"இன்று சிரித்திருப்போம்!"
"இன்று சிரித்திருப்போம்!"
தெரியாத ஒன்றைத் தெளிவு செய்வதாகத்
திரித்துரைக்கும் சில விதிகள்!
புரியாத ஒன்றைப் புரிய வைப்பதாகப்
பிதற்றிடும் சில புளுகர்கள்!
சரியான பாதையில் தயங்காமல் செல்வதற்குச்
சத்தம் போடத் தேவையில்லை!
மரியாதை மட்டும் மனதில் இருந்தால்
மகிழ்விற்கோ என்றும் குறைவில்லை!
தப்பென்றும் சரியென்றும்
சொல்வதிலே அர்த்தமில்லை!
"இப்படித்தான் வாழு" என
வற்புறுத்தல் தேவையில்லை!
மனத்தளவில் மாசின்றி
இருந்தாலே போதாதோ?
கணமேனும் கலக்கங்கள்
கூடிடுமோ நம்மிடையே?
தனியேதான் பிறந்தோம்
தனியேதான் வளர்ந்தோம்
துணையென்று வந்ததெல்லாம்
முன்னேயோ, பின்னேயோதான் !
பிணை இன்றி வாழுவோம்
புறமொன்று சொல்லோம்
தனித்தங்கே செல்லுகையில்
தவிப்பின்றிச் சென்றிடுவோம்!
நம்மில் எவரும் நம்மை விடவும் உயர்ந்தவரில்லை!
நம்மில் எவரும் நம்மை விடவும் தாழ்ந்தவரில்லை
நம்மில் நம்மையும், நம்மில் பிறரையும் கண்டுகொண்டால்
நம்மில் என்றும் குறைவில்லை, நம்மை அழித்திட ஆளுமில்லை!
ஒன்றாய் வாழும் உண்மையதனை
உலகில் அனைவரும் அறிந்துகொண்டால்
நன்றே நடக்கும், நன்மையே பிறக்கும்
என்றே உரைப்பேன்;உணர்ந்திடுவீரே!
சென்றதை மறப்போம்; நல்லதே நினைப்போம்!
அல்லலை அழிப்போம்!
இன்று சிரித்திருப்போம்!
என்றுமே மகிழ்ந்திருப்போம்!