Sunday, January 30, 2011

"கந்தர் அநுபூதி" -- 3 [இரண்டாம் பகுதி]

"கந்தர் அநுபூதி" -- 3 [இரண்டாம் பகுதி]

[தயவுசெய்து, முதல் பகுதியைப் படித்துவிட்டு, இதனைப் படிக்கவும்!]

"மேல சொல்றதுக்கு முந்தி இதுல சொல்லாம சொல்லி க்கீற ஒரு சூட்சுமத்தப் புரிஞ்சுக்கோ!

இந்த அல்லாத்தியும் தொலைக்கறது; என்னைத் தொலைக்கறதுன்றதுல்லாம் சாமானியமா ஒர்த்தரால தானா செய்யுற சமாச்சாரம் இல்லன்னு பூடகமா சொல்லி வைக்கறாரு அருணையாரு! அதுக்குல்லாம் ஒரு நல்ல குரு வரணும்! அவுரு வந்துதான் இத்த எப்பிடித் தொலைக்கறதுன்னு சொல்லித் தருவாரு!
இவுருக்கு அப்பிடிக் கெடைச்ச குருதான் முருகன்! அதான் இப்ப அடுத்த ரெண்டு வரியுல சொல்லிக்காட்றாரு' என்றான் மன்னார்.

'அப்போ அந்த முதல் இரண்டு வரிகளும் சும்மா முருகன் புகழைப் பாடறதுதானே' என்றேன் நான்!
இரக்கத்துடன் என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!

'அதெல்லாம் நீ பண்றது! சும்மானாச்சும் வார்த்தையப் போட்டு ரொப்பறதுல்லாம் நீதான் செய்வே!
ஆனா, அருணையாரு அப்பிடியாப்பட்ட ஆளு இல்ல! நீ கொளந்தை கொளந்தைன்னு கொஞ்சுவியே ஒர்த்தரை... அவுரு அடிக்கடி சொல்லுவாருன்னு நீதானே சொல்லிருக்கே முந்தி! பெரியவங்க சொல்ற
ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பெரிய அர்த்தம் இருக்கும்! பொளுது போவாம ஒன்னியமாரி எளுதறவங்க இல்ல அவங்கல்லாம்! அதுக்காவ ஒன்னியக் குத்தம் சொல்றேன்னு மூஞ்சியத் தூக்கிக்காத!
பக்தியோட நீ எளுதறதுலியும் தப்பே இல்ல! ஆனா, இங்க, அருணையாரு சும்மா மணி மணியா வார்த்தைங்களைப் பொறுக்கிப் போட்டுருக்காரு!
ஒண்ணொண்ணாப் பாக்கலாம்!'

உல்லாச நிராகுல யோக இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ!
'உல்லாச'ன்னா எப்பவுமே மாறாம ஒரே நெலையா நிக்கறவன்னு அர்த்தம்! எதுன்னாலும் கலங்காம ஒரே 'ஷ்டெடி'யா நிக்கறவன்!
இங்க நடக்கற எத்த வோணும்னாலும் அவனால மாத்த முடியும்! ஆனா, அவன் மட்டும் மாறாம அல்லாத்தியும் பார்த்து ஒரு கொளந்தை மாரி சிரிச்சுக்கினே இருப்பான்! அவந்தான் உல்லாசன்!

'நிராகுலன்'னா ஒரு கஸ்டமும் இல்லாதவன்னு பொருளு! தும்பமே இல்லாதவனுக்கு நிராகுலன்னு பேரு!
ஆருக்கு து[ன்]ம்பமே வராது? ஞானம் இருக்கறவனுக்கு! அறிவு இருந்தாலும் அத்த 'யூஸ்' பண்ணாம, இல்லாக்காட்டிக்கு அறிவே இல்லாம காரியத்த செய்யறவனுக்கு, எப்பவுமே கஸ்டந்தான் வந்து சேரும்!
அறிவே வடிவமா க்கீறவனுக்கு கஸ்டம் வரும்...
ஆனாக்க, அதுக்காவ அவன் அள மாட்டான்! அவந்தான் நிராகுலன்!
'யோக'ன்னா, யோக வடிவா க்கீறவன்னு சொல்லலாம். ஞானம் வந்தப்பறம், யோகமும் கூடவே வந்திருச்சுன்னா, அதுவே பெரிய சந்தோஷமா மாறிடும்! அப்பிடியாப்பட்டவன் நம்மாளு!

இந்த மூணையும் இன்னோரு வகையாக்கூடச் சொல்லலாமாம்! உல்லாசம்னா 'சத்து'.
நிராகுலன்னா அறிவு... 'சித்து',

யோகம்னா 'ஆனந்தம்'.
ஆகக்கூடி, இந்த மூணையும் சேர்த்தா சத்துசித்து ஆனந்தம்.. சச்சிதானந்தம்! அப்பிடிச் செல்லமாக் கூப்புடறாரு அருணகிரியாரு!

இப்ப, அடுத்த மூணையும் பாப்பமா?
'இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ'னு கொஞ்சுறாரு!
'இதம்'னா நெனைப்பு.... நெனைக்கறது.
'சல்லாபம்'னா பேசறது
'விநோதம்'னா செய்யறது.
சச்சிதானந்தமா க்கீற கந்தன் இப்ப இவரை, நெனைக்க, பேச, செய்ய வைக்கணும்னு முடிவு பண்ணனுமாம்!
இவுரையும் சச்சிதானந்தமா மாத்தணுமாம்!

அதுக்குத்தான் ஒரு கொளந்தையக் கொஞ்சறமாரி, 'நீ இப்பிடியாப்பட்ட செல்லக் கொளந்தைதானே!
எனக்குச் சொல்லுவியாம்'னு முருகன்கிட்ட ஒரு கிளிமாரி கொஞ்சறாரு அருணகிரிநாதரு.
அதான் அந்த 'நீ அலையோ!'
'அலையோ'ன்னா இல்லையோன்னு அர்த்தம்!
இப்ப, இந்த ஆறுக்கும் இன்னொரு விதமாச் சொல்றேன் கேளு' என மன்னார் சொன்னதும், கண்களை மூடிக்கொண்டு, கைகளைக் கூப்பியபடி, சாஸ்திரிகள் நிமிர்ந்து உட்கார்ந்தார்!

எப்பவும் மாறாத உல்லாசந்தான் திருப்பரங்குன்றம்!
தும்பமே இல்லாம ஞானமயமா கீறதுதான் திருச்செந்தூரு!
யோகமா எப்பவும் ஆனந்தமா க்கீறது பள[ழ]னிமலை!
இதமா நெனைப்பைக் குடுக்கறது சாமிமலை!
இங்கியும் அங்கியுமா குதிச்சு குதிச்சுப் பேசற இதந்தான் திருத்தணி.. குன்றுதோறாடல்னும் இத்தச் சொல்லுவாங்க!
விநோதமாத் தெரியறது பள[ழ]முதிர்சோலை!
இந்த ஆறையும் இதுக்குள்ள காட்றாரு அருணைகிரி!' எனச் சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்!

மூடிய கண்களைத் திறக்காமலேயே, சாஸ்திரிகள் பேசத் தொடங்கினார்... திடீரென!
'அற்புதமா இதுவரைக்கும் சொன்னே மன்னார்! நீ சொன்னதுந்தான் இந்த ஆறுக்கும் இன்னொரு வியாக்யானம் இருக்குன்னு எனக்குப் பட்டுது!

திருப்பரங்குன்றம்தான் மூலாதாரம். ஸ்திரமா நிக்கறது!.. உல்லாஸம்!
திருச்செந்தூர்தான் ஸ்வாதிஷ்டானம்!.. ஞானமயமானது!.... நிராகுலம்!
பழநிமலை யோகத்தால எப்பவும் ஆனந்தமா இருக்கறதால.. அது மணிபூரகம்!
இதம்னு சொன்ன ஸ்வாமிமலைதான் அநாகதம்!
ஸல்லாபம்னு சொன்னியே அதான் விசுத்தி! திருத்தணி
விநோதம்..ஆக்ஞா சக்ரம்! அது பழமுதிர்சோலை!

இப்பிடி யோக ஸாஸ்த்ரத்துல சொல்லியிருக்கற ஆறு சக்ரத்தையுந்தான் இந்த ஆறும் காட்றதுன்னு நெனைக்கறேன்!' என்றபடியே கண்களைத் திறந்தார்!

'ஐயரு சொல்றதும் சர்யாத்தான் க்கீது' எனச் சிரித்தான் மயிலை மன்னார்!

இப்ப வெளங்குதா?... நான் ஏன் இந்தப் பாட்டு அவ்ளோ முக்கியம்னு சொன்னேன்னு? இப்ப அடுத்தாப்புல வர்ற ரெண்டு பாட்டும் இத்த ஒட்டியே வரும்! இந்த 3.4.5 மூணும் ஒரு செட்டுன்னு நெனைப்புல வைச்சுக்க'
எனச் சொல்லிவிட்டு, கொஞ்சம் எழுந்து சோம்பல் முறித்தான் மன்னார்!

தனது செல்ஃபோன் மூலம் டீ, வடைக்கு சொல்லிக்கொண்டிருந்தான் நாயர்!
**************
[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP