Tuesday, June 30, 2009

"கொடுத்திடும் குருவே! நின் தாள் சரணம்!"

"கொடுத்திடும் குருவே! நின் தாள் சரணம்!"

இறையெது எங்கென அனுதினம் தேடி
மறைமுதல் நூல்களில் நாளும் நினைந்து
நரைதிரை வரும்வரை நாட்களைக் கழித்து
அரைகுறை அறிவினால் பலவும் பிதற்றி
நிறைமதி உண்டென ஆணவம் பிடித்து
குறைவிலா இறையவர் சொற்களைக் கேட்டும்
முறையிலா வாழ்வினில் காலம் நடத்தி
வரையிலா இன்பம் பொழுதெலாம் கொண்டு
திரிந்திடும் மனத்தை சீர்செய்யாமல்
புரிந்திடும் அவலம் தினமும் தொடர
இறையென தெதிரில் நேரில் வந்தும்
அறியாதிருக்கும் நிலைமையில் உழலும்
புரியாச் சிறுவன் எனைநீ தடுத்து
'படித்தது போதும்! பயிற்சியில் தொடர்வாய்'
எனவுரை சொல்லி அன்புடன் காத்த
இறையவா நின் தாள் பணிந்தேன் அருள்வாய்!


இறையவன் உண்டு! கண்டவர் சொன்னார்!
மறைநூல் பொருளின் சாரம் இதுவே!
நம்பிடும் நல்லவர் சொல்லிய சொல்லால்
நானும் நம்பினேன் நீவரு வாயென!
இன்றையப் பொழுதின் செயல்கள் யாவிலும்
நின்னருள் ஓங்கி நித்தமும் துலங்க
இறையவா! நீயே என்னுடன் இருக்கும்
ஒருவரம் கேட்பேன்! உடனே அருள்வாய்!

இறையருள் காட்டும் இன்வழி தன்னில்
நிறைமனதுடனே நாளும் நடக்க
குறைவிலா இன்பம் கூடவே நடக்கும்!
தன்செயல் ஒன்றின் தகைமையை விடுத்து
நின்செயல் ஒன்றே நிச்சயம் என்று
என்செயல் மறந்து புன்செயல் களைந்து
நின்னுடன் நடக்கும் ஒருவரம் தருவாய்!

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை இங்கே யான் செய்திடினும்
அனைத்தையும் பொறுத்து அன்புடன் காத்து
வினைப்பயன் என்னைத் தொடரா வண்ணம்
மனத்துயர் என்னை நெருங்கா வண்ணம்
தினமும் காப்பாய் எந்தை இறைவா!

தடுத்தெனையாண்டு தவபலம் கூட்டி
அடுத்தடுத்தோர் அடுசெயல் செயினும்
கடுத்தெனைப் பாரா என்றன் குருவே!
விடுத்தெனை யாட்கொள விரைவில் வரணும்!
எடுத்தெனைக் குழவியாய் அருட்பால் தரணும்!
மிடுக்கினில் மதத்தினில் திளைத்திடும் என்னைத்
தடுத்தாட்கொளவே இதுவே தருணம்!
அடுத்தது போதும்! அணைத்திட நீ வா!
கொடுத்திடும் குருவே! நின் தாள் சரணம்!

இறையவர் அனைவருக்கும் என் பணிவான வணக்கம்!
****************************************************************

Read more...

Friday, June 05, 2009

"நானே நானாகி....!!"

"நானே நானாகி....!!"


நானாகி நிற்கிறேன் நான்!
எல்லாம் கடந்த
நிலையில்!
முழுமையான நான்!

முற்றும் மலர்ந்த நிலையில்!


பதியத்தில் துளிர்த்து, பருவத்தில் வளர்ந்து

உதயத்தின் ஒளியெல்லாம் உள்ளத்தில் வாங்கி

மொட்டென முளைத்து நின்றிருந்த காலமெல்லாம்

செடியொன்றே சிறப்பாக அனைவருமே பார்த்திருந்தார்!


உள்ளிருந்து ஓரொளி என்னுள் திளைத்தது

உன்னையே நீயறிவாயென என்னிடத்தில் சொல்லியது

என்னுள்ளே விளைந்திட்ட மாற்றத்தை நானுணர

மெல்லமெல்ல ஓரிதழாய் நான்விரிந்து மலரானேன்!


கதிரவன் எழுந்து காலையில் வந்தான்

அதிசய மலராய்ச் சோலையில் மலர்ந்தேன்

முழுமையி
ன் பூரணம் நானாய் நின்றேன்
எழுமின் விழிமின் எல்லாம் கடமின்!


செடியில்லை கிளையில்லை நானொன்றே அங்கே!

பிடிமானம் விடுத்தங்கே நானங்கே தனியே!

பூவென்னும் பெயர்மட்டும் எனக்கிங்கே உண்டு!

ஏதுமிலா நிலையினிலே நானிங்கே ஒளிர்வேன்!


நானாகி நிற்கிறேன் நான்!
எல்லாம் கடந்த நிலையில்!

முழுமையான நான்!

முற்றும் மலர்ந்த நிலையில்!
*********************************


Read more...

Wednesday, June 03, 2009

"நான் கடவுள்!"

"நான் கடவுள்!"

மலர்கண்டு மகிழ்கின்ற மனமிங்கு கொண்டால்
மல
ர்கின்ற மனத்துள்ளே இறையங்கே தெரியும்!

மேகங்கள் கருத்திங்கு மழைபெய்யும் போது

விழுகின்ற துளியாவும் நதியோடு கலக்கும்!

துளியங்கு இல்லாது நீரொன்றே தெரியும்

கலந்தோடும் நீரினிலே இறையங்கே புரியும்!

மழைநின்றபின்னாலே மேகங்கள் இல்லை
வலிதீர்ந்த பின்னாலே சோகங்கள் இல்லை!


வழிந்தோடும் நீர்பாய பயிரங்கு செழிக்கும்
வசந்தத்தின் வீச்சினிலே மலரிங்கு பூக்கும்!


ஒன்றோடு ஒன்றாக இணைசேர்ந்தபின்னே

உயிர்யாவும் ஒன்றென்னும் மெய்யிங்கு புரியும்!


துளியில்லை மழையில்லை மேகங்களுமில்லை

யிரில்லை உயிரில்லை இறைவெளியே எல்லாம்!

ஒருதுளியில் உயிர்நிறைத்து உள்ளின்றெழுந்து

பூக்கின்ற மலர்கண்டு மனமிங்கு மகிழும்!


மலர்கண்டு மகிழ்கின்ற மனமிங்கு கொண்டால்

மலர்கின்ற மனத்துள்ளே இறையங்கே தெரியும்!

***************************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP