தந்தையென்னும் ஓர் தெய்வம்!
"தந்தையென்னும் ஓர் தெய்வம்"!

தரணியிலே எனக்கெனவே
இங்குவந்து என்னையாண்ட
கதையினையே சொல்லிடுவேன்
என்னுயிரைக் கருவாக
என்னன்னை சுமந்திடவே
வித்தாகத் தந்தானிவன்
இவன்பெருமை என்சொல்வேன்
கனிவொன்றே காட்டியென்னைத்
தாயவளும் வளர்த்தாலும்
கொடுமையான உலகிதினிலே
வாழும்வழி சொன்னவனிவன்
கைப்பிடித்து கூட்டியெனைக்
கடைத்தெருவில் பஞ்சுமிட்டாய்
வாங்கித்தந்த அந்தநாளை
நினைவுகூர்ந்து இன்புறுவேன்
அரிச்சுவடி சொல்லித்தந்து
அகரமெலாம் படித்திடவே
அறிவான கல்விதந்து
அரவணைத்த ஆசானிவன்
தன்தொழிலைத் தொடர்ந்திடவே
தன்மக்களில் ஒருவராயினும்
வருவாரோ வெனநினைத்தும்
அவரவரை ஆதரித்தான்
மருத்துவத்தில் இவர்போல
யான்வரவே வேண்டுமெனக்
கால்கடுக்க இவன் நடந்த
காட்சியினை மறப்பேனோ
மருத்துவனாய் யான்தேர்ந்து
பட்டம்பெறும் வேளையிலே
இவனிருக்கவில்லை அந்தோ
எனக்கந்தப் பேறில்லை
இறுதிநிலைப் படிப்புநிலை
இங்கிவனோ மாரடைப்பில்
என்மடியில் சாய்ந்தபடி
உயிர்விட்டான் என்னவனும்
வாழ்ந்திட்ட நாட்களையே
மகிழ்வுடனே நினைவுறுவேன்
அன்பொன்றே காட்டிநின்ற
மன்னவனை எண்ணுகிறேன்
தன்மகனை அன்றொருநாள்
வேறெவரோ குறைசொன்ன
சேதிகேட்டுப் பொங்கியெழுந்து
சண்டையிட்ட நிகழ்வினிது
வேற்றூரில் பணிசெய்யப்
போனாலும் மறக்காமல்
எனையணைத்து முத்தமிட்டு
சென்றிட்ட நாளினிது
எதிர்வருவோர் யாரென்றே
தெரியாது ஓர்நாளில்
வேகமாக ஓடிவந்து
தந்தைமேலே மோதிவிட்டேன்
அடிப்பாயோ எனும்பயத்தில்
நீர்வழிய அழுதுவிட்டேன்
'பார்த்துப்போடா' எனச்சொல்லி
சிரித்தபடி நீ நகர்ந்தாய்
நீமறைந்து நாளாச்சு
நினைவின்னும் அகலவில்லை
நினையெண்ணா நாளொன்றும்
இதுவரையில் எனக்கில்லை
போதனைகள் புகட்டியதில்லை
புத்திமதிகள் சொன்னதில்லை
அன்பொன்றே காட்டிநின்றாய்
அதையின்னும் மறக்கவில்லை
ஒற்றையாகப் பிறந்தாலும்
பலரையுமே நீயணைத்தாய்
பாசமென்பது என்னவென்றே
நீ காட்டித்தான் யானறிந்தேன்
நின்புகழை யான்போற்ற
செய்வதென்று ஒன்றுண்டு
அன்பென்னும் ஓர்பொருளை
அனுதினமும் காட்டுவதே
தந்தையர் தினத்தன்று
தந்தையே நினக்காக
யானிங்கு செய்வதுவும்
அன்புடனே வாழ்வதுவே!
அன்பே சிவம்!
அன்பே என் தந்தை!
அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்!