Wednesday, August 06, 2008

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] 3

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] 3


முந்தைய பதிவு

காட்சி - 6

[சவேரா ஹோட்டல். மூர்த்தி, சுகுமார், சங்கர் ஒரு டேபிளில் முகத்தை மறைத்தபடி! கண்ணன் தனியே உட்கார்ந்திருக்கிறான். கதிரவன் இன்னும் வரலை!]

ச: அவன் எப்போ டயத்துக்கு வந்திருக்கான். இப்பிடித்தான் லேட்டா வருவான். அதான் அவன் வழக்கமா செய்யற வேலை.

க: அப்பிடில்லாம் சும்மா பேசக்கூடாது. ஏதோ ஒரு தடவை உன் வீட்டுக்கு லேட்டா வந்ததை வைச்சுகிட்டு இப்பிடில்லாம் பேசாதேடா!

ச:: என் வீட்டுக்கு மட்டுமா? அவன் வீட்டுக்குப் போனபோதும்தான் அவன் இல்லை! திருடன்! திருடன்! சரி, சரி! எங்களைப் பார்க்காதே! அதோ அவன் வர்றான்! எங்களைக் கண்டுக்காத! விஷயத்தை ஒழுங்காப் போட்டு வாங்கு!

[கதிரவன் வந்து அமர்கிறான்.]

க: சொல்லுடா! எப்படி அந்த பொம்மை உன் வீட்டுக்கு வந்திச்சு?

கதி: எந்தப் பொம்மை! ஓ! அதுவா! ஒரு கடையில பார்த்தேன். பிடிச்சுது. வாங்கிட்டேன்.

சுகு: [மெல்லிய குரலில்] புளுகிறான். புளுகிறான்!!

க: எந்தக் கடை? எப்போ வாங்கினே?

கதி: அது... அது.. சௌக்கார்பேடையில ஒரு கடை.

க: அட்ரெஸ் கொடு.

கதி: எதுக்கு? நான் சொல்றதுல நம்பிக்கை இல்லியா?

க: அதுக்கில்லைப்பா. இதே மாதிரி ஒரு பொம்மையை நான் இன்னொரு இடத்துல பார்த்தேன். அதான்.

கதி: அப்போ என்ன? நான் அங்கேருந்து சுட்டுட்டேன்றியா? நல்லாருக்குடா! இவ்ளோதானா நீ என்னை நம்பறது? எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.

க: இதுக்குப் போயி நீ ஏண்டா வருத்தப் படணும்? அட்ரெஸைக் கொடுத்தா எல்லாம் சரியாப் போயிடும்தானே! அதுல உனக்கு ஏன் தயக்கம்?

கதி: அதில்லேடா. அட்ரெஸ் மறந்துபோயிடுச்சு. கடையும் ஞாபகம் இல்லை. இதுக்காகவா என்னை வரச் சொன்னே! நல்ல ஆளுப்பா நீ! சரி, நான் கிளம்பறேன்.
[எழுந்து விரைகிறான்]

[பின் டேபிளில்]
மூ: செமத் திருடன்ப்பா இவன்! ஊரையே முழுங்கி ஏப்பம் விட்டுருவான் போலிருக்கே!

ச: எனக்கும் அப்பிடித்தான் தோணுது. இப்ப என்ன செய்யறது? இது என்னுதுதான்னு என்னால நிரூபிக்க முடியாது. அவன் சொல்லுதான் நிலைக்கும். போலீஸுக்கும் போக முடியாது.

மூ: நானே விட்டுக் கொடுத்த பொம்மை, இப்ப நம்ம யாருக்குமே இல்லாமப் போயிருச்சேன்னு நினைச்சா ரொம்ப சங்கடமா இருக்குப்பா. எதுனாச்சும் பண்ணனும்.

சு: என்ன பண்ண முடியும்? எனக்கு கிடைச்சது அவ்ளோதான். ஏதோ இப்ப கிடைச்ச இந்த பொம்மையை வைச்சு ஒப்பேத்தாலாம்னு பார்த்தேன்! எங்க அப்பனை இந்த ஜென்மத்துல நான் திருப்தி பண்ணப் போறதில்ல.

[சுகுமார் முகம் வருத்தமாக மாறுவதைப் பார்த்து நண்பர்களும் வருந்துகிறார்கள்.]

மூ: கவலைப்படாதேடா! எதுனாச்சும் பண்ணுவோம்! டேய் சுகு! அந்த பொம்மை உனக்குத்தான்!

[திரை]

காட்சி - 7


[கதிரவன் வீடு. கதவு தட்டும் ஓசை. கதிரவன் மனைவி எழுந்து சென்று திறக்கிறார். வெளியே ஒரு காவல்துறை அதிகாரி!]

கா.அ.: இது கதிரவன் வீடுதானே!

கதி.ம.: [பதறியபடி]ஆமாம். அவர் என்ன தப்பு பண்ணினாரு? எதுக்கு அவரைத் தேடுறீங்க? என்னங்க... இங்க வாங்களேன்!

கதி: யாரது? எதுக்கு இப்படி அலர்றே? யார் சார் நீங்க? என்ன வேணும் உங்களுக்கு?

கா.அ.: ஓ! நீங்கதன் கதிரவனா? சத்தம் போடாதீங்க! உங்களை நான் கைது செய்யப் போறேன்.

கதி: ஏன்?... எதுக்கு... வாரண்ட் இருக்கா? என்ன காரணம்?

கா.அ.: அதெல்லாம் ஸ்டேஷன்ல போய் பேசிக்கலாம். கொள்ளையடிச்ச, திருட்டுப்போன, பொருள்களை எல்லாம் நீங்க பதுக்கி வைச்சிருக்கறதா எங்களுக்குத் தகவல் வந்திருக்கு. இதோ.. இந்தக் கடிகாரம். அதோ.. அந்த தந்தப் பதுமை.... ஆ..ஆ! இதோ.. இந்தப் பொம்மை! இதே! இதே! இதுவேதான். இதைப் பத்தின விவரமான வர்ணனையோட எங்களுக்குத் தகவல் வந்திருக்கு! கொலை கிலையெல்லாம் கூட பண்ணுவீங்களோ! ரொம்பப் பயங்கரமான ஆளுப்பா நீ! இதுக்குள்ளா ஏதாவது வெடிகுண்டு வைச்சிருக்கியா நீ? உன்னை ஜெயில்ல தள்ளி முட்டிக்கு முட்டி தட்டினாத்தான் உனக்கு புத்தி வரும்.

கதி.ம.: ஸார் ஸார்! ஸார்! கொஞ்சம் தயவு பண்ணுங்க. இவரு அப்படிப் பட்டவர் இல்லை. ரொம்ப நல்லவருங்க. அவரை விட்டிருங்க ஐயா! கெஞ்சிக் கேட்டுக்கறேன் உங்களை! என் அண்ணாவாட்டம் நினைச்சுக் கேக்கறேன் அண்ணா!

கா.அ.: என்னம்மா! இப்படி ஸெண்டிமெண்ட்டாப் போட்டுத் தாக்கறீங்க! சரி, நீங்க சொல்றீங்களேன்னு விடறேன். சரி! இந்தப் பொம்மையை மட்டும் நான் எடுத்துக்கறேன். மத்ததுக்கெல்லாம் இன்னும் ஆதாரம் இல்லை. உங்களுக்கு ஆட்சேபணைன்னா சொல்லுங்க. இல்லியா...ஸ்டேஷனுக்குப் போயி தீர்த்துக்கலாம்.

கதி.: சரிங்க! அதை நீங்களே எடுத்துக்கோங்க! எங்களை விட்டுருங்க!

கதி.ம.: ஆமாங்க! அதை எடுத்துகிட்டு எங்களை விட்டிருங்க!

கா.அ.: உங்களைப் பார்த்தா பரிதாபமா இருக்கு. நல்லவங்க மாரி தெரியுது. உங்க முகத்துக்காக விடறேன். இனிமேலாவது ஒழுங்கா இருங்க!

[பொம்மையை லாவிக்கொண்டு செல்கிறார் காவல் துறை அதிகாரி]


[திரை]

காட்சி - 8

[சங்கர் வீடு. சங்கர், சுகுமார் உட்கார்ந்திருக்கிறார்கள். கதவைத் திறந்துகொண்டு மூர்த்தி போலீஸ் உடையுடன் உள்ளே நுழைகிறான். அவன் கையில் அந்தப் பொம்மை!!]

மூ: டட்டடைய்ங்கேய்!

சு:[ஆவலுடன் எழுந்து] டேய்! எப்பிடிடா!!!!!!!!!!!!!!

மூ: அதான் மூர்த்தி வேலை! சொல்ல மாட்டான்! செஞ்சிருவான்!

ச: சொல்லுடா! எப்பிடிடா இந்த பொம்மை கிடைச்சுது?

மூ: [சந்த்ரமுகி ரஜினி குரலில்] என்னைப் பார்! என் ட்ரெஸ்ஸைப் பார்! போலீஸா மாறியிருக்கும் மூர்த்தியைப் பார்! லக்கலக்கலக்கலக்கலக்கா!

ச: புரியுதுடா! புரியுது! அட்டகாச வேலைடா இது! எப்பிடிடா இதை செய்ய முடிஞ்சுது?

மூ: அதுக்கு..... உங்க தாத்தாவுக்கு நீ நன்றி சொல்லு! அவரோட ட்ரெஸ்தான் இதுக்கு உதவி செஞ்சுது! அவரோட ஆத்மா இன்னிக்குத்தான் சாந்தி அடைஞ்சிருக்கும்!

சு: [பொம்மையை மூர்த்தி கையில் இருந்து வாங்கியபடி] உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலைடா! நண்பன்னா நீதாண்டா நண்பன்!

மூ: அட! இதுக்குப் போய் இப்படிப் பாராட்டறேயேடா! உனக்கு ஒண்ணுன்னா நாங்க விட்டுருவோமா?

[சொல்லியபடியே சுகுமார் முதுகில் பலமாகத் தட்டுகிறான்! சுகுமார் கையில் இருந்த பொம்மை அவன் கையில் இருந்து தவறி கீழே விழுந்து நொறுங்கி உடைகிறது!]

பெரிய நிசப்தம்!~ அனைவர் முகத்திலும் திகைப்பு!

[திரை]

---------------


இந்த நாடகத்தை உங்கள் தமிழ்ச் சங்கத்தில் நடிக்க விரும்பினால், எனக்கு ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, தாராளமாக நடியுங்கள் எனச் சொல்லிக் கொள்கிறேன்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP