Tuesday, October 02, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 8

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 8






முந்தைய பதிவு இங்கே!




6. "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்." [505]

சரி, படிக்கலாம் என புத்தகத்தை மீண்டும் பிரித்தான் கந்தன்.

ஆனால், மனம் அதில் செல்லவில்லை.

அந்தக் கிழவர் சொன்னதே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

கொஞ்சம் கலக்கமாகவும் இருந்தது.

அவர் சொன்னதின் உண்மை அவனை பலமாகத் தாக்கியது.

எவ்வளவு சரியாக அவர் சொல்லியிருக்கிறார் என உணர்ந்தான்.

எழுந்தான்.

அவன் கால்கள் அருகில் இருந்த ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடந்தன.

டிக்கட் கவுண்டரில் இருந்தவர், "எங்கே போகணும் தம்பி?" என்றார்.

"மெட்ராஸுக்குப் போவ எப்ப ரெயிலு?"

"இங்கேருந்து நேராப் போக முடியாது. ஒரு ரயில் பிடிச்சு ராமேஸ்வரம் போகணும். அங்கே போற அடுத்த ரயில் வர்ற நேரந்தான். பத்து ரூபா பணத்தை எடு." என்றார்.

'இன்னிக்கு இல்லை. நாளைக்கு வரேன்" என நகர்ந்தான்.

"போறான் பாரு! வேலையத்தவன்! பணமில்லை போல!" எனச் சிரித்தார் அவர்!

கந்தனுக்கு துக்கமாய் வந்தது.

'அம்மா சொன்னதைக் கேட்டு, இதுவரை ஆடுகளைப் பார்த்துக் கொண்டு, மானமாய் வாழ்ந்தாச்சு. இப்போ போய் ஏதோ ஒரு கனாவுக்கு
அர்த்தம் கேக்கப்போய் ஆளாளுக்கு என்னென்னமோ சொல்லி, நம்ம மனசைக் கலைச்சு, ஒருத்தி இல்லாத பணத்தை இப்பவே புடுங்கப் பாக்கறா! இன்னொருத்தர்
இருக்கற ஆடுங்களைப் புடுங்கப் பாக்கறாரு.இதெல்லாம் தேவையா எனக்கு? இல்லாத புதையலுக்காக இருக்கற ஆடுங்களையும் தொலைக்கணுமா?
இதோ! இந்த ஆடுங்க, எனக்கு சொந்தம்; அதுங்களுக்கு என்ன தேவைன்னு எனக்குத் தெரியும்; அதுங்க என்னோட பேசும்; இதை விட்டுட்டு,
கனாவுல கண்ட புதையலை நம்பி இதையெல்லாம் தொலைக்கணுமா? ஒண்ணும் புரியலியே எனக்கு!

ஆனா, அதே சமயம், அந்தப் பெரியவரு,
"உன் உள்மனசு என்ன சொல்லுதோ, அதை நம்பு. அப்போத்தான் உலக ஆத்மா உனக்குத் துணையா வரும். எப்போ வரும்; எப்பிடி வரும்னு
தெரியாது;ஆனா, நிச்சயமா வரும்"
அப்படீன்றாரு!


அப்பா, ஆத்தா இல்லை எனக்கு. என்னை நம்பி ஆரும் இல்லை இங்கே.
ஆடுங்க ஒண்ணும் சதமில்ல எனக்கு! அதுங்களுக்கும் நான் சதமில்லை. எப்ப வேணும்னாலும் நாங்க ஒர்த்தரை ஒர்த்தர் விட்டு விலகலாம்...
விலகமுடியும்! ஆனா, இந்தப் புதையல்...? என்னால மறக்க முடியும்னு தோணலை. அப்போ... இதுதான் என்னோட நிஜம்!
கனவு இல்லை! நாளைக்கு அவரைப் பார்க்கணும்! அவர் கேட்ட ஆடுங்களைக் கொடுப்பேன்.அவர் என்ன சொல்றார்னு பார்ப்போம்!

காற்று இப்போது சுகமாக வீசியது!

கந்தனின் முகத்தை வருடியது!

ஒரு புத்துணர்ச்சி பிறந்தது அவனுள்!

ஆம்! எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது!

இந்தக் காற்றைப் போல!

இந்த ஆடுகள்... செல்லி... இந்த ஊர்.... எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது!

என் கனவு... எனது நிஜம்!

அதை நான் காணுவேன்!

வீடு நோக்கி உற்சாகமாகத் திரும்பினான் கந்தன்!
*************


மூன்று ஆடுகளோடு மறுநாள் கந்தன் அங்கு வந்தான்.

" எனக்கே ஆச்சரியமாயிருக்கு! எப்பிடி சொல்றதுன்னே தெரியலை. நேத்து நான் வீட்டுக்குப் போனபோது, என்னோட அத்தை மகன் காத்திருந்தான் !
என்னமோ தொழில் பண்ணப் போறேன்னு சொல்லி, ஒண்ணரை டஜன் ஆடுங்களை என்கிட்ட வாங்கிட்டுப் போனான்!
இப்போ இதோ, நீங்க கேட்ட இந்த மூணு ஆடுங்கதான் மிச்சம் இருக்கு என்கிட்ட!அதை நான் ஓட்டிகிட்டு வந்திருக்கேன் உங்களுக்குக் கொடுக்க!
சரிதானே!" என அப்பாவித்தனமாய்க் கேட்டான்.

"அது அப்படித்தான் நடக்கும்! அதான் உலக ஆத்மா செய்யும்!" என்றார் கிழவர்,
"அதைத்தான் ஆரம்ப அதிர்ஷ்டம்னு சொல்வாங்க.
மேலே இருக்கற ஒரு சக்தி எல்லாருமே ஜெயிக்கணும்னுதான் விரும்புது. மனுஷன்தான், இந்த வெற்றியை சரியாப் புரிஞ்சுக்காம,
திசை மாறிப் போயிடறான்."
எனச் சொல்லிக் கொண்டே ஆடுகளை ஒரு பார்வையிட்டார்.

ஒரு கால் ஊனமாய் இருந்த அந்த ஆட்டைப் பரிவுடன் தடவிக் கொடுத்தார்.

"புதையல் எங்கே இருக்கு?" கந்தன் ஆவலுடன் கேட்டான்.

"சென்னைக்குப் பக்கத்துல, மஹாபலிபுரம்ன்ற ஊருல! அங்கே கல்லுலியே செஞ்ச கோவில்லாம் கூட இருக்கு! கல்யானை கூட இருக்கும். அங்கேதான் உன் புதையல் இருக்கு!"

கந்தனுக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது!

இதையேதானே அந்தக் கிழவி ஒரு பைசாகூட வாங்கிக்காம சொன்னா. இந்த ஆளு 3 ஆட்டைப் புடுங்கிட்டாரே! ஏமாந்திட்டோமோ? என
எண்ணினான்.

கிழவர் பேசினார். "இந்தப் புதையல் ஒனக்குக் கிடைக்கணும்னா, உன் கண்ணுக்கு எதுர்ல தெரியற சில நல்ல சகுனங்களைப் பாக்கத் தெரிஞ்சுக்கணும்.
ஆண்டவன் எல்லாருக்கும் தனித்தனியா ஒரு வழி வெச்சிருக்கான். எப்படிப் போவணும்னும் சில அடையாளங்களை விட்டிருக்கான்."

ஒரு அழகிய பட்டாம்பூச்சி எங்கிருந்தோ வந்து கந்தன் முன் பறந்தது.

கந்தனுக்கு ரொம்பவே சந்தோஷமாய் இருந்தது.

ஆத்தா அடிக்கடி சொல்லும்..
'பட்டாம்பூச்சிங்கல்லாம் நல்ல சகுனம்டா ராசா! சாமிகிட்டேருந்து நல்ல சேதி கொண்டு வருது'.

"ஒங்க ஆத்தா சரியாத்தான் சொல்லியிருக்காங்க" என்ற கிழவரின் குரல் அவனைத் தூக்கிவாரிப் போட்டது! 'நாம நினைச்சது எப்படி இவருக்குத்
தெரிஞ்சுது?' என!

கிழவர் தன் மேல்துணியை லேசாக விலக்கி, உள்ளிருக்கும் சட்டைப்பைக்குள் கையை விட்டார்.

தங்க ஒளி மீண்டும் மின்னியது!

[தொடரும்]
****************************

அடுத்த அத்தியாயம் திங்கள் காலை[IST] வரும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP