Tuesday, September 05, 2006

"நாம் அனைவரும் இந்துவே!"

"நாம் அனைவரும் இந்துவே!"


நண்பர் திருவின் பதிவைப் படித்ததும் எனக்குள் தோன்றிய உணர்வுகளை,
"பாதிக்கப்பட்ட இருவருமே" பேசிக்கொள்வது போல ஒரு மாற்றுக் கவிதை வடித்திருக்கிறேன்!

வீண் கதை பேசி, விரோதத்தை வளர்ப்பதை விட, உண்மை புரிந்து ஒருங்காய் வாழ வழி வகுக்கலாமே எனும் அற்ப ஆசையில்!

யாரும் தவறாகக் கொள்ள வேண்டாம்!


வேதம் மொழிந்தவன்
பார்ப்பனன் அல்லன்!
வேதம் கொடுத்தவனும்
பார்ப்பனன் அல்லன்!

வாழ்வுதான் வேதம் என்று
வேதம்தான் வாழ்வு என்று
நால்வகைத் தொழிலை
நயமுடன் செய்து
நலமுடன் வாழவே விதித்தது வேதம்!

எங்கள் நலனைக் காக்க வேண்டி
யாகம் செய்யும் தொழிலது கொடுத்தோம்!
யாகத்தின் முடிவில் நீங்கள் கொள்ள
வெகுமதியும் கொடுத்தோம்.
செய்த தொழிலுக்குக்
கூலி கொடுத்தல்
எங்கள் மரபன்றோ!

உங்களில் பிறந்து
உங்களோடு வளர்ந்து
உங்களால் கடவுளாக்கப் பட்டவனுக்கு
நீங்களே கோபுரம் எழுப்பி
எம்மையும் பணித்தீர்
பணி செய்யவென
அதற்குக் கூலியும் கொடுத்தீர்
வெளியில் நின்றே விமலனை வழிபட்டீர்!

அவரவர்க்கு இதுவென
நீயே சாத்திரம் அமைத்தாய்!
ஆம்! மனுவும் நம்மில் ஒருவனே!
அவரவர் தத்தம் கருமம் செய்தால்
நானிலம் பயனுற வாழும் என்னும்
விதியினை வகுத்ததும் நாமன்றோ!
நாமனைவரும் இந்துவன்றோ!

கருமம் முடித்ததும்
கால்சட்டை களைந்து
அனைவரும் ஒன்றாக
வாழுவோமென்று
அன்றவன் விதித்ததை
நாமங்கு மறந்து
நம் தொழில் செய்வதில்
காலத்தைப் போக்கி
நம்மில் பிரிவுற்று
நாமே வாழ்ந்து
இன்றவனைப் பழித்து
குளிர் காய்கின்றோம்!

உன் வேலையை நீ செய்ய
உனக்கு நான் கொடுப்பேன் கூலி
அதில் நீ பிழைத்து
உலக நலன் வேண்டும்
கருமம் செய்வாய் எனச் சொல்லி
இன்றவன் என்னை மிதிக்கிறானே
எனஇரக்கப் புலம்பல்
எங்ஙனம் நியாயம்?

உண்டு கொழித்த காலம்
என்றோ போயிற்று!
இன்று நீயும் நானும்
உழைத்து வாழ்ந்தால்தான்
உய்வதற்கு வழியென
விதி இங்கே ஆன பின்னே
என்னை வாவென
நீயழைக்க வேண்டாம்!
நானே அங்குதான் இருக்கிறேன்
உன்னோடு சேர்ந்தின்று!

உணர மறுத்து, - திரும்பிப்
பார்க்க மறுத்து
பழங்கதை பேசி
பொழுதைக் கழித்தல்
உனக்கும் வேண்டாம்!
எனக்கும் வேண்டாம்!

வா! புதியதோர் உலகம் காண்போம்!
பகையுணர்வின்றி அங்கு வாழ்வோம்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP