Sunday, February 01, 2009

"உந்தீ பற!“ - 8

"உந்தீ பற!“ - 8

”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

பாவ பலத்தினாற் பாவனா தீசசற்
பாவத் திருத்தலே யுந்தீபற
பரபத்தி தத்துவ முந்தீபற. [9]


பாவ பலத்தினால் பாவனாதீச
சற்பாவத்து இருத்தலே உந்தீ பற
பரபத்தி தத்துவம் உந்தீ பற.


அன்னியம் அனையம் இரண்டினும் மேன்மை
பாவனாதீதம் [bhaavanaathiitham] எனுமொரு நிலையே
[ஏதும் இல்லா ஒரு நிலையதுவே]

ஏதொரு ஒருவமும் வெளியிலோ உள்ளிலோ
இருத்தலில் ஈர்ப்பெனும் ஒருநிலை வரலாம்

அதனைப் பற்றிய கவனம் மிகுந்து
அடுத்ததைப் பழிக்கும் தீதும் வரலாம்

ஏதும் இல்லா சற்பாவத்தில் இருத்தலே
பரபத்தி தத்துவம் என்பதை அறியலாம்.


வெளியில் இருக்கின்ற ஒரு உருவத்தின் மீது பக்தி செலுத்துகின்ற அன்னிய பாவம், அப்படி வெளியில் காணாது உள்ளேயே அந்த உருவினை வைத்து செய்கின்ற பக்தியான அனனிய பாவம் என்கிற இரண்டை விடவும்
எந்தவொரு உருவினையும் எண்ணாத சத்பாவத்தில் இருத்தலே ‘பரபத்தி’ என்னும் தத்துவம் ஆகும்.


உதித்த விடத்தி லொடுங்கி யிருத்த
லதுகன்மம் பத்தியு முந்தீபற
வதுயோக ஞானமு முந்தீபற. [10]


உதித்த இடத்தில் ஒடுங்கி இருத்தல்
அது கன்மம் பத்தியும் உந்தீ பற
அது யோக ஞானமும் உந்தீ பற.


எதனைக் கண்டும் எதனையும் உணர்ந்தும்
அதுவாய் இருத்தல் பரபத்தி என்னிலோ

எதுவினைக் கண்டும் ஏதும் ஆகா[து]
எண்ணம் உதித்த இடத்தினை அகலா[து]

ஆங்கே அதுவாய் ஒடுங்கி இருத்தலோ
கன்மம்பத்தி என ஆன்றோர் உரைப்பர்

அதுவேயோக ஞானம் எனுமாம்
உயரிய நிலையாம் உணர்வாய் இதனை.


இறையுணர்வு எந்த இடத்தில் தோன்றுகிறதோ, அதனை அப்படியே உள்வாங்கி, பிறகு அதனிலேயே ஒடுங்கி ஆழ்வது கன்மம் தொடங்கி, பக்திவயப்பட்டு, பின் யோக நிலையில் ஆழ்கின்ற ஒன்றாகும்.

வெளியுருவைக் கண்டு அதனில் பக்தி செலுத்துவது கன்மம். அதனை உள்ளில் வைத்துப் போற்றுவது பக்தி.
அவையெல்லாவற்றையும் விடுத்து, ஏதுமில்லா ‘பரபத்தி’யில் ஆழ்வது யோக ஞானம் என்னும் உயரிய நிலை.

[அடுத்த பாடலைப் பார்க்கும் முன், இந்த யோகஞானம் என்றால் என்ன என்பதை சற்று விரிவாகப் பார்க்கலாம்!]

****************
[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP