Friday, December 02, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 37

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 37
36.

'இப்ப ஒரு விசயம் ஒனக்குத் தெரியணும்னு வைச்சுக்க! அது பலான பலான ஆளுகிட்டதான் இருக்குன்னும் தெரியுதுன்னு வைச்சுக்க! அத்தக் கேக்க நீ போறப்ப இன்னாமாரி கேக்கணும்ன்றதுக்கு ஒரு வளி[ழி] காமிச்சுத் தர்றதுதான் அடுத்த பாட்டுல சொல்றாரு அருணகிரியாரு.' என்றவாறே என்னைப் பார்க்க, நானும் உடனே அடுத்த பாடலைப் படித்தேன்.


நாதா குமரா நமவென் றரனார்
ஓதா யெனவோதி யதெப் பொருடான்
வேதா முதல்விண் ணவர்சூ டுமலர்ப்
பாதா குறமின் பதசே கரனே


நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் எனவோதியது எப்பொருள்தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே

'அரனார், "நாதா குமரா நம" என்று ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்?'

'இன்னான்னமோ வளி[ழி]யுல 'நைஸ்' பண்ணிப் பாக்கறாரு அருணகிரியாரு. ஒண்ணும் நடக்கலை! முருகன் ஒண்ணும் இவருக்கு சொல்றமாரித் தெரியல.

சரின்னுட்டு, இப்ப இன்னொரு ரூட்டுக்கா வராரு!

'ஆமா, நீ இன்னாமோ ஒங்க நைனா கையுல ஏதோ சமாச்சாரம் சொன்னியாமே? நீ கூட இன்னாமோ ரொம்ப முறுக்கிக்கினு, 'இப்பிடில்லாம் கேட்டாக்க நான் சொல்ல மாட்டேன். அடக்க ஒடுக்கமா வந்து எங்கையுல குந்திக்கினு பதவிசா கேட்டாத்தான் சொல்வேன்'னு சொல்லக்காண்டி, அவரும் வேற வளியில்லாம, 'என்னப்பனே, முருகா! ஞான பண்டிதா, என் ராசா! நாதமா க்கீறவனே! ஒனக்குக் கோடி புண்ணியமாப் போவட்டும். 'அத்த' எனக்குந்தான் கொஞ்சம் சொல்லு ராசா!'ன்னு கேக்கக்கொள்ள, நீயும் இன்னாமோ அவர் காதுல ஓதினியாமே! அது இன்னான்னு எங்கையுலியும் கொஞ்சம் சொல்லக்கூடாதாப்பா'ன்னு கெஞ்சறாரு.

அது இன்னான்னும் இவர் சொல்லிக் கேக்கலை! .... தெரிஞ்சுக்கினமாரியும் காட்டிக்கலை! கொஞ்சம் 'ஐஸ்' வைச்சுக் குளிப்பாட்டிப் பாக்கறாரு.

ஆனாக்காண்டிக்கு, கொஞ்சம் சூசகமா தனக்கும் இத்தப் பத்தித் தெரியுமின்னு கோடி காட்டறாரு!
அதுக்குத்தான் 'நாதா'ன்னு ஒரு வார்த்தையைப் போட்டிருக்காரு!

'நாதம்'னா இன்னா?

சத்தம்! ஓசை!

ஒலகத்துலியே மொத மொதலா வந்த நாதம் இன்னாது?

ஓம்!

'நாதா'ன்னா தலைவான்னும் ஒரு அர்த்தம் க்கீது.

அப்பிடிக் கூப்படறமாரிக் கூப்ட்டுட்டு, கூடவே, அந்தப் பிரணவத்துக்குத்தான் கந்தன் பொருள் சொன்னாருன்றது தனக்கும் தெரியும்னு சொல்லாம சொல்லி வெள்ளாடறாரு அருணகிரியாரு.

"வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா குறமின் பத சேகரனே"

'இப்ப முருகனைக் கொஞ்சம் தானும் தூக்கி ஒசத்திக் கொண்டாடணுமேன்னு நெனைக்கறாரு! ஏன்னா, அவங்க நைனாவே அப்பிடிப் பண்ணதுக்கு அப்பாலதான் அவருக்கே பொருள் சொன்னாரு முருகன்! அதுனால, இவரும் எதுனாச்சும் சொல்லணுமேன்னு நெனைச்சுப் பாக்கறாரு!

இவுரு மனசுல ஒரு 'ஸீன்' ஓடுது! சிரிப்பு வந்துருது இவுருக்கு!

அது இன்னான்னா, இந்த ஓம்'முன்ற வார்த்தைக்குப் பொருள் தெரியாம ஜெயில்ல கிடந்தாரே,....அவர் ஞாபகம் வருது!

 அந்த பிரம்மாலேர்ந்து ஊருல ஒலகத்துல க்கீற அல்லாரும், இவரோட காலைப் புடிச்சுக்கினு அவங்க தலை மேல வைச்சுக் கொண்டாடிக்கினு க்கீறாங்க!

இவரு இன்னா பண்றாருன்னா, நம்ம வள்ளியம்மாவோட காலடியுல விளு[ழு]ந்து கெடக்கறாரு! அந்தம்மாவோட பாதத்தை எடுத்து தன்னோட தலை மேல பூமாரி வைச்சு அள[ழ]கு பாத்துக்கினு க்கீறாராம்!

'வேதா'ன்னா பிரம்மா.
'சேகரன்'ன்னா தலையுல வைச்சு சூடிக்கறவன்னு அர்த்தம்.

இப்ப 'சந்திர சேகரன்'னா நெலாவை எடுத்து தன்னோட தலையுல வைச்சுக்கற சிவன்ற மாரி, இவரு 'குறமின் பத சேகரன்'!!

'கொறக்குலத்துல பொறந்தாக்கூட மின்னல்மாரி ஜொலிக்குதாம் வள்ளியம்மாவோட ஒடம்பு!

இதுல இன்னா விசேசம்னா, இந்த அகில ஒலகத்துலியும் க்கீற நாதமே அந்தம்மாவோட, அந்த இச்சா சக்தியோட பாதத்துலேர்ந்துதான் பொறக்குதுன்னு முருகன் காட்டறமாரி இவருக்குத் தோணுது. அந்தம்மா பராசக்தியோட அம்சம்! அப்பிடீன்னா, அந்த சக்திலேர்ந்துதான் இந்த ஆதி நாதமே கெளம்புதுன்றதை சொல்லாம சொல்லி விளக்கறாரு அருணகிரியாரு!

இது அல்லாத்தியும் தாண்டி, இன்னொரு சமாச்சாரமும் இந்தப் பாட்டுல க்கீது! அதான் ரொம்ப ரொம்ப முக்கியமா கவனிக்கணும் நீ!

ஒண்ணு வேணும்னு ஆசைப்படறப்ப, அதுவும் அந்த 'ஒண்ணு' ஒலகத்துலியே ரொம்ப ரொம்பப் பெரிய விசயமா இருக்கக்கொள்ள, அத்தக் கேக்கறப்ப ஒடம்புலியும், மனசுலியும் ரொம்பவே பணிவு வேணும்!
சிவனாரு எப்பிடிக் கேட்டாரு தம் புள்ள கையுல? 'நாதா, குமரா நம'ன்னு குனிஞ்சு காதைக் கொடுத்துக் கேக்கறாரு.

பிரம்மாவும், தேவருங்களும் முருகனோட காலை எடுத்துத் தலைமேல வைச்சுக் கொண்டாடிக் கேக்கறாங்க!

அந்த முருகனே கூட இப்ப இன்னா பண்றாரு பாரு! இத்தினிக்கும் காரணமான வள்ளியம்மாவோட பாதத்தை எடுத்து தலையுல வைச்சுக்கறாரு.

அதுனால... பெரியவங்க ஒரு சமாச்சாரம் சொல்றப்ப அடக்கமா, பணிவாக் கேட்டுக்கணும்! அசால்ட்டா கெடந்துறக் கூடாது! நாம பண்ணின புண்ணியந்தான், இதும்மாரி விசயம்லாம் நம்ம காதுல விள[ழ]ப் பண்ணியிருக்கு. அத்தப் புரிஞ்சுக்கினு, பணிவை எப்பவும் வளர்த்துக்கணும். இன்னா வெளங்கிச்சா?' எனக் கேட்டபடியே அவசர அவசரமாக எங்கோ கிளம்பினான் மயிலை மன்னார்!

'ஓம் சரவண பவ' எனம் நாதம் தொடர்ந்து நாயரிடமிருந்து பிறந்துகொண்டிருந்தது!
**************
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP