Saturday, October 27, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 25

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 25

முந்தைய பதிவு இங்கே!


[படம் அனுப்பி உதவிய கோவி.கண்ணனுக்கு நன்றி!]

23.
"அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர். " [1160]

முன்னிருட்டிலேயே எழுந்து கிளம்பி விட்டான் ராபர்ட்.

'கந்தனை நம்பிப் பயனில்லை! அவனுக்கு எனக்கிருக்கும் ஆர்வம் இல்லை. அவன் கவனமெல்லாம் ஏதோ ஒரு புதையலைப் பற்றியே!
இப்போ வேற இவன் அந்தப் பொன்னியைப் பார்க்கிற பார்வையே சரியாயில்லை! ஏதோ லவ் மாதிரி தெரியுது. ஒரு காரியம் பண்றப்ப,
நடுவுல இந்தக் காதலுக்கெல்லாம் இடம் கொடுத்தா எடுத்த காரியத்தை முடிக்க முடியாமப் போயிரும்.
நாம நம்ம வேலையைப் பாக்கணும்'

என முடிவு செய்த ராபர்ட், விடிவதற்கு முன்னரே எழுந்து, பொன்னி சொன்ன வழியில் வேகமாக நடை போட்டான்.

2, 3 மணி நேர நடைக்குப் பின்னர், தான் எங்கோ ஒரு நடுக்காட்டில் போகுமிடம் இன்னதெனத் தெரியாது மாட்டிக் கொண்டதை உணர்ந்தான்!

'தனியாக வந்தது தப்பு. பொன்னி, கந்தனோட வந்திருக்கலாம். இப்போ இந்த நடுக்காட்டுல வந்து சிக்கிக்கிட்டோமே'எனக் கொஞ்சம் அஞ்சினான்.

'என்ன தம்பி! எங்கே போறீங்க?' என்ற குரல் கேட்டு தூக்கிவாரிப் போட்டது போல் திரும்பினான்.

நீண்ட வெண்ணிறத் தாடியுடன், அமைதி தவழும் முகத்துடன், ஒரு பெரியவர் ஒரு மரத்தடியில் அமர்ந்தபடி இவனைப் பார்த்தார்.

'இரும்பைப் பொன்னாக்கும் சித்தரைப் பார்ப்பதற்காக வந்தேன். வழி தவறிட்டேன்னு நினைக்கிறேன். கொஞ்சம் தயவு பண்ணி, முத்துமலைக்கு போற வழியைச் சொன்னீங்கன்னா நான் திரும்பி கிளம்பின இடத்துக்குப் போயிருவேன்'என்றான் ராபர்ட்.

'ஓ! அங்கேருந்துதான் வர்றீங்களா? சரி! அதிருக்கட்டும். உங்களுக்கு எதுக்கு தங்கத்து மேல ஆசை? எப்படி வந்தது?' என்றார் பெரியவர்.

உற்சாகமானான் ராபர்ட்!

தனக்கு இவர் உதவுவார் என ஒரு நம்பிக்கை பிறந்தது.

'நான் ரொம்ப நாளா இதைப் பத்தி புஸ்தகம்லாம் படிச்சு வரேன். அதுல இதைப் பத்தி விரிவா சொல்லியிருக்கு. இதை விளக்கமா சொல்லக்கூடிய
ஒரு சித்தரைத் தேடிகிட்டு இருக்கேன். அதான் இங்கே வந்திருக்கேன்'

'இதுவரைக்கும் எதையாவது தங்கமா இல்லை வெள்ளியாகவாவது மாற்றி இருக்கிறாயா?' சிரித்துக் கொண்டே கேட்டார் பெரியவர்.

அவர் ஒருமையில் அழைக்க ஆரம்பித்ததைக் கவனித்த ராபர்ட், சட்டென உஷாராகி,

'இல்லீங்க! என்ன பண்ணனும்னு முறையெல்லாம் படிச்சிருக்கேன். இன்னும் முயற்சி பண்ணலை!' என்றான்.

'முயற்சியே செய்யாம தங்கம் பார்க்க ஆசைப் படறே! ம்ம்! முதல்ல போயி, நீ படிச்சது சரியான்னு பாரு. அதுல சொன்னதை செஞ்சு பாரு!
அப்பறமும் வரலைன்னா, இங்கியே வா! முயற்சியே செய்யாம பெருசா ஆசைப்படறவன் எப்பவுமே எதையுமே அடைஞ்சதில்லை'
என்றார்.

"ஐயா! நீங்கதான் நான் தேடிக்கிட்டு இருக்கற சித்தரா?' என அவர் காலில் விழுந்தான் ராபர்ட்.

'அதைப் பத்தி பிறகு பார்க்கலாம். இப்ப நீ போய் படிச்சதை செய்யத் தொடங்கு. உனக்கு நல்லது நடக்கட்டும்' என ஆசீர்வதித்தார்.

'இதோ இந்த வழியா நேரே போனால் ஒரு ஓடை வரும். அங்கே வலது பக்கம் திரும்பி சிறிது தூரம் சென்றால், ஒரு வெள்ளைப்பாறை தெரியும்.
அங்கிருந்து பார்த்தால் நீ முத்துமலைக்குச் செல்ல வேண்டிய பாதை தெரியும்' எனச் சொல்லி அவனுக்கு விடை கொடுத்தார்.

மீண்டும் அவரை வணங்கிவிட்டு, ராபர்ட் ஓடையை நோக்கி நடக்கலானான்.
********** ******

கந்தன் குழப்பத்துடன் எழுந்து வெளியே வந்தான்.

ராபர்ட் தன் வழியே சென்றுவிட்டான் எனப் புரிந்தது.

ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு சிலர் சேர்ந்தாலும், அவரவர் வழி எனத் தெரியும் போது பிரிந்து செல்லத் தயங்க மாட்டார்கள் எனப் புரிந்தது.

அப்படிச் செல்லாதவர்கள் என்றுமே தங்கள் லட்சியத்தை அடையவும் மாட்டார்கள் எனவும் சிந்தித்தான்.

ராபர்ட் செய்தது சரிதான் எனப் பட்டது. இனி நம்ம வழியை நாமதான் பார்த்துக்கணும் என எண்ணினான். சிரிப்பு வந்தது! சிரித்துக் கொண்டே தலை நிமிர்ந்தான்.

பொன்னி எதிரில் வந்து கொண்டிருந்தாள், கையில் ஒரு மண் குடத்தில் நீரேந்தியபடி.

மனதில் ஒரு இனம் தெரியாத ஆனந்தம் பிறந்தது கந்தனுக்கு.

'இவ்ளோ சீக்கிரமாவே எளுந்திருவியா?'எனச் சம்பந்தமில்லாமல் கேட்டு, அவளை நிறுத்தினான்.

'ஐய்யே! எளுந்திருக்காமத்தான் தண்ணி கொண்டு வருவாங்களாக்கும்!' எனச் சிரித்தாள் பொன்னி.

அவள் நக்கலடிக்கிறாள் என நினைத்தாலும் கோபம் வரவேயில்லை கந்தனுக்கு.

ஏதோ ஒன்று மனதில் உந்த, அவளைப் பார்த்து துணிச்சலோடு,

'உன்கிட்ட ஒண்ணு சொல்லணும். நான் உன்னை விரும்பறேன். உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்!'

பொன்னியின் கையில் இருந்த மண்குடம் கீழே விழுந்து உடைந்தது! நீர் சிதறியது! கந்தன் மேல் தெறித்தது.

தண்ணீர் தன்மேலே பட்டுச் சிதறியதை ஒரு நல்ல சகுனமென நினைத்தான் கந்தன்.

"ஒரு புதையலைத் தேடி நான் ஊரை விட்டுக் கிளம்பினேன். நடுவுல என்னென்னல்லாமோ ஆயிப்போச்சு.இப்போ கீழே நடக்கற கலவரத்தால
இங்கே வந்து மாட்டிகிட்டேன். எதுக்குடா இப்படி ஆச்சுன்னு நினைச்சேன். இப்பத்தான் புரியுது, அது ஒரு பெரிய ஆசீர்வாதம்னு. ஏன்னா,
அதனாலதானே உன்னை நான் பார்க்க முடிஞ்சுது!'

'கலவரம்லாம் சீக்கிரமே முடிஞ்சிரும். நீங்களும் எதுக்காக வந்தீங்களோ, அதைப் பார்க்கப் போயிறலாம்' என்றாள் பொன்னி.

'எங்க மலை ஆளுங்கள்லாம் எப்பவுமே எதுனாச்சையும் தேடிகிட்டுத்தான் இருப்பாங்க. எங்களைப் போல பொண்ணுங்களுக்கெல்லாம்,
அதுல ரொம்பவே பெருமை' என்றபடியே தன் வீடு நோக்கி செல்லத் துவங்கினாள்.

'கொஞ்சம் நில்லு. உங்கிட்ட ஒண்ணு சொல்லணும். என் கதையைக் கேளு. அதுக்கப்புறம் நீ உன் முடிவைச் சொல்லிட்டுப் போகலாம்!' என்றபடி அவளை மறித்தான்.

தன் கனவில் தொடங்கி, குறிசொன்ன கிழவி, தங்கமாலை அணிந்த கிழவர் சொன்னது, ஆடுகளை விற்றுவிட்டு மதுரைக்கு வந்தது,
பணத்தைத் தொலைத்தது, அண்ணாச்சியின் தொடர்பு, பின்னர் அவரோடு சேர்ந்து ஓட்டலைப் பெருசா வளர்த்தது, பின்னர்,
திடீரென ஒருநாள் அங்கிருந்து கிளம்பியது, பஸ்ஸில் ராபர்ட்டைப் பார்த்தது, ஒரு கலவரத்தின் காரணம் பஸ் நிற்க, அதனால், ராபர்ட்டோடு
இங்கு வந்து சேர்ந்தது
வரை எல்லாவற்றையும் விரிவாகச் சொன்னான்.

பொறுமையாக அத்தனையையும் கேட்ட பொன்னி அவனை அன்புடன் பார்த்தாள்.

'உன்னைப் பார்த்த அன்னிக்கே எனக்குள்ளே என்னமோ பட்டுச்சு. இவன் தான் உனக்குன்னு வந்தவன்ற மாரி ஒரு உணர்வு. அதான் நீ சொல்ற
அந்த உலக ஆத்மாவோட குரலோ என்னமோ, எனக்குத் தெரியலை. ஆனா, உன்னோட எனக்கு ஒரு பந்தம் இருக்குன்னு மட்டும் எனக்குப்
புரியுது.ஒருவேளை இந்தமாரி ஒருத்தனுக்காவத்தான் நான் காத்திருந்தேனோ, தெரியலை. நாங்கள்லாம் மலைஜாதிப் பொண்ணுங்க.
எங்களுக்கு சாதி கட்டுப்பாடு இதுல்லாம் கிடையாது. வழக்கமா எங்க ஆளுங்கள்ல ஒருத்தரைத்தான் நாங்க கல்யாணம் பண்ணிப்போம்.
ஆனா, அதுக்காவ, வேற ஆளுங்களைக் கட்டிக்கக்கூடாதுன்னுல்லாம் ஒண்ணும் கிடையாது.நெறையப் பேரு அப்பிடி வேத்தாளைக் கட்டிகிட்டு போயிருக்காங்க. எனக்கு மட்டும் இந்த மலை சாமி என்னமோ ஒரு நல்ல வழியைக் காட்டும்னு ஏதோ ஒண்ணு சொல்லிகிட்டே இருந்திச்சு. அது நீதான்னு நான் இப்போ திடமா நம்பறேன்.'

கந்தன் மகிழ்ச்சியுடன் அவள் கையைப் பற்ற முயன்றான்.

பொன்னி தன் கைகளை பின்னுக்குக் கட்டிக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

'நீ இப்ப உன் லட்சியத்தைத் தெளிவாச் சொல்லிட்டே! சகுனத்து மேல உனக்கு இருக்கற நம்பிக்கையையும் சொன்னே. இப்ப எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை. பயமும் இல்லை. அந்த சகுனந்தான் உன்னை என்கிட்ட கொண்டுவந்திருக்கு.நானே உனக்குன்னு ஆனதுக்கப்புறம், எனக்கு என்ன தோணுதுன்னா, நானும் உன்னோட கனவுல ஒரு ஆளு, நீ சொல்ற அந்த விதியில ஒரு சின்ன பகுதின்னு! அதனால, நான் இப்ப சொல்லப்போறது என்னன்னா, கவனமாக் கேளு!... நீ எதுக்காக இங்கே வந்தியோ, அதைத் தொடர்ந்து போ!எத்தனை நாளு ஆனாலும் சரி,..... அதை விடாதே! இங்க இருக்கற மரங்கள் வேணும்னா இல்லாமப் போயிறலாம். ஆனா, காடு இருக்கும். அதே மாரித்தான் நாம ரெண்டு
பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் வெச்சிருக்கற அன்பும். எல்லாம் விதிப்படி நடக்கும். நான் உன்னோட விதியில ஒரு பங்குன்னா, நீ ஒரு நாளைக்கு என்கிட்ட நிச்சயமாத் திரும்பி வருவே!அதுவரைக்கும் நான் காத்திருப்பேன் உனக்காக!'

பரவசத்துடன், அவள் கையைப் பற்ற மீண்டும் முயற்சித்தான் கந்தன்.

தன் கைகளை இறுக்கமாகக் கட்டியபடி, பொன்னி தன் வீடு நோக்கி, திரும்பிப் பாராமல் நடந்தாள் பொன்னி!

[தொடரும்]
********************************************

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 24

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 24

முந்தைய பதிவு இங்கே!



22.
"நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்." [1093]

துணிச்சலாக அந்தப் பெண் கேட்டவுடன், திடுக்கிட்ட கந்தன் 'ஒண்ணுமில்லே! ஒண்ணுமில்லே!' என்று வெட்கத்துடன் சிரித்தான் .

'கொல்லி மலைல என்ன விசேஷம்? அங்கே சித்தருங்கள்லாம் நடமாடறதா சொல்றாங்களே. அது உண்மையா? அப்படி யாரையாச்சும் நீங்க
பாத்திருக்கீங்களா? அப்படி பாத்திருந்தா, அவர்கிட்ட எங்களை கூட்டிப் போகமுடியுமா?' எனக் கேள்விகளை அடுக்கி, தான் அவளை வைத்த கண்
வாங்காமல் பார்த்த நிகழ்வை மறைக்க முயன்றான்.

'காட்டுக்குள்ளே ரொம்ப தூரம் போவணும் அதுக்கு! அங்கே ஒரு சிவலிங்கம் இருக்கு. பவுர்ணமிக்குப் பவுர்ணமி அங்கே ஆளுங்க வருவாங்க.
நிறைய சித்தருங்க இருக்கறதாச் சொல்றாங்க. ஆனா, நான் பாத்ததில்லேன்னு நினைக்கறேன்' என்றாள் பொன்னி.

'அப்படீன்னா?' என ஒன்றும் புரியாமல் கேட்டான் ராபர்ட்.

'அதில்ல. ஒரு தடவை ஒருத்தரு நான் போயிட்டிருக்கும் போது என் வழியில வந்தாரு. "நீ ரொம்ப நல்ல பொண்ணு. உனக்கு நல்லதே நடக்கும்!"னு
சொல்லிட்டு என்னைக் கடந்து போனாரு.திரும்பிப் பாத்தா ஆளைக் காணும்! ஒருவேளை அவருதான் நீங்க சொல்ற சித்தரோ என்னமோ! அதான்
பாத்தேனா இல்லியான்னு தெரியலை; இருக்கலாமோன்னு நினைக்கறேன்னு சொன்னேன்' என்றாள் பொன்னி.

ராபர்ட் சற்று நிலை கொள்ளாமல் தவித்தான். விட்டால் இப்பவே அவரைத் தேடிக்கொண்டு ஓடிவிடுவான் போலத் தோன்றியது.

'அவர் எப்படி இருந்தாரு? எந்தப் பக்கமாப் போனா அவரைப் பார்க்கலாம்?' என ஆவலுடன் கேட்டான்.

'அப்படியெல்லாம் சுலபமா நம்ம பார்வையில பட மாட்டாங்களாம். நானே இவரு ஒருத்தரைத்தான் பார்த்திருக்கேன். கொல்லிமலை போற வழியிலதான் பார்த்தேன்.இப்ப இருட்டிடுச்சு. நாளைக்குக் வழி காட்டறேன்.' என்றபடி உள்ளே சென்றாள் பொன்னி.

போகுமுன் ஒரு பார்வையை கந்தன் பக்கமாய் வீசிவிட்டு !!!

'சரிங்க தம்பிங்களா! நீங்க போய் கைகாலைக் கழுவிட்டு வாங்க. சாப்பிடலாம். வாங்க, உங்க எடத்தைக் காட்டறேன்' என்று, பக்கத்தில் இருந்த ஒரு
குடிசைப் பக்கமாக அவர்களை அழைத்துச் சென்றான் காத்தான்.

நாலு பக்கங்களிலும் வளைவாகத் தட்டியால் மறைத்து, சில மரங்களால் ஒரு கூடாரம் போல் சிறிதாக, அழகாக இருந்தது அந்த இடம்.

'படலைச் சாத்திகிட்டு படுக்கணும். எல்லாம் ஒரு சாக்கறதைக்குத்தான்! ரெண்டு கம்பிளி வைச்சிருக்கேன். குளிருச்சின்னா அதயே போத்திக்கலாம்' , 'சரி! சீக்கிரமா வந்திருங்க. களைப்பா இருப்பீங்க! எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.

கொண்டுவந்த பைகளை ஒரு மூலையில் வைத்துவிட்டு, முகம் கழுவிய பின்னர் காத்தனின் குடிசையை நோக்கி நடந்தனர் இருவரும்.

'நாளைக்கு முதல் வேலையா அந்த சித்தரை எப்படியாவது சந்திச்சுறணும்' என்றான் ராபர்ட்.

'அதான் அந்தப் பொண்ணு வழி சொல்றேன்னு சொல்லியிருக்கே. கொஞ்சம் பொறுக்கலாமே' என்றான் கந்தன்.

அவனுக்கு இந்த ராபர்ட் சற்று வேகமாக நடந்தால் என்ன எனத் தோன்றியது!
'நீ வேணுமின்னா, அந்தப் பொண்ணு சொல்ற வரைக்கும் காத்திரு. எனக்கு இது மாதிரி இடங்கள்லாம் பழக்கம்தான். காலையில நான்
போகப் போறேன்' என்றான் ராபர்ட்.

'உன் இஷ்டம்' எனச் சொல்லிவிட்டு, கந்தன் நடந்தான்.

அரை நிலா வெளிச்சத்தில், குடிசைக்கு வெளியே ஒரு தட்டி விரித்து, அதில் உட்கார்ந்தபடியே இவர்களுக்காகக் காத்திருந்தான் காத்தான்.
அவன் அருகில் ஒரு சிறுவன்... பத்து வயதிருக்கலாம்.. குத்த்க்காலிட்டு உட்கார்ந்தபடியே இவர்களை அண்ணாந்து பார்த்தான்..

'வாங்க, இப்படியே உக்காருங்க' என்று சொல்லியபின், 'பொன்னி, அவங்கள்லாம் வந்திட்டாங்க. சாப்பாடு எடுத்து வையி' என ஒரு குரல்
கொடுத்தான்.

'எல்லா வேலையும் அந்தப் பொண்ணுதான் செய்யுமா?' என விசாரித்தான் கந்தன்.

'தாயில்லாப் பொண்ணுங்க. இதோ இவன் பொறந்ததுமே எம்பொஞ்சாதி செத்துப் போயிருச்சு. நாந்தான் அதுக்கபுறம் இன்னொரு கண்ணாலம்
வேண்டாமின்னு இதுங்க ரெண்டையும் வளத்தேன். பொன்னிதான் எல்லா ஒத்தாசையும் செய்யுது. தங்கமான பொண்னு. அதுக்கும் சீக்கிரமே ஒரு
கண்ணாலத்தைப் பண்ணிறணும்.....'

'இப்ப என்ன பேச்சு என்னைப் பத்தி? என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்? நான் உன்னைக் கேட்டேனா? சும்மா யார் வந்தாலும் இதைச் சொல்றதே
உன் வேலையாப் போச்சு' என்று செல்லமாகக் கடிந்தபடி பொன்னி வெளியே வந்தாள்.

அவள் கையில் ஒரு கலயமும், ஒரு தட்டும் இருந்தது.

இவள் வந்ததும், சிறுவன் எழுந்து உள்ளே போய், சில மண்பாண்டங்களைக் கொண்டுவந்தான்.

அந்தப் பாண்டங்களில், கலயத்தில் இருந்த கேப்பைக் கஞ்சியை ஊற்றி அவர்கள் முன் வைத்தாள்.

தட்டில் இருந்து வேகவைத்த, வள்ளிக் கிழங்குகளை ஆளுக்கொன்றாக வைத்தவள், கந்தனுக்கு மட்டும் ஏனோ கூடுதலாக ஒன்றை வைத்தாள்.

கந்தனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

பொன்னி அவனைப் பார்த்து புன்னகைத்தது போலத் தோன்றியது.


அவளைப் பார்க்க தைரியமில்லாமல், அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்தான்.

சரியாகச் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆனதும் ஒரு காரணம்.

மலையேறி வந்ததுல களைப்பா இருப்பீங்க. போயிப் படுங்க.காலைல பார்க்கலாம்' என விடை கொடுத்தான் காத்தான்.

'கொல்லிமலைக்கு எந்தப் பக்கமாப் போகணும்?' என ராபர்ட் விசாரித்து வைத்துக் கொண்டான்.

குடிசைக்குள் நுழைந்ததும், 'நான் படுக்கப் போறேன்'எனச் சொல்லி, ராபர்ட் ஒரு மூலையில் துண்டை விரித்துப் படுத்தான்.

கந்தனுக்கும் அசதி கண்ணைச் சுழட்ட, சற்று நேரத்தில் அசந்து தூங்கிப் போனான்.

பறவைகளின் சத்தத்தில் காலையில் கண்விழித்த கந்தன் எழுந்தான்.

இருள் பிரிந்து, மெலிதாக வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது.

திரும்பிப் பார்த்தான்.

ராபர்ட் படுத்த இடம் காலியாக இருந்தது!



[தொடரும்]
********************************
அடுத்த அத்தியாயம்

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP