Sunday, March 25, 2007

"அ.அ.திருப்புகழ்--17 [தொடர்ச்சி] "சீரான கோலகால"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 17[தொடர்ச்சி]
"சீரான கோலகால நவமணி"


சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும்

சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும்

ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும்

ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்

ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர குருநாதா

கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மறு பானு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு மருகோனே

கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே.

[முதல் பகுதியை இங்கு பார்க்கவும்]

"சீரான கோல கால நவமணி
மாலா அபிஷேக பார"


அறுமுகனுக்கு முடிகள் ஆறு.
சீறான சிறப்பு மிக்கதும்
கோலாகலமானதும் ஆன
நவமணிகளால் வரிசையாக
இழைக்கப்பட்ட திருமுடிகளைத்
தாங்கி நிற்கும் முகங்களை உடையதும்,
[கோலாகலம் எனும் சொல் சந்தத்திற்காக கோலகால என மாறியது.]


"வெகுவித தேவாதி தேவர் சேவை செயு முகமலர் ஆறும்"

முப்பத்து முக்கோடி அமரர்களும்
அவர்களின் தலைவர்களும் சேர்ந்து வங்து
அடிபணிந்து சேவித்து வணங்கி நிற்கும்
தாமரை மலர் போலும் முகங்கள் ஆறும்

"சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும்"

பெருமைமிகு வீரஇலக்குமி தேவி
எப்போதும் நீங்க நிற்கும் வீரமுடை
"ஆறிரு தடந்தோள் வாழ்க" என
முதல் வரியால் கச்சியப்பர்
கந்தபுராணத்தில் போற்றிப் புகழும்
சீர்மிகு பன்னிரு தோள்களும்


"நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள இருதாளும்"

நீள்வரிகளால் கோடிழைத்து
ரீங்காரம் செய்கின்ற வண்டினங்கள்
ஸ்ரீராகம் என்னும் பண்னைப்பாடி
மொய்த்திருக்கும் கடப்ப மலர்களால்
அலங்கரிக்கப்பெற்ற மணமிகுந்த
சிவந்த இரு பொற்பாதங்களும்


"ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூதம் ஊர் வலாரி மடமகள்
ஆதார பூதமாக வலம் இட முறைவாழ்வும்"

தணியாக் காதல் கொண்டு தான் தேடி மணந்த
வேடக்குறமகளாம் வள்ளிநாச்சியாரும்,
மேகத்தை வாகனமாகக் கொண்டு
அதன் மீது ஏறி உலா வருபவனும்,
வலன் எனும் நிருதன் எனும் அரக்கனை
வதம் செய்தவனுமான இந்திரனின்


மற்றவர் கூறுகின்ற நல்ல குணங்களைக்
கொண்டதும் பட்டென்று பற்றிக்கொள்ளும்
'கொளுத்தியது விடாமை' என்கின்ற 'மடம்' என்னும்
குணம் நிறைந்த தெய்வயானை அம்மையும்
உலகங்கட்கு ஆதார சக்தியாக வலமும் இடமுமாக
உறைகின்ற உத்தம வாழ்வினையும்
[மட சாம்பிராணி எனும் சொல் இப்போது நன்கு புரியுணுமே!]


"ஆராயு நீதி வேலு மயிலும் மெய்ஞ்
ஞான அபிராம தாப வடிவமும்"


நல்லது செய்யவே செலுத்தப்படும்
நீதி புரியவே நாட்டப்படும் ஞானவேலும்
அதற்கெனவே காத்திருக்கும் மயில் வாகனத்தையும்,
மெய்யென்னும் 'சத்', ஞானமென்னும் 'சித்'
அழகின் மிகுதியால் விளையும் 'ஆனந்தம்'
இது மூன்றும் நிறைந்திருக்கும் நின் திருவுருவையும்


"ஆபாதனேனும் நாளும் நினைவது பெறவேணும்"

நற்குணங்கள் ஏதுமில்லா கொடியோனாய யான்
நாள்தோறும் நினைந்து, நினைந்து உருகும்
தன்மையினைப் பெற்று எவருக்கும் கிட்டா
பேறு பெற்று உய்ய வேண்டும் என வேண்டுகிறேன்.

அருஞ்சொற்பொருள்:

அபிஷேகபார= அலங்கரிக்கப்பட்ட முடிகளை உடைய
மருவிய= தழுவி வாழ்கின்ற
நீளும்= நீண்ட
சீராகம்= ஸ்ரீராகம்
நீப பரிமள= கடப்ப மலர்களால் மணமிகுந்த

ஜீமுதம்= மேகம்
அபிராம தாபம்= அழகின் மிகுதி
ஆபாதனேன்= கொடியவனாகிய நான்
ஏர் ஆரும்= அழகு நிறைந்த
ஏழ் ஏழ் பேர்கள்= நாற்பத்தொன்பது புலவர்கள்
ஊமர்= ஊமை
ஆலவாய்= மதுரை
விசார= ஆராய்ச்சி உடையவர்
வீய= சபதம் செய்தல்
ஆழி= சக்கரப்படை
பாநு= ஆதவன், சூரியன்
கோடாமல்= குறைவின்றி

[இன்று மாத சஷ்டி பூஜை செய்ய வேண்டியிருந்ததால் இருபகுதிகளாக வெளிவர நேரிட்டது! இப்பாடலை ஸ்ரீராகத்தில் பாடுதல் உகந்தது எனச் சொல்லுவர்.]


வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!

Read more...

Saturday, March 24, 2007

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -17 "சீரான கோலகால நவமணி"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -17 "சீரான கோலகால நவமணி"

சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும்

சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும்

ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும்

ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்

ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர குருநாதா

கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மறு பானு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு மருகோனே

கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே.



எப்போதும் போல, பின் பார்த்து, முன் பார்க்கலாம்!

"ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடும் இறையவர்"


ஆயகலைகள் அறுபத்து நான்கு கலைகளிலும்
நன்குணர்ந்த மதுரையம்பதியின் மன்னனாம்
இராஜசேகர பாண்டியன் அரசவைக்கு வந்தவொரு
புலவனன்று, சோழமன்னன் கரிகால் வளவனின்
திறமைதனைப் புகழ்ந்தங்கு சொல்லிடவே
தானும் மீதமுள்ள ஓர் கலையாம் பரதம் பயின்றிட,

தனக்கு வந்த கால்வலியால் வாடிநொந்து
"சற்றுநேரம் பயின்றிடவே இவ்வலியென்றால்
அனவரதமும் ஓயாது ஆடிநிற்கும் ஆடல்வல்லானுக்கு
எத்துணை வலி இருந்திருக்கும்? அவர் ஆட்டம்
நின்றுபோனாலோ உலகியக்கம் நின்றுபோம்.
எனவே கால் மாறி ஆடச் சொல்லி வேண்டிடுவோம்"

என நினைந்து வெள்ளியம்பலம் விரைந்து சென்று
விரிசடைக் கூத்தனைக் கண்டு வணங்கி
கால் மாறி ஆட வேண்டித் தவம் செய்ய,
அரசன் உயிர்விடும் நிலைகண்டு,
"வான்மாறினும் மொழி மாறாத மனம் களிக்க"
கால்மாறி ஆடத் துவங்கினான் ஆடல்வல்லானும்!

அத்தகைய கருணை நிறை தெய்வம் வாழும்
அழகுநிறை மாடகூடம் நிறை எழிலான
கூடலம்பதியின் வெள்ளியம்பலத்தில் ஏறி
கால்மாறி ஆடிநிற்கும் கண்நுதற்கடவுள்,

"ஏழேழு பேர்கள் கூற வருபொருள் அதிகாரம்
ஈடாய ஊமர் போல வணிகரில்
ஊடாடி ஆலவாயில் விதிசெய்த
லீலாவிசார தீர வரதர குருநாதா"

பின்னொருகாலம் மதுரையை ஆண்ட
வம்சசூடாமணி எனும் பாண்டிய மன்னன்
சண்பகமலர் கொண்டு சோமசுந்தரக்கடவுளை
அர்ச்சித்து வந்தமையால் சண்பக பாண்டியன்
எனும் பெயர் பெற்று முறையரசு செய்யும்வேளை,
காலத்தின் கூற்றால் பஞ்சம் தலை விரித்தாடியது.

பஞ்சத்தால் வாடிய பலநூறு புலவர்களை
சண்பக மன்னனும் பரிவுடன் ஆதரித்து
'நம்மிடையே தங்கி நன்நூல் படைத்து
நம்மையும் மகிழ்விக்க' என வேண்ட,
புலவோரும், 'பொருள்நூலின்றி பா இயற்றல்
இயலாதே' எனச் சொல்ல, அரசனும்

ஆலயம் ஏகி இறைவனை வணங்கி
தமிழுக்கு வந்த குறையகற்றி பொருள்நூல்
தந்தருள வேண்டிடவே, சொக்கலிங்கப் பெருமானும்
'இறையனார் அகப்பொருள்'என்னும் நூலியற்றி
தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம்
தன் பீடத்தின் கீழ் வைத்து அருளினார்.

'பொருளுக்குப்' பொருள் சொல்ல புலவரை வேண்ட
ஆளொருவராய் அதற்குப் பொருளுரைத்து
தத்தம் விளக்கமே சிறந்ததென வாதாட
மீண்டும் இறைவனையே தஞ்சமடைந்து
கலகத்தை நீக்கி நல்வழி காட்ட வேண்ட,
இறைவனும் அசரீரியாக வந்து,

"உப்பரிகுடிகிழாரின் மகனாம் உருத்திரசன்மனை
அழைத்து வந்து பொருளுக்கு உரை கேட்கச் செய்"
என நல்லுரை சொல்லவே, அவ்வண்ணமே
உருத்திரசன்மனை, செட்டிப் பாலகனை,
பாலறியா மணத்தினனை, வாய் பேசா ஊமையினை
அழைத்துவந்து புலவோரின் உரை கேட்க வேண்ட,

முகக்குறிப்பாலேயே பலர் உரையினையும் கேட்டு
சிலரதை உவந்து, சிலரதை வெறுத்து,
சிலரதை புகழ்ந்து, சிலரதை இகழ்ந்து,
கபிலர், பரணர் உரைகேட்டு ஆங்காங்கு மகிழ்ந்து
நக்கீரர் உரை கேட்டு ஒவ்வொரு சொல்லுக்கும்
மகிழ்ந்து, கண்ணீர் சொரிந்து இதுவே உண்மையுரை

எனப்பாராட்டி குமரனே உருத்திரசன்மனய்
வந்து விளக்கமளித்ததைக் குறிப்பால் காட்டி
தமிழுக்குப் புகழ் சேர்த்த திருவிளையாடல்
தரணிக்குக் காட்டிய லீலா விநோதரே!
தீரம் மிகுந்தவரே! வரங்களை அருள்பவரே!
எனக்கும் இவ்வுலகுக்கும் குருநாதரே!


"கூராழியால் முன் வீய நினைபவன்
ஈடேறு மறு பானு மறைவுசெய்
கோபாலராயன் நேயமுள திருமருகோனே"

தன்மகனைக் கொன்ற ஜயத்ரதனை பகல் பொழுதுக்குள்
கொன்றழிப்பேன் என சபதமிட்ட அருச்சனனுக்காக
பாரதப் போரில் பதினான்காம் நாளதனில்
ஆழிவிட்டு ஆதித்தனை மறைத்து
உள்ளிருந்த ஜயத்ரதனை வெளிக்கொணர்ந்து
ஆழியை திரும்ப வாங்கி பார்த்தனுக்கு உதவிட்ட

கோபாலராயன் என உலகம் போற்றும்
கண்ணபிரான் மனம் மகிழும் திருமருகனே!


[மேல் விளக்கம் வேண்டுவோர் இங்கு பார்க்கவும்!]

"கோடாமல் ஆரவார அலையெறி
காவேரியாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ் விராலி மலையுறை பெருமாளே."


எக்காலமும் குறைவின்றி ஆரவார அலை வீசி
பெருக்கெடுத்து ஓடுகின்ற காவிரி நதி பாய்ந்து
வளம் கொழிக்கும் "வயலூர் எனும் திருத்தலத்திலும்,
கோனாடு எனப்புகழ் பெறும் "விராலிமலை"என்னும்
திருத்தலத்திலும் எந்நாளும் வீற்றிருந்து
அருள் சுரக்கும் இன்னமுதே! எம் தலைவனே!

[மீதிப் பகுதியும், அருஞ்சொற்பொருளும் இன்றிரவு வரும்!]

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!

Read more...

Friday, March 23, 2007

"நான் ஒரு வியர்டுங்க!"

"நான் ஒரு வியர்டுங்க!"

கோவியார் அழைத்திருந்தார்
கோக்குமாங்கு பதிவொன்று போடும்படி
மணிகண்டனும் மடலிட்டார்
மறைகழன்ற விதம் சொல்ல

வியர்டென்றால் என்னவென
அகராதியில் புரட்டிப் பார்த்தேன்
செய்யாதன செய்தல் இல்லாதென இருத்தல்
நடக்காதன நடத்தல், ஒவ்வாதன ஒவ்வுதல்

இவையே வியர்டாகும் எனவிருந்தது
சரி, இது வைத்தே சொல்லுவோம்
என்றிங்கு வந்து நான் என் வியர்டை
சொல்லுகிறேன் கேட்டிடுவீர்!

இதாங்க! இதுதான் என்னோட பெரிய வியர்ட்!

என்ன சொன்னாலும் உடனே அது ஒரு நாலு வரிக் கவிதையா [கொத்ஸ் இதைக் கவுஜ எனச் சொல்லுவார்!] சொல்றதுதான் என்னோட முதல் வியர்ட்னெஸ்!

இரண்டாவது வியர்ட்.... இருங்க! என் மனைவி என்னமோ சொல்றங்க! என்னது? ஆங்! சரி! சரி! சொல்லிடறேன் நீ போய்ப் படு!
ஒண்ணுமில்லீங்க

எந்தப் பாட்டைக் கேட்டாலும் சரி!
உடனே இது மாதிரி, இதே சாயல்ல இருக்கற ஒரு பழைய பாட்டை குடைஞ்சு, குடைஞ்சு கண்டு பிடிக்கற வரைக்கும், காதைப் பொத்திகிட்டு, அந்த ட்யூனை மனசுலியும், வாயாலியும் பாடிப் பாடி, எல்லாரையும் ஒரு வழியாக்கி, எரிச்சல் படுத்தி, உனக்குத் தெரியுதா, உனக்குத் தெரியுதான்னு தொளைச்சு, அது கண்டு பிடிக்கற வரைக்கும் ஓய மாட்டேன்!
கடைசியில் கண்டுபிடித்தவுடன் கிடைக்கும் ஆனந்தம் இருக்கே, அது குடும்பமெல்லாத்துக்கும் பரவும்!

அடுத்தது, மூணாவது,
எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும், அதுல முழு ஈடுபாட்டோட இறங்கி, அது முடியற வரைக்கும், சோறு, தண்ணி பாக்காம, குடும்பத்தைக் கவனிக்காம, பணத்தைப் பத்திக் கவலைப்படாம, குதிச்சிடுவேன்![உ-ம்: திருவாசகம் இன் ஸிம்ஃபொனி]
இதுல தோல்வியும் வரும்; ஜெயமும் வரும்!
தோல்வி வரும் போது தனியா அனுபவிப்பேன். எல்லார்கிட்டேயும்[ஈடுபடுத்தின அத்தனை பேருகிட்டேயும்] தனித்தனியா மன்னிப்பு கேட்பேன்.
வெற்றி பெற்று விட்டாலோ, அவ்வளவுதான்!
என்னைப் பிடிக்கவே முடியாது!
பெரிய்ய்ய்ய்ய்ய பார்ட்டிதான்!
பிரமாதப் படுத்திடுவேன்!!

நாலாவது!
கொஞ்ச நாளா, முடி கொட்டி வழுக்கை வர ஆரம்பித்தது!
க்ளோஸா கட் பண்ணி சமாளிச்சேன்.
போன வருஷம், இந்தியா போன போது, குலதெய்வம் கோயிலுக்குப் போன போது முடி இறக்கினேன்.
வீட்டுக்கு வந்து பார்த்த போது நல்லா இருந்த மாதிரி தெரிஞ்சுது!
சரின்னு, அப்படியே விட்டு விட்டேன்!
ஆமா!
இப்போ நானும் மைக்கேல் ஜோர்டான் ஸ்டைல்தான்!
மொட்டை!
பெர்மனென்ட் மொட்டை!
இது மாதிரி தடாலுன்னு முடிவெடுக்கறதுல நான் மன்னன்!

கடைசியா அஞ்சாவது!
இதுல கூட ந்நான் வியர்டுன்னு காட்டப் போறேன்!
ஆமாம்
அஞ்சு A, அஞ்சு B ன்னு ரெண்டு சொல்லப்போறேன்!

அஞ்சு A :
இன்னிக்கும் என்னோட முதல் காதலியின் பிறந்த நாளன்னிக்கு அவளை நினைச்சுப்பேன்!
இதை என் மனைவிகிட்ட இன்னிக்குத்தான் சொன்னேன்!
சரிதான் போடான்னு சொல்லிட்டு [நிஜமாவே!!]திரும்பிப் படுத்துத் தூங்கிட்டாங்க!
அஞ்சு B :
யார் என்ன சொன்னாலும் எனக்குக் கோபமே வராது! இதனால எனக்கும், என் மனைவிக்கும் எத்தனையோ சண்டை வந்திருக்கு! சொல்றது யாரு? நம்ம ஆளுதானேன்னு அவங்களை சமாதானப் படுத்தினாலும், கெட்ட பேரு என்னவோ எனக்குதான்!... ரெண்டு பக்கத்துலியும்!
அதைப் பத்திக் கவலைப்படாம காலத்தை ஓட்டிகிட்டு இருக்கேன்.

அவ்ளோதாங்க!

யாரையெல்லாம் கூப்பிட்டு இருக்காங்கன்னு தெரியாததால, இதோ எனக்குத் தெரிஞ்ச அஞ்சு பேரைக் கூப்பிடறேன்!

பத்மா அர்விந்த்

ஜெஸிலா

லிவிங் ஸ்மைல் வித்யா

செல்வநாயகி

குமரன்


இதையே அழைப்ப எடுத்துகிட்டு அஞ்சு பேரும் வந்து சொன்னா,, மகிழ்வேன்!

பாக்கறவங்களும் அவங்களுக்கு சொல்லிடுங்க!

அப்பாடா!
என் ராஜ்ஜியத்திலாவது 80% ஒதுக்கீடு கொடுத்து விட்டேன்!
சீக்கிரம் என்னை பிரதமர் ஆக்குங்கப்பா..ம்மா!!
:))
மீண்டும் கோவியாருக்கும், மணிகண்டனுக்கும் நன்றி!

இந்தியா நாளை ஸ்ரீலங்காவை வெல்ல வாழ்த்துகள்!

Read more...

Thursday, March 22, 2007

பெயர் சூட்டு விழா--VSK[வீயெஸ்கே]




பெயர் சூட்டு விழா!!

நிகழும் விய வருடம் பங்குனி மாதம் 9-ஆம் நாள் வெள்ளிக்கிழமை நன்நாளில்,

இதுவரை "எஸ்கே" என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட சங்கர்குமார் என்கின்ற நான்,

ஏற்கெனவே வலைப்பூவில் இன்னொரு எஸ்.கே என்கின்ற "புள்ளி" வைத்த மூத்த பதிவர் இருக்கின்ற காரணத்தால்,

இன்று முதல்,

வீயெஸ்கே[VSK]

என புதுப் பெயரால் உங்கள் அனைவரின் ஆசியோடும், அன்போடும் வரவிருக்கிறேன்
என்பதை அறிவித்துக் கொள்கிறேன்!!!

மறந்துவிடாதீர்கள்!

எஸ்கே, இனிமேல்

வீயெஸ்கே!!!!!!!!!!!! [vsk]

அனைவரும் வந்து அன்பளியுங்கள்!

Read more...

Monday, March 12, 2007

"திருமுருகாற்றுப்படை"

"திருமுருகாற்றுப்படை" - நக்கீரர் அருளியது!

ஜி.ரா. எழுதிய பதிவைப் படித்ததும் இல்லம் சென்று என்னிடம் இருக்கும் திருமுருகாற்றுப்படை நூலைப் புரட்டினேன்.

நா. சந்திரசேகரன் என்பவர் திறம்பட எழுதிய நூல் இது.

கங்கை புத்தக நிலையம், வானதி பதிப்பகத்தின் துணையோடு வெளியிட்ட நூல்.

இதில் தெய்வயானை பற்றிய குறிப்புகள் கீழே!

வரி6. "மறு இல் கற்பின் வாணுதல் கணவன்":

குற்றமில்லாத அ[ற]க்கற்பையுடைய இந்திரன் மகள் தெய்வயானையார் கணவன்.

வரி 175-176. "தா இல் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்":

இடையீடில்லாத அருட்கற்பினது கோட்பாட்டையுடைய தெய்வயானையாருடனே சின்னாள்[சித்தன் வாழ்வென்னும்] ஆவினன்குடி என்னும் திருப்பதியிலே தங்குதலும் உரியன்.

வரி 216. "மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத் தந்து":

மெல்லிய தோள்களையுடைய பலவாகிய மான்பிணைகள் போலும் மெய்தீண்டி விளையாடுதற்குரிய "தெய்வமகளிரோடு" தழுவிக்கொண்டு அவர்கள் களவறிந்து அவர்கட்கு இருப்பிடம் கொடுத்து....

இது தவிர 'வள்ளி' பற்றிய குறிப்பு ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறது.
வரி 100-102. "ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுகப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே"

ஆறுமுகங்களிலே ஒரு முகம் வள்ளியொடு மகிழ்ச்சி பொருந்த இயைந்தாலும், எனச் சொல்லி,

அடுத்து வரும் வரிகளில், பன்னிரு கைகளைப் பற்றிச் சொல்ல வருகையில்,

[வரி 116-117]"ஒருகை வான் அரமகளிர்க்கு வதுவைச் சூட்ட"

எனச் சொல்லி,

ஒரு கையானது தேவருலகத்தில் தேவமகளிராகிய தெய்வயானையர்க்கு மணமாலையைப் புனைய எனவும் உடன் வருகிறது.

இதன் மூலம், முருகனுக்கு இருமனைவியர், அவர்கள் தெய்வயானையும், வள்ளியும் என்ற கூற்றினை நக்கீரரும் சொல்லியிருக்கிறார் என்பது தெளிவாகும்.

வாரியார் ஸ்வாமிகள் சொல்லுவது போல,

இகம் வள்ளி,
பரம் தெய்வயானை.
முகம் வள்ளியைப் பார்க்க, கைகள் தெய்வானைக்கு மணமாலை சூடுகிறது.
இகபர விநோதன் அவன் என உணரலாம்.

அடுத்து, வரி 264-ல்,"மங்கையர் கணவ"

தெய்வயானையார்க்கும், வள்ளி நாய்ச்சியாருக்கும் கணவனே!

என்னும் பொருள்படவும் பாடுகிறார்.

திருமுருகாற்றுப்படை என்ன சொல்கிறது?

பாணன் ஒருவன் பரிசில் பெற்று வருகிறான்.
அவனை எதிர்கொள்லும் இன்னொரு பாணன் விவரம் கேட்கிறான், ... 'எவரிடமிருந்து இப்பரிசில் பெற்றாய்?'.... என.

அவனுக்கு மறுமொழியிடும் வண்னமாக முதல் பாணன் உரைக்கிறான்.

"இத்தன்மையெனச் சொல்லப்படவொண்ணா ஒளியையும்[3],

தாளையும்[4],

கையையும் [5], உடையனாகித்

தெய்வயானைக்குக் கணவனாகி[6],

மாலை அசையும் மார்பனாகிக்[11],

காந்தள் மாலையைச் சூடிய திருமுடியை உடையனாகிய[44],

சேயினது திருவடியிலே செல்ல வேணும் என்கிற மனத்தோடு[62],

அவன் தங்குமிடத்துக்கு[[63],

வழியை விரும்பினையாகில்[64],

உன்னுடைய ஆசைப்படியே[65],

இப்போது பெறுவாய் நீ நினைகருமம்[66],

இதற்கு அவன் உறையும் இடம் திருப்பரங்குன்றிலே அமர்ந்திருத்தலும் உரியன்[77],

அதுவன்றி அலைவாயெனும் திருச்செந்தூரிலெ எழுந்தருளுதலும் நிலையுடைய குணம்[125],

அதுவன்றி, ஆவினன்குடியிலே தங்குதலும் உரியன்[176],

அதுவன்றி ஏரகத்துறைதலும் உரியன்[189],

அதுவன்றி, மலைகள்தோறும் சென்று விளையாடுதலும் நிலைபெற்ற குணம்[217],

அதுவன்றி, விழாவின் கண்ணும்[220],

அன்பர் ஏத்தப் பொருந்தும் இடங்களிலும்[221],

வெறியாடும் இடங்களிலும்[222],

காடும், சோலையும் முதலாகச் சொல்லப்பட்ட அவ்விடங்களீலும் உறைதற்குரியன்[249],

இம்முறையாக யான் அறிந்த வழி: அவ்விடங்களிலே ஆயினுமாக, பிற இடங்களிலே ஆயினுமாக[250],

முற்படக் கண்ட போதே முகமலர்ந்து துதித்துப் பரவி வாழ்த்தி வணங்கி[252],

ஆறு வடிவைப் பொருந்திய செல்வனே![255],

கல்லாலின் கீழ் இருந்த கடவுள் புதல்வனே![256],

என்று துடங்கிக் குரிசில் அளவாக[276],

நினக்குக் கூறிய அளவால் ஏத்தி ஒழியாதே துதித்து[277],

நின் திருவடியைப் பெறவேணும் என்று கருதி வந்தேன் என்று நீ கருதிய அதனைச் சொல்வதன் முன்னே[281],

பிள்ளையாரைச் சேவித்து நிற்பவர் தோன்றி[283],

அறிவு முதிர்ந்த வாயையுடைய புலவன் வந்தான் நின் புகழைக் கேட்ட்டு என்று கூற[285],

தெய்வத்தன்மையால் நின்ற நிலைமை உள்ளடக்கித் தனது இணைய அழகைக் காட்டி[290],

"அஞ்சவேண்டாம் புலவரே[291],

நின் வரவு யாம் அறிந்தோம்" என்று அன்புடனே நல்வார்த்தை அருளிச் செய்து[292],

உலகத்தில் நீ ஒப்பிடமுடியாத அளவுக்கு வீட்டின்பத்தைத் தருவான்[295],

அருவியையும் சோலைகளையும் உடைய மலைக்குரியோன்[317],

என்று எதிர் வந்த பாணனுக்கு உரைத்தான் இவன்.

முருகனிடத்திலே செல்ல வழிப்படுத்துதலே திருமுருகாற்றுப்படை!
[நன்றி: திரு. நா.சந்திரசேகரன்]


"யாமோதிய கல்வி அவன் தந்தது" அவன் புகழ் பாடவே!

முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Thursday, March 08, 2007

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 16--சரவணஜாதா நமோ நம

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 16

சரவணஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம
சததள பாதா நமோ நம அபிராம

தருணக தீரா நமோ நம நிருபமர் வீரா நமோ நம
சமதள வூரா நமோநம ஜகதீச

பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம உமைகாளி

பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்

இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் முறையோவென்

றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் விடுவோனே

மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு மடிபேண

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசர ராதார மாகிய பெருமாளே.


[பொருள்]

{முன் பார்த்து பின் பார்க்கலாம்!}


"இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற"

புழுதி பறந்தது ஆதவனின் மண்டலம் தனிலும்,
விண்வெளியெங்கிலும், மண்ணுலகம்தனிலும்
மூவுலகும் மறைந்தது புழுதியின் மிகுதியால்


"வானவர் எவர்களும் ஈடேற ஏழ்கடல் முறையோ என்று
அடர் பட"


புழுதியின் துகள் எழக் கண்டு வானவரும்
பொழுதினி ந்ன்கினி நமக்கே விடிந்ததென
வானவரும் மகிழ்வுடனே கூத்தாடி களிகூற
ஏழுகடல்களும் குய்யோ முறையோவென
கூக்குரலிட்டுக் கதறிக் கதறி வருந்திட


"மாமேரு பூதரம் இடிபடவேதான் நிசாசரர்
இகல் கெட"

மலைகளிலே பெருமலையாம் மாமேரு மலையும்
தன்நிலை மறைந்து துகளாகி இடிபடவும்,
எவருக்கும் பயமின்றி இரவிலே உலவுகின்ற
இராக்கதரும் தம்நிலை மறந்து ஒழிந்திடவும்


"மா வேக நீடு அயில் விடுவோனே"

இத்துணை இயல்புகளும் இவ்வாறு நிகழ்ந்திடவே
செயுமாறு தன் வீரவேலை விட்டெறிந்த வேலாயுதரே!

"மரகத ஆகார ஆயனும், இரணிய ஆகார வேதனும்,
வசு எனும் ஆகார ஈசனும், அடிபேண"


பச்சை நிறம் கொண்ட ஆயர் குலத்துதித்த
'மச்சாவதார மால்எனும் திருமாலும்,
பொன்னிறம் கொண்ட மறைகளின் தலைவனாம்
பிரமனெனும் படைப்புக் கடவுளும்,
நெருப்பு நிறம் கொண்ட சிவந்த வண்னமுடை
உருத்திரன் என்னும் உக்கிர மூர்த்தியும்,
அனைத்துக்கும் முதலான, அனைத்தையும் ஆளுவிக்கும்
உனது திருவடியை விரும்பி வணங்கிடவும்,

"மயில் உறை வாழ்வே"

அழகிய மயிலினை வாகனமய்க்
கொண்டுவரும் என் இறைவனே!

"விநாயக மலை உறை வேலா"

திருப்பத்தூருக்குக் கிழக்கே
ஐந்து மைல் தள்ளி அழகுடனே
பிள்ளையார்பட்டியெனும் விநாயகர்மலையினில்
விருப்புடன் அமர்ந்திருக்கும் வேலாயுதரே!

"மகீதர வனசரர் ஆதாரம் ஆகிய பெருமாளே!"

மலையும் மலை சார்ந்த இடமாகும்
குறிஞ்சி யெனும் காட்டில் வாழ்கின்ற
வேடருக்கு ஆதாரமாகிய பெருமைக்கு
என்றென்றும் உரியவரான பெரியவரே!

"சரவணஜதா நமோ நம"

அமரரை வருத்தி அரசு புரிந்த
சூரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள்
உய்வினியுண்டோ வெனவே ஏங்கி
சிவனிடம் போயே முறையிடும் வேளையில்

தீயை அணைக்க தீயே தேவையென
தீயுடைத் தலைவனும் திடமாய் நினைத்திட
நெற்றியில் நின்று தீப்பொறி கிளம்ப
வாயுவும் அக்கினியும் அவற்றை ஏந்தியே

கங்கையில் இடவும் சரவணை சேர்ந்திட
கந்தனும் அவதரித்தான் தேவர்கள் மகிழ்ந்திட
கார்த்திகைப் பெண்டிரும் அறுமுகம் அணைத்திட
பார்வதியும் சேர்த்தாள் ஆறுமுகனையும்

சரம் எனில் நாணல் வனம் என்றால் காடு
நரம்புகளால் சூழ்ந்திருக்கும் இதயக் கமலத்துள்
நட்டநடுநாயகமாய் தகராலயத்தினுள்ளுள்
வீற்றிருக்கும் சரவணப் பெருமானுக்கு வணக்கம்!


"கருணைய தீதா நமோ நம"


உலகுய்யவும், உலகினில் உயிருய்யவும்,
அசுரர் அஞ்சவும், அமரர் விஞ்சவும்
மனவாசகம் கடந்து, மறையாலும் காணாத
கருணையின் வடிவே வணக்கம் வணக்கம்!

"சததள பாதா நமோ நம"

நூறுஇதழ்த் தாமரை போலும்
சீரிய பாதங்கள் உடையோனே!

"அபிராம"

பேரழகு பொருந்தியோனே!

"தருண அக தீரா நமோ நம"

இளமையும், அதற்கே உரிய
வீரத்தினையும் உடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"நிருபமர் வீரா நமோ நம"

அஞ்சிய அமரர்க்கு
அஞ்சேல் எனச் சொல்லி
அமரர்க்குத் தலைவனாய்
அமைந்திட்ட வீரனுக்கு வணக்கம்!


"சமதள ஊரா நமோ நம"

தாரகன் எனும் அசுரன்
பிரமனின் அருளால்
வரங்களைப் பெற்றான்
அமரரை அடக்கினான்

அனைவரும் அடங்க
பிரமனும் ஒடுங்கினான்
திருமாலும் மீனானான்
சிவனவனும் மனமிரங்கி

திருநுதலில் தீப்பொறியால்
அறுமுகனைப் படைத்திட
பன்னிருகையனும் போர்புரிந்த
திருவூரே திருப்போரூர்

சமர் புரிந்த ஊரே
சமதளவூர்
திருப்போரூர் தலைவனே
வணக்கம்!

"ஜகதீச பரம சொரூபா நமோ நம"

அண்டம், பிரண்டம் அனைத்துக்கும்
தலைவனாய் அமர்ந்திருப்பவரே!
சீரிய ஞான வடிவுடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"சுரர்பதி பூபா நமோ நம"

அமரர்க்கும் தலைவனாம்
இமையவர் கோமானாம்
இந்திரனுக்கும் தலைவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!


"பரிமள நீபா நமோ நம"

உயரிய வாசனையுடைய
கடப்பமலர் மாலையினை
விருப்புடன் அணிபவனே
வணக்கம்! வணக்கம்!

"உமைகாளி பகவதி பாலா நமோ நம"

சிவனின் மனைவியெனப்
பெயருடை உமையாளும்,
கருநிறக் காளியாளும்
ஆறு அருட்குணங்களுடை

பகவதியென்பவளும்
இன்னும் பல பெயருடை
அம்பிகையின் புதல்வருக்கு
வணக்கம்! வணக்கம்!

"இகபரமூலா நமோ நம"

இம்மை, மறுமை எனும்
இருசுகமும் அருளிடும்
மூலகாரணமாய்த் திகழ்வோனே
வணக்கம்! வணக்கம்!

"பவுருஷ சீலா நமோ நம அருள் தாராய்"

ஆண்மையெனின் அதிகாரம் மட்டுமல்ல
ஒழுக்கமும் கூடவே வேண்டும்
அத்தனையும் நிரம்பிய உத்தமனே!
உனக்கு எந்தன் வணக்கம்!
எனக்கு உந்தன் திருவருளைத்
தந்தருள வேண்டுகிறேன்!


அருஞ்சொற்பொருள்:
ஜாதா -- தோன்றியவரே
அதீதா -- கடந்து நின்ற பொருளே
சததளபாதா -- நூறு இதழ்த் தாமரை போலும் பாதங்கள் உடையவரே
அபிராம -- பேரழகு
தருண -- இளமை
நிருப அமர் -- தலைமை தங்கிய
பூபா -- தலைவரே
பகவதி -- ஐஸ்வர்யம், வீர்யம், புகழ், திர்ரு, ஞானம், வைராக்யம் எனும் ஆறு குணமுடையவர்
விரவிய -- மறையுமாறு
பூதரம் -- மிகப் பெரிய
நிசாசரர் -- இரவில் உலவும் இராக்கதர்
அயில் -- வேலாயுதம்ம்
ஆகார -- நிறமுடைய
இரணிய -- பொன்னிறம்
மகீதர -- மலைகளுடன்கூடிய
வனசரர்- வனத்தில் உறையும் வேடர்

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!



Read more...

Wednesday, March 07, 2007

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 16

சரவணஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம
சததள பாதா நமோ நம அபிராம

தருணக தீரா நமோ நம நிருபமர் வீரா நமோ நம
சமதள வூரா நமோநம ஜகதீச

பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம உமைகாளி

பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்

இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் முறையோவென்

றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் விடுவோனே

மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு மடிபேண

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசர ராதார மாகிய பெருமாளே.

[பொருள்]

"சரவணஜதா நமோ நம"

அமரரை வருத்தி அரசு புரிந்த
சூரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள்
உய்வினியுண்டோ வெனவே ஏங்கி
சிவனிடம் போயே முறையிடும் வேளையில்

தீயை அணைக்க தீயே தேவையென
தீயுடைத் தலைவனும் திடமாய் நினைத்திட
நெற்றியில் நின்று தீப்பொறி கிளம்ப
வாயுவும் அக்கினியும் அவற்றை ஏந்தியே

கங்கையில் இடவும் சரவணை சேர்ந்திட
கந்தனும் அவதரித்தான் தேவர்கள் மகிழ்ந்திட
கார்த்திகைப் பெண்டிரும் அறுமுகம் அணைத்திட
பார்வதியும் சேர்த்தாள் ஆறுமுகனையும்

சரம் எனில் நாணல் வனம் என்றால் காடு
நரம்புகளால் சூழ்ந்திருக்கும் இதயக் கமலத்துள்
நட்டநடுநாயகமாய் தகராலயத்தினுள்ளுள்
வீற்றிருக்கும் சரவணப் பெருமானுக்கு வணக்கம்!

"கருணைய தீதா நமோ நம"


உலகுய்யவும், உலகினில் உயிருய்யவும்,
அசுரர் அஞ்சவும், அமரர் விஞ்சவும்
மனவாசகம் கடந்து, மறையாலும் காணாத
கருணையின் வடிவே வணக்கம் வணக்கம்!


"சததள பாதா நமோ நம"

நூறுஇதழ்த் தாமரை போலும்
சீரிய பாதங்கள் உடையோனே!

"அபிராம"

பேரழகு பொருந்தியோனே!

"தருண அக தீரா நமோ நம"

இளமையும், அதற்கே உரிய
வீரத்தினையும் உடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"நிருபமர் வீரா நமோ நம"

அஞ்சிய அமரர்க்கு
அஞ்சேல் எனச் சொல்லி
அமரர்க்குத் தலைவனாய்
அமைந்திட்ட வீரனுக்கு வணக்கம்!

"சமதள ஊரா நமோ நம"

தாரகன் எனும் அசுரன்
பிரமனின் அருளால்
வரங்களைப் பெற்றான்
அமரரை அடக்கினான்

அனைவரும் அடங்க
பிரமனும் ஒடுங்கினான்
திருமாலும் மீனானான்
சிவனவனும் மனமிரங்கி

திருநுதலில் தீப்பொறியால்
அறுமுகனைப் படைத்திட
பன்னிருகையனும் போர்புரிந்த
திருவூரே திருப்போரூர்

சமர் புரிந்த ஊரே
சமதளவூர்
திருப்போரூர் தலைவனே
வணக்கம்!

"ஜகதீச பரம சொரூபா நமோ நம"

அண்டம், பிரண்டம் அனைத்துக்கும்
தலைவனாய் அமர்ந்திருப்பவரே!
சீரிய ஞான வடிவுடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"சுரர்பதி பூபா நமோ நம"

அமரர்க்கும் தலைவனாம்
இமையவர் கோமானாம்
இந்திரனுக்கும் தலைவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!


"பரிமள நீபா நமோ நம"

உயரிய வாசனையுடைய
கடப்பமலர் மாலையினை
விருப்புடன் அணிபவனே
வணக்கம்! வணக்கம்!

"உமைகாளி பகவதி பாலா நமோ நம"

சிவனின் மனைவியெனப்
பெயருடை உமையாளும்,
கருநிறக் காளியாளும்
ஆறு அருட்குணங்களுடை

பகவதியென்பவளும்
இன்னும் பல பெயருடை
அம்பிகையின் புதல்வருக்கு
வணக்கம்! வணக்கம்!

"இகபரமூலா நமோ நம"

இம்மை, மறுமை எனும்
இருசுகமும் அருளிடும்
மூலகாரணமாய்த் திகழ்வோனே
வணக்கம்! வணக்கம்!


"பவுருஷ சீலா நமோ நம அருள் தாராய்"

ஆண்மையெனின் அதிகாரம் மட்டுமல்ல
ஒழுக்கமும் கூடவே வேண்டும்
அத்தனையும் நிரம்பிய உத்தமனே!
உனக்கு எந்தன் வணக்கம்!
எனக்கு உந்தன் திருவருளைத்
தந்தருள வேண்டுகிறேன்!

[இன்னும் வரும்!]

வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP