதுர் கருத்து இருக்கற எடத்துல போயி அங்க, நீ சொல்றத எதுத்து கேள்வி கேட்டாக்கூட, அதுக்கும் பதில் சொல்ற அளவுக்கு தெரிஞ்சு வெச்சுக்கிட்டு போவணும்.
இல்லேன்னா போயி வாயக் குடுக்காதே!

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு. [726]

இப்ப, சண்டை போடப்போறேன்னா நீ கத்தியைப் பாத்து பயப்படக்கூடாது! பயந்தீன்னா வேல ஆவுமா? ஆவாது. இல்லியா?
அதேபோல, ஒரு சபைல ஏறி பேசறதுக்கு பயப்படறவனுக்கும், அவன் படிச்ச பொஸ்தவத்துக்கும் என்னா சம்பந்தம் இருக்குன்ற?
ஒண்ணும் இல்லை. பட்சதெல்லாம் வேஸ்டு!

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல். [727]

இங்கியும் கிட்டத்தட்ட அத்தையேதான் சொல்றாரு.
சண்டைக்கி நிக்கறப்போ, ஒன் கைல இருக்கற கத்தி வெடவெடன்னு ஆடுச்சின்னா இன்னா பிரயோசனமோ, அத்தேதான், சபைல ஏறிப் பேச தொடை நடுங்கறவனுக்கும் அவன் படிச்ச பொஸ்தகத்துக்கும் இருக்குதாம்!

பல்லவை கற்றும் பயனிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தவர். [728]

நல்ல மனுஷங்கள்லாம்,…. கெவனி …. மனுஷாள்னு சொல்லலை, நல்ல மனுசங்கன்னு சொல்லிருக்காரு!…., இருக்கற மண்டபத்துல அவங்க அதை ஒத்துக்கற மாதிரி சொல்லத் தெர்லைன்னா, அவன் எத்தினி படிச்சும் பிரயோசனமே இல்லை.

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார். [729]

"அதோ போறாரே! அவரு இம்மாம் படிப்பு, எத்தினி பொஸ்தகம்லாம் படிச்சிருக்காரு தெரியுமா? ஆன, கூப்ட்டு கேட்டுப்பாரு! ஒரு தபா நம்ம சங்கத்துல வந்து பேசு ஸார்'னு சொல்லிப்பாரு. அப்படியே ஜகா வாங்கிடுவார்"னு ஒருத்தனைப் பத்தி சொல்லும்படியா ஆச்சுன்னா,
அவனை வுட கேடு கெட்டவன் வேற எவனும் இல்லியாம்.
இவனுக்கு படிக்காதவனே மேலுன்றாரு நம்ம ஐயன்!

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்செல்லா தார். [730]

இங்கியும் அதேதான்! இதுமாதிரி, பொது எடத்துக்கு வந்து சொல்றதுக்கு பயப்படறவன் உசிரோட இருந்தாக் கூட சரி;
செத்தவனுக்கு சமானம்தான்!
*****************************************************

இப்ப ஒன்னக்கூட எனக்கு ஏன் புட்சிருக்கு தெரியுமா?
நீ சும்மா இப்படி அப்படின்னு பம்முறவன் இல்லை.
ஒன் பதிவுல தலப்புல ஏதோ போட்டுருக்கியே; ஆங்… இன்னா அது? …அதான் நல்லது ஸொல்றதுக்கு நடுங்க மாட்டேன், பொல்லாத்த எடுக்கறதுக்கு தயங்க மாட்டேன் அப்படீன்னு ஏதோ ஒண்ணு!
அத மாரிப் போட்டுட்டு சும்மா இருக்காம உனக்கு சரின்னு பட்டத நறுக்குன்னு சொன்னே பாரு!
அதான் எனக்கு பிடிச்சுது!
இன்னோரு டீ போட ஸொல்ட்டுமா”
என வாஞ்சையுடன் கேட்ட மன்னாரை மறுக்க மனமின்றி,
நாயர் டீயும் நல்லாஇருக்கும் என்ற ஆசையும் சேர “சரி” என்றேன்!

Read more...

Thursday, September 07, 2006

என்னுயிர்க் கண்ணம்மா!

""என்னுயிர்க் கண்ணம்மா!""


சோம்பல் முறித்துக் காலையில் எழுந்தேன்!

மாலை திரும்பி வருகையில்

வாங்க வேண்டிய சாமான்களின் பட்டியல்

என்னைப் பார்த்துச் சிரித்தது!

அலுத்துக் கொண்டே எழுந்து

அவசர அவசரமாய்க்

காப்பி போட்டுக் குடித்து

கிடைத்ததை எடுத்து

ஒரு பாக்ஸில் அடைத்து

அலுவலகம் போனதும்

மறக்காமல் தொலை பேசியது!

அழைத்தது என் மனையாள்!

வரும்போது அப்படியே

பொண்ணையும் கூட்டிகிட்டு வ்ந்துருங்க!

அன்பான அதிகாரக் குரலில்

ஆணையிட்டு மறைந்தாள்!

மாலையில் வந்து,

மகளைக் கூட்டி வந்து,

மறந்துபோன சாமான்களை

மறுபடி வாங்கி வந்து

மூச்சிறைக்க வந்தவனை,

மலர்ச்சியுடன் வரவேற்று,

இப்படி எல்லாம் நீங்க

செய்வதுதான் எனக்கு

உங்களிடம் மிகப் பிடித்த ஒன்று என

ஆசையுடன் யாரும் பாராத வேளையில்

இச்சென்று முத்தமிட்டாள்

என்னுயிர்க் கண்ணம்மா!

இதோ நான் அடுத்த நாள்

வேதாளமாக ரெடி!

Read more...

Tuesday, September 05, 2006

"நாம் அனைவரும் இந்துவே!"

"நாம் அனைவரும் இந்துவே!"


நண்பர் திருவின் பதிவைப் படித்ததும் எனக்குள் தோன்றிய உணர்வுகளை,
"பாதிக்கப்பட்ட இருவருமே" பேசிக்கொள்வது போல ஒரு மாற்றுக் கவிதை வடித்திருக்கிறேன்!

வீண் கதை பேசி, விரோதத்தை வளர்ப்பதை விட, உண்மை புரிந்து ஒருங்காய் வாழ வழி வகுக்கலாமே எனும் அற்ப ஆசையில்!

யாரும் தவறாகக் கொள்ள வேண்டாம்!


வேதம் மொழிந்தவன்
பார்ப்பனன் அல்லன்!
வேதம் கொடுத்தவனும்
பார்ப்பனன் அல்லன்!

வாழ்வுதான் வேதம் என்று
வேதம்தான் வாழ்வு என்று
நால்வகைத் தொழிலை
நயமுடன் செய்து
நலமுடன் வாழவே விதித்தது வேதம்!

எங்கள் நலனைக் காக்க வேண்டி
யாகம் செய்யும் தொழிலது கொடுத்தோம்!
யாகத்தின் முடிவில் நீங்கள் கொள்ள
வெகுமதியும் கொடுத்தோம்.
செய்த தொழிலுக்குக்
கூலி கொடுத்தல்
எங்கள் மரபன்றோ!

உங்களில் பிறந்து
உங்களோடு வளர்ந்து
உங்களால் கடவுளாக்கப் பட்டவனுக்கு
நீங்களே கோபுரம் எழுப்பி
எம்மையும் பணித்தீர்
பணி செய்யவென
அதற்குக் கூலியும் கொடுத்தீர்
வெளியில் நின்றே விமலனை வழிபட்டீர்!

அவரவர்க்கு இதுவென
நீயே சாத்திரம் அமைத்தாய்!
ஆம்! மனுவும் நம்மில் ஒருவனே!
அவரவர் தத்தம் கருமம் செய்தால்
நானிலம் பயனுற வாழும் என்னும்
விதியினை வகுத்ததும் நாமன்றோ!
நாமனைவரும் இந்துவன்றோ!

கருமம் முடித்ததும்
கால்சட்டை களைந்து
அனைவரும் ஒன்றாக
வாழுவோமென்று
அன்றவன் விதித்ததை
நாமங்கு மறந்து
நம் தொழில் செய்வதில்
காலத்தைப் போக்கி
நம்மில் பிரிவுற்று
நாமே வாழ்ந்து
இன்றவனைப் பழித்து
குளிர் காய்கின்றோம்!

உன் வேலையை நீ செய்ய
உனக்கு நான் கொடுப்பேன் கூலி
அதில் நீ பிழைத்து
உலக நலன் வேண்டும்
கருமம் செய்வாய் எனச் சொல்லி
இன்றவன் என்னை மிதிக்கிறானே
எனஇரக்கப் புலம்பல்
எங்ஙனம் நியாயம்?

உண்டு கொழித்த காலம்
என்றோ போயிற்று!
இன்று நீயும் நானும்
உழைத்து வாழ்ந்தால்தான்
உய்வதற்கு வழியென
விதி இங்கே ஆன பின்னே
என்னை வாவென
நீயழைக்க வேண்டாம்!
நானே அங்குதான் இருக்கிறேன்
உன்னோடு சேர்ந்தின்று!

உணர மறுத்து, - திரும்பிப்
பார்க்க மறுத்து
பழங்கதை பேசி
பொழுதைக் கழித்தல்
உனக்கும் வேண்டாம்!
எனக்கும் வேண்டாம்!

வா! புதியதோர் உலகம் காண்போம்!
பகையுணர்வின்றி அங்கு வாழ்வோம்!

Read more...

Monday, September 04, 2006

உன்னால் முடியுமா?

"உன்னால் முடியுமா?"


திரு. ஸ்ரீதரன் அவர்கள் ஒரு விளையாட்டை, விளையாட்டாய் ஆரம்பிக்க, நானும் அதில் உள்ளே புகுந்து மற்றவர்கள் வந்து கை கொடுப்பார்கள் என எண்ணித் தொடர, யாரும் வராததால், வேறு வழியின்றி, முழு ஆட்டத்தையும் நான் ஒருவனே ஆடி முடிக்கும் பேறு பெற்றேன்!

அதற்காக ஸ்ரீதரனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்!

இது திருக்குறளின் 133 அதிகாரங்களையும் தெரிந்து, மனனம் செய்து, தெரிந்தவருடன் ஆடக் கூடிய ஒரு விளையாட்டு!

இதனைக் கற்க உங்களுக்குப் பொழுதில்லாவிடினும், உங்கள் குழந்தைகளுக்கு இதைக் கற்றுக் கொடுங்கள்!

நினைவாற்றல் அதிகம் உள்ள அவர்கள் இதனைச் சீக்கிரமே மனனம் செய்து விடுவார்கள்!

தமிழுக்கும், வள்ளுவனுக்கும், உங்கள் குடும்பத்தில் தமிழ் வளர்ப்பதற்கும் நீங்கள் ஆற்றிய தொண்டாக இது இருக்கும்.

இதனைக் காணும், மனம் படைத்த சக வலைப் பதிவாளர்கள், சிரமம் கருதாது, தங்கள் வலைப் பூவில் இதையும் ஒரு பதிவாக ஏற்றி, அவர்களுக்கு வரும் நண்பர்கள் நடுவில் இதைப் பரப்ப உதவினால், மிகவும் மனமகிழ்வேன்!

கட்டாயமில்லை.

நன்றி!
***********************************************************

ஆட்டத்தின் 14 - ஆம் ஓவரை வீச பந்து வீச்சாளர் தயாராகிக் கொண்டிருக்கிறார்!

இதோ முதல் பந்து!

சற்று அளவு குறைந்த பந்து!131. புலவி

இதையும் அடிக்க ஆளில்லை!

அடுத்த பந்து! சற்றே வேகமான பந்து!132. புலவி நுணுக்கம்.

ம்ஹூம்! இதுவும் அப்படியே!

அடுத்த பந்து!133. ஊடலுவகை.

சுழல் பந்தான இது விக்கெட்டின் மேல் படுகிறது!
விக்கெட் கீழே விழுகிறது!
மகிழ்ச்சியால் 'ஹௌஈஸ்ஸட்' எனக் கூவுகிறார் பந்து வீச்சாளர்!
ஆனால், .... அம்பையர் இருந்தால் தானே அவுட் கொடுப்பதற்கு!

மறுபடியும் பந்து வீசத் தயாராகும்போது....

ஆ! இதென்ன! ஆட்டம் முடிந்து விட்டதாக ஒரு அறிவிப்பு!

பந்தையும், வீழ்த்திய விக்கெட்டையும் கையில் எடுத்துக் கொண்டு, தனி ஆளாக வீரநடை போட்டு பெவிலியன் நோக்கித் திரும்பி நடக்கிறார் பந்து வீச்சாளர்!

இவ்வாட்டத்தை இதுவரை திறம்பட நடத்திய ஸ்ரீதரனுக்கும், கடைசி பார்வையாளராக வந்த கொத்தனாருக்கும் நன்றி!

இந்த வரலாற்றுப் புகழ் படைத்த ஆட்டத்தை இதுவரை காணாத அனைவருக்கும் இதோ ஆட்டத்தின் ஒரு குறுகிய 'ரீ-ப்ளே!

'1. கடவுள்வாழ்த்து, 2.வான் சிறப்பு, 3. நீத்தார் பெருமை, 4.அறன் வலியுறுத்தல், 5. இல்வாழ்க்கை, 6. வாழ்க்கைத் துணைநலம், 7. மக்கட்பேறு, 8. அன்புடைமை, 9. விருந்தோம்பல், 10. இனியவை கூறல்

11. செய்ந்நன்றி அறிதல், 12. நடுவு நிலைமை, 13. அடக்கமுடைமை, 14. ஒழுக்கமுடைமை, 15. பிறனில் விழையாமை, 16. பொறையுடைமை, 17. அழுக்காறாமை, 18. வெஃகாமை 19. புறங்கூறாமை, 20. பயனில சொல்லாமை

21. தீவினையச்சம், 22. ஒப்புரவறிதல், 23. ஈகை, 24. புகழ், 25. அருளுடைமை, 26. புலால் மறுத்தல், 27. தவம், 28. கூடா ஒழுக்கம், 29. கள்ளாமை, 30. வாய்மை.

31. வெகுளாமை, 32. இன்னா செய்யாமை, 33. கொல்லாமை, 34. நிலையாமை, 35. துறவு, 36. மெய்யுணர்தல், 37. அவா அறுத்தல், 38. ஊழ், [இதுவரை சொன்னது 'அறத்துப்பால். இனி வருவது, "பொருட்பால்".] 39. இறைமாட்சி, 40. கல்வி.

41.கல்லாமை, 42. கேள்வி, 43. அறிவுடைமை, 44. குற்றங்கடிதல், 45. பெரியாரைத் துணைக்கோடல், 46. சிற்றினம் சேராமை, 47. தெரிந்து செயல்வகை, 48. வலியறிதல், 49. காலம் அறிதல், 50. இடன் அறிதல்.

51. தெரிந்து தெளிதல், 52. தெரிந்து வினையாடல், 53. சுற்றந் தழால், 54. பொச்சாவாமை, 55. செங்கோன்மை, 56. கொடுங்கோன்மை, 57. வெருவந்த செய்யாமை, 58. கண்ணோட்டம், 59.ஒற்றாடல், 60. ஊக்கம் உடைமை.

61. மடி இன்மை, 62. ஆள்வினை உடைமை, 63. இடுக்கண் அழியாமை, 64. அமைச்சு, 65. சொல்வன்மை, 66. வினைத்தூய்மை, 67. வினைத்திட்பம், 68. வினை செயல்வகை 69. தூது, 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்.

71. குறிப்பறிதல், 72. அவை அறிதல், 73. அவை அஞ்சாமை, 74. நாடு, 75. அரண், 76. பொருள் செயல்வகை, 77. படை மாட்சி, 78. படைச் செருக்கு, 79. நட்பு. 80. நட்பாராய்தல்.

81. பழைமை, 82. தீ நட்பு, 83. கூடா நட்பு, 84. பேதைமை, 85. புல்லறிவாண்மை, 86. இகல், 87. பகை மாட்சி, 88. பகைத் திறந்தெரிதல், 89. உட்பகை, 90. பெரியாரைப் பிழையாமை.

91. பெண்வழிச் சேறல், 92. வரைவின் மகளிர், 93. கள்ளுண்ணாமை, 94. சூது, 95. மருந்து, 96. குடிமை, 97. மானம், 98. பெருமை, 99. சான்றாண்மை, 100. பண்புடைமை.

101. நன்றியில் செல்வம், 102. நாணுடைமை, 103. குடிசெயல் வகை, 104. உழவு, 105. நல்குரவு, 106. இரவு, 107. இரவச்சம், 108. கயமை,இனி, "இன்பத்துப்பால்" முனையில் இருந்து மீதி பந்துகள் வீசப்படும்!109. தகையணங்குறுதல், 110. குறிப்பறிதல்.

111. புணர்ச்சி மகிழ்தல், 112. நலம் புனைந்துரைத்தல், 113. காதற் சிறப்புரைத்தல், 114. நாணுந் துறவுரைத்தல், 115. அலர் அறிவுறுத்தல், 116. பிரிவாற்றாமை, 117. படர் மெலிந் திரங்கல், 118. கண் விதுப்பழிதல், 119. பசப்புறு பருவரல், 120. தனிப்படர் மிகுதி.

121. நினந்தவர் புலம்பல், 122. கனவு நிலை உரைத்தல், 123. பொழுது கண்டு இரங்கல், 124. உறுப்புநலன் அழிதல் [இதைப் பிரித்து உறுப்பு நலன் அழிதல் என்று போட்டால், அர்த்தம் அனர்த்தமாகி விடும்! ஐயன் வாழ்க!] 125. நெஞ்சொடு கிளைத்தல், 126. நிறையழிதல், 127. அவர்வயின் விதும்பல், 128. குறிப்பறிவுறுத்தல், 129. புணர்ச்சி விதும்பல், 130. நெஞ்சொடு புலத்தல்.

131. புலவி, 132. புலவி நுணுக்கம், 133. ஊடலுவகை.

****இந்த ஆட்டத்தால் என்ன பயன் எனக் கேட்பவருக்கு ஒரு வார்த்தை!

உங்களால் முடியாவிட்டாலும், உங்கள் குழந்தைகளுக்கு, வாரம் ஒரு பத்து என்ற கணக்கில் சொல்லிக் கொடுங்கள்!

உங்களை விட நினைவாற்றல் அதிகம் உள்ள வயதானதால் சீக்கிரம் பிடித்துக் கொள்வார்கள்!

இன்றில்லாவிடினும் நாளை நிச்சயம் உங்களைப் போற்றுவார்கள் இதற்காக!

தமிழுக்கும், வள்ளுவனுக்கும் நீங்கள் செய்யும் சிறு தொண்டாக இது இருந்து விட்டுப் போகட்டும்!

நன்றி!****

Read more...

Sunday, September 03, 2006

"[புது] வேதம் படிப்போம்!"

"புது வேதம் படிப்போம்!"


ஜெயஸ்ரீஅவர்களுக்கு நன்றி!

வெற்றி அவர்களுக்கு நன்றி!

வெற்றி ஒரு பதிவு போட்டு, யார் எழுதியது இந்தக் கவிதை எனஒரு கவிதையைக் கேட்காவிட்டால்,

ஜெயஸ்ரீஅவர்கள் வந்து, 'பாரதியா' எனச் சொல்லா விட்டால்,

நான் பாரதியை இன்று முழுதும் புரட்டியிருக்க மாட்டேன்!

அப்படிப் புரட்டிய போது கண்ணில் பட்டது இந்தக் கவிதை!

இன்று "விடாது கருப்பு" முதல், "வஜ்ரா சங்கர்" வரை அலசப்படுகின்ற ஒரு தலைப்பின் கருத்தை அன்றே பாரதி எவ்வளவு தெள்ளத்தெளிவாக உணர்த்தியிருக்கிறான் என்பதைப் படிக்கையில்,

நெஞ்சம் இறுமாப்புறுகிறது!
உவகையுறுகிறது!
வருந்துகிறது...
....இது இன்றுவரை அதிகம் கவனிக்கப்படாமல் போனதை நினைத்து!

இதைப் படித்த பின்னராவது, தமிழ்மணத்தில் ஒரு ஒருமித்த கருத்து வரவில்லையெனில், நான் பெரிதும் வருந்துவேன்!

குறைந்த பட்சம், பாரதியைப் பழிக்காதீர், இனிமேலும்!!

இதற்கு மேல் தெளிவாக வேறு எந்த "சும்பனும்" சொல்ல முடியாது என்பதால், மேலும் முன்னுரையைத் தவிர்த்து, உங்களின் பார்வைக்கும், படிப்பிற்கும், எண்ணத்திற்கும் இதனைப் படைப்பதில் பேருவகை அடைகிறேன்!
.
இதைத் தமிழ்ப் பாட நூல்களில் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும் எனும் கோரிக்கையையும் தமிழக அரசுக்கு வைக்கிறேன்!


வாழ்க நீ எம்மான்! வாழ்க நீ பாரதி!

*************************************************************

"உயிர் பெற்ற தமிழர் பாட்டு!"

"பல்லவி"

இனி ஒரு தொல்லையும் இல்லை -- பிரி
வில்லை, குறையும் கவலையும் இல்லை.

"ஜாதி"

மனிதரில் ஆயிரம் ஜாதி -- என்ற
வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை;
கனிதரும் மாமரம் ஒன்று -- அதில்
காய்களும் பிஞ்சுக் கனிகளும் உண்டு.
பூவில் உதிர்வதும் உண்டு -- பிஞ்சைப்
பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு;
நாவிற்கினியதைத் தின்பார் -- அதில்
நாற்பதினாயிரம் சாதிகள் சொல்வார்.
ஒன்றுண்டு மானிட சாதி -- பயின்று
உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்;
இன்று படுத்தது -- உயிர்த்
தேற்றம் அடையும் உயர்ந்த திழியும்,
நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் -- இந்த
நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்,
எந்தக் குலத்தின ரேனும் -- உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.

"இன்பத்திற்கு வழி"

ஐந்து புலனை அடக்கி -- அரசு
ஆண்டு மதியைப் பழக்கித் தெளிந்து
நொந்து சலிக்கும் மனதை -- மதி
நோக்கத்திற் செல்ல விடும்வகை கண்டோம்.

"புராணங்கள்"

உண்மையின் பேர் தெய்வம் என்போம் --அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்;
உண்மைகள் வேதம் என்போம் -- பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்
கடலினைத் தாவும் குரங்கும் -- வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததத னாலே -- தெற்கில்
வந்து சமன் செய்யும் குட்டை முனியும்
நதியி னுள்ளே முழு கிப்போய் -- அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த -- திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.
ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் -- ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார் -- அதில்
நல்ல கவிதை பலப்பல தந்தார்.
கவிதை மிகநல்ல தேனும் -- அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி -- நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.

"ஸ்மிருதிகள்"

பின்னும் [ஸ்]மிருதிகள் செய்தார் -- அவை
பேணும் மனிதர் உலகினில் இல்லை;
மன்னும் இயல்பின் வல்ல -- இவை
மாறிப் பயிலும் இயல்பின ஆகும்
காலத்திற் கேற்ற வகைகள் -- அவ்வக
காலத்திற்கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய் -- எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை,
சூத்திர னுக்கொரு நீதி -- தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடு மாயின் -- அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.

"மேல்குலத்தார் எவர்?"

வையகம் காப்பவ ரேனும் -- சிறு
வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்
பொய்யக லத்தொழில் செய்தே -- பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.

"தவமும் யோகமும்"

உற்றவர் நாட்டவர் ஊரார் -- இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் -- இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை.
பக்கத் திருப்பவர் துன்பம் -- தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி
ஒக்கத் திருந்தி உலகோர் -- நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி,

"யோகம், யாகம், ஞானம்"

ஊருக் குழைத்திடல்யோகம்: -- நலம்
ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் -- உளம்
பொங்கல் இலாத அமைதிமெய்ஞ் ஞானம்.

"பரம் பொருள்"

எல்லையில் லாத உலகில் -- இருந்
தெல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம்
எல்லையில் லாதன வாகும் -- இவை
யாவையு மாயிவற் றுள்ளுயிராகி,

எல்லையில் லாப்பொருள் ஒன்று -- தான்
இயல்பறி வாகி இருப்பதுண்டென்றே
சொல்லுவர் உண்மை தெளிந்தார் -- இதைத்
தூவெளியென்று தொழுபவர் பெரியோர்.

நீயும் அதனுடைத் தோற்றம் -- இந்த
நீல நிறங் கொண்ட வானமும் ஆங்கே.
ஓயுதல் இன்றிச் சுழலும் -- ஒளி
ஓங்குபல் கோடிக் கதிர்களும் அஃதே.

சக்திகள் யாவும் அதுவே -- பல்
சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே.
நித்திய மாவிவ் வுலகில் -- கடல்
நீரில் சிறுதுளி போலும்இப் பூமி.

இன்பமும் ஓர்கணத் தோற்றம் -- இங்கு
இளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம்,
துன்பமும் ஓர்கணத் தோற்றம் -- இங்கு
தோல்வி முதுமை ஒருகணத் தோற்றம்.

"முக்தி"

தோன்றி அழிவது வாழ்க்கை -- இதில்
துன்பத்தோ டின்பம் வெறுமையென் றோதும்
மூன்றில் எதுவரு மேனும் -- களி
மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி.

இனி ஒரு தொல்லையும் இல்லை -- பிரி
வில்லை, குறையும் கவலையும் இல்லை.

********************************************************************

இதையே இனித் தமிழ் வேதம் எனக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்!

வாழ்க பாரதி!

Read more...

Friday, September 01, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" [4]

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" [4]

"3 - வய்துக் குழந்தையின் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய பாலியல் கல்வி!"

உங்கள் 3 வயதுக் குழந்தை ஷீலாவும், அடுத்த வீட்டுப் பையன்[3 வயதுதான்!] ராஜாவும் மாடியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!
திடீரென, சத்தம் நின்றுவிடுகிறது!
உங்களுக்கு சந்தேகம்!
மாடி ஏறிச் சென்று, மூடியிருக்கும் குழந்தையின் அறைக்கதவைத் தட்டி [நீங்கள்தான் அவரவரின் தனித்துவம் சொல்லி வளர்த்திருக்கிறீர்களே!] 'வரலாமா' எனக் கேட்டு நுழைகிறீர்கள்!
அங்கே......பிறந்த மேனிக்கு ராஜாவும், ஷீலாவும்!
பார்த்தவுடன் புரிகிறது அவர்கள் இருவரும் இந்த வயதுக் குழந்தைகள் இயல்பாக ஆடும் 'டாக்டர் விளையாட்டு' ஆடிக்கொண்டிருக்கிறார்கள் என!

இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்!

ஒன்று இப்படி..!

குரலை உயர்த்தி, "என்ன பண்றீங்க ரெண்டு பேரும்?
சீக்கிரமா ட்ரெஸ்ஸைப் போடுங்க!
ஏ ராஜா! கெளம்பு நீ ஒங்க வீட்டுக்கு!
வரேன்! வந்து ஒங்க அப்பாகிட்ட சொல்றேன்!
இன்னொரு தரம் ஒங்க ரெண்டு பேரையும் இப்படி பாத்தேனோ... அப்ப தெரியும் சேதி!"

இதன் மூலம் நீங்கள் சொல்வது அவர்களுக்கு....?

இருவர் செய்ததும் தவறு.
அவர்கள் கெட்டவர்கள்.
ஆடை களைதல் என்பது ஒரு குற்றம்.

இதன் முழுத் தீவிரமும் புரியாத அவர்களுக்கு இது குழப்பத்தையும், அவமானத்தையும், வருத்தத்தையும் உண்டு பண்ணும்.
ஒரு சாதாரண ஆர்வத் தேடலுக்கா[Curiosity] இவ்வளவு? என குறுகிப் போகும் அவை இரண்டும்!

மாறாக இப்படி....!

"நீங்க ரெண்டு பேரும் ஏதோ விளையாட்டு ஆடிக்கிட்டு இருக்கீங்க போல! சரி, எங்கே, ரெண்டு பேரும் சமர்த்தா, அவங்கவங்க ட்ரெஸ்ஸைப் போட்டுக்கிட்டு கீழே வாங்க!
நான் உங்களுக்கு ஒண்ணு காட்டறேன்!"
எனச் சொல்லி அவர்கள் வந்ததும் ஒரு படப்புத்த்கத்தை விரித்து, அவர்களுக்கு, அவர்கள் தெரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு ஆண்-பெண் பற்றி விளக்குவது!

இதன் மூலம், ..

'அடுத்தவர் உடல்கூறு பற்றிய ஆர்வம் தவறல்ல.
ஆனால் அதைத் தெரிந்து கொள்ள ஆடை களைய வேண்டிய அவசியம் இல்லை!
உங்களுக்கு உதவ உங்கள் பெற்றோரை எப்போதும் நாடலாம்'
எனப் புரிய வைக்கிறோம்!

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று,

நீங்கள் ராஜாவின் பெற்றோரிடமும் இது பற்றி தெரிவித்து ஒப்புதல் பெறுதல்!

வீண் மனத்தாங்கல்களை தவிர்க்க இது உதவும்!
இல்லையெனில் அவனை அனுப்பிவிட்டு ஷீலாவுக்கு மட்டும் இதைச் சொல்லலாம்.

இங்கு அவ்வாறு சொல்லாமல் மறுத்தல், தனிமையைத் தேட வைக்கும் குழந்தைகளை!
ஒரு கண் அவர்கள் மேல் வைத்து இருப்பது அவசியம்தான்!
குறுக்கீடு கூடாது!
இதைத்தான் வலியுறுத்த விரும்புகிறேன்!

மேலும், இன்னொரு முக்கியமான விஷயம்!

மேலே சொன்னது வெறும் ஒத்த வயதுக் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வரையிலும் தான்!

மற்றவர்கள், ...அவர்கள் பெரியவர்களோ, அல்லது, சற்று வயது வித்தியாசம் உள்ளவர்களோ, இந்தப் பிஞ்சு வயதினரோடு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தெரிந்தால், உடனே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயங்க வேண்டாம்!

நான் சொன்னது புரியவில்லை எனின், பின்னூட்டத்தில் கேளுங்கள், சொல்கிறேன் !

இந்த வயதில் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், நிகழ்வுகள் என்ன?

"நீ தனித்துவமானவன்/ள்! [Special]! எனவே உன்னை நேசிக்கக் கற்றுக்கொள்!"

"அதே போல, மற்றவர்களும் அப்படியே! அவர்களை மதி! அன்பு செலுத்து!"

"உனது இந்த தனித்தன்மையை [Individuality] பாதிக்கும், எந்த ஒரு நிகழ்வுக்கும் உன்னை ஆட்படுத்த "எவருக்கும்" உரிமை இல்லை!"

"ஆபத்தான நிகழ்வுகளில் இருந்து காத்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு !"

"உன் உடலில் மறைக்கப்பட்ட உறுப்புகள்[hidden parts] மற்றவர்களுக்குக் காட்ட இல்லை!"

"உன் தாய் தந்தையிடம் எதையும் நீ கேட்க முடியும்!"

"அவர்கள் என் மீது அன்பு செலுத்த வந்திருப்பவர்கள்!"

போதனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு! இதை எப்படி செயல்முறையில் காட்டுவது என, கோவியார் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது!

"உவ்வாவைத் தொடாதே!" எனச் சொல்ல வேண்டாம்!
"நீர்[ஒண்ணுக்கு] போகும் இடம்" எனச் சொல்லிக் கொடுங்கள்!
பின்னால் அதன் பெயர் உங்களால்/பள்ளியில் அவனுக்கு/அவளுக்கு சொல்லிக் கொடுக்கப் படும் வரை!

குளிக்கும் போது, ஆர்வமிகுதியில் அதன் கை உங்கள் உறுப்புகளின் மீது பட்டால், பட்டென அடிக்க வேண்டாம்!
இது வெகு இயல்பாக நிகழும் ஒரு நிகழ்ச்சி தான்!

"நான் சொல்லியிருக்கேன்ல! இது என்னோடது! அதனால நீ தொடக் கூடாது! இது மாதிரி மத்தவங்களுதைத் தொட்டா அவங்க தப்பா நினைச்சுப்பாங்க!" என அன்புடன் சொல்லுங்கள்!
அடுத்த முறை அது நிகழாது!
ஒரு நேசமும், மரியாதையும் வளர்வதைப் பார்ப்பீர்கள்!

இது போன்ற தருணங்களை உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக எண்ணி, இது தொடர்பாக மேலும் சொல்லத் துவங்குங்கள்!

"தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு, மற்றவற்றை ஒதுக்கும் இயல்பு குழந்தைகளுக்கு கிடைத்த வரம்!
'போப்பா! போரடிக்குது!' என்றோ,
ஒண்ணூம் புரியாம மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டோ,
தனக்கு அதில் தொடர விருப்பமில்லாததை சட்டென்று காட்டிவிடும்!

இதில் தாய், தந்தை இருவருக்கும் சம பொறுப்பு உண்டு!
"போதும், போதும்! கண்டத்தையும் சொல்லி குழந்தையைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிறீங்க! "என அடுத்தவரைக் குறை கூற வேண்டாம்!
இருவரும் ஒருவருக்கொருவர் இந்த விஷங்களில், ஒரு பொதுவான நிலைப்பாடு கொள்ளல் மிகவும் தேவையான ஒன்று!
ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள்!
எது சொல்லலாம், எது இப்போது வேண்டாம் என்பதை!

அடுத்து, ...குழந்தைகள் திடீரென ஒரு கேள்வியை உங்கள் மீது வீசும் போது, தயாராக இருப்பதற்கும், இந்த முன் - கலந்துரையாடல் உதவும்!
ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து முழிக்கிறதோ, இல்லைன்னோ குழந்தையைக் கடிந்து கொள்வதோ தவிர்க்கபடும் இதனால்!

"இப்ப நீ ஒண்ணும் இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு கிழிக்க வேணாம்","வாயை மூடு! அதிகப்பிரசங்கி!" போன்ற பதில்கள் குழந்தைகளை உங்களிடமிருந்து அந்நியமாக்கும் என்பதை மனதில் கொண்டு,
ஒரு எசகுபிசகான நேரத்தில் கேட்டால் கூட,
"இப்ப வேணாம் கண்ணு! ராத்திரி, சாப்டவொடனே ஒனக்கு கதை சொல்லுவேன் பாரு! அப்ப சொல்லுவேன், சரியா!" எனச் சொல்லி,... சொன்ன வாக்கைக் காப்பாற்றுங்கள்!

எளிமையான, நேர்மையான பதில்களையே கூறுங்கள்! அது பின்னால் ஒரு தேடலை உங்களிடம் வளர்க்கும்!

"ஏய்! அன்னிக்கு கேட்டியே! நீ எப்படி பொறந்தேன்னு?
இப்ப அம்மா உன்னை ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போவேனாம்! அங்க உன் உஷாசித்திக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கொழந்தை பொறக்கப் போவுது! நீயும் வா!"
எனக் கூட்டிப் போங்கள்!
அதை பார்த்துவிட்டு வந்ததும் இருக்கிறது உங்களுக்கு ஒரு ஆயிரம் கேள்விகள்!

பெரிய பெண் தாவணி போடும் நேரம்,
அண்ணன் அரை டிரௌசரில் இருந்து பேண்ட் போடும் காலம்,
அவனுக்கு மீசை அரும்பும் காலம்
இவையெல்லம் கூட உங்கள் 3 வயதுக் குழந்தைக்கு பாலியலின் முக்கியத்துவத்தைச் சொல்லிக் காட்டக் கூடிய நேரங்கள்தான்!

எவ்வளவு அதிகம் இந்த சிறுவயதில் சொல்கிறோம் [Too much too soon] என்பது முக்கியமில்லை!
ஐயோ! அப்பவே சொல்லாமப் போனோமே [Too little too late] என பின்னால் வருந்துவதற்கு இது எவ்வளவோ மேல்!
இது அறிவியாளர் கருத்து!

மேலும், இதன் மூலம், தன் தாய்-தந்தையரை நான் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்ற முக்கியமான, தேவையான பண்பை அவர்கள் மனதில் விதைக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்!

இதோ, அடுத்த ஆண்டு, அதன் கையைப் பிடித்துக் கொண்டு, நீங்களே போய், ஒரு பள்ளியில் சேர்க்கப் போகிறீர்கள்!
அது பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறீர்கள் ...நீங்கள்தான்!

எனவே, கிடைத்தற்கரிய இவ்வாய்ப்பைத் தவற விடாமல், நான் மேலே கூறிய கருத்துகளை கவனத்தில் கொண்டு, செயல்படுங்கள்!

அடுத்தது.... "பள்ளி செல்லும் சிறு குழந்தைகளுடைய பெற்றோரின் கடமை, தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?" என்பதைப் பார்ப்போம்! "!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP