"பரிசேலோர் எம்பாவாய்" [3]
"பரிசேலோர் எம்பாவாய்" [3]
3.
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 3
தோழியர்: முத்தையொத்த ஒளியுடைய புன்னகையை வீசும் பெண்ணே!
அனைவர்க்கும் முன்பாக எழுந்திருந்து வாயினிக்க
"அப்பன், ஆனந்தமளிப்பவன், இனிப்பவன் என்று இனிக்கப் பேசுவையே
இன்றென்ன ஆயிற்று உனக்கு? வந்து உன் வாசல் திறப்பாய்!
படுத்திருப்பவள்: பத்து குணம் உடைய என் தோழியரே! இவற்றினால் இறைவனின்
அடியவராய் ஆனவரே! என்னிடம் அன்புடையீரே!
பாவை நோன்புக்குப் புதியவளாம் என்னிடம் குற்றமிருப்பின்
என்னையும் அடியவாராக்குதல் உமக்கு சம்மதமில்லையோ?
தோழியர்: எம்மிறைவன் மேல் உனக்குள்ள அன்பெமக்குத் தெரியாதோ?
பத்தும் நிறைந்த சித்தம் உள்ள உன் போன்ற அழகியர்
பாடாமல் போவாரோ சிவானாரை? எங்களுக்கு இதுவும் வேண்டும்
இன்னமும் வேண்டும்! சரிதானே என் பெண்ணே!
அருஞ்சொற்பொருள்:
அத்தன் - அப்பன்; பத்து - தசகாரியம்[விளக்கம் மேலே காண்க!]; பாங்கு - நட்பு;
புன்மை - கீழ்மை.