Monday, August 04, 2008

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] [1]

"பொம்மலாட்டம்"
[நகைச்சுவை நாடகம்]
[முதல் பகுதி]


"பிரவாகம்" ஆண்டு மலருக்காக நான் எழுதிய நாடகத்தை இங்கு அளிக்கிறேன்.

காட்சி-1

[இடம்: சங்கர் வீடு]

[சங்கர் உட்கார்ந்திருக்கிறான். அவனது நண்பன் சுகுமார் எதையோ கொறித்துக் கொண்டிருக்கிறான். இருவரும் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கதவு தட்டும் ஓசை கேட்டு சுகுமார் எழும் முன், தாழ்ப்பாள் போடாத கதவைத் திறந்துகொண்டு, மூர்த்தி வேகமாக உள்ளே நுழைகிறான்!]


மூ: டேய், சங்கர், என்னடா இது? இப்படி நீ பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்லை.

ச: [ஒன்றும் புரியாமல்] என்ன பண்ணினேன் நான்? ரெண்டு நாளா வேலைக்கே போகாம இங்கியே வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்கேனே, அதையா சொல்றே?

மூ: அதான் நீ வழக்கமா செய்யற வேலையாச்சே! உனக்கு போய் இவ்ளோ சம்பளம் கொடுத்து ஒருத்தன் வேலை கொடுத்தானே! அவனை நினைச்சா எனக்கு ரொம்பவே ஆச்சரியமா இருக்குடா! சிலைதான் வைக்கணும் அவனுக்கு.

ச: போறும், போறும், நிறுத்து! விட்டா ஒரேயடியா அளந்துகிட்டே போவியே! இப்ப நான் என்ன பண்ணினேன்? அதைச் சொல்லு சொல்லு.

மூ: மேட்ச் நடக்குதில்ல. ஏற்பாடா எல்லாம் தயார் பண்ணிட்டு, சுகுவை மட்டும் கூப்பிட்டு ரெண்டுபேரும்.... தோ.. தோ பாரு! முந்திரிப்பருப்பு, சிப்ஸ், பியர்... அடுக்குமாடா இது!.... என்னை ஏண்டா கூப்பிடலை!

[அவன் பார்வை ஒரு ஓரத்தில் இருக்கும் ஒரு அட்டைப்பெட்டி மேல் விழுகிறது.]

மூ: இதென்ன பெட்டி? இதுல என்ன இருக்கு?

சு: ஓ! அதுவா? அதுல சில பழைய துணிங்க இருக்கு. எங்க தாத்தா காலத்துது அது! தூக்கிப் எறியப் போறேன். உனக்கு எதுனாச்சும் வேணும்னா எடுத்துக்கோ! தொந்தரவு பண்ணாதே! டெண்டுல்கர் பேட்டிங்!

[மூர்த்தி அவைகளை அலசுகிறான். அந்தக்கால போலீஸ் உடை ஒன்றை எடுக்கிறான்!]

மூ: அட! இது ரொம்ப நல்லாருக்கே! நான் எடுத்துக்கறேன்.

ச: [அவனைப் பார்க்காமலே] சரி, எடுத்துக்கோ! இதுக்கா இந்த ஆர்ப்பாட்டம் பண்ணினே! இந்த ஆட்டத்தைப் பாருடா! அதை விட்டுட்டு...!

மூ: ஏன் சொல்ல மாட்டே! புது மாதிரியா பழைய ட்ரெஸ் போட்டு எவ்ளோ நாளாச்சு! ரொம்ப நன்றிப்பா!

[இன்னும் கிளறுகிறான். ஒரு பழைய பொம்மை கிடைக்கிறது. ஆவலுடன் அதை கையில் எடுக்கிறான். ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சுகுமார் தற்செயலாக அதைப் பார்க்கிறான்.]

சு: ஆ.......! டேய்! அதைக் கொடு! நான் பார்க்கிறேன்.

மூ: [அவனிடம் கொடுக்காமல், தன் கையில் வைத்தபடியே] கொடுக்க மாட்டேன்! இதோ இப்பிடியே நல்லா பாத்துக்கோ!

சு: என்னால நம்பவே முடியலை! அதே மாதிரி இருக்கே!

[சொல்லியபடியே அதை மூர்த்தி கையில் இருந்து பிடுங்கி அதைப் பார்க்கிறான்]

ச: எதே மாதிரி? நீ ஜொள்ளு விடற எத்தனையோ பொண்ணுங்கள்ல ஒண்ணு மாதிரியா? சொல்லித் தொலைடா!

சு: இல்லைடா. சின்ன வயசுல எங்க வீட்டுல இதே மாதிரி ஒரு பொம்மை இருந்திச்சு. ஒருநாளு நான் அதை எடுத்து விளையாடிக்கிட்டிருந்தேன். அப்போ கைதவறி கீழே விழுந்து அது உடைஞ்சு போச்சு. அதுக்கு என்னை எங்க அப்பா அடிச்ச அடி இருக்கே... அப்பப்பா... இப்ப நினைச்சாலும் வலிக்குதுடா! என்னமோ வீனஸ் சிலைய நான் உடைச்ச ரேஞ்சுக்கு என்னை இப்பவும் குத்திக் காட்டுவாரு. டேய்! டேய்! எனக்கு அதைக் கொடுறா! எங்க அப்பா மூஞ்சியில அதை விட்டெறிஞ்சு என் ஆத்திரத்தைத் தீர்த்துக்கணும். இதை நான் எடுத்துக்கறேன்.

[மார்போடு அணைத்துக் கொள்கிறான். மூர்த்தி பதறுகிறான்.]

மூ: அதெல்லாம் நடக்காது. நான்தான் முதல்ல பார்த்தேன். எனக்குத்தான் அது!

[சுகுமார் கையிலிருந்து பிடுங்க முயற்சிக்கிறான்.]

சு: தர மாட்டேன்! எனக்குத்தான் இது ரொம்பவே வேணும்.

மூ: தாடா!

சு: முடியாது!

மூ: தாடான்னா! [தள்ளுகிறான்]

சு: முடியாதுடா! [திமிறுகிறான்]

ச: [அலுப்புடன்] டேய்! டேய்! என்னடா இது சின்னப் புள்ளைங்க மாதிரி! கொஞ்சம் விவேகமா உங்க வயசுக்குத் தகுந்த பெரிய ஆளுங்க மாதிரி நடங்கப்பா!

மூ: அப்போ சரி! உனக்கும் எனக்கும் பந்தயம்! ஈனா மீனா டீக்கா வரியா?

ச: வெளங்கிருவேடா நீ~!

சு: அதெல்லாம் வேண்டாம்! ஆக்கு பாக்கு வேணா ஆடலாம்!

ச: நீ அவனை விட ரொம்பவே மோசம்ண்டா! எனக்கென்ன! ஏதோ ஒரு முடிவுக்கு வாங்க! உங்களைத் திருத்தவே முடியாது! இதன் பெரிய ஆளுங்க ஆடற விளையாட்டா? உங்களைத் திருத்தவே முடியாது! இதோ சிக்ஸர் அடிச்சுட்டான் டெண்டுல்கர்!

[மேட்சைப் பார்க்கிறான்]

மூ: சொல்லு! நான் ரெடி! கையை நீட்டு! ஆனா, ஒரு கண்டிஷன்! என் கையிலதான் முதலில் நீ தட்டணும்! சரியா!

சு: நான் ரெடி!

ச: அட! இது இந்த மேட்ச்சை விடவும் நல்லாயிருக்கே! நான் தன் அம்ப்பையர்! என் முடிவுதான் ஃபைனல்! தொடங்குங்கடா!

சு: சரி! [மூர்த்தி கையைத் தொட்டு] ஆக்கு

மூ: [சுகுமார் கையைத் தொட்டபடியே] பாக்கு

சு: வெத்திலை

மூ: பாக்கு

சு: டாம்

மூ: டூம்

சு: டைய்யா

மூ: இஸ்கனக்கற

சு: கோக்கனக்கற

மூ: ஹைய்யா

[சுகுமாரின் கையில் தட்டுகிறான்! குதிக்கிறான்!]

மூ: ஹைய்யா! நான் தன் கெலிச்சேன்! எனக்குத்தான் பொம்மை!

[சுகுமாரின் தேவையையும், அவன் முகம் வாடுவதையும் பார்த்த சங்கர், தனது 'நடுநிலைமை'த்தன்மையை நிலை நாட்டும் விதமாக]

ச: இங்கே நான் தான் அம்ப்பையர் என்பதை ரெண்டு பேரும் மறந்திட்டு ஆளாளுக்கு என்னமோ சொல்லிகிட்டு இருக்கீங்களே! டேய்! மூர்த்தி, நீ யார்கிட்ட முடிச்சே?

மூ: 'ஹைய்யா'ன்னு சுகு கையில.

ச: அப்ப, அவன் தான் ஜெயிச்சான். பொம்மை அவனுக்குத்தான். இதான் நாட்டாமை தீர்ப்பு!

மூ: [பரிதாபமாக] இது அளுகுணி ஆட்டம். யார்கிட்ட முடியுதோ, அவங்கதானே அவுட்டு? அப்பிடித்தானே இந்த ஆட்டம் நாங்க ஆடுவோம்.

ச: அது எங்கே ஆடுவேன்னு எனக்குத் தெரியாது. இங்க... இந்த வீட்டுல... இதான் தீர்ப்பு. நீ இதுக்கு அப்புறம் வரவேண்டிய மூணு வார்த்தையைச் சொல்லலை.கொடுறா பொம்மையை அவன்கிட்ட!

மூ:என்னடா அது?

ச: "என்... பேரு.... கொய்யா"...! அதை நீ சொல்லலை. அதும்படி பார்த்தா அது உன்கிட்ட தான் முடியுது. சுகுதான் ஜெயிச்சான். நீ அவுட்டு!

மூ: ரெண்டு பேரும் சேர்ந்து என்னமோ தப்பாட்டம் ஆடுறீங்க! சரி, சரி, இதோ, எடுத்துகிட்டு ஒழி!

[பொம்மையை வீசுகிறான் சுகுமாரிடம். கீழே விழுந்து உடையப்போகும் முன், சுகுமார் அதை லாவகமாகப் பிடித்து, மூர்த்தியை கோபத்துடன் பார்க்கிறான்.]

சு: திரும்பவும் உடைக்கப் பார்த்தியேடா! நல்லவேளை தப்பிச்சுது. மறுபடியும் எங்க அப்பாகிட்ட போய் கொடுக்கலாம்னு இருந்ததை, கெடுக்கப் பார்த்தியே!

ச: சரி விடு! என்னமோ தனக்குக் கிடைக்கலியேன்னு ஒரு ஆத்திரத்துல செஞ்சுட்டான். அதான் உடையலியே!
[மூர்த்தியை சமாதானப்படுத்தும் விதமாக] சரிடா, மூர்த்தி, பொம்மைக்குப் பதிலா, இன்னும் வேற எதுனாச்சும் வேணும்னாலும் எடுத்துக்கோ. நான் எப்படியும் அதையெல்லாம் தூக்கித்தான் போடப்போறேன். என்னை கொஞ்சம் மேட்ச் பார்க்கவிடுறீங்களா, இப்பவாவது? நல்லா விளையாடினீங்கடா ரெண்டு பேரும், பெரிய ஆளுங்க விளையாட்டு... ஆக்கு பாக்கு! வேற அறிவுபூர்வமா ஒண்ணுமே கிடைக்கலியா உங்க ரெண்டு பேருக்கும்!

[சிரிக்கிறார்கள் மூவரும்.]

ச: [சுகுமாரைப் பர்த்து மெல்லிய குரலில்] போனாபோவுதுன்னு உனக்கு சரி பண்ணினேன். மறந்துறாதே!

சு: தெரியுண்டா! ரொம்ப நன்றிடா!

[மீண்டும் கதவு தட்டும் ஓசை. கண்ணன், இன்னொரு நண்பன், நுழைகிறான்.]

க: என்னடா? வீடு இவ்ளோ களேபரமா இருக்கு! துணிமணில்லாம் சிதறிக் கிடக்குது! க்ளீன் பண்ணமாட்டியோ! நீங்கள்லாம் பார்த்துகிட்டுத்தானெ இருக்கீங்க? எடுத்து வைக்க மாட்டீங்களாடா?

[சொல்லியவாறே, துணிகளை எடுத்து வைக்கிறான்.]

ச: பார்த்தீங்களாடா! எவ்ளோ பொறுப்பா பண்றான். நீங்களும் இருக்கீங்களே, தண்டத் தடிமாடாட்டம்.

சு: [பொறாமையுடன்] உன் வீடுதானே! நீயே செய்யலாமே! கண்ணன் ஏன் இப்பிடிப் பண்றான்னு கொஞ்சம் விசாரி. சும்மானாச்சும் எவனும் இப்படிச் செய்யமாட்டான்! டேய்! இன்னாடா சமாச்சாரம்? எதுக்கு இப்போ திடீர்னு இவ்ளோ அக்கறை உனக்கு? எத்தினி தபா இங்க வந்திருப்பே? எப்பவாவது இப்டி பண்ணியிருக்கியாடா? எதுக்கு இந்த ஐஸ் வைக்கறே?

க: [அசடு வழிந்தபடியே] அதெல்லாம் ஒண்ணுமில்லை, மாம்ஸ்!. ம்ம்,... எதுக்கு நீ எல்லாத்துக்கும் என்னையே சந்தேகப்படறே ? அதிருக்கட்டும், சங்கர்... நீ இந்தவாரம் சனி, ஞாயிறு எங்கியோ வெளியே போறேன்னு சொன்னியே! போறேதானே!

சு: அதானே பார்த்தேன்! சோழியன் குடுமி சும்மா ஆடாதே! மச்சி, இதுல ஏதோ விவகாரம் இருக்கு! நிதானமா ஆடு!

ச: நீ சும்மா இருடா! எல்லாத்துலியும் எதாவது சொல்லிகிட்டு! [கண்ணனைப் பார்த்து] ஆமாம். திருச்சி வரைக்கும் ஒரு வேலையப் போகவேண்டியிருக்கு. திங்கள்கிழமைதான் வருவேன். அதுக்கென்ன இப்ப?

: [தயங்கியபடியே] இல்லை. உன்னோட வீடு காலியாத்தானே இருக்கும்?

ச: [சற்றே எரிச்ச்சலுடன்] ஆமா. உனக்கு என்ன வேணும்? சொல்லித் தொலைடா.

க: என்னோட நண்பன் ஒருத்தனுக்கு இந்த வாரம் தங்கறதுக்கு ஒரு இடம் தேவைப்படுதாம். என்னைக் கேட்டான். உனக்கு ஆட்சேபணை இல்லைன்னா....!!!

சு: அப்டி வா வழிக்கு! எனக்குத் தெரியும் இவன் நுழைஞ்சவுடனேயே ரொம்ப ஜரூரா க்ளீன் பண்றானே, என்னடா ஏதுன்னு! . சும்மா ஆடமாட்டியே நீ! அதுக்குத்தான் வீடு சுத்தமா இல்லைன்னு பீலா விட்டியா? உன் நண்பன் தங்கறதுக்காக இப்பவே க்ளீன் பண்றியா? [சிரிக்கிறான்]

[கண்ணன் அசடு வழியச் சிரிக்கிறான்]

ச: தப்புதண்டா பண்றதுக்கு இல்லைதானே!?

க: சேச்சே! அதெல்லாம் இல்லைடா! அப்படியெல்லாம் செய்ய நான் விடுவேனா? அவனுக்கு கல்யாணம்லாம் ஆகி, ஒரு அழகான மனைவியும் இருக்காடா! அவன் அப்பிடில்லாம் பண்ற ஆளு இல்லை. இல்லை. என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா? அது மாதிரி ஆளுங்களைத்தான் இங்க அழைச்சுகிட்டு வருவேனா? ரொம்ப நல்லவண்டா அவன்! வேணும்னா, அவனை விட்டே இந்த வீட்டையும் சுத்தம் பண்ணிவைக்கச் சொல்றேன்... வாடகைக்குப் பதிலா. எனக்கு அவனால ஒரு காரியம் ஆகவேண்டி இருக்கு. அதுக்குத்தான் கேட்டேன்.

ச: நீங்கள்ல்லாம் கேட்டு என்னிக்கு நான் இல்லைன்னு சொல்லியிருக்கேன். சரி, சரி, நாளைக்கு காலையில எட்டு மணிக்கு நான் கிளம்புவேன். அதுக்கு முன்னால உன்னோட நண்பனைக் கூட்டிகிட்டு வா. நானும் அவனை ஒரு தடவை பார்த்திடறேன்.

க: ரொம்ப நன்றிடா! நாளைக்கு அவனையும் இங்கே வரச் சொல்றேன்.

ச: சரி. இப்ப கிளம்புறீங்களா? நான் சாப்பிடப் போகணும்.

சு: நானும் வரேன்!

ச: [சுகுமாரிடம்] உன் பொம்மையை எடுத்துக்கோ!

சு: இப்ப வேணாம். இங்கியே இருக்கட்டும். 2 நாள் கழிச்சு வந்து எடுத்துகிட்டு போறேன். ஊருக்குப் போறப்ப எடுத்துகிட்டுப் போறேன். திடீர்னு கொண்டுபோய் அவரை ஸர்ப்ரைஸ் பண்ணனும்.

ச: சரி, அப்ப கிளம்பு.

க: நானும் வரேன்!

மூ: நான் வரலை. எனக்கு கொஞ்சம் வெளிவேலை இருக்கு.

[கிளம்புகிறார்கள்.]

[திரை].
*****************

[அடுத்த பகுதி வியாழனன்று வரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP