Tuesday, October 10, 2006

"அ.அ. திருப்புகழ்" -- 11 "சந்ததம்"

"அருணகிரிநாதரின் திருப்புகழ்" -- 11 "சந்ததம்"

இந்த வாரம் ஒரு எளிமையான, இனிமையான, பொருள் பொதிந்த, சுருக்கமான திருப்புகழ்!

" பாடல்"

சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலத் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.

"பொருள்"

"சந்ததம் பந்தத் தொடராலே"

தன்மைக்குத் தக்கவாறு கயிறு பிணைக்கப்படும்
பசுவினைக் கட்டுவதோ ஒரு கயிற்றால்
யானையைப் பிணைப்பது இரு சங்கிலியால்
குதிரையைக் கட்டவோ கயிறு மூன்று வேண்டும்
ஊஞ்சலைக் கட்ட சங்கிலிகள் நான்கு வேண்டும்
ஆன்மாவைக் கட்டவோ ஐந்து கயிறு வேண்டும்!

கயிற்றின் எண்ணிக்கை கூடக்கூட
கட்டுவதின் முரட்டுத்தனம் விளங்கும்.
ஒருகயிற்றால் கட்டிய பசு
சுற்றளவைச் சுற்றிவரும்
இருகயிற்று யானையோ
அங்குமிங்கும் அசைந்து நிற்கும்
முக்கயிற்று குதிரையும்
முன்னும் பின்னும் நகர்ந்து செல்லும்.
நாற்கயிற்று ஊஞ்சலும்
மேலும் கீழும் ஆடிவரும்
ஐங்கயிற்று ஆன்மாவோ

சொர்க்கம் நரகம் பூதலம் என்னும்
மூவுலகும் சுற்றிவரும்.

கயிற்றினை அறுத்துவிடின்
கட்டுகளும் விட்டுவிடும்
பசுவென்னும் ஆன்மாவும்
பஞ்ச சங்கிலி அறுந்திடவே
பரமான்வைப் பரவி நிற்கும்.

அது போல,
தொடராக வந்து நிற்கும்
கட்டிங்கே அமைவதினால்,

"சஞ்சலத் துஞ்சித் திரியாதே
"

கட்டுண்ட ஆன்மாவும்
காலா காலமும்
உள்ளம் மடிந்து
துன்பம் அடைந்து
உணர்வு மடிந்து
உழலாமல் இருப்பதற்கு,

"கந்தன் என்று என்று உற்று
உனைநாளும் கண்டுகொண்டு
அன்புற்றிடுவேனோ"

கலியாணப் பந்தலிலே
கால்கள் கட்டியிருக்கும்
குழந்தைகளும் அதைச் சுற்றி
களிப்புடனே ஆடிடுவர்
கம்பில்லா குழந்தை அங்கே
தான் சுழன்று ஆடுகையில்
தலை சுற்றிக் கீழே வீழும்
அது போல,
உயிர்களுக்கும் ஆன்மாவிற்கும்
உறுதுணையாய்க் கம்பமாய்
உறுப்பவனே கந்தனாவான்
அவன் தாளைப் பற்றியவர்
உலகின்பம் அடைய மாட்டார்.

கந்து என்றால் தறியாகும்
ஆனையைக் கட்டுதற்கு அது பேராகும்
கந்தன் என்றால் அது போன்றே
நம் கயிற்றை அவன் பிணைப்பான்.
கந்தனைக் கண்டு அவன் தாள்பற்றி
இன்பம் அடைந்திடும் வழியென்றோ?

"தந்தியின் கொம்பைப் புணர்வோனே"

திருமாலின் கண்ணின்றே அவதரித்த
அமுதவல்லியெனும் பெண்ணாளும் குழந்தைவடிவாகி
சூரனிடம் பயந்து ஒளிந்திருந்த
இந்திரன்பால் சென்றடைய விண்ணவர்கோனும்
ஐராவதமெனும் தன்யானையிடம் அதை அளிக்க
அன்புடன் துதிக்கையால் தூக்கிச் சென்று
கற்பகவனத்தினிலே ஆசையாய் வளர்த்திடவே
சூரனை வதைத்தபின்னர் இந்திரனும்
வீரனுக்கு பரிசாக கொடுத்திட்ட தெய்வமகள்
தெய்வயானையை மணம் செய்த முருகோனே!

"சங்கரன் பங்கில் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங்குன்றில் பெருமாளே."

உமையொருபாகம் அளித்து மகிழ்கின்ற
சிவசங்கரியின் அருங்குமரா!
செந்திலையும் கண்டியையும்
ஆள்கின்ற கதிர் வேலா,
திருப்பரங்குன்றத்தில் தெய்வயானையை
மணந்திட்ட பெரியோனே!
-------------------------------------------------------------------------
அருஞ்சொற் பொருள்

சந்ததம் = தினந்தோறும்
பந்தம் = கட்டு, கட்டுப்பாடு
சஞ்சலம் = துன்பம்
துஞ்சி = அடைந்து
கந்து+அன் = கந்தன்
கந்து = யானையைக் கட்டும் தறி
தந்தி = தந்தம் உடையதால் யானை
கொம்பு = [இங்கு] பூங்கொம்பு போன்ற தெய்வயானை
சங்கரன் பங்கு = உமை, பார்வதி, சிவனிடம் ஒரு பாகம் பெற்றவள்
சிவை பலா = உமையின் மைந்தன்
------------------------------------------------------------------------------------------------

வேலும் மயிலும் துணை !
முருகனருள் முன்னிற்கும் !
அருணகிரிநாதர் தாள் வாழ்க !

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP