Friday, January 23, 2009

"உந்தீ பற" -- 2

"உந்தீ பற" -- 2

[முந்தைய பதிவு]

"பகவான் ரமணரின் உபதேச உந்தியார்"

பாயிரத்தைத் தொடர்ந்து, திரு. முருகனார் ஒரு சிறிய முன்னுரை போல, பகவான் ரமணரின் இந்த நூல் எதைப் பற்றிப் பேசுகிறது என சொல்ல விழைந்து, ஒரு கதையை நம் முன் எடுத்து வைக்கிறார்.


மாணிக்கவாசகர், முப்புரம் எரித்ததையும், தட்சன் நடத்திய யாகத்தில் அனைவரும் அழிந்ததையும் தனது திருவுந்தியில் பாட, முருகனாரோ, தாருகவனத்து முனிவர்கள், ’தான்’ என்ற மமதையில், செயல் ஒன்றே சிறந்தது என்கிற ஆணவத்தில், ஆதிசிவனோடு மோத, அவர்களது கருவத்தை சிவன் எப்படி அழித்து ஆட்கொண்டார் என்பதை ஆறு பாடல்கள் மூலம் சொல்கிறார்.
இதற்கு உபோற்காதம் [முன்னுரை, முகவுரை, பாயிரம், முன்கதை] எனப் பெயரிட்டு வழங்குகிறார்.

அந்தப் பாடல்களையும், அவற்றைப் பதம் பிரித்தும், சுருக்கமான பொருள் காணலாம்.


[கலித்தாழிசை]

உபோற்காதம்

தாரு வனத்திற் றவஞ்செய் திருந்தவர்

பூருவ கன்மத்தா லுந்தீபற

போக்கறை போயின ருந்தீபற.

தாரு வனத்தில் தவம் செய்திருந்தவர்

பூருவ கன்மத்தால் உந்தீ பற

போக்கறை போயினர் உந்தீ பற.

[தாருகாவனத்தில் தவம் செய்துகொண்டிருந்த முனிவர்கள், முந்தைய பிறப்பில் தங்களுக்குக் கிட்டிய செய்பலனால், தாங்கள் செய்வது இன்னது என அறியாது கெட்டொழிந்தனர்.]

கன்மத்தை யன்றிக் கடவு ளிலையெனும்

வன்மத்த ராயின ருந்தீபற

வஞ்சச் செருக்கினா லுந்தீபற.


கன்மத்தை அன்றிக் கடவுள் இல்லையெனும்

வன்மத்தர் ஆயினர் உந்தீ பற

வஞ்சச் செருக்கினால் உந்தீ பற.


[மதிமயங்கிய முனிவர்கள் தாங்கள் செய்கின்ற தவத்தினால் கிட்டிய செய்பலன் என்கிற கன்ம பலமே சிறந்தது. அதனை மீறிக் கடவுள் என ஒன்றும் இல்லை என ஆணவச் செருக்குற்றவராயினர்.]


கன்ம பலந்தருங் கர்த்தற் பழித்துச்செய்

கன்ம பலங்கண்டா ருந்தீபற

கர்வ மகன்றன ருந்தீபற.


கன்ம பலம் தரும் கர்த்தர்[ரை] பழித்துச்

செய்கன்ம பலம் கண்டார் உந்தீ பற

கர்வம் அகன்றனர் உந்தீ பற.


[இந்த ஆணவம் தலைக்கேற, கன்ம பலம் என்கின்ற ஒன்றைத் தருகின்ற கடவுளைப் பழிக்கும் செயலால், [முற்பிறப்பால் கிட்டிய பலன்களை எல்லாம் இழந்து, இப்போது செய்துவந்த இழிச்செயலால்] இந்தச் செயலால் விளைந்த பலனை அடைந்தனர். அதன் மூலம், தங்கள் ஆணவமும் அழிக்கப் பெற்றனர். ]

காத்தரு ளென்று கரையக் கருணைக்கண்

சேர்த்தருள் செய்தனனுந்தீபற

சிவனுப தேசமி துந்தீபற.


காத்து அருள் என்று கரையக் கருணைக்கண்

சேர்த்து அருள் செய்தனன் உந்தீ பற

சிவன் உபதேசம் இது உந்தீ பற.

[ஆணவம் அழியப் பெற்றதால், எங்களைக் காத்து அருளவேண்டும் எனக் கண்ணீர் மல்க சிவனாரை வேண்ட, கருணைக் கண் திறந்து அவர்களுக்கு அருள் செய்தார். அப்படி அவர் செய்தபோது அருளிய உபதேசம் இது என அறிக.]


உட்கொண் டொழுக வுபதேச சாரத்தை

யுட்கொண் டெழுஞ்சுக முந்தீபற

வுட்டுன் பொழிந்திடு முந்தீபற.


உள்கொண்டு ஒழுக உபதேச சாரத்தை

உள்கொண்டு எழும் சுகம் உந்தீ பற

உள் துன்பு ஒழிந்திடும் உந்தீபற.


[இந்த உபதேச சாரத்தை நன்றாக உள்வாங்கி அதன்படி நடந்து வந்தால், உள்ளிருந்து ஒரு சுகமான அனுபவம் எழுவதை உணரலாம். இதுவரை இருந்த துன்பங்கள் எல்லாமே ஒழிந்து போய்விடும்.]


சார வுபதேச சாரமுட் சாரவே

சேரக் களிசேர வுந்தீபற

தீரத் துயர்தீர வுந்தீபற.


சார உபதேச சாரம் உள் சாரவே

சேரக் களி சேர உந்தீ பற

தீரத் துயர்தீர உந்தீ பற.


[அப்படியே அனைவரும் இந்த உபதேச சாரத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டு, இன்பம் ஒன்றையே அடையட்டும். அவர்கள் துன்பமெல்லாம் தீர்ந்து போகட்டும்.]

-- முருகனார்

[எனச் சொல்லி முருகனார் வாழ்த்துகிறார்!]
____________________________


இதுவரை வந்த பாடல்களுக்குச் சொல்லியதெல்லாம் பொதுப்படையான பொருள் மட்டுமே. உபதேச உந்தியாரில் வருகின்ற பகவான் ரமணரின் முப்பது பாடல்களுக்கும் சற்று வித்தியாசமான முறையில்,... ஒரு எட்டுவரிக் கவிதையில்.... சொல்ல முயன்றிருக்கிறேன். தொடர்ந்து சில உரைநடை விளக்கங்களும் இருக்கும்.


அப்படித் தொடங்கும் போது, என் மனதில் உதித்த ஒரு மூன்று பாடல்களை வாழ்த்துப் பாக்களாக உங்கள் முன் வைத்து, அதனைத் தொடர்ந்து, பகவானின் பாடல்களை அளிக்கிறேன். திங்கள் முதல் வெள்ளி வரை [இந்திய நேரம்] வாரம் ஐந்து பதிவுகளாக இது வரும்.

நன்றி.

முருகனருள் முன்னிற்கும்!
_________________________
[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP