Monday, December 18, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [5]

"பரிசேலோர் எம்பாவாய்" [5]

மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 5

தோழியர்: திருமாலும், பிரமனும் காணாமல் தவித்த மாமலையினை
நாமெல்லாம் நன்கறிவோம் எனப் பொய்யாகப் பிதற்றும்,
பாலும், தேனும் குழைத்தது போலும் இனிய சொல் பேசிடும்
ஏமாற்றுக்காரியே! கதவைத் திறந்திடுவாய்!


இவ்வுலகும், விண்ணுலகும்,பிறவேறு உலகங்களும், அறிவதற்கும்
அரிதான சிவனாரின் திருக்கோலத்தையும், நம்மையெல்லாம்
ஆட்கொண்டு குற்றங்களை அழித்திடும் பெருமையினையும், பாடி
"சிவனே சிவனே" என்று இங்கு நாங்கள் ஓலமிட்டுக் கதறுவதைக்
கேட்ட போதிலும், உணர்வொன்றும் நெகிழாமல், உணர்ச்சியற்று
இருப்பது எப்படியோ? மணம் நிறை கூந்தலுடையாளே !
இதுவோ உன் தன்மை? சொல்லடி என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:

பொக்கம் - பொய்; படிறீ - ஏமாற்றுக்காரி; ஞாலம் - உலகம்;
ஏலக்குழலி - மணம் சேர் கூந்தலை உடையவள்.

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP