Monday, February 09, 2009

"உந்தீ பற!” - 15

"உந்தீ பற!” - 15

"பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

மனவுரு மாயமெய்ம் மன்னுமா யோகி
தனக்கோர் செயலிலை யுந்தீபற
தன்னியல் சார்ந்தன னுந்தீபற. [15]


மன உரு மாயம் மெய்ம்மன்னுமா[ம்] யோகி
தனக்கோர் செயல் இலை உந்தீபற
தன் இயல் சார்ந்தனன் உந்தீ பற.



மனமெனும் ஒன்று மாயங்கள் செய்து
பலவுருக் கொண்டு பாதகம் செய்யும்

பலவித உருவினைப் பலப்பலநேரம்
தனதெனச் சொல்லி ஆட்டியே வைக்கும்

மனமிது மாயா உருவென அறியும்
யோகியர் இதனின் வலையினில் விழாது

தனக்கென ஏதும் செயலிலை என்றே
தன்னியல்பு அறிந்து மகிழ்வுடன் இருப்பர்.


மனத்தை அழிக்கும் உபாயம் எதுவெனத் தெரிவதே ஒரு உண்மையான சாதகனின் தேடல்!

ஆசனம், பிராணாயாமம் என்னும் பல வகைகளின் மூலம் மட்டுமே ஒருவர் யோகி ஆவதில்லை!

இருவிதச் செயல்பாடுள்ள மனத்தின் செயலை அறிந்து, அதனை ஒடுக்கவும், அழிக்கவும் தெரிய இவற்றின் உதவியைச் சரியாகப் புரிந்து ‘உண்மைப் பொருளை’உணர்ந்தவரே, அப்படி நிகழ்த்தியவரே ‘யோகி’ என ஆகிறார்.

இவருக்கு ‘நான்’ யார்? என்பது புரிந்து, ஆனந்தம் வெளியில் இருக்கும் பொருள்களினால் வருவதில்லை; அது தனக்குள்ளேயே இருக்கிறது என்பது புரிவதால், எப்போதும் இயல்பான மகிழ்ச்சியுடனே இருக்கத் துவங்குகிறார்.

‘இது வேண்டும்!’, ’அது வேண்டும்!’ என விரும்பி அதற்காகச் செயல்கள், முயற்சிகள் செய்யாமல், ’நானே ஆனந்தம்’ என்னும் உணர்வில், எப்போதுமே ஆனந்தத்தில் திளைக்கிறார். பெறவேண்டியதென இனி ஒன்றும் இல்லை என்றபின், இனி அவர்க்கு என்ன தேவை? இனி செய்ய வேண்டியதெனவும் இவருக்கு ஒன்றும் இல்லை. இதைச் செய்; அதைச் செய் என எவராலும் நிர்பந்திக்கவும் முடியாத மகிழ்வில் எப்போதும் இருக்கிறார்.

அதற்காக இவர் செயல் என எதுவுமே செய்வதில்லையா? என ஒரு கேள்வி நமக்கு எழலாம்.

செய்வார்!

ஆனால், இவரது செயல்பாடுகள் எதையேனும் சாதிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தால் அல்லாமல், உள்ளிருக்கும் ஆனந்தத்தின் வெளிப்பாட்டால், தன்னலமற்ற, ஆணவம் இல்லாத உலக நன்மைக்கான செயல்கள் இவரிலிருந்து பெருக்கெடுத்து இயல்பாகவே ஓடத் துவங்கும்!

இதையே இந்தப் பாடல் விளக்குகிறது.
*******************
[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP