Saturday, March 24, 2007

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -17 "சீரான கோலகால நவமணி"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -17 "சீரான கோலகால நவமணி"

சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும்

சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும்

ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும்

ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்

ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர குருநாதா

கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மறு பானு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு மருகோனே

கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே.



எப்போதும் போல, பின் பார்த்து, முன் பார்க்கலாம்!

"ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடும் இறையவர்"


ஆயகலைகள் அறுபத்து நான்கு கலைகளிலும்
நன்குணர்ந்த மதுரையம்பதியின் மன்னனாம்
இராஜசேகர பாண்டியன் அரசவைக்கு வந்தவொரு
புலவனன்று, சோழமன்னன் கரிகால் வளவனின்
திறமைதனைப் புகழ்ந்தங்கு சொல்லிடவே
தானும் மீதமுள்ள ஓர் கலையாம் பரதம் பயின்றிட,

தனக்கு வந்த கால்வலியால் வாடிநொந்து
"சற்றுநேரம் பயின்றிடவே இவ்வலியென்றால்
அனவரதமும் ஓயாது ஆடிநிற்கும் ஆடல்வல்லானுக்கு
எத்துணை வலி இருந்திருக்கும்? அவர் ஆட்டம்
நின்றுபோனாலோ உலகியக்கம் நின்றுபோம்.
எனவே கால் மாறி ஆடச் சொல்லி வேண்டிடுவோம்"

என நினைந்து வெள்ளியம்பலம் விரைந்து சென்று
விரிசடைக் கூத்தனைக் கண்டு வணங்கி
கால் மாறி ஆட வேண்டித் தவம் செய்ய,
அரசன் உயிர்விடும் நிலைகண்டு,
"வான்மாறினும் மொழி மாறாத மனம் களிக்க"
கால்மாறி ஆடத் துவங்கினான் ஆடல்வல்லானும்!

அத்தகைய கருணை நிறை தெய்வம் வாழும்
அழகுநிறை மாடகூடம் நிறை எழிலான
கூடலம்பதியின் வெள்ளியம்பலத்தில் ஏறி
கால்மாறி ஆடிநிற்கும் கண்நுதற்கடவுள்,

"ஏழேழு பேர்கள் கூற வருபொருள் அதிகாரம்
ஈடாய ஊமர் போல வணிகரில்
ஊடாடி ஆலவாயில் விதிசெய்த
லீலாவிசார தீர வரதர குருநாதா"

பின்னொருகாலம் மதுரையை ஆண்ட
வம்சசூடாமணி எனும் பாண்டிய மன்னன்
சண்பகமலர் கொண்டு சோமசுந்தரக்கடவுளை
அர்ச்சித்து வந்தமையால் சண்பக பாண்டியன்
எனும் பெயர் பெற்று முறையரசு செய்யும்வேளை,
காலத்தின் கூற்றால் பஞ்சம் தலை விரித்தாடியது.

பஞ்சத்தால் வாடிய பலநூறு புலவர்களை
சண்பக மன்னனும் பரிவுடன் ஆதரித்து
'நம்மிடையே தங்கி நன்நூல் படைத்து
நம்மையும் மகிழ்விக்க' என வேண்ட,
புலவோரும், 'பொருள்நூலின்றி பா இயற்றல்
இயலாதே' எனச் சொல்ல, அரசனும்

ஆலயம் ஏகி இறைவனை வணங்கி
தமிழுக்கு வந்த குறையகற்றி பொருள்நூல்
தந்தருள வேண்டிடவே, சொக்கலிங்கப் பெருமானும்
'இறையனார் அகப்பொருள்'என்னும் நூலியற்றி
தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம்
தன் பீடத்தின் கீழ் வைத்து அருளினார்.

'பொருளுக்குப்' பொருள் சொல்ல புலவரை வேண்ட
ஆளொருவராய் அதற்குப் பொருளுரைத்து
தத்தம் விளக்கமே சிறந்ததென வாதாட
மீண்டும் இறைவனையே தஞ்சமடைந்து
கலகத்தை நீக்கி நல்வழி காட்ட வேண்ட,
இறைவனும் அசரீரியாக வந்து,

"உப்பரிகுடிகிழாரின் மகனாம் உருத்திரசன்மனை
அழைத்து வந்து பொருளுக்கு உரை கேட்கச் செய்"
என நல்லுரை சொல்லவே, அவ்வண்ணமே
உருத்திரசன்மனை, செட்டிப் பாலகனை,
பாலறியா மணத்தினனை, வாய் பேசா ஊமையினை
அழைத்துவந்து புலவோரின் உரை கேட்க வேண்ட,

முகக்குறிப்பாலேயே பலர் உரையினையும் கேட்டு
சிலரதை உவந்து, சிலரதை வெறுத்து,
சிலரதை புகழ்ந்து, சிலரதை இகழ்ந்து,
கபிலர், பரணர் உரைகேட்டு ஆங்காங்கு மகிழ்ந்து
நக்கீரர் உரை கேட்டு ஒவ்வொரு சொல்லுக்கும்
மகிழ்ந்து, கண்ணீர் சொரிந்து இதுவே உண்மையுரை

எனப்பாராட்டி குமரனே உருத்திரசன்மனய்
வந்து விளக்கமளித்ததைக் குறிப்பால் காட்டி
தமிழுக்குப் புகழ் சேர்த்த திருவிளையாடல்
தரணிக்குக் காட்டிய லீலா விநோதரே!
தீரம் மிகுந்தவரே! வரங்களை அருள்பவரே!
எனக்கும் இவ்வுலகுக்கும் குருநாதரே!


"கூராழியால் முன் வீய நினைபவன்
ஈடேறு மறு பானு மறைவுசெய்
கோபாலராயன் நேயமுள திருமருகோனே"

தன்மகனைக் கொன்ற ஜயத்ரதனை பகல் பொழுதுக்குள்
கொன்றழிப்பேன் என சபதமிட்ட அருச்சனனுக்காக
பாரதப் போரில் பதினான்காம் நாளதனில்
ஆழிவிட்டு ஆதித்தனை மறைத்து
உள்ளிருந்த ஜயத்ரதனை வெளிக்கொணர்ந்து
ஆழியை திரும்ப வாங்கி பார்த்தனுக்கு உதவிட்ட

கோபாலராயன் என உலகம் போற்றும்
கண்ணபிரான் மனம் மகிழும் திருமருகனே!


[மேல் விளக்கம் வேண்டுவோர் இங்கு பார்க்கவும்!]

"கோடாமல் ஆரவார அலையெறி
காவேரியாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ் விராலி மலையுறை பெருமாளே."


எக்காலமும் குறைவின்றி ஆரவார அலை வீசி
பெருக்கெடுத்து ஓடுகின்ற காவிரி நதி பாய்ந்து
வளம் கொழிக்கும் "வயலூர் எனும் திருத்தலத்திலும்,
கோனாடு எனப்புகழ் பெறும் "விராலிமலை"என்னும்
திருத்தலத்திலும் எந்நாளும் வீற்றிருந்து
அருள் சுரக்கும் இன்னமுதே! எம் தலைவனே!

[மீதிப் பகுதியும், அருஞ்சொற்பொருளும் இன்றிரவு வரும்!]

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP