Thursday, November 08, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 33

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 33

முந்தைய பதிவு இங்கே!


31.
"நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்

எவ்வநோய் தீர்க்கும் மருந்து. [1241]


அடுத்த ஒரு நாள் நடையிலேயே கழிந்தது.

சித்தர் கொஞ்சம் கவனமாகவே சென்று கொண்டிருந்தார்.

துப்பாக்கி சூடு,இன்னமும் தொடர்ந்து கொண்டிருந்த சத்தம் அவ்வப்போது கேட்டது.

கந்தன் தன் இதயத்தைக் கவனிக்கத் தொடங்கினான். அதன் உணர்ச்சிகள் அவனைப் பயமுறுத்தியது. சில சமயங்களில், இடைவிடாமல் தன் கதைகளைச் சொல்லியது.
சில நேரம் மௌனமாய் இருந்தது. பொன்னியின் நினைவைச் சொல்லி அழுதது. அண்ணாச்சி பற்றி கவலைப் பட்டது. புதையலைப் பற்றிச் சொல்லும் போது மகிழ்ச்சியால் துள்ளியது.

'எதுக்கு நாம நம்ம இதயத்தைக் கவனிக்கனும்னு சொல்றீங்க?' என்றான் கந்தன்.

'அது எங்கே இருக்கோ, அங்கேதான் உன் புதையலும் இருக்கு! அதனாலதான்!'

'அப்படித் தோணலியே. அது ரொம்பப் படுத்துதே! அதோட கனவு, அதோட கோபம், உணர்ச்சிகள் இதெல்லாம் என்னால புரிஞ்சுக்கவே முடியலை. இதைப் பண்ணு, அதைப் பண்ணுன்னு மாத்தி மாத்தி சொல்லிகிட்டே இருக்கு. ஒரு பொண்ணை நினைச்சு அழுவுது. தூங்க விடமாட்டேங்குது. என்ன பண்றதுன்னே தெரியலை.'

'ஓ! அப்படியா! ரொம்ப நல்லதாப் போச்சு! அப்படீன்னா அது இன்னும் உசிரோடத்தான் இருக்குன்னு அர்த்தம்! என்ன சொல்லுது அதுன்னு கவனி!'

மேலும் நடக்கத் தொடங்கினார்கள் இருவரும். வழியில் சந்தேகத்துகிடமான சிலர் நடமாட்டம் தெரிந்தது.கந்தனின் இதயம் படக் படக்கென அடிக்கத் தொடங்கியது.
ஒருவித பயம் பிறந்தது.


'வெளியில இன்னும் கலவரம் ஓயலை போலிருக்கு. இந்த நேரத்துல உனக்கு இப்படி ஒரு புதையல் ஆசை தேவைதானா? இதுமாதிரி கிளம்பினவங்கள்ல ரொம்பப் பேரு ஏமாந்துதான் போயிருக்காங்க.உனக்கு அது கிடைக்கும்னு எனக்குத் தோணலை. வழியிலியே செத்து கித்து தொலைக்கப்போறே!' இப்படியெல்லாம் அவன் இதயம் அவனுடன் புலம்பியது!

'என் மனசு ரொம்ப ரொம்ப மோசம்! என்னைப் போகவிட மாட்டேங்குது' சித்தரிடம் சென்று இவன் புலம்பினான்!

'அது சொல்றதும் நியாயமாத்தான் இருக்கு! உன்னோட லட்சியத்தை தேடிகிட்டுப் போறப்ப, இருக்கறதையெல்லாத்தியுமே இழந்திருவோமோன்னு அதுக்கு பயம் வந்திருக்கலாம். அதுல ஒண்ணும் தப்பில்லியே.'

'அப்படீன்னா, அதோட பேச்சை நான் ஏன் கேக்கணும்?' என்றான் கந்தன்.

'நீ கேக்கலைன்னா, அதோட கூச்சல் இன்னும் அதிகமாகும். நீ கேக்கலைன்றதைப் புரிஞ்சுகிட்டு, உன்னைக் கேக்க வைக்கறதுக்காக இன்னும் அதிகமா பயமுறுத்தும்.'

'அப்ப, கேட்டுத்தான் ஆவணுமா? எனக்கு எதிராப் பேசி எனக்கு துரோகம் பண்ணினாக் கூடவா? என் கனவையெல்லாம் கலைச்சாக் கூடவா?' எனப் பரிதாபமாகக் கேட்டான்.

'துரோகம்ன்றது ரொம்பப் பெரிய வார்த்தை. அதெல்லாம் எதிர்பார்க்காத இடத்திலேர்ந்து, எதிர்பாராம வர்றது. உன் மனசை மட்டும் சரியாப் புரிஞ்சுகிட்டியானா, அது உனக்கு ஒருக்காலும் துரோகமே பண்ணாது.அதுக்கு என்ன பிடிக்கும், அதோட ஆசையெல்லாம் என்னன்னு உனக்கும் புரிஞ்சிடும். அதை எப்படி சமாளிக்கறதுன்னும் விளங்கிடும். உன் மனசுகிட்டேர்ந்து நீ எப்பவும் தப்பிக்கவே முடியாது. அதனால, பேசாம அது சொல்றதைக் கவனமாக் கேளு. அதிக பட்சமா, அது உன்னைத் தாக்காமலியாவது இருக்கும்' எனச் சொல்லி கடகடவெனச் சிரித்தார்.

சித்தரின் சொற்களால் தைரியமடைந்த கந்தன், மனசோட பேச்சைக் கேக்க ஆரம்பித்தான். தனக்கு ஒண்ணும் ஆயிடக் கூடாதேன்னுதான் அது இத்தனை டான்ஸ் ஆடுது என்பது தெளிவாகப் புரிந்தது.கொஞ்சம் கொஞ்சமாக அவன் பயம் தெளிந்தது. எப்போது வேணும்னாலும் சுதந்திரமா அதோட அவனால் பேச முடிந்தது.

'நான் உன்னை எப்பப் பார்த்தாலும் குறை சொல்லிகிட்டே இருக்கேன்னு நீ நினைக்காதே. இது கிடைக்குமோ கிடைக்காதோன்னு அந்தப் புதையலைப் பத்தி நீ கவலைப் படறப்ப, உன்னால அதிகமா பாதிக்கப்படறது நான் தான்!உன்னோட வலி, வேதனை, ஏமாற்றம் இதெல்லாம் நேரா வந்து என்னைத்தான் அடிக்குது. அதுக்குத்தான், இது மாதிரில்லாம் அப்பப்ப சொல்லி, உன்னை எது நடந்தாலும் தயாரா இருக்கறதுக்கு முயற்சி பண்றேன்.' என்றது அவன் மனசு!

சித்தரிடம் இது பற்றி சொல்லி என்ன செய்யலாம் எனக் கேட்டான்.

'வருத்தப் படப் போறோமோன்னு பயப்படறதை விட , வலியை அனுபவிக்கறது எவ்வளவோ மேலுன்னு அதுகிட்ட எடுத்துச் சொல்லு.ஒரு லட்சியத்தை தேடிகிட்டுப் போறப்ப ஒவ்வொரு நொடியும் நாம கடவுள் பக்கத்துல இருக்கோம் என்பதைப் புரிஞ்சுக்கணும். உண்மையான இறை அனுபவம் எதுன்னா, இது போல ஒரு கனவைத் தேடிகிட்டு போகும்போது கிடைக்கற சந்தோஷமும், திருப்தியும் தான்.ஒரு குறிக்கோளும் இல்லாம ஊருல ஆடு மேய்ச்சுகிட்டு இருந்த உனக்கு இதுவரைக்கும் நடந்ததெல்லாத்தையும் நினைச்சுப் பாரு. நான் சொல்றது புரியும். அதையே உன் மனசுகிட்டயும் சொல்லு'

மனசு இப்ப கொஞ்சம் லேசாகியது. ஒன்றும் பேசாமல் கொஞ்சம் அமைதியாகவும் ஆனது.

அன்றிரவு படுத்திருக்கும் போது அவனுடன் பேசியது.
'மகிழ்ச்சியான மனசுக்குள்ள கடவுள் இருக்காரு. மகிழ்ச்சின்னா என்ன? பணம் காசு இல்லை அது. படைப்பின் அழகை பார்த்து, ரசிச்சு புரிஞ்சுக்கறப்ப வர்ற உணர்வுதான் அது. ஒரு சின்ன மண் துகளைப் பார்த்துக் கூட அது வரலாம். எத்தனை முயற்சிகளுக்கு அப்புறமா அப்படி ஒரு துகள் வந்திருக்குன்னு சிந்திக்கறப்ப ஒரு ஆனந்தம் வருதே, அதான் மகிழ்ச்சி.'

சித்தர் சொன்னதையே இதுவும் சொல்லுதே என வியந்தான் கந்தன்.

'எங்களுக்கும் ஆசை, கனவெல்லாம் இருக்கு. ஆனா, மனுஷங்க ஒரு காலகட்டத்துல எல்லாத்தையும் விட்டுட்டு சராசரி ஆளா இருக்கறதே மேலுன்னு போயிடறாங்க.
சின்ன வயசுல நாங்க ரொம்பவே இந்த கனவெல்லாம் பத்தி, ரொம்பவே விவரமா பேசியிருக்கோம்.


வயசாக, வயசாக, விதியோட போக்குலியே நீங்க போறப்ப, வேற வழியில்லாம நாங்க அதையெல்லாம் ரொம்ப பேசாம இருந்திடறோம். அதுக்காக பேசாமலியே இருக்கறதும் இல்லை. அப்பப்ப, சொல்லிகிட்டுதான் இருப்போம். ஆனா, சத்தமா சொல்றதில்லை!

மறந்திடாதே! பாதிக்கப் படறது நாங்கதான்! நீ உன் கனவை விடாமத் தொடரு. தப்பு வழியில நீ போனா, நான் ஒரு சவுண்டு கொடுக்கறேன்'
எனச் சொல்லிச் சிரித்தது!

'இப்ப நான் என்ன பண்ணனும்?' சித்தருடன் பேச்சுக் கொடுத்தான் கந்தன்.

'புதையலைத் தேடிகிட்டு மஹாபலிபுரம் போகணும்! வழியில தெரியற சகுனங்களைக் கவனமாப் பாரு. அப்பப்ப உன் மனசு சொல்றதையும் கேளு. அது உன்னை சரியான வழியில கொண்டு போகும்'.

'அவ்ளோதானா?'

'இல்லை! அவ்ளோ சுலபமா வேலை முடியாது. உன்னோட புதையல் உனக்குக் கிடைக்கறதுக்கு முந்தி, இந்த உலக ஆத்மா நீ அதுக்குத் தகுதியானவன்தானான்னு பரிட்சை பண்ணும். கத்துகிட்டதெல்லாம் சரியா செஞ்சியான்னு சோதனை கொடுக்கும். அதனால அது ரொம்ப கெட்ட ஆத்மான்னு நினைச்சிராதே. கனவு மெய்ப்படறது மட்டுமில்ல;
அதுக்கான வழிகளையும் ஒழுங்க செஞ்சியான்னு பார்க்கறதுக்காகத்தான் இதையெல்லாம் செய்யுது. அப்பத்தான், இதோட கடுமை தங்க முடியாம, ரொம்பப் பேரு 'வேணாண்டா இதெல்லாம்'னு விட்டுட்டுப் போயிர்றாங்க! தண்ணி கிடைக்கறதுக்கு இன்னும் ஒரு அடி தோண்டினாப் போதும்ன்றப்ப கிணறு தோண்டறதை விட்டுட்டுப் போற
மாதிரி! கவனமாக் கேளு. விடியறதுக்கு முந்திதான் இருட்டு அதிகமா இருக்கும்!'

சொல்லிவிட்டு முன்னே நடந்தார் சித்தர்.

சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள்.

திடீரென ஒரு நான்கு பேர் இவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். கையில் துப்பாக்கி வைத்திருந்தார்கள்!
*************************************



அடுத்த அத்தியாயம்

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP