Thursday, December 20, 2007

"பூக்களில் உறங்கும் மௌனங்கள்" [ந.ஒ.க.போ]

"பூக்களில் உறங்கும் மௌனங்கள்"
['நச்'சுன்னு ஒரு கவிதைப் போட்டிக்காக!]


காத்தலின் கணங்களில் கரைந்திடும் காட்சிகள்
பார்த்தவர் அருகினில் பகிர்ந்திடும் எண்ணங்கள்
வார்த்தைகள் வெளிவரா நாணத்தின் நிலைப்படிகள்
நேர்த்தியாய்ச் சொல்லிட துடித்திடும் நினைவலைகள்
அனைத்தையும் அடக்கியோர் ஜீவனும் உயிர்த்தது
உயிர்த்ததில் ஓரணு உள்ளின்று சிலிர்த்தது
சிலிர்த்ததில் மொட்டொன்று மெல்லவே முகிழ்த்தது
முகிழ்த்ததில் வாசங்கள் இதனுளே பரந்தது
பரந்ததை இதழ்களும் தனக்குளே மறைத்தது
மறைத்தது மௌனமாய் தனக்குளே வளர்ந்தது
வளர்ந்தது ஓர்நாள் இதழ்களை விரித்தது
விரித்ததில் வாசமும் எங்கணும் படர்ந்தது
படர்ந்தை உணர்ந்துமே வண்டினம் மொய்த்தது
மொய்த்ததில் தேனையும் பருகியே அகன்றது
அகன்றதும் ஆங்கனே மகரந்தம் நின்றது
நின்றதால் மலரும் தன் மௌனத்தில் அழுதது
அழுததை உரைத்திட ஆருமே அங்கிலை
பூக்களின் மௌனங்கள் பூவுடன் கழிந்தது
மௌனத்தின் விழித்துளி சாறெனச் சேர்ந்தது
பூக்களின் சூல்களும் கனியதாய் கனிந்தது
மகிழ்ச்சியும் துயரமும் புளிப்பதாய் சுரந்தது!

மனிதன் ஒருவன் கனியதைச் சுவைத்தான்!
சுவைத்த மனிதன் சொன்னான், 'சீ சீ! இது புளிக்குது'!!

மனிதம் அறியுமோ மலர்களின் மௌனம்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP