Monday, July 31, 2006

உறவுகள் [தேன்கூடு போட்டிக்கு!]

உறவுகள் [தேன்கூடு போட்டிக்கு!]

என் இனிய உறவுகளே!

உறவுகள் புனிதமானவை!
அவை ஏதோ நம் தேவைக்கும், வசதிக்கும் ஏற்படுவன அல்ல!
நம் விருப்பத்துக்கும் கட்டுப்படாதவை அவை.
நம்புங்கள்!
இது இறைவன் வகுத்த வழி!
இயற்கை நமக்களித்த கொடை!
தாய் - தந்தை, அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை, கணவன் - மனைவி, நண்பன் - தோழி, மற்றும் எல்லா உறவுகளுமே இப்படித்தான்.
நாம் கேட்டுப் பெறுவன அல்ல -- நம் மேல் சுமத்தப்படுகிற..... இனிய பாரம்!

உணர்வுகள் அப்படியல்ல!
கண நேரச் சலனத்தின் விழுதுகள் அவை!
உணர்வுகளால் தோன்றிய உரங்களே, உறவாய் மலர்வது போல ஒரு மயக்கம் வரலாம்.
சிந்தித்துப் பார்த்தால், அந்த உணர்வுகள் தோன்ற, நம்முள் ஏற்பட்ட உறவே அடிப்படை என்பது புரியும்.

ஒருத்தி ஒருவனை மணக்கும்போது கூடவே வருகின்ற, அமைகின்ற உறவுகள், அவள் வேண்டி வந்ததல்ல!
அவனுக்கும் அப்படித்தான்.
அங்குதான் இறைவன் -- இயற்கை உறவுகளை வகுக்கிறான், விதிக்கிறான்.

உறவால் வரும் உணர்வா, இல்லை உணர்வால் வரும் உறவா என்று பார்த்தால், முன்னதற்கே வலிமை அதிகம்.
உறவால் உணர்வுகளும், உணர்வால் உறவுகளும் அவ்வப்போது காயப்பட்டாலும், முன்னது எளிதில் ஆறுகிறது; ஆற வேண்டும்.
இதை மாற்றி, உணர்வுகளை உச்சாணிக்கொம்பில் ஏற்றி, அதன் பேயாட்டத்திற்கு சலங்கை கட்டும்போது, ஆறா ரணங்களை -- தழும்புகளை அல்ல! -- அவை கட்டாயமாக ஏற்படுத்தி விடுகின்றன.

உறவுகள் உணர்வுகளை அழிப்பதில்லை.
ஆனால், உணர்வுகளின் உந்துதல்களால் உறவுகள் ஒதுக்கப்படுகின்றன; நசுக்கப்படுகின்றன.
உறவை மதித்து, உணர்வை மிதித்தால், மனித நேயம் மலரும்.
உணர்வுகள் உறவால் பலம் பெறுதல் வேண்டும்.
உறவுகள் சாவதில்லை, எந்த நிலையிலும்!
காலம் விதித்த கணக்கு அது!
காலன் வந்தாலும் மறைவதில்லை.
இன்றும் மறைந்த நம் உறவுகள் நம் மனதில் நிறைந்துதான் உள்ளனர்.

உணர்வின் மயக்கம் நிரந்தரமானது அல்ல.அதனை நிலைப்படுத்த பாடுபடவேண்டாமே!
உறவுகளுக்கு உள்ளர்த்தங்கள் கிடையாது; தெரியாது.
உள்ளபடி முகத்துக்கு நேராகவே சொல்லிவிடும்.
உணர்வுகளுக்கு உண்டு.
ஆதாயம் தேடி அலையும் பேய் அது!
பலன் இல்லை என்றால், பல்லை உடைக்கவும், பரிகாசம் பண்ணவும் தயங்காது.
கடைசியில் மிஞ்சுவது, வருத்தமும், வேதனையும்தான்.

அற்ப உணர்வுகளுக்காக, உறவையா அழிப்பது?
உறவையா வெறுப்பது?
கட்டையில் போகும்வரை, கட்டாயம் உறுத்தும்; வருத்தும், நம்மை.

நான் என்பதை மறந்து, நாம் என்பதை வளர்த்தால் நன்மையே விளையும்.
உறவென்ற சூரியனால், உணர்வென்ற பனியை உருகச் செய்யுங்கள்.
உறவை மதித்தால், மனிதரை மதிக்கும் மனோநிலை தானே மலரும்.
மகிழ்ச்சியும் உண்டாகும்.
உணர்வுகளால் எவரையும் பலமாக அடிக்க முடியும், உறவென்ற கவசம் இல்லாதவரை.
உறவைக் கழித்து, உணர்வைக் கூட்டி, பகைமையைப் பெருக்கி, வாழ்வை அழிக்கலாமா?
இறுதியில் மிஞ்சுவது பூஜ்யம்தான்.
இன்று உலகின் பல இடங்களில் நாம் காணுவது உணர்வுகளால் எற்படும் அவலங்களே!


உணர்வைப் பெரிதாய் எண்ணி,உறவுகளை அவமதிக்காதீர்கள்.
உலகம் "மனப்பூர்வமாக" உங்களைப் பெரிதாக எண்ணாது.

"பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்" என்றான் கீதையில் கண்னன்.
"பலனை எதிர்பாராமல், உறவை உயர்த்துவோம்" என்பேன் நான்.

இருப்பது சில காலம்.
பார்ப்பது சில பேரை.
இதில் உறவென வருவது ஒரு சிலரே!
இவர்களை வருத்தி, நாம் மட்டும் உயர்ந்தால், நாளை நம் சந்ததியினர் பெருமையாகப் பேச மாட்டார்கள் நம்மை.
நினைவில் கூட கொள்ள மாட்டார்கள்.
இன்றும் 'அம்மா, அப்பா' என்று நெகிழ்வுடன் நினைவு கூர்வது அன்பினால் மட்டும் அல்ல --உறவை ஒட்டி வளர்த்த பாங்கினால்தான்!

நானூறு கோடி மக்கள் இவ்வுலகில் வாழ்ந்தாலும், ஒரு நானூறு பேரைத்தான் நமக்கு நன்றாகத் தெரியும்.
அதிலும் ஒரு நாற்பது பேரே நம்முடன் அன்றாட வாழ்க்கையில் பங்கு கொள்பவர்கள்!
நமக்குத் தெரிந்த இந்த மக்கள், நன்றாக வாழ நாம் உதவலாமே!
உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, உறவைத் தாறுமாறாய்ப் பேசித்திரியும் சிலரும் அதில் இருக்கக்கூடும்.
இருந்துவிட்டுப் போகட்டும்.
தொடர்ந்து நாம் நன்மையே செய்தால், நிச்சயம் மாறுவார்கள் ஒரு நாள்!
அவர்களைத் திருத்துவதாக எண்ணி, அதே தவறை, வேறு விதத்தில் நாம் செய்யத் தேவையில்லை.

மீண்டும் சொல்கிறேன்.
உறவுகள் புனிதமானவை' .
உணர்வால் காயப்படுத்த வேண்டாம் அதனை.
எல்லோருடனும் அன்பெனும் உறவை வளர்க்கப் பாடுபடுவோம்.

இதனை......
நாளை என ஒத்திப் போட வேண்டாம்.
ஒருவேளை... நாளையச் சூரியன் நமக்கு உதிக்காது போய்விடலாம்.
இன்றே செய்வோம்!
இன்புற்று வாழ்வோம்!
உறவுக்குக் கை கொடுப்போம்.
உணர்வினை உறவோடு பிணைப்போம்.

"உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே! -- அதில்
பிரிவுகள் என்பது இருக்காதே!"
நன்றி டி.ஆர்.]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP