Sunday, August 26, 2007

"ஈக்களின் வழக்கு"

[காற்றின் வேகம் தாளாமல் பறந்திடும் பறவை]


"ஈக்களின் வழக்கு"


மன்னவன் முன்னால் முறையிட்டு நின்றன
முறையீட்டு மணியைப் பலமாக அடித்தன
ஈக்கள் வந்து மணியடிப்பதைப் பார்த்து
அதிசயத்தில் ஆழ்ந்தான் மன்னவனும்!

'அருந்தகை அரசே அடியவர்க்கெளியவா
எவர்க்கென்ன குறையெனினும் தீர்ப்பவா
சிறியவர்க்கும் துணை வருபவா
எமைவிடவும் எளியார் இங்குண்டோ
இன்றோ நாளையோ எனவிருப்போர் யாம்
எமையொருவர் வருத்துகின்றார்
எங்களைக் காத்தருள்வாய்' என்ற ஈக்களை
இரக்கத்துடன் பார்த்தான் மன்னவனும்!

"யாரும்மைத் துன்புறுத்தியது?
எவருமக்குத் தீங்கிழைத்தது?
தண்டிக்காமல் விடமாட்டேன்"
சினத்துடன் கேட்டான் மன்னவனும்!

"காற்றின் மீதே எம் வழக்கு
எமை அலைக்கழிப்பதே அவர் செய்கை
நிலைகொள்ள விடாமல் துரத்துகிறார்"
என்றவரைப் பார்த்து சொன்னான் மன்னவனும்!

"நும் சொல்லில் பொருளுளது
உம் வேதனை புரிகின்றது என்றாலும்
அடுத்தவர் தரப்பின் நியாயத்தைக்
கேளாமல் தீர்ர்ப்பளிக்க ஒப்பாது என் மனமும்
காற்றின் கருத்தினையும் கேட்டிடுவோம்"
எனவுரைத்தான் மன்னவனும்!

"அப்படியே ஆகட்டும்" என்றிட்டார் ஈக்களும்
'கூப்பிடுங்கள் பருவக்காற்றை
இப்போதே வரச் சொல்லுங்கள்'
ஆணையிட்டான் மன்னவனும்!

ஆணையின்னும் செல்லவில்லை
அதற்குள் சுழன்றது ஊழிக்காற்று
பேரிரைச்சலோடு விரைந்து வந்தது
தாங்காமல் திகைத்திட்டான் மன்னவனும்!

சட்டெனத் திரும்பிப் பார்த்தான்
'சொல்லுங்கள் உங்கள் வழக்கை'
ஈக்களை அங்கே காணவில்லை
சிரித்திட்டான் மன்னவனும்!


இதுபோல்தான் இறைமறுப்பாளரும்
இறைமாட்சி எதிர்வருகையில்
காணாமல் போய்விடுவார்
அதுவரையில் குறைசொல்வார்
மாமன்னன் வரும் போதோ
மறைந்தே போய்விடுவார்!

[ரூமியின் ஒரு கவிதையைத் தழுவி!]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP