Tuesday, September 22, 2009

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 9&10

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 9&10

1&2 3,4&5 6,7&8


நவநாயகியரின் நிறைவு அம்சமாய் விளங்கும் அன்னையின் தரிசனம் இங்கே! அனைத்துக்கும் ஆதிகாரணி துர்க்கை என்பதால் அவளது பெயரை நான்காம் அடியிலும், அம்சத்தின் பெயரை இறுதி அடியிலும் வைத்தேன். முதல் நான்கு அடிகளில் அன்னையைப் பற்றிய ஒரு சிறு குறிப்பும், அடுத்த நான்கு அடிகளில் அவளது தோற்றமும் சொல்லப்பட்டிருக்கின்றன. யாவினும் நலம் சூழ்க!


9. ஸித்திதாத்ரி தேவி:



சுந்தரி சங்கரி சுலப சந்தோஷிணி சுரமுனி பணிந்திடும் சூலியளே

அசுரரை மாய்த்து ஆணவம் தொலைத்து அடியரைக் காத்திடும் அன்னையளே


அணிமா,மஹிமா,கரிமா,லகிமா,ப்ரபத்தி,ப்ரகாம்யா,ஈசித்வ, விசித்வா ஆனவளே


அட்டமாசித்தியை சிவனில் பாதியாய்ச் சேர்ந்தே வழங்கிடும்
துர்க்கையளே!

ஸித்திதாத்ரி எனப் பெருமைபெற்றிடும் பேரெழில் கொண்ட தேவியளே


தாமரைமலர்மேல் சிம்மத்தில் அமர்ந்து அருள்மழைபொழியும் புண்ணியளே


சங்கொடு சக்கரம் கதையும் கமலமும் கைகளில் தாங்கிடும் சதுர்புஜளே


நவநாயகியரில் ஒன்பதாம்நாளின்று
ஸித்திதாத்ரிதேவி தாள் பணிந்தேன்! [9]


ஸ்ரீ மஹா துர்கா!:

நவராத்ரி நாளினில் நாயகிஉன்புகழ் பாடியே நாடிடும் அடியவர்க்கு

நவநவமாய்ப் பல இன்பங்கள் அளித்து நாளும் நன்மையே புரிபவளே


நவநாயகியாய் நானிலம் தழைத்திட நல்லருள் புரிந்திட வந்தவளே


நவசக்தி ரூபமாய் நல்லோரைக் காத்து நாதரூபமான
துர்க்கையளே!

நவரசம் ததும்பிடும் நன்முகம் கொண்டிங்கு நாளும் என்னுடன் நிற்பவளே

நவரத்ன ஜோதியாய் நெஞ்சினில் நிறுத்திடும் அடியவருயர்ந்திடச் செய்பவளே


நவராத்திரியில் கொலுவினிலமர்ந்து நன்மைகள் புரிந்திட வருபவளே


நவநாயகியர் நற்றமிழ்மாலை பாடியே
துர்க்கையின் தாள் பணிந்தேன்!
[10]



நாயகியை மனதில்வைத்துப் போற்றிவரும் இம்மாலையில்

சொற்குற்றம் பொருட்குற்றம் அத்தனையும் நீ பொறுத்து

நாடிவரும் அடியவர்க்கு நல்லருளை வழங்கிடவே

அன்னையுன்றன் அடிபணிந்தேன் தாழ்ந்து.


நவநாயகியர் நற்றமிழ்மாலை நிறைவுற்றது
.

பொங்கும் மங்களம் எங்கினும் தங்குக!


ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா! *****************************************************************

[அன்னையைப் பற்றி எழுதவேண்டும் என்னும் ஆர்வம் ஒன்று மட்டுமே இதன் பின்னணி! இலக்கணப் பிழைகள் இருக்கக்கூடும். ஆர்வலர்கள் பொறுத்தருள்க!]

பின்னிணைப்பு:

என்ன காரணமெனத் தெரியவில்லை இந்த நவநாயகியர் எனக்கருள் செய்ய வந்தது! இந்தப் பதிவை இட்டு முடித்தபின், என் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க துர்கை பற்றிய எதையோ தேடப்போய், என் கண்ணில் இது பட்டது. என்னவெனத் தெரியாமலேயே, பார்க்க ஆரம்பித்ததும் என்னையறியாமல் ஒரு பரவசம்! என்னவென்று நீங்களும் பாருங்களேன்! நான்கே நிமிடங்கள்தான் இது!


ஜெய் தேவி துர்கா!

http://www.youtube.com/watch?v=AXx6vBKEnCk&feature=channel_page



பொங்கும் மங்களம் எங்கினும் தங்குக!


ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா!

*****************************************************************

Read more...

Monday, September 21, 2009

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 6,7& 8

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 6,7& 8

1&2 3,4&5

இன்று அடுத்து மூன்று நாயகியரின் தரிசனம்! அடுத்தடுத்து இடுவதன் காரணம், அனைவரும் சீக்கிரமே முழு மாலையயும் அன்னைக்கு அணிவித்து மகிழவே!

6. காத்யாயனி மாதா:

மாயாவுலகினில் மக்களைக் காத்திட மகிழ்வுடன் அருளிடும் மலைமகளே

ஓயாவுலகினில் நீயே இரங்கி மகளாய்ப் பிறந்திட வந்தவளே

தாயே தனக்கு மகளாய் வந்திடத் தவம்புரிந்தவர்க்கு அருளியவளே

காத்யாயனர்க்கு மகளாய்ப் பிறந்து காட்டினில் வாழ்ந்திட்ட துர்க்கையளே!

காத்யாயனியாய் மஹிஷனை அழித்திடக் கருணைகொண்டிட்ட வனமகளே

வாளும் கமலமும் இடக்கரம் தாங்கி சிம்மத்தில் அமர்ந்திடும் சூலியளே

அபயமும் அருளும் வலக்கரம் தாங்கி மூவரும் போற்றப்போர் புரிந்தவளே!

நவநாயகியரில் ஆறாம்நாளின்று காத்யாயனியின் தாள் பணிந்தேன்! [6]



7. காலராத்ரி மாதா:


கோரபயங்கரி கரியநிறத்தினி கண்டவர்நடுங்கிடும் காளியளே

தலைவிரிகோலமாய்க் கழுதையிலேறிக் கொடியரை விரட்டிடும் சூலியளே

கண்களைப் பறித்திடும் மின்னொளிவிளங்கிடும் மாலையைக்கழுத்தினில் அணிந்தவளே

விண்ணுயர்நின்று வீணரைச் சாய்த்திட வேகமாய் வந்திடும் துர்க்கையளே!

காலராத்ரியெனும் பெயரினைக் கொண்டு காலத்தை வென்றிட்ட மாயவளே

முட்கதை, கத்தியை இடக்கைகள் கொண்டு அருளும் அபயமும் அளிப்பவளே

வெளிவிடும் மூச்சினில் தீச்சுவாலையுடன் கழுதையில் வலம்வரும் முக்கண்ணளே

நவநாயகியரில் ஏழாம்நாளின்று மஹாகாலராத்ரி தாள் பணிந்தேன்! [7]



8. மஹாகௌரி மாதா:


சிவனைச்சேர்ந்திடச் சீரியதவம்செய்து ஊசிமுனையினில் நின்றவளே

தவத்தினில் மகிழ்ந்திட்ட சிவனைக் கண்டு களிப்புடன் சென்றே அணைத்தவளே

சிவனே நடுங்கிடும் கரியவுருவினை மேனியில்கொண்டு எழுந்தவளே

கங்கையின் புனிதம் கருநிறம்கரைத்திட பூரணவொளியான துர்க்கையளே!

எருதுமேலமர்ந்து சூலம் டமரு கைகளிலேந்தி வெண்ணிற ஆடை உடுத்தவளே

என்றுமிளமையாய் எட்டுவயதினளாய் இன்னல்கள் தீர்த்திடும் தூயவளே

அசுரரை அழித்திட அனைவர்க்கும் அருளிய அஷ்டமஹாதேவி துர்க்கையளே

நவநாயகியரில் எட்டாம்நாளின்று மஹாகௌரிமாதா தாள் பணிந்தேன்! [8]


***********************

[நவநாயகியர் உலா நாளை நிறைவுறும்!]

ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா!

Read more...

Sunday, September 20, 2009

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 3, 4 & 5

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 3, 4 & 5

1&2


இந்த நவநாயகியரைப் பற்றிய குறிப்புகள் அன்பர்கள் கேட்டிருக்கிறார்கள். காசியில் இவர்கள் அனைவருக்கும் தனித்தனியே ஆலயங்கள் இருக்கின்றன என இந்த வரைபடம் சொல்கிறது. மேலும் கோவா அருகில் ரேடி என்னும் ஸ்தலத்தில் நவதுர்கா அன்னைக்கான ஒரு புராதன ஆலயம் இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டில் அமைந்த ஆலயம் எனக் குறிப்பு கூறுகிறது. இதற்கான வலைத்தளத்தில் பல உபயோகமான தகவல்கள் இருக்கின்றன.
இப்போது அடுத்த மூன்று நாயகியரைத் தரிசிக்கலாம். பாடலைக் கவனித்தால், அந்த அன்னையின் அம்சங்கள் அதில் சொல்லப்பட்டிருப்பதைக்
காணலாம்.

3.சந்த்ரகண்டா மாதா:



கொடுமைகள் புரி
ந்த அரக்கரைவென்றிட அமரர்கள் துதிக்க மகிழ்ந்தவளே

மாயையின் ஆணையால் மாதுயில் கொண்ட மாதவனை அன்று எழுப்பியவளே

மதுகை டபவதம் செய்திடவெண்ணி மஹா மாயையாய்த் திகழ்ந்தவளே

மன்னுயிர் போற்றிட விண்ணவர் வாழ்த்திட வெற்றியைக் கொடுத்திட்ட துர்க்கையளே!


மணிபோல் விளங்கும் சந்திரவடிவை நுதலில்கொண்ட சந்திரகண்டா அன்னையளே


வில்லும் அம்பும் சூலமும் வாளும் கதையும் ஐங்கரம்கொண்ட தசக்கரளே


ஜெபமாலை
யுடன் தாமரை கமண்டலம் முக்கரம்கொண்டு அபயமும் அருளும் முக்கண்ணளே

நவநாயகியரில் மூன்றாம்நாளின்று சந்திரகண்டாமாதா தாள் பணிந்தேன்! [3]



4. கூஷ்மாண்டா தேவி:

காரிருள்சூழ்ந்த அண்டத்துள்ளிருந்து பேரருள் கொண்ட திருமகளே

அண்டத்தைப் பிளந்து பிண்டத்தை அளித்து உலகினைப் படைத்திட்டப் பரம்பொருளே


பொன்னிறமேனியில் துலங்கிடும் முகவருள் கொண்டெனைக் காக்கும் தூயவளே


அண்டசராசரம் அனைத்துக்கும்காரணி ஆகியகோள
மாம் துர்க்கையளே!

கூஷ்மாண்டா எனும் பெயரினைக் கொண்டு சிம்மத்தின் மீது அமர்பவளே


வில்லும் அம்பும் கதையும் சக்ரமும் நான்குகைகளினில் கொண்டவளே


கமலமும் மாலையும் கமண்டலமும்கொண்டு அமிர்தகலசம் கொள்ளும் அஷ்டபுஜளே


நவநாயகியரில் நான்காம்நாளின்று கூஷ்மாண்டாவின் தாள் பணிந்தேன்! [4]



5. ஸ்கந்த மாதா:

பக்திசெய்தேவர் துயர்தீர்த்திடவே பரமனைவேண்டிடச் செய்தவளே

சிவனி
ன் தீப்பொறி ஆறையும் ஆற்றினில் ஒன்றாய்ச் சேர்த்திட்ட தாயவளே

அன்புடன் அணைத்து அறுமுகனையொரு முருகனாய்க் கொண்ட உமையவளே


வீணரை வென்றிட சேயினைப்பணித்து வேலினைத்தந்திட்ட துர்க்கையளே!


ஸ்கந்தமாதாவெனச் சிம்மத்திலமர்ந்து குமரனைமடியினில் கொண்டவளே


மேல்வலக்கையினில் குமரனைக் கொண்டு மேலிடக்கையினால் அருள்பவளே


மற்றிருகைகளில் தாமலைமலரினைத் தாங்கியே அருள்தரும் சதுர்புஜளே


நவநாயகியரில் ஐந்தாம்நாளின்று ஸ்கந்தமாதாவின் தாள் பணிந்தேன்! [5]
*************************

[நவநாயகியர் உலா இன்னும் வரும்!]

ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா!

Read more...

Saturday, September 19, 2009

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 1&2

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 1&2

நவராத்ரியில் பொதுவாக நாமனைவரும் துர்கா, லக்ஷ்மி ஸரஸ்வதி எனும் முப்பெரும் தேவியரை வணங்குதல் மரபு. இவர்கள் மூவரும் முறையே சிவன், திருமால், பிரம்மா எனும் முக்கடவுளரின் சக்தியாக விளங்குவர். அருள்மிகக் கொண்ட லோகமாதா, தன் கருணையினால் இந்த தேவியரின் உள்ளிருந்து இயக்க இன்னும் மூன்று சக்திகள் பிறந்தன. இவையே நவராத்ரி நாயகியர் எனத் துதிக்கப்படும் சக்தியின் ஒன்பது அம்சங்கள்.

ஸ்ரீ மஹா துர்க்கையின் ஒன்பது அம்சங்களான இந்த நவராத்ரி நாயகியரின்
குணச்சிறப்புகளைப் போற்றித் துதிக்கும் விதமாக இந்த 'நவநாயகியர் நற்றமிழ்மாலை' என்னும் துதிப்பாடலை இங்கு அளிக்கிறேன். மங்களமான இந்த நவராத்திரி நன்நாளில் இதனைதினந்தோறும் படித்து அவளருள் பெற அனைவரையும் வேண்டுகிறேன்.

எதை எழுதுவது எனத் திகைத்திருந்த வேளையில் தனது இந்த அம்சங்களை எனக்குக் காட்டியருளிய என் தாயின் கருணையைப் போற்றி, அவள் திருக்கமலங்களில் இதனைச் சமர்ப்பிக்கின்றேன். இவற்றுள் ஒரு அம்சம் ஸ்கந்த மாதா என்பது என் மனதுக்கு இனிமையாயிருந்தது!
ஒருநாள்விட்டு ஒருநாளாய் இந்தப் பதிவுகள் வரும். அந்தந்த நாட்களுக்கு உரிய தேவியைத் துதித்து அருள்பெற அழைக்கிறேன்! முருகனருள் முன்னிற்க, யாவினும் நலம் சூழ்க!


"நவநாயகியர் நற்றமிழ்மாலை"

'காப்பு'
மங்களஞ்சேர் நவநாயகி மன்னுபுகழ் பாடிடவே
பொங்குதமிழ்ச்சொல்லெடுத்துப் புகழ்மாலை சூட்டிடவே
தங்குதடை ஏதுமின்றிப் புகழ்பரதம் எழுதிட்ட
ஐங்கரனே நின்னடியே காப்பு.

1. ஷைலபுத்ரி தேவி:

சுகுண மனோஹரி சுந்தரன் நாயகி சீவனைக் காத்திடும் தேவியளே

புவனங்கள் யாவையும் படைத்திடச் சிவனைத் தேடியே கலந்திடும் உமையவளே

மோஹனப்புன்னகை வீசிடும் முகத்தினில் மூக்குத்தி ஜொலித்திடத் திகழ்பவளே


வாவென அழைத்திடும் பக்தரைக் கண்டிடப் பாகென உருகிடும்
துர்க்கையளே!

ஹிமவான் மகளாய் மலையினில் பிறந்து ஷைலபுத்ரியென அருள்பவளே


சிவனை அடைந்திடக் கடுந்தவம்செய்து சிவமும் அசைந்திடச் செய்தவளே


மூலாதாரத்தில் உன்னிடும் பக்தரை மேலேகொண்டு செல்பவளே


நவநாயகியரில் முதல்நாளின்று
மஹாஷைலபுத்ரி தாள் பணிந்தேன்! [1]

2. ப்ரஹ்மசாரிணி மாதா:பிரமனின்மகனாம் தக்ஷனின்மகளாய்ச் சிவனை மணம்செய்து கொண்டவளே

சிவனைமதியாச் சிறுமதியோனைச் சீற்றம்பொங்கிடப் பார்த்தவளே


சொல்மதிகேளா தக்ஷனைச் சபித்துத் தீயினில் மறைந்த தூயவளே


ஹிமவான் மகளாய் மலைமடி தவழ்ந்த பேரெழில்கொண்ட
துர்க்கையளே!

பிரஹ்மசாரிணியாய்க் கடுந்தவம்புரிந்து சிவனை அசைத்திட்ட தாயவளே


ஸ்வாதிஷ்ட்டானத்தில் இருந்திடும் அடியவர் வேண்டியநல்கும் மாயவளே


தைரியம்,வீரம் அறிவினில்தெளிவு அனைத்துக்கும் நீயே காரணியே


நவநாயகியரில் இரண்டாம்நாளின்று
ப்ரஹ்மச்சாரிணியின் தாள் பணிந்தேன்! [2]

********************
[நவநாயகியர் உலா தொடரும்]

Read more...

Friday, September 18, 2009

"உன்னைப்போல் ஒருவன்" - திரை விமரிசனம் [சுடச்சுட!!]


"உன்னைப்போல் ஒருவன்" - திரை விமரிசனம் [சுடச்சுட!!]




ரஜினி படங்களுக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் போய், சும்மா ரசித்துவிட்டு மட்டும் வருவது என் வாடிக்கை.
அதே சமயம் கமல் படங்களுக்கு அதில் எதிர்நேராய்!
'இந்தப் படத்துல என்ன பண்ணி சொதப்பிடுவாரோ; தான் ஒரு ஜீனியஸ்ன்றதுக்காக எப்படியெல்லாம் கதையை மாத்திக் கெடுத்துருவாரோன்ற ஒரு பயம் எப்பவும் அடிவயித்தைக் கலக்கிகிட்டே இருக்கும்!
'வெட்னெஸ்டே'ன்ற ஹிந்திப் படத்தை வைச்சு "உன்னைப்போல் ஒருவன்" எடுக்கறாருன்னதும் எனக்கு ஜுரமே வந்திருச்சு!

தீவிரவாதத்தை ஒரு சாதாரணக் குடிமகன் எப்படி எதிர்கொள்ள முடியும் என்கிற மிக அருமையானதொரு கருத்தை இந்தப் படத்தில் சொல்லியிருப்பாங்க.
நஸுருதீன் ஷா வின் பிரமிக்க வைக்கும் நடிப்பு; அதற்குச் சவாலாக விளங்கும் போலீஸ் கமிஷனர் பாத்திரம், அந்த நிருபர், உதவிக் காவல்துறையினர் என ஒட்டுமொத்தமாக திறம்பட விறுவிறுப்பு குறையாமல் எடுக்கப்பட்ட படம் அது.

அதனால், இன்று இரவு 9 மணிக்குத் திரையிடுகிறார்கள் என்றவுடன் முதல் காட்சிக்கே ஆஜராயிட்டேன்.
இன்றும், நாளையும் வேலைநாள் என்பதால் அதிகக் கூட்டமில்லை. ஒரு 25 பேர்தான் அரங்கில்!
இதுவே 'எந்திரன்' ரிலீஸ்னா எப்டி இருக்கும் தியேட்டர் என யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்!

நேரடியாகப் படம் துவங்கியது.
அதிக மாற்றங்கள் செய்யாமல், அதிகமாகச் சொதப்பாமல் அந்த விறுவிறுப்பு சற்றும் குறையாமல் எடுத்ததற்காக முதலிலேயே கமலுக்கு ஒரு 'சபாஷ்'!

இதன் முக்கியக் காரணம் மோஹன்லால் என்னும் அற்புதமான நடிகரின் சவாலான நடிப்பு.
கடைசிக் காட்சியைத் தவிர தனது உணர்ச்சி மிகுந்த நடிப்பைக் காட்ட கமலுக்கு இதில் வாய்ப்பே இல்லை என்பதை நன்கு புரிந்த மோஹன்லால் காட்சிக்குக் காட்சி வெளுத்து வாங்கியிருக்கிறார்!
குண்டுவெடிப்பு பற்றிய தகவல் கிடைத்ததும் எடுக்கின்ற துரிதமான நடவடிக்கைகள், தலைமைச் செயலருடன் பேசும்போது காட்டும் அலட்சியம், நடக்கப்போவதைப் பற்றிய தெளிவான ஒரு அறிவு என பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்! அவருக்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
மற்ற நடிகர்களும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து அளவோடு நடித்திருக்கின்றனர்..... குறிப்பாக அந்த இரு துணைக் காவலதிகாரிகள்!

ஏற்கெனவே ஹிந்திப் படத்தைப் பார்த்தவர்களுக்கு இதில் புதிதாக ஏதுமில்லை.... மோஹன்லாலின் நடிப்பைத் தவிர.
ஆனால், இதுபோன்ற படங்களைக் கண்டிப்பாகப் பார்த்திராத தமிழக மக்களுக்கு இது ஒரு திருப்புமுனைப் படம் எனச் சொல்லலாம்.
சொல்லப்போனால், இது தமிழ் ரசிகர்களுக்கு கமல் விடுத்த மறைமுகச் சவால் எனலாம்!

'இந்தக் காலத்துல நம்ம ஆளுங்க நேரா ஒரு கதை சொன்னா எங்கே பார்க்கறாங்க?
ஒரு காதல் கதை, அதுல ரெண்டு குத்துப்பாட்டு, மூணு சண்டை, கொஞ்சம் செண்டிமெண்ட்டு, வடிவேல்/விவேக் காமெடி இதெல்லாம் இல்லைன்னா படம் ஓடாது எனச் சொல்லிவரும் திரையுலகினர் சரியா, ....இல்லை,....தமிழ் ரசிகர்களை அவர்கள் துல்லியமாக எடை போட்டிருக்கிறார்களா என்பதை நிருபிக்கும் பொறுப்பைக் கமல் தமிழ் ரசிகர்களுக்கு விடுத்திருக்கிறார் என அடித்துச் சொல்லுவேன்!

ஹிந்திப் படத்தை அப்படியே தமிழ் ஒலி கொடுத்துகூட கமல் வெளியிட்டிருக்கமுடியும்.
அப்படிச் செய்யாமல், நல்ல நடிகர்களைப் பொருத்தமாகத் தேர்வுசெய்து, காமெடி, சண்டை, பாட்டு என்றெல்லாம் சோதிக்காமல், மிகச் சிறந்த தமிழ்த் திரைப்படத்தை அவர் கொடுக்க முன்வந்ததற்காகவே இதை ஒரு வெற்றிப்படமாக்கச் செய்வது ஒவ்வொரு தமிழ் திரைப்பட ரசிகரின் கடமை என எனக்குப் படுகிறது.

குறைகள்????
இருக்கின்றன!

முதலமைச்சர் பாத்திரத்தில் கலைஞரே நடித்திருப்பதுபோலத் தோன்ற வைத்திருக்கிறார் கமல்!...... குரல் வழியாக!
ஆனால், அதுதான் படத்தின் ஒரே காமெடி ட்ராக்! தவிர்த்திருக்கலாம்!
லக்ஷ்மியின் பாத்திரப் படைப்பு சரியாக வடிவமைக்கப் படவில்லை!
ஸ்ருதியின் இசை வெட்னெஸ்டே படத்திலிருந்து துளியும் மாறவில்லை!
கமலே எழுதிப் பாடிய ஒரே ஒரு பாடல் 'டைட்டிஸ்' போடும்போதும், 'க்ரெடிட்ஸ்' போடும்போதும்! சொல்லும்படியா ஒன்றுமில்லை!
நஸுருஷீன் அளவுக்கு கமலின் நடிப்பு இல்லையென்றே எனக்குப் பட்டது.

ஆனால், இதையெல்லாம் தவிர்த்து நான் முன்சொன்ன காரணத்துக்காகவே இதை ஒரு வெற்றிப் படமாக்கினால், மேலும் தரமான திரைப்படங்கள், வழக்கமான ஃபார்முலாவிலிருந்து மாறி வரக்கூடும் என்னும் நம்பிக்கையை இந்தப்படம் விதைத்திருக்கிறது.
அதைச் செயலாக்கச் செய்வது தமிழ் ரசிகர்கள் கையில்!

தொடக்கத்தில் ரஜினியை இதில் இழுத்திருந்தேன்... காரணமாகவே தான்!
ஒரு தரமான 'ரீ-மேக்' படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை ரஜினி
கமலின் இந்தப் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளணும்! குசேலன் கொடுமை நினைவில் வந்து தொலைத்தது!

ஆக மொத்தம் 'உன்னைபோல் ஒருவன்'......

.... இதுவரையில் இல்லை!

தரமான தமிழ்ப்படங்கள் வேண்டுமென விரும்பும் எல்லாரும் அவசியம் பாருங்க மக்கா.... திரையரங்கில்!
***********************************************************

Read more...

Sunday, September 13, 2009

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" - 27 [குடிமை]


"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" - 27 [குடிமை]

'மன்னாரைக் கண்டோ' எனக் கேட்டுக்கொண்டே நாயர் கடைக்குள்
நுழைந்தேன்.
'ஆ! வரு நேரந்தன்' எனச் சொல்லி ஒரு டீயை என் பக்கம் நீட்டினார் நாயர்!
சொல்லி வைத்தாற்போல் அங்கு வந்து சேர்ந்தான் மயிலை மன்னார்!
அவன் முகத்தைப் பார்த்தவுடனேயே ஏதோ பிரச்சினை எனப் புரிந்தது!
என்ன என்பதுபோல் அவனைப் பார்த்தேன்.
ஒன்றும் சொல்லாமல், என் கையில் இருந்த டீயை வாங்கி உறிஞ்சினான்.
'இப்ப இதைக் குடிக்கறதுல உனக்கு ஏதும் ஆட்சேபணை இருக்கா சங்கர்'
என்றான்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை!
'நாம என்ன அப்படியா பழகிகிட்டிருக்கோம் மன்னார்? எதுக்கு இப்படி ஒரு
கேள்வி?' என சற்றுக் குழப்பத்துடனேயே கேட்டேன்.

'அதில்லேப்பா! இன்னிக்கு ஒரு வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கே காப்பி
கொண்டுவந்து குடுத்தாங்க! கையில குடுக்காம, பக்கத்துல வைச்சாங்க!
அப்பவே ஒருமாரியா இருந்திச்சு. குடிச்சதுக்கப்புறமா, அதும்மேல தண்ணி
தெளிச்சிட்டு உள்ளே எடுத்துகினு போனாங்க! இத்தினிக்கும் நான் போன வூடு
ஒரு ஐயர் வூடு கூட இல்லை! எனக்கு வெறுத்துப் போச்சு! வர்ற வளியுல
பாத்தா, ஒரு சாதி ஊர்வலம்! அதுல இருந்தவன் பேசினதையெல்லாம்
வேற கேட்டுத் தொலைச்சேன். அதான் டென்சனா இருக்கேன்!' என்றான்.

சட்டென எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது!
'திருவள்ளுவர் காலத்துலியும் இந்த சாதி, குலமெல்லாம் இருந்துச்சா மன்னார்?'
எனக் கேட்டேன்.
மன்னாரின் முகம் மலர்ந்தது.
ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் என்னைப் பார்த்து, 'ம்ம்.இருந்துச்சே! அவரும்
இதைப் பாடியிருக்காரே குறள்ல. சொல்றேன் எளுதிக்கோ! ஆனா, ஒரு
கண்டிசன்! நான் சொல்லி முடிக்கற வரைக்கும் நடுவுல இன்னா, ஏதுன்னு கேள்வி
கேக்கக்கூடாது. நம்ம ஐயனா இப்படில்லாம் பேசறாருன்னு வாயைப் பொளக்கக்
கூடாதுசரியா' எனப் பெரிதாக ஒரு பீடிகை போட்டான்.
'சரி, ஏதோ வில்லங்கமாத்தான் சொல்லப்போறான்' என நினைத்த நான்
ஆவலுடன் நோட்டுப்புத்தகத்தைப் பிரித்தேன்.

இனி வருவது, குறளும், அதற்கு மயிலை மன்னாரின் விளக்கமும்!

'அதிகாரம் - 96 "குடிமை"

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. [951]

நல்ல தரமான சாதியில, அதான் ஒரு ஒசந்த கொலத்துல பொறந்தவங்கிட்டதான்
இன்னார்னு பாராட்டாத பாகுபாடு இல்லாத நடுவு நிலைமையும், 'ஐயோ, இது
செஞ்சா தப்பாப் போயிறுமே'ன்ற ஒரு வெக்கமும் இருக்குமாம். தாழ்ந்த
கொலத்துல பொறந்தவன் இதுக்கெல்லாம் அஞ்சவே மாட்டானாம். இன்னா
பண்ணினாலும் தான் பண்றதுதான் சரின்ற ஒரு திமிரும், எது பண்ணினாலும்
அதுக்காவ துளிக்கூட வெக்கமே படாத கொணமும் மண்டிக் கிடக்கும்னு
ஆரம்பிச்சு வைக்கறாரு ஐயன் இந்த அதிகாரத்தை! இதுலேர்ந்து இன்னா
தெரியுது? அவர் காலத்துலியும் இந்த சாதி, கொலம்லாம் இருந்திருக்குன்னு.
இப்ப அடுத்ததைப் பார்ப்போம்!

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். [952]

மேல சொன்ன ரெண்டு கொணத்தோட இன்னொண்ணையும் சேர்த்து இதுமாரி
ஒசந்த கொலத்துல பொறந்தவங்களை இன்னும் தூக்கி வைக்கறாரு ஐயன்!
நல்லா ஒளுக்கமா இருப்பாங்களாம்; பொய்யே பேசாம உண்மையை மட்டும்
பேசுவாங்களாம்; இன்னா காரியம் செஞ்சாலும் அதுல ஒருமாரி வெக்கம்
கூடவே கலந்திருக்குமா! நல்ல காரியம் செய்யறாங்களா, இதுனால நம்மளை
அளவுக்கதிகமாப் புகள்ந்துருவாங்களோ, இல்லைன்னா இது ஒரு கெட்ட
காரியமாச்சே, இதையெல்லாம் நாம் செய்யக்கூடாதேன்னு ரெண்டுபக்கமும்
வெக்கப்பட்டுகிட்டே நல்ல பண்போட நடந்துப்பாங்களாம். ஆரு? இந்த
ஒசந்த கொலத்துல பொறந்தவங்க!

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. [953]

மூணு இப்ப நாலாவுது! ஒரு ஏளை வர்றான்னு வைச்சுக்க. அவனைப்
பார்த்தவொடனேயே இந்த மேல்சாதிக்காரன் மூஞ்சியில ஒரு சந்தோசம்
தெரியுமாம்! வந்தவனை உக்கார வைச்சு 'இன்னாப்பா எதுனாச்சும்
சாப்ட்டியான்னு அன்பா விசாரிப்பாங்களாம்! அடுத்தாபல, ஒனக்கு இன்னா
வோணும்னு கேட்டுத் தெரிஞ்சுகிட்டு, தன்னால முடிஞ்சதைக் கொடுத்து
அனுப்புவாங்களாம். 'போடா! போக்கத்த பயலே! பேமானி! பொளைக்க
வக்கில்லாதவனேன்னுல்லாம் எடுத்தெறிஞ்சு பேச மாட்டாங்களாம் இதுமாரி
ஒசந்த சாதியில பொறந்தவங்க! இன்னா அப்டிப் பாக்கறே! நான் சொல்லலை,
ஐயன் தான் இப்பிடில்லாம் சொல்றாரு. ம்ம்.. மேல போவோம்!

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். [954]

இதுமாரி மேல்சாதியில பொறந்தவங்ககிட்ட கோடி கோடியாப் பணம் குமிஞ்சு
கெடந்தாலும், தன்னோட குடிப்பெருமை கெட்டுப்போற மாரியான காரியங்கள
மறந்துபோயிக்கூட செய்ய மாட்டாங்களாம்! பணம் இருக்கேன்ற கருவம்
துளிக்கூட இல்லாம அடக்கமா இருப்பாங்களாம்.

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இலர். [955]

சரி, பணம் இருக்கற ஆளுங்க அப்பிடிப் பண்ணுவாங்கன்னா, அப்ப பணம்
இல்லாதவங்க இன்னா பண்ணுவாங்க? இதுக்கும் பதில் வைச்சிருக்காரு ஐயன்!

காலங்காலமா இதுமாரி மேல்சாதில பொறந்து வளந்து வர்ற இது மாரியான
ஆளுங்க, ஒண்ணுமே இல்லாத ஏளையாப் போனாக்கூட, அவங்ககிட்ட
துட்டே இல்லாமப் போனாக்கூட, மேல சொன்ன அந்த நாலு கொணங்களை
மட்டும் விட்டுக் கொடுக்காமக் காப்பாத்துவாங்களாம்! ஏன்னா, அவங்க பொறந்த
சாதி அதுமாரி! அந்தச் சாதியில பொறந்தவங்களுக்கு இந்த மாரி நல்ல
கொணமெல்லாம் விட்டே போவாதுன்னு ஐயன் உறுதியாச் சொல்றாரு.

சலம்பற்றிச் சார்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார். [956]

முந்தி சொன்ன அல்லாக் குறளையும் சேர்த்துவைச்சு இதுல சொல்றாரு ஐயன்!
இந்தமாரி நல்ல ஒசந்த குடியில பொறந்தவங்க தங்களோட குலப்பெருமை
இன்னா ஏதுன்னு நல்ல ஒணர்ந்து, அதை மீறித் தப்புத்தண்டாவா எந்த ஒரு
காரியமும் செய்ய மாட்டாங்களாம். அவ்ளோ நல்லவங்க இவங்கள்லாம்!

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. [957]

எதுக்காக இப்பிடி இவங்கள்லாம் நடக்கறாங்க? அப்பிடி நடக்கலைன்னா
இன்னா ஆவும்? பவுர்ணமி அன்னிக்கு வானத்துல முளு நிலா பாக்கறேல்ல?
அதுல இன்னா தெரியுது? வெள்ளைவெளேர்னு நிலா! அதுக்கு நடுவுல இங்கியும்,
அங்கியுமா கறுப்பா, திட்டுத்திட்ட சில புள்ளிங்க! நிலாவை விட அந்தப்
புள்ளிங்கதான் பளிச்சுன்னு கண்ணுக்குப் படுது இல்லியா? அதுமாரி, இந்தமாரி,
மேல்சாதிக்காரங்க எதுனாச்சும் தப்புத்தண்டாவா பண்ணினா, அதான் மொதல்ல
மத்தவங்க கண்ணுல பட்டு உறுத்தும்ன்றதை நல்லாத் தெரிஞ்சு வைச்சிருப்பாங்க
இவங்கன்னு ஐயன் சொல்றாரு.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். [958]

சரி, இதுமாரி மேல்சாதியில பொறந்த ஒருத்தங்கிட்ட அபூர்வமா இதுமாரி
கொணம் இல்லாமப் போவுதுன்னு வைச்சுக்க! ஆனா, அவனோ, தான் இன்ன
சாதிக்காரன்னு ஊருல, ஒலகத்துல தன்னைச் சொல்லிக்கறான்னா, அவன்
அந்த சாதிக்காரனே இல்லைன்னு புரிஞ்சுக்கோன்னு எச்சரிக்கை பண்றாரு!
இதுமாரி வேசம் போடறவந்தான் இந்தக் காலத்துல ரொம்பவே ஜாஸ்தி!
இவனுங்களைல்லாம் அடையாளம் கண்டுபிடிக்க இந்தக் குறளு ரொம்பவே
ஒத்தாசையா இருக்கும் நம்மளுக்கெல்லாம்!

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். [959]

இப்ப ஒரு விதையை பூமியில நடறே! அது நல்ல வளமான பூமின்னா, மொளைச்சு
வர்ற அந்தச் செடி நல்லா பூரிப்பாக் காட்டிரும். அதுவே ஒரு சொத்தை பூமின்னா, செடியும் நோஞ்சானாத்தான் இருக்கும் ரைட்டா? அதேமாரி, ஒர்த்தன் வாயிலேர்ந்து வர்ற வார்த்தைங்களை வைச்சே இவன் இன்னா கொலத்துல, சாதில பொறந்திருக்கான்னு கண்டுபுடிச்சிரலாமாம்!

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு. [960]

இவ்ளோ நேரம் இப்பிடி இந்த மேல்சாதி ஆளுங்களைப் பத்தி சொன்ன நம்ம
ஐயன் இதுல ஒரு பொடி வைச்சு அல்லாத்தியும் புட்டுப் புட்டுக் காமிச்சிடறாரு!

ஒர்த்தனுக்கு நல்லது நடக்கணும்னா, அவங்கிட்ட ஒரு அச்சம், பயம், தப்பு
பண்ணக்கூடாதேன்ற வெக்கம் இருக்கணும். அப்பத்தான் அப்பிடில்லாம் செய்யாம இருப்பான்.

அதேபோல, நீ மேல்சாதிக்காரன்னு சொல்லிக்கணுமா? நல்ல குடியில
பொறந்தவன்னு காட்டிக்கணுமா, என்னோட கொலம் ஒசந்த கொலம்னு
பெருமை பாராட்டனுமா, மொதல்ல அல்லார்கிட்டயும் பணிஞ்சு, அடக்கமா
இருக்கக் கத்துக்கோ! அதுதான் மேல்சாதி, அதுதான் நல்ல குடி, அதுதான் ஒசந்த கொலம்!

மத்தபடி, நீ பாப்பானா, செட்டியாரா, மொதலியாரா, நாடாரா, இல்லை,
தாழ்ந்த சாதியான்றதுல்லாம் இங்க மேட்டரே இல்லை! அடுத்தவன்கிட்ட எவன் பணிவா நடந்துக்கறானோ, அவந்தான் மேல்சாதிக்காரன்னு 'டமார்'னு ஒரு குண்டைப் போட்டு முடிக்கறாரு ஐயன்! இன்னா கில்லாடி பாரு இவரு' எனச் சொல்லிச் சிரித்தான் மன்னார்!

ஆரம்பத்தில் சற்று குழப்பமாக இருந்த நானும் இப்போது ஒரு தெளிவு பெற்ற
நிம்மதியுடன், மன்னாரைப் பணிவுடன் வணங்கிக் கொண்டேன்!
சிர்ப்பின்னும் மாறாமல் என் தோள்மீது கைபோட்டு 'சங்கீதா' நோக்கி என்னை
அழைத்துச் சென்றான் மயிலை மன்னார்!
***********************************************

Read more...

Thursday, September 03, 2009

"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]- 3

"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]- 3

மூன்றாம் பகுதி [இரண்டாம் பகுதி]


12345654321

ஒருவகை வடிவினில் இருவகைத்து ஆகிய

மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி

நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்

அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை


ஐந்தெழுத்து அதனில் நான்மறை உணர்த்தும்

முக்கட் சுடரினை இருவினை மருந்துக்கு

ஒரு குரு ஆயினை


ஒருவகையில் பார்த்தால் யானையெனச் சொன்னாலும்
இளயானை கிழயானை என இருவகையில் வரக்கூடியதும்,

கன்னமதம், கைமதம், வாய்மதம் என்னும்

மும்
மதநீரும் பெருகிவரும் கிழயானைக்கே!

இளயானை மதம் பிடிப்பதில்லை!

ஆனாலும் முருகா! நீயோ!
.....

நினக்குப்பின்னே நின்னண்ணன் கிழயானையாய் வந்ததனால்

கிழயானைக்கே மூத்த சகோதரன் ஆகிப்போனாய்

வாயி
னின்று தொங்கிடும் துதிக்கையை உடையவனும்

ங்கரன் எனவழங்கும் விநாயகக் கடவுளும்

அறு
கம்புல்லை ஆசையுடன் தன்தலையில் சூடிக்கொள்ளும்

கணபதிக்கு இளைய சோதரனாய் விளங்குகிறாய்


நமசிவய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் மூலமாய்

நான்கு
வேதங்களாலும் இறையென உணர்த்தப்பட்டு

சூரிய,சந்திர,அக்கினி என்னும் முச்சுடரையும் கண்களாய் உடையவரும்
நல்வினை, தீவினை இரண்டிற்கும் மருந்தாக அமைபவராம்
சிவனுக்கே ஒரு குருநாதனாய் விளங்கினாய்!


[கந்தபுராணம் சொல்லும் கதை]

வள்ளியைத்தேடித் தினைப்புனம் அலைந்து

வேடனாய் வந்து வள்ளியை அணைக்க

ஓலமிட்ட குரல்கேட்டு சோதரர் ஓடிவர

வேங்கைமரமாய் உருமாறி நின்று

அண்ணனை மதியாமல் தனியே வந்த
தவறுணர்ந்து அவரை வேண்டிட,

அனுக்கிரகம் புரிந்த அண்ணனும்

துணைக்கு வருவதாய் வாக்களித்தான்
!

நாயகியைக் காணவேண்டி விருத்தனாக வேடமிட்டு
வேண்டுகின்ற போதினிலே நீயங்கு வரவேணும்

என்றதற்குச் சம்மதித்த வேழமுகக் கடவுளும்

சுனையருகே வள்ளியினை விரட்டிடவே

மதம்கொண்ட கிழயானையாய் உருவெடுத்து வந்தான்

கிழவனுக்கும்பின்வந்த காரணத்தால் கணபதியும்

முருகனுக்கு இளையோன் ஆனான்!

ஆனாலும் முருகனென்றும் கணபதிக்கு இளையவனே!


பிரணவத்தின் பொருளறியாப் பிரமனைச் சிறையிட்டு

விடுக்கவேண்டி முறையிட்ட சிவனாரை எதிர்கொண்டு

பிரணவத்தின் பொருள்சொல்ல அப்பனையே பணியவைத்து

தகப்பன்சாமியாய்த் திகழ்ந்திட்ட சுந்தரக் குழந்தையிவன்!

[திருவெழுகூற்றிருக்கை- நமது பாணியில்!]

ஓரு
ருவாயினும் இருவகைக் களிறாய்மிளிரும்
முத்
தமிழ் முதல்வோன் முருகனுக்கிளையன்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலு
ம் கலந்துண்ணும் ங்கரன் கணபதி
அறு
முகன் தனக்கு மூத்தவன் இவனே!
நமசிவயவெனும் ந்தெழுத்ததிபன்
நான்
மறை வேதியன் முக்கண் முதல்வோன்
இரு
வினை அறுத்திடும் சிவனுக்கருளிய
ஒரு
குருநாதன் என்னவன் முருகன்!

அருஞ்சொற்பொருள்:

மும்மதன்= மூன்று வகையான மதநீரைப் பெருக்கும் யானை
நால்வாய்= தொங்குகின்ற வாய், தும்பிக்கை
அறுகு= ஒரு வகைப் புல், விநாயகனுக்கு உகந்தது
ஐந்தெழுத்து= நமசிவய என்னும் 5 எழுத்து மந்திரம்
**********************************

1234567654321

ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி

முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்

ம்புலக் கிழவன் அறுமுக னிவனென

எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை

அறுமீன் பயந்தனை ந்தரு வேந்தன்

நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்

டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை


அன்றொருநாள் சீர்காழியில்
அருமைக் குழந்தையைக் குளிப்பாட்டிக்
கரையில் இட்டபின் பெற்றவர் குளத்திலிறங்க
பசியின் கொடுமையால் சிசுவும் அலற
வானில் உலவிய அன்னையிறங்கி
சிசுவை எடுத்து இருமுலை அழுத்தி
ஞானப்பாலை அன்புடன் புகட்டி
முத்தமிழ்ச் சுவையும் உடனே புகட்டி
ஆசுகவி, மதுரகவி,சித்திரகவி, வித்தாரகவி
என்னும் நால்வகைக் கவியின் நாயகன்
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
என்னும் வகை நிலத்தின் அதிபதியாம்
ஆறுமுகன் இவனெனவே எழிலுடன் விளங்கி
சீர்காழிஎன்னும் கழுமலத்தில் சம்பந்தனாய்
நீயும் அவதரித்தாய்!

கார்த்திகைப் பெண்டிர் ஆறு தாரகைகளின்
பாலினை உண்டதால் அவர்க்கு மகனானாய்
கற்பகம் மந்தாரம் பாரிஜாதம் சந்தானம் அரிசந்தனம்
என்னும் வகை மரங்கள் திகழும் தேவலோகம்
அதற்கே அதிபதியாய் நீயும் சிறந்தாய்!
நான்மறைகள் போல ரகசியமானதும்
மூன்று சிகரங்களை முடிப்பாய்க் கொண்ட
கிரவுஞ்சமெனும் பெயர்கொண்ட
அன்றில்பறவைப் பெயர்கொண்ட மலையை
இருகூறாய்ப் பிளக்குமாறு வலிமைபொருந்திய
ஒரு வடிவேலினை நீ விடுத்தாய்!

[கந்தபுராணம் சொல்லும் கதை]

சிவனின் மூன்றாம் கண்ணினின்றுப்
புறப்பட்ட ஆறுபொறிகளை வாயுவும் தீயும்
தாங்கிடமுடியாமல் கங்கையில் விடவும்
தீப்பொறி வெப்பம் தாங்கிடவொண்ணா
கங்கையும் வறளச் சரவணப் பொய்கையில்
ஆறுகமலங்களில் அதனை விடவும்
ஆறுகுழவிகள் அதனில் மலர
கார்த்திகைப் பெண்டிர் எனவே வழங்கும்
ஆறு தாரகைகள் குழவியை எடுத்து
முலைப்பால் கொடுத்து முகிழ்நகை பருகி
மகனெனக் கொஞ்சிட மகிழ்வுடன் சிறந்தாய்!
தேவரை வதைத்த சூரனின் இளவல்
கிரவுஞ்சம் என்னும் மலையாய் மாறி
பூதப்படைகளை மாயம் செய்திட
தனிவேல் விடுத்து மலையைப் பிளந்து
தாரகன் மடியும் தீரமும் செய்தாய்!
சூரனைக் கொன்று தேவரைக் காத்து
இந்திரன் மகளை மணம் செய்ததனால்
தேவலோகத்தின் அதிபதி ஆனாய்!

[திருவெழுகூற்றிருக்கை- நமது பாணியில்]

ஒருநாள் அழுத குழவியின் பசியை
இருமுலைப் பாலால் உமையவள் தீர்க்க
முத்தமிழ்ப் பாலைப் பருகிய சிசுவும்
நாற்கவி சிறக்க ம்புலம் ஆள
ஆறுமுகன் என எழிலுடன் திகழ்ந்தாய்
ஆறுதாரகைப் பெண்டிரின் மகனாய்
வகை மரங்கள் விளங்கும் உலகாம்
தேவலோகத்தின் அதிபதி ஆனாய்
நான்குமறைகளின் ரகசியம்போல
மூன்று சிகரம் கொண்டதாம் அந்த
கிரவுஞ்சம் என்னும் தாரகமலையை
இரண்டு கூறாய்ப் பிளந்திட விடுத்த
தனியொரு வேலைத் தான் விடுத்தவனே!

அருஞ்சொற்பொருள்:

விரகன்= வல்லவன்
கிழவன்= உரிமையாளன்
கழுமலம்= சீர்காழிக்கு இன்னொரு பெயர்
அறுமீன்= ஆறு தாரகைகளான கார்த்திகைப் பெண்டிர்
ஐம் தரு= தேவலோகத்தில் காணப்படும் ஐந்து வகை மரங்கள்
செஞ்சூட்டு= சிவந்த கொண்டைகள், சிகரங்கள்
அன்றிலங் கிரி= அன்றில் பறவையின் பெயர் கொண்ட கிரவுஞ்ச மலை
*****************************************

காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த

ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற

ஏரகத்து இறைவன் என இருந்தனையே.

[திருவெழுகூற்றிருக்கை -முடிப்பு]

வளமை பொங்கிடும் காவிரி நதியின்
வடகரை அதனில் திகழ்ந்திடும் குருமலை
என்னும் பெயர்கொண்ட சுவாமிமலையினில்
சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தை
ஓதிடும் அடியவர் உன் பாதங்கள் போற்றிட
திருவேரகத்தின் இறைவன் எனநீ அருள்கின்றாயே!

அருஞ்சொற்பொருள்:

குருகிரி= அப்பனுக்குப் பாடம் சொன்னதால் குருமலை என வழங்கப்படும்
சுவாமிமலை
ஆறெழுத்து= சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரம்
ஏரகம்= சுவாமிமலைக்கு இன்னொரு பெயர்
******************************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
--------------------------------

Read more...

Wednesday, September 02, 2009

"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை][2]

"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]

[இரண்டாம் பகுதி] முதல் பகுதி1212321

ஓர் உருவாகிய தாரகப் பிரமத்து
ஒருவகைத் தோற்றத்து இரு மரபு எய்தி

ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை

இரு பிறப்பாளரின் ஒருவன் ஆயினை


அனைத்துக்கும் முதலான ஒருபொருள்
ஓமெனச் சொல்லும் பிரணவம் ஆகும்

ஐந்துமுகம் கொண்டதோர் சிவனாருடன்

இன்னொரு முகமாய்ப் பிரணவமும் சேர்ந்து

ஆறுமுகம் ஆனதோர் ஒருவகைத் தோற்றத்தில்

சக்தியும் சிவனுமென
இருவகைக் குணங்களும்
இணைந்ததோர் பிறப்பாய் விளைந்திடவேண்டி

அவையிரண்டும் ஒன்றினில் ஒன்றாகி

சக்தி சிவனெனும் இருவரிடமும் தோன்றி

மூன்றாவதான
ஒன்றாக உருவாகி
என்றும்
மூப்பே இலாத இளமையொடு விளங்குகிறாய்!

அந்தணர்க்கோர் வழக்கம் உண்டு

பிரணவப் பொருளை ஓதிடும் பழக்கம்

புரிநூல் அணிந்திடும் நிகழ்ச்சியில் தொடங்கும்
எனவே இவர்க்கு இருபிறப்பெனச் சொல்வார்!
நூலுக்கு முன்னால், நூலுக்குப் பின்னால்

அப்படி வழங்கும் ஓர் அந்தணர் குலத்தில்

ஒப்பிலா
ஒருவனாய் வந்துதித்த சம்பந்தன்!

[கந்தபுராணம் சொல்லும் கதை!]

தவத்தினில் இருந்த சிவனை எழுப்பி

சத்தியும் சிவனுமாய்ச் சேர்ந்தவோர்

திரு உருவினைக்கொண்டு

சூரனை அழித்திடும் திருச்செயல் நடக்கவேண்டி

மாரனை அனுப்பித் தவத்தைக் கலைக்க

நெற்றிக்கண்ணொளி நெருப்பினில் எரிந்து

மாரனும் சாம்பராகி மடிந்து வீழ்ந்திட

தவநிலை கலைந்த சிவனது அருளால்

அமரர் துயரம் தீர்த்திட வேண்டி

தேவியை நோக்கிய சிவனாரின் கருணை

சத்தியின் சக்தியும் சேர்ந்தவோர் அம்சமாய்

நெற்றிக்கண்ணினின்று பிறந்ததே கந்தனின் உருவாம்!


இருபிறப்பென்னும் வழக்கம் கொண்ட

அந்தணர் குலத்தில் ஒப்பற்ற ஒருவனாய்

திருஞான சம்பந்தராய் நீ அவதாரம் செய்தாய்!


[திருவெழுக்கூற்றிருக்கை! நமது பாணியில்!]
ஒரு
வனாய்ப் பிறந்தவன் இருவரின் அம்சமாய்

ஒரு
பொருள் சேர்த்து இருநிலை கலந்து

மூன்றாம்
பொருளாய் மூப்பின்றி விளங்கினான்!

இரு
பிறப்பென்னும் அந்தணகுலத்தில்

ஒப்பிலா ஒருவனாய் சம்பந்தன் ஆனாய்
!

அருஞ்சொற்பொருள்:
தாரகப் பிரமம்= முழுமுதற் பொருளான பிரணவம்

இரு மரபு= சக்தி, சிவம் என்னும் இரு அம்சங்கள்

மூவா= மூப்பே இல்லாத, மூன்றாவதான

**********************************************

1234321

ஓராச் செய்கையின் இருமையின் முன்னாள்
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து

மூவரும் போந்து இருதாள் வேண்ட

ஒருசிறை விடுத்தனை


தகைமைக்குத் தகுதியற்ற ஓர்செயலைக்
கருவமுடன்
செய்ததனால் முன்னொருநாள்

பிரமனின் தலைக்குடுமி இமைப்பொழுதில்
கலைந்துபோகுமாறு
அவன் தலையினில்
குட்டிச் சிறையினில் தள்ளிட
அரியும் அரனும் இந்திரனும் மூவராய்
முன்வந்து
நின்னிடம் அயனைச் சிறைவிடுக்க

இரு
தாளிணைவேண்டிநிற்க அருள்மிகக் கொண்டு

அவனை ஒருசிறை விடுத்தனை


[கந்தபுராணக் கதை]

சிவனைக் காணவந்த பிரமனும் ஓர்நாள்

செருக்கு மிகக்கொண்டு சிறுபயல் என்றெண்ணி

வணக்கம் சொல்லாமல் குமரனைக் கடந்திட

அதட்டியழைத்து முன்னே நிறுத்தி
படைத்தொழில் செய்திடும் கருவமோ நினக்கு

பிரணவத்தின் ஒலியினின்றே அனைத்தும் பிறப்பதால்

ஓமென்னும் ஒருசொல்லின் பொருளுரைத்துச்
செல்கவென
முருகனும் அயனைக் கேட்டிட
பொருளறியாது விழித்தனன் பிரமனும் ஆங்கே

சினம்மிகக்கொண்டு காலாலுதைத்து

தலைமுடி கலைந்திடத் தலையினில் குட்டி

செய்தொழில் பெருமை அறியாது செய்திடும்

நின்னிடம் இனிமேல் சிறையினில் என்றே

அயனைச் சிறையினுள் எட்டித் தள்ளினான்

அழகன் முருகன்!


சேதிகேட்டுப் பதைபதைத்துத்

திருமாலும் சிவனாரும் இந்திரனும்
மூவருமாய்
அழகனிவன் எதிர்வந்து
அயனைச்
சிறைவிடுக்க வேண்டுமெனக் கேட்டிடவே
பிரணவத்தின் பொருளறியா மூடனிவன்

நீர் பொருள் சொல்லிச் சிறைவிடுப்பீர்

எனக்கேட்ட முருகனிடம் கைபொத்திச்
சிரம்தாழ்த்தி
சிவனாரும் பணிந்துநிற்க
அப்பனுக்கே பாடம் சொன்ன
சுப்பனாகி
அருள்புரிந்து அயனைச் சிறை விடுத்தான்

அழகன் முருகன்!


[திருவெழுக்கூற்றிருக்கை- நமது பாணியில்!]

தகுதியிலாதோர் ஆணவத்தால் ஓம் என்னும் ஈரெழுத்தை

முத்
தமிழில் விளக்காத நான்முகனின் தலையில்குட்ட

அரனரி யிந்திரன் மூவரும் முருகனின்
இருதாள்பணிய
அயனை அன்று ஒருசிறை விடுத்தனை!


அருஞ்சொற்பொருள்:

ஓரா= [இரு பொருள்] ஒன்று, தெரியாமல்

இருமை= [இரு பொருள்] இரண்டு, கர்வம்

நான்முகன்= பிரமன்

இமைப்பினில்= ஒரு நொடியில், கண்ணிமைக்கும் நேரத்தில்

மூவர்= அரி, அரன், இந்திரன்
*****************************************

123454321

ஒருநொடி அதனில் இருசிறை மயிலின்
முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீவலம் செய்தனை

நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி

ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை


ஒருநொடிப்பொழுதில் இருசிறகினை விரிக்கும்
மயில்மீதேறி
முப்பக்கமும் கடல்சூழ்ந்த
முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல் என்னும்

நானிலமே அஞ்சிநடுங்கி ஐந்தாம்வகையாம்
பாலையென வறளும் வேகத்துடன்

இப்பூவுலகை நீ வலமாக வந்தாய்


பெருமைக்குரிய நால்வகைத் தந்தங்களுடையதும்
மூ
வகையான மதம் பிடிக்கவல்லதும்
பனையோலைபோலும் பரந்த
இரு செவிகளையுடையதும்
நீண்டுதொங்கும் அழகிய
தொரு துதிக்கையையுடையதுமான வெள்ளிமலைபோலும் ஐராவதம் எனும்
யானையையுடைய
இந்திரனின் மகளாம் தேவயானையை
முறைப்படி மணம் செய்து கொண்டவன் நீ!


[கந்தபுராணம் சொல்லும் கதை]

கைலாயத்தில் அன்றொரு காட்சி
!
சிவனும் உமையும் அமர்ந்திருக்க
கணபதி முருகன் உடன் விளையாட

நானிலத்திற்கோர் உண்மை புகட்டிட

நாரதர் கொணர்ந்தார் நல்லதோர் மாம்பழம்!

அதனைப் பற்றிடச் சோதரர் இருவரும்
எனக்கே எனக்கே என மல்லுக்கு நிற்க

உலகினை எவரிங்கு முதலில் வலமாய்ச்

சுற்றிவருபவரோ அவருக்கே மாங்கனி
என்றிட
மயிலினை அழைத்து அதன்மீதேறி
பெருத்த சிறகினை விரித்திடும் மயிலினில்

மூன்று பரப்பினில் சுற்றிடும் கடலைக்

கொண்டிடும் பூமியை வலம்வரச் செய்திட

முருகன் பறந்தான் இமைப்பொழுதினிலே!


அருகினில் நின்ற பருத்த கணபதியும்
'அம்மையப்பனும் உலகும் ஒன்றலவோ' என

நாரதமுனியை நவின்று கேட்டிட

'ஓம்'என நாரதர் இருகைகூப்ப

அம்மையப்பனை அழகாய் வலம்செய்து

அன்னையின் கையினில் இருந்த மாங்கனியை

தொந்திக்கணபதி தான்பறித்துண்டான்!


விரைவாய் வலம்வந்து கனியைத் தட்டலாம்

எனவே வந்த குமரக்கடவுளும்
இந்நிலைகண்டு
கோபம் கொண்டு
அனைத்தையும் துறந்து
ஆண்டியாகிப்போனான்!


அனைத்தையும் துறந்து ஆண்டியானாலும்

பின்னவன் செய்திட்ட வீரச்செயலினால்

சூரனும் அழியத் தேவர்கள் மகிழ
பட்டத்து யானையாம் ஐராவதமென்னும்

வெள்ளையானை வளர்த்த பூமகள்

தேவயானை என்னும் குலமகள்

கந்தனுக்கென்றே பிறந்த நன்மகள்
கைத்தலம் பற்றிக் கந்தனும் அருளினான்!


[திருவெழுகூற்றிருக்கை- நமது பாணியில்!]

ஒரு
நொடிப்பொழுதில் சிறகிரண்டுவிரித்து

மூன்று
புறங்களில் கடலால் சூழ்ந்த

நானி
லம் அஞ்சிஉலகும் வறள

மாங்கனிவேண்டி நீ வலம் வந்தனை.

நாலு
தந்தமும் மூவகை மதமும்

முறங்கள்போலும் இருசெவியழகும்

நீண்டுவளர்ந்ததோர் தும்பிக்கையும்

ஒருங்கே அமைந்த வெள்ளையானையைத்

தனக்கெனக்கொண்ட இந்திரன் மகளாம்

தேவயானையை நீ திருமணம் செய்தனை
!

அருஞ்சொற்பொருள்:

சிறை- சிறகு, இறக்கை
முந்நீர்= மூன்று புறமும் சூழ்ந்த கடல்

நானிலம்= குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல் என்னும் நிலம்

மருப்பு= தந்தம்

பொருப்பன்= இந்திரன்

*****************************


அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
--------------------------------
[இதன் அடுத்த பகுதி இன்னும் சில மணி நேரங்களில்!]

Read more...

Tuesday, September 01, 2009

"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]-1


"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]-1



[முதல் பகுதி]
நண்பர் ரவி கேட்டுக்கொண்டதற்கிணங்க, திருவெழு கூற்றிருக்கை வகையில்
அமைந்துள்ள இந்தத் திருப்புகழை எனக்குத் தெரிந்த அளவில் விளக்க
முயன்றிருக்கிறேன்.

1 முதல் 7 வரை படிப்படியாகக் கீழிருந்து மேல், பின்பு மேலிருந்து கீழ் என
அடுக்கடுக்காக ஒரு தேர்த்தட்டு போல மேலே செல்வதும், கீழே செல்வதுமாக
அமைந்த இந்தப் பாடல் சுவாமிமலை குருநாதனைப் போற்றிப் பாடும்
அற்புதப் பாடல்.

ஒவ்வொரு எண் அதிகமாகும் போதும், மீண்டும் கீழிறங்கி, மேலேவந்து
அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும்.

1, 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321

என 7 வரை சென்றதும் இது ஒரு தேரின் மேலடுக்கு போல் ஆகிறது.

அதன்பின், இறைவனை அமரச் செய்ய ஒரு இடைத் தட்டு, பீடம்!

பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ்
அடுக்காக அமைத்து, இறுதியில் தொடங்கிய அதே 1 என்னும் எண்ணிலேயே
முடிவடையும் வகைக்கு திரு எழு கூற்று இருக்கை எனப் பெயர்.
சம்பந்தரும் இன்ன பிறரும் இவ்வகையைத் தொட்டிருக்கிறார்கள்.

இப்போது பாடலைப் பார்ப்போம்!


*********** பாடல் ***********

ஓருரு வாகிய தாரகப் பிரமத்

தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி

ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை


இருபிறப் பாளரி னொருவ னாயினை

ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்


நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து

மூவரும் போந்து இருதாள் வேண்ட

ஒருசிறை விடுத்தனை


ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்

முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை


நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி

ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை


ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய

மும்மதன் தனக்கு மூத்தோ னாகி

நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்

அறுகு சூடிக் கிளையோ னாயினை


ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து

முக்கட் சுடரினை இருவினை மருந்துக்

கொருகுரு வாயினை


ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி

முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்

ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென

எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை


அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்

நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்

டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை


காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த

ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற

ஏரகத் திறைவ னென இருந்தனையே.

**************

*********** பொருள் ***********

இப்பாடலில் எண்களை வைத்து விளையாட அருணையார் முடிவெடுத்திருக்கிறார்.
அதற்காக அப்படியே விட்டு விடுவாரா?!!
சொற்களில் எண்களை வைத்தவர், கருத்தினில் கந்த புராணத்தையே
சொல்லியிருக்கிறார்.
இறையருள் கைவந்த ஒருவரால் மட்டுமே இது இயலும் என்பதற்கு
இப்பாடல் ஒரு உதாரணம்.
பாடலின் பொருள் புரியவரும்போது, நமக்கும் இது புரியும்!

முதலில் இதைப் பதம் பிரித்துப் பார்ப்போம்!

ஓர் உருவாகிய தாரகப் பிரமத்து

ஒருவகைத் தோற்றத்து இரு மரபு எய்தி

ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை


இரு பிறப்பாளரின் ஒருவன் ஆயினை

ஓராச் செய்கையின் இருமையின் முன்னாள்


நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து

மூவரும் போந்து இருதாள் வேண்ட

ஒருசிறை விடுத்தனை


ஒருநொடி அதனில் இருசிறை மயிலின்

முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீவலம் செய்தனை


நால்வகை மருப்பின் மும்மதத்து இருசெவி

ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை


ஒருவகை வடிவினில் இருவகைத்து ஆகிய

மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி

நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்

அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை

ஐந்தெழுத்து அதனில் நான்மறை உணர்த்தும்

முக்கட் சுடரினை இருவினை மருந்துக்கு

ஒரு குரு ஆயினை


ஒருநாள் உமையிரு முலைப்பால் அருந்தி

முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்

ஐம்புலக் கிழவன் அறுமுகன் இவன் என

எழில்தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை


அறுமீன் பயந்தனை ஐம்தரு வேந்தன்

நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்டு

அன்றில் அம் கிரி இருபிளவாக ஒருவேல் விடுத்தனை


காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த

ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற

ஏரகத்து இறைவன் என இருந்தனையே.
--------------------------------

இப்பவே கொஞ்சம் புரிஞ்சிருக்குமே!

இருந்தாலும், அவர் சொன்ன கந்தபுராணக் கதையை நான் சொல்வதற்காக,
இதன் பொருளைப் பார்ப்போம்.
எண்களை வைத்து இப்பாடல் அமைந்திருப்பதனால், வழக்கம்போல்
பின் பார்த்து முன் பார்க்காமல் அப்படியே பொருள் காணலாம்.
அருஞ்சொற்பொருளையும் ஒவ்வொரு பத்திக்கும் அடியில் இட்டிருக்கிறேன்,
பாடல் விளங்குவதற்காக!
சற்று விரிவாகவும், ஒரு மாறுபட்ட வடிவமைப்பிலும் இப்பாடலின் பொருளை
விளக்க எண்ணியிருப்பதால், இது ஒரு சில பதிவுகளாகத் தினமும் வரும்.

பாடலின் பொருள், கந்தபுராணம் சொல்லும் கதை, மற்றும் திருவெழுக் கூற்றிருக்கையை எனது பாணியிலும் சொல்லியிருப்பதால் இந்த முறை!
பொறுத்தருள்க!
[அடுத்த பதிவு நாளை வரும்!]
**********************************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
--------------------------------

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP