Friday, December 29, 2006

""ஆடேலோர் எம்பாவாய்"- 4. [14]"

""ஆடேலோர் எம்பாவாய்"- 4. [14]"

[தமிழ்மணம் சென்ற பதிவில் இன்னும் தொடரட்டும்!
திருவெம்பாவையை நாம் தொடரலாம்!]


காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்


சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி


சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்


பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 14

{ஆட்டமும், பாட்டமும் இன்னும் தொடர்கிறது!!}

காதில் பூட்டியிருக்கும் குழைகள் ஆட,
மார்பில் தவழும் பொன் அணிகலன்கள் ஆட,
பூமாலை அணிந்த கூந்தல் ஆட,
பூவில் தேனைக் குடிக்க வரும் வண்டினம் ஆட,


நாமெல்லாரும் இக்குளிர்நீரில் களித்தாடி,
இறைவனின் சிற்றம்பலத்தைப் பாடி,
வேதங்களின் மூலப்பொருளாம் சிவனாரைப் பாடி,
எவ்வண்ணம் அவன் வேதங்களின் பொருளாவான் எனப் பாடி,


சோதிவடிவானவனின் பெருமையைப் பாடி,
அவன் தலையில் அணியும் கொன்றை மலர்க் கொத்தினைப் பாடி,
அனைத்திற்கும் முதலாகும் அவன் வல்லமையைப் பாடி,
அவனே அனைத்திற்கும் இறுதியும் ஆவதை வியந்து பாடி,


மும்மலம் அழித்து,பின் நம்மை வளர்த்தெடுத்த,
இறைவனின் சக்தியின் பாதத் திறத்தினையும்
போற்றிப்பாடியே நீயும் நீராடடி என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:

பைம்பூண் - பொன்னாபரணம்; கோதை - பூமாலை; குழாம்
- கூட்டம்; சீதம் - குளுமை; தார் - மாலை.

13-ம் பாடலில் சொன்ன பத்து "பொங்குமடு"க்களுக்கும் விளக்கத்தை சென்ற பதிவில் காணலாம்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP