Saturday, October 06, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 11

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 11

முந்தைய பதிவு இங்கே!

9. "ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார். [463]



அவசர அவசரமாக கந்தனைத் தள்ளிக் கொண்டே, அந்த இளைஞன், 'அவரு உன் பணத்தைப் புடுங்கப் பாக்கறாரு. நீ வா சீக்கிரமா!'
என்றபடி வீதிக்கு வந்தான்.

'அப்படியா? ரொம்ப நன்றிங்க! அவரைப் பாத்தா அப்படித் தெரியலியே! நல்லவர் மாதிரில்லே இருந்திச்சு' என்றான் கந்தன்,
தன் பணம் பிழைத்ததே என்ற நிம்மதியுடன்!

"இந்தக் காலத்துல எவனையும் நம்பக் கூடாது தம்பி! இப்ப நா மட்டும் இருந்ததால நீ தப்பிச்சே. சரி, சரி வா!
போயி டிக்கட்டு எடுத்துருவோம் சென்னைக்கு. ரிசர்வு பண்ணினாத்தான் வண்டில ஏற முடியும்." என்றபடி ஸ்டேஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

கந்தனும் கூடவே நடந்தான்.

ரிசர்வேஷன் கவுண்டரை அடைந்ததும், 'நீ இங்கியே லைன்ல நில்லு. இதோ வாறேன்' என்று கந்தனை விட்டு அகன்றவன், சற்று நேரத்தில்,
அவசர அவசரமாக ஓடி வந்தான்.

'ஒன் நல்ல நேரம்; எனக்குத் தெரிஞ்சவர்தான் உள்ளே இருக்காரு. டிக்கெட்டுல்லாம் இன்னிக்கு ஃபுல்லாம். ஸ்பெசல் கோட்டாவுல
ஒரு ரெண்டு டிக்கட்டு இருக்காம்.
காசை எடு. நா போயி வாங்கியாறன்' என்றான்.

'எவ்ளோ வேணும்?' எனப் பையைத் திறக்க ஆரம்பித்தான் கந்தன்.

'எவ்ளோன்னு தெரியல. நீ லைன்ல நிக்க வேணாம். அதோ அந்த பெஞ்சுல போயி ஒக்காரு. நா டிக்கட்டை வாங்கிகிட்டு இதோ வந்திடறேன். ம்ம்.. சீக்கிரமா எடு!'
என அவன் பணப்பையை வாங்கிக் கொண்டு அந்த இளைஞன் ஒரு கதவைத் திறந்து கொண்டு ஓடினான்.

'எவ்வளவு நல்லவனா இருக்கான் இவன்!' என எண்ணியபடியே, கந்தன் பெஞ்சில் சென்று உட்கார்ந்தான்.

சற்று நேரம் ஆயிற்று.

'ஏன் இவ்ளோ நேரமாவுது டிக்கட் வாங்கியாற?' என நினைத்து, சுற்றுமுற்றும் பார்த்தான்.

இளைஞனை எங்கும் காணவில்லை.

எழுந்து அந்த இளைஞன் சென்ற கதவு வழியே சென்று பார்த்தான்.

ம்ஹூம்! அங்கும் அவன் இல்லை!

மனதில் ஒரு தவிப்பு வரத் துவங்கியது.

'அப்படியெல்லம் ஒன்றும் இருக்காது! பணத்தை எடுத்துகிட்டு ஒண்ணும் ஓடியிருக்க மாட்டான். போன எடத்துல என்ன சோலியோ?
இன்னும் கொஞ்ச நேரம் பாப்பம்' என எண்ணிக் கொண்டே மீண்டும் பெஞ்சில் சென்று அமர்ந்தான்.

ஆனால், மனதில் தோன்றிய அவநம்பிக்கை அவனை விட்டு அகலவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வலுவாகியது.

நண்பகல் ஆனது.

கந்தனுக்கு தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனத் தெளிவாகப் புரிந்தது!

அழுகை அழுகையாய் வந்தது.

'நேத்து வரைக்கும் நானுண்டு என் ஆடுங்க உண்டுன்னு இருந்தேன். ஊருலியும் தாயில்லாப் புள்ளையாச்சேன்னு என்கிட்ட அன்பா இருந்தாங்க.
செல்லி கூட அடிக்கடி வந்து பேசும். நானும் சந்தோசமா இருந்தேன். இப்பம், இந்த ஆண்டவன் என்னிய ஏமாத்திட்டாரு!
என் ஆடுங்களையும் என்கிட்டேருந்து புடுங்கிட்டு,இப்பம் பணத்தையும் பறி கொடுத்திட்டு, வெவரம் புரியாத ஊருல அநாதையா நிக்க வெச்சிட்டாரு!
இனிமே என்னால ஆரையும் நம்ப முடியாது! புதையலும் கிடைக்கப் போறதில்ல! இப்ப என்ன பண்றது?' என வருந்தினான்.

சாமி மேலயும், அந்தப் பெரியவர் மேலயும் கோவம் கோவமா வந்தது.

கையில வேற எதுனாச்சும் இருக்கான்னு, தன் துணிப்பையைத் திறந்து பார்த்தான்.ஒரு நாலு முழ வேட்டி, ஒரு துண்டு, மகாபாரதப் புத்தகம்,
கூடவே அந்தக் கிழவர் கொடுத்த அந்த இரண்டு கற்கள்!

இனம் புரியாத நிம்மதி பிறந்தது கந்தனுக்குள்.

3 ஆடுகள் கொடுத்து வாங்கிய அந்த கற்களை மீண்டும் ஒரு முறை தொட்டுப் பார்த்தான்.

தங்க வில்வமாலை அணிந்த அந்தப் பெரியவரைத் தொடுவது போல ஒரு உணர்வு!

இதை விற்று ஊருக்குத் திரும்பி விடலாம் என நினைத்தான்.

தன்னை ஏமாற்றிய இளைஞன் சொன்ன ஒரு உண்மை மட்டும் நினைவுக்கு வந்தது.

....."இந்தக் காலத்துல எவனையும் நம்பக் கூடாது தம்பி!".....

கூடவே சிரிப்பும் வந்தது.

கற்களை பத்திரமாக ஒரு துண்டில் சுற்றி வைத்தான்.

ஓட்டல்காரர் சொன்னதும் நினைவுக்கு வந்தது.

இப்போதுதான் அவர் சொன்னதின் பொருளும் உறைத்தது.

தன்னை எச்சரிக்கவே அவர் அப்படிச் சொன்னார்; நான்தான் அவரை நம்பாமல் அந்த இளைஞன் பின்னால போயிட்டேன்.

நானும் எல்லாரையும் போலத்தான்.

இந்த உலகத்தை நான் நினைக்கற மாதிரியே பாக்கறேன். அது எப்படி இருக்குன்றதை கவனிக்காமலியே!

அவன் கைவிரல்கள் அந்தக் கற்களை வருடின.

.......'நீ எதுனாச்சும் ஒண்ணை... அது சந்தோசமோ, துக்கமோ, இல்லை பொறமையோ எதுன்னாலும் சரி,...
தீர்மானமா விரும்பினியானா அந்த ஆத்மா உன்கூடவே இருந்துகிட்டு, அதை உனக்கு கிடைக்க ஒதவும். இதான் சூட்சுமம்.".......

......."கருப்பு, 'சரி' ....வெள்ளை, 'சரி இல்லை'! எப்பல்லாம் உனக்கு சந்தேகம் வருதோ, அடையாளத்தை புரிஞ்சுக்க முடியலியோ,
அப்போ,இந்தக் கல்லுங்க உதவும். கேக்கறதைச் சரியாக் கேளு.
ஆனா, அதுக்கு முன்னாடி, நீயே ஒரு முடிவு எடுக்கப் பாரு.".......


பெரியவரின் சொற்கள் மீண்டும் ஒலித்தன.

இந்தக் கற்கள் அவர் சொன்னது போலவே செய்யுமா?

சோதனை செய்து பார்த்து விடலாம் என முடிவெடுத்தான்.

[தொடரும்]


*******************************

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 10

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 10

முந்தைய பதிவு இங்கே!

8. "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல். [517]



மதுரை ஜங்ஷன்!

கந்தன் வந்த பாஸஞ்ஜர் வண்டி அவனை அங்குதான் இறக்கி விட்டது.

அமைதியான கிராமத்தில் தன்னிச்சையாகத் திரிந்த கந்தனுக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது.

இவ்வளவு பரபராப்பான ஒரு இடத்தை இதுவரை தன் வாழ்நாளில் கண்டதே இல்லை.

சாமான்களைத் தூக்கிச் செல்லும் போர்ட்டர்களும், எதையெதையோ விற்றுக் கொண்டிருக்கும் ஆட்களும், அடுத்தவரைப் பற்றி சற்றும் லட்சியம் இல்லாமல், இடித்துத் தள்ளிக் கொண்டு, முண்டியடித்து முன்னே செல்லும் மனிதக்கூட்டமும்,நெரிசலும் அவனுக்கு ஒரு பயத்தை உண்டுபண்ணியது.

கைப்பையில் இருந்த பணத்தை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

வயிறு பசித்தது.

ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்தான்.

கூட்டம் அதிகமில்லாத ஒரு சின்னக் கடையாகப் பார்த்து நுழைந்தான்.

"வாங்க தம்பி! உக்காருங்க. என்ன சாப்பிடறீங்க?" அன்பான குரலில் கடைக்காரர் வரவேற்றார்.

குளித்து, தலைவாரி, நெற்றி நிறைய விபூதி பூசி, பெரிய குங்குமப்பொட்டு வைத்த முகம்.
அடர்த்தியான முறுக்கு மீசை.
வெள்ளை வேட்டி, அரைக்கை கதர்ச் சட்டை.

கல்லாவுக்கு மேலே பிள்ளையாரும் முருகனும் அழகாக இரு பக்கமும் சிரித்திருக்க, நடுவில் மீனாக்ஷி கையில் கிளியோடு அருள் சொல்லிக் கொண்டிருந்தாள்.

மேஜை மேல் ஒரு சிறிய அழகான நடராஜர் சிலை.

ரெண்டு இட்லி, ஒரு காப்பி எனச் சொன்னான்.

வட்டமான தட்டில், வாழை இலை அதே அளவுக்கு வெட்டப்பட்டு, அதன் மேல் சூடாக இரண்டு இட்டலியும், சட்னி, சாம்பார் பக்கத்தில் ஊற்றி, அவன் முன்னே வைத்தார்.


'சாப்பிடுங்க தம்பி! காப்பி வருது!' என்றார் சிரித்த முகத்துடன்.

கந்தனுக்கு கொஞ்சம் தெம்பு வந்தது, உணவைப் பார்த்ததும்.

இன்னும் கொஞ்ச நாள்ல புதையல் இருக்கற இடத்துக்குப் போயிறலாம். மார்ல தங்க மாலை போட்டிருந்த கிழவர் பொய் சொல்லியிருக்க மாட்டார்என்ற ஒரு நம்பிக்கை மனதில்.

சாப்பிட்டுக் கொண்டே, அவர் சொன்ன நல்ல சகுனம் எதுனாச்சும் தெரிகிறதா எனச் சுற்றுமுற்றும் பார்த்தான்.

"தம்பி ஊருக்குப் புதுசா?" என ஒரு குரல் பின்னாலிருந்து வர, 'ஆகா. சகுனம் போல!' என நினைத்தபடியே குரல் வந்த திசையில்திரும்பினான்.

கட்டம் போட்ட லுங்கியும்,பனியன் தெரிகிற மாதிரி ஒரு மல் ஜிப்பாவும், கழுத்தில் சுற்றிக் கட்டிய ஒரு கர்ச்சீப்புமாய் ஒரு இளைஞன்!

'ஆமாங்க! நாகர்கோயில் பக்கம் ஒரு கிராமம்' என வெள்ளந்தியாகச் சொன்னான், பேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில்.

'என்ன சோலியா வந்திருக்கீஹ?' எனப் பேச்சைத் தொடர்ந்தான் அந்த இளைஞன்.

'சென்னைக்குப் போகணும். அதுக்கு முன்னால கொஞ்சம் சாப்பிட்டுட்டு போலாமேன்னு வெளிய வந்தேன். மத்தியானத்துக்கு மேலதான் வண்டியாம்' என அவனிடம் சொல்ல ஆரம்பித்தவன், உடனே சற்று உஷாராகி, புதையலைப் பற்றி இவனிடம் சொல்ல வேண்டாம்னுமுடிவு செய்தான்.

'சொன்னா, இவனும் அதுல பங்கு கேப்பான். இல்லாத ஒண்ணுல பங்கு தராதேன்னு அந்தப் பெரியவர் வேற சொல்லியிருக்காரு.' என எண்ணி, தன் புத்திசாலித்தனத்தை தனக்குள்ளேயே மெச்சிக் கொண்டான்.

'எப்படி அங்கே போவணும்னு உனக்குத் தெரியுமா?' என அந்த இளைஞன் வினவினான்.

'ரெயில்ல ஏறினா, கொண்டு போயி விடப் போறான். இதுல தெரிய என்ன இருக்கு?' என அவனை மடக்கினான் கந்தன்!

'அதெல்லாம் சரித்தான்! அங்கன எறங்கி, பொறவால எங்க போவணும்னு தெரியுமா?' என பதிலுக்கு அவனை மடக்கினான் இளைஞன்.

கந்தனுக்கு குழப்பம் வர ஆரம்பித்தது.

'இவன் சொல்றதும் சரியாத்தான் இருக்கு. மெட்ராஸ் பக்கத்துல இருக்குன்னு தெரியுமே தவிர, மஹாபலிபுரத்துக்கு எப்படிப் போவணும்னு தெரியாதே!'என எண்ணியவன், அந்த இளைஞனைப் பரிதாபமாகப் பார்த்தான்.

இவர்கள் பேசிக்கொள்வதை ஓட்டல்காரர் கவனிக்க ஆரம்பித்தார்!

'சென்னை இங்கேருந்து முன்னூறு மைல் தொலவுல இருக்கு. அது இந்த ஊரைப் போல பத்து பங்கு பெருசு! அதுல நீ போக வேண்டிய எடம் எங்கே இருக்கோ? அங்கே ஆளுங்கள்லாம் ரொம்ப மோசமானவனுக! ஒன்னைப் போல அறியாப்புள்ளைங்களை சுளுவா ஏமாத்திருனுவாங்க!காசு வேற நெறைய செலவளியும். பணம் எம்புட்டு வெச்சிருக்கே?' என்றான் இளைஞன்.

சட்டென இப்படி ஒருகேள்வி வந்ததும், கந்தன் கொஞ்சம் தயங்கினான்.

.......'நீ எதுனாச்சும் ஒண்ணை... அது சந்தோசமோ, துக்கமோ, இல்லை பொறமையோ எதுன்னாலும் சரி,... தீர்மானமா விரும்பினியானா அந்த ஆத்மா உன்கூடவே இருந்துகிட்டு, அதை உனக்கு கிடைக்க ஒதவும். இதான் சூட்சுமம்.".......

கிழவரின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது கந்தனுக்கு.

பையில் இருந்த பணத்தை எடுத்துக் காட்டினான் அந்த இளைஞனிடம்.

ஓட்டல்காரரும் எட்டிப் பார்த்தார் அதை!

'எலே! இங்கே வா நீ!' என அந்த இளைஞனை அழைத்தார்.

அவனிடம் தணிந்த குரலில், ஆனால், சூடாக எதுவோ பேசினார்.

இளைஞன் திரும்பி வந்தான்.

'இந்தாளு சுத்த மோசம். நம்மள சந்தேகப்படறாரு. நாம போவலாம் வா' என்றான்.
கந்தனுக்கு நிம்மதியாயிருந்தது.

எழுந்தான்.

பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு கிளம்புகையில்,'அவனை நம்பாதே! நல்லவனில்ல அவன்' என்றார் ஓட்டல்காரர்.

[தொடரும்]


*************************

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 9

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 9

முந்தைய பதிவு இங்கே!




7. "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின். [666]



"ஓ! இவர் நிஜமாவே ராஜாதான்! திருடரிடமிருந்து தப்பவே இவர் இதையெல்லாம் மறைத்திருக்கிறார்! " என்று எண்ணினான் கந்தன்.

சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தார் அந்தப் பெரியவர்.

"இந்தா! இதை வெச்சுக்கோ!" என இரண்டு கற்களை அவனிடம் தந்தார்.

ஒரு வெள்ளைக் கல், ஒரு கருப்புக் கல்!

"கருப்பு, 'சரி' வெள்ளை, 'சரி இல்லை'! எப்பல்லாம் உனக்கு சந்தேகம் வருதோ, அடையாளத்தை புரிஞ்சுக்க முடியலியோ, அப்போ,
இந்தக் கல்லுங்க உதவும்.


கேக்கறதைச் சரியாக் கேளு.

ஆனா, அதுக்கு முன்னாடி, நீயே ஒரு முடிவு எடுக்கப் பாரு. புதையல் இருக்கறது மஹாபலிபுரத்துல. அது உனக்கு முந்தியே தெரியும்.
இருந்தாலும், நான் உனக்கு அதுல உதவி செஞ்சேன். அதுக்குத்தான் 3 ஆடு கேட்டேன்.

இப்போ ஒரு 3 விஷயம் சொல்றேன். கவனமாக் கேட்டுக்கோ!

ஒரே ஒரு காரியம் மட்டும் பண்ணு. பலதையும் போட்டு குழப்பிக்காதே!
கண்ணு முன்னால தெரியுற சகுனங்களைக் கவனிக்காம விட்டுறாதே!
எந்த ஒரு காரியம் தொடங்கினாலும், முடிக்காம விடாதே!

இப்போ கிளம்பு!

அதுக்கு முன்னால ஒரு கதை சொல்றேன், கேளு.

ஒரு ஊர்ல, ஒரு அப்பா, மகன்.


ஒருநாளைக்கு, அப்பா, மகனைப் பாத்து, ' சந்தோஷத்துகான ரகசியம் என்னன்னு சில அறிவாளிங்களைப் பாத்து கேட்டு வான்னு
பையனை அனுப்பி வெச்சான்.


பையனும் ஊரு ஊரா சுத்தினான்.

எவனுக்கும் தெரியலை!

கடைசியில, ஒரு பெரிய மாளிகைக்கு வந்து சேர்ந்தான்.

இங்கேயும், அங்கேயுமா, ஆளுங்க விறுவிறுன்னு அலையறாங்க.

அந்த வீட்டோட முதலாளியைப் பாக்க வரிசையா ஆளுங்க நிக்கறாங்க.

ரெண்டு மணி நேரம் ஆச்சு இவனுக்கு அந்த ஆளைப் பார்க்க.

என்னா விசயமா வந்தேன்னு அவன் கேட்டான்.

சந்தோசத்துக்கான ரகசியம் என்னன்னு இவன் கேக்கறான்.

அந்தாளு சிரிக்கறான்.

'அது கிடக்கட்டும்! அப்புறமாச் சொல்றேன். இப்ப நீ போயி இந்த மாளிகையைச் சுத்திப் பாத்துட்டு வா! அதுக்கு முன்னாடி, இந்தா!
இந்தக் கரண்டியில இருக்கற எண்னை சிந்தாம, கையில வெச்சுகிட்டே போ" என அனுப்பி வைத்தான்.

அப்படியே கவனமா, எண்ணை கொஞ்சம் கூட சிந்தாம, இந்தப் பையனும் மாளிகை முழுக்க சுத்திப் பாத்து வந்தான்!

"என்ன? எல்லாம் பார்த்தியா? சலவைக்கல்லு ராமரைப் பார்த்தியா? மேலே தொங்கின விளக்கைப் பார்த்தியா? தங்க மீனெல்லாம் பார்த்தியா?"
என அடுக்கிக் கொண்டே போனான் முதலாளி!

பையனுக்கோ ஒரே வெட்கம்!


'இல்லீங்க! எண்ணை சிந்தாமப் பாத்துகிட்டே வந்ததுல, அதையெல்லாம் கவனிக்கலை!' என அசடு வழிந்தான்.

இந்த வீட்டுல என்ன இருக்குன்னு தெரியாம இருக்கறவனோட நான் பேச முடியாது! நீ போயி, மறுபடியும் எல்லாத்தையும் பார்த்திட்டு வா!'
என மீண்டும் அனுப்பி வைத்தான்!

இப்போ, அந்தப் பையன், நின்னு நிதானமா, வீடு முழுக்க ஒழுங்கா சுத்திப் பார்த்துவிட்டு வந்தான், கையில் கரண்டியோடுதான்!

'எல்லாம் பாத்துட்டேங்க!' என்றான்.

'நான் கொடுத்த எண்ணை எங்கே?' என்றான் முதலாளி!

அப்போத்தான் கவனிச்சான் பையன்... எண்ணையெல்லாம் கொட்டிப் போனதை!

'சந்தோஷத்துக்கான ரகசியம் என்னன்னு கேட்டேல்ல? இப்போ சொல்றேன் கேளு!உலகத்துல இருக்கற எல்லா அதிசயத்தையும் பாக்கணும்!
அதே சமயம் கையில இருக்கற எண்ணையும் சிந்தாமப் பாத்துக்கணும்! அவ்ளோதான்!'

கந்தனுக்குப் புரிந்தது!


புதையலைத் தேடி பயணம் செய்யவும் வேண்டும்.

அதே சமயம், தான் ஆடு மேய்ப்பவன் என்பதையும் மறந்துவிடக் கூடாது!

கிழவர் எழுந்தார்!கந்தனின் தலைக்கு மேல் தன் கைகளால் ஏதோ சில சைகைகள் செய்தார்.

அவன் தலை மீது கை வைத்து ஆசீர்வதித்தார்!

ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்றார்!
*************************



'கூஊஊஊஉ' எனக் கத்தியவாறே ரயில் அந்த ஸ்டேஷனில் நின்றது.

ஒரு பெஞ்சில் உட்கார்ந்தபடி கிழவர் அந்த ரயிலைப் பார்த்தார்.

அதோ! அந்த இரண்டாம் பெட்டியில் ஜன்னலோரமாகக் கந்தன்.

'இனிமே நான் உன்னைப் பாக்க மாட்டேன். எங்கே இருந்தாலும் நல்லா இரு! என் ஆசீர்வாதம் எப்பவும் உன் கூட இருக்கும்!' கிழவரின் வாய் முணுமுணுத்தது!

ரயில் கிளம்பியது.

தன் இரு கைகளையும் தூக்கி ஆசீர்வதித்தார் கிழவர்.

'அடுத்தாப்பல, செல்லிகிட்ட போயி இவன் நெனைப்பை மறக்கடிக்கணும்' என நடந்தார், ஒரு புன்னகையுடன்!
*******************


[தொடரும்]



அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [என்கிற] "கனவு மெய்ப்படும்"

இதுவரை வந்த கதையைப் படிக்காதவர்களுக்காக இந்தப் பதிவு!

முதல் அத்தியாயம்
இரண்டாம் அத்தியாயம்
மூன்றாம் அத்தியாயம்
நான்காம் அத்தியாயம்
ஐந்தாம் அத்தியாயம்
ஆறாம் அத்தியாயம்
ஏழாம் அத்தியாயம்
எட்டாம் அத்தியாயம்

இனிமேல் தொடர்ந்து நாளை முதல் படிக்கலாம்!

:))))

முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP