Thursday, October 19, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 8 'பொறையுடைமை'

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 8 'பொறையுடைமை'


"இன்னிக்கு கொஞ்சம் அவசர வேலையா, வண்ணாரப்பேட்டை வரைக்கும் போயாவணும். அதுனால சீக்கீரமா நா சொல்றத எளுதிக்கிட்டு எடத்தக் காலி பண்ணு. இப்பவே ஒன் மாமூல் டீ, மசால்வடைல்லாம் முடிச்சிடு!" என்று வரவேற்றான் மயிலை மன்னார்.

"அப்படி என்ன அவசரம் மன்னார்? நீ எப்பவும் பொறுமையான ஆளாச்சே" என்று அவனைக் கேட்டேன்.

"நம்ம மச்சான் ஒர்த்தன் அங்கே கீறாம்ப்பா. ஆரோ இன்னாமோ சொல்ட்டாங்களாம் அவனை! அத்த இன்னோரு பேமானி இவன்ட்ட போட்டு குடுத்துட்டான். செயிலுக்கு போனாலும் கவல இல்ல. ஆங்! அவனை வெட்டிட்டுத்தான் மறுவேலைன்னு கூப்பாடு போட்டுக்கினு இருக்கானாம். நம்ம தங்கச்சி இப்பத்தான் ஃபோன் பண்ணி அளுதிச்சு. அத்தான் இன்னா, ஏதுன்னு ஒரு தபா பாத்துட்டு வந்திர்லாம்னு பொறப்புட்டுகிட்டு இருக்கேன். அட்டோக்கு சொல்லியிருக்கேன். இப்ப வந்துரும். இப்ப நா சொல்லப் போறதும் அத்தைப் பத்தித்தான். ம்ம்ம். சீக்கிரமா எளுது" என்று அவசரப்படுத்தினான் மன்னார்.

அவன் நிலைமை புரிந்து அவன் சொன்னதை அவசர அவசரமாக எழுதிக் கொண்டு வந்து பதிக்கிறேன்.

இனி வருவது குறளும் அதற்கு மயிலை மன்னாரின் விளக்கமும்!

"அதிகாரம் 16 - பொறையுடைமை"


"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை." [151]

நீ பொறந்தது இந்தப் பூமில. நீ வாள்றதும் இங்ஙனேதான்.
இத்த வுட்டா வேற எங்கியும் மனுஷாளே கிடையாதுன்னு வேற ஸொல்றாங்க.
இது பொளந்துச்சுன்னா, மவனே, அவ்ளோதான்!
அல்லாரும் கூண்டோட கைலாசந்தான்.
இது மேலத்தான் வாள்றோம், நடக்கறோம், படுக்கறோம், வூடு கட்றோம், பயிர் பண்றோம், இன்னும் எத்தினி எத்தினியோ பண்றோம்.
அப்படி இத்த வெட்டிக் குளி தோண்ட்றப்பவும் இது மேல நின்னுகிட்டுதான் தோண்ட்றோம்.
அதுக்காவ, அது கோவிச்சுகிட்டு, டமார்னு பொளந்து ஒன்னிய சாச்சுருதா? இல்லேல்ல?
அத்தைப் போலவே, நீயும் ஒன்னிய ஆராச்சும் எதுனாச்சும் தப்பா சொல்ட்டான்னு மானத்துக்கும் பூமிக்குமா குதிக்காம, அத்தப் பொறுத்துப் போவணும்.
வேற எது செஞ்சாலும், செய்யாக்காட்டியும் பர்வால்ல. இந்த பொறுத்துப் போற விசயத்த மட்டும் கருக்கா செஞ்சுறணும். அதனாலத்தான், இதை தலைன்னு சொல்லிருக்காரு நம்ம ஐயன்.

"பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று." [152]

ஒர்த்தர் ஒனக்கு இன்னா கெடுதல் பண்ணினாலும் அத்தப் பொறுத்துப் போயிறணும்.
அப்டி அவன் சொன்னது செத்துப் போச்சுன்னு நெனைச்சு வுட்டுரணும்.
செத்துப் போனாக்கூட, செத்தவுங்க நெனைப்பு நம்மளை வந்து வாட்டிக்கினு இருக்கும்ல?
அதனால, செத்துப் போச்சு அந்தக் கெடுதில்லாம்னு நெனைக்கறத வுட, அது மாரி காரியங்கள அப்பவே மறந்துறணும்.
அது முந்தி சொன்னத வுட ஒசத்தியானது.

இந்த டைம்ல இன்னோரு விசயமும் சொல்றேன், எளுதிக்கோ.
நம்ம அர்சியல்வாதிங்கல்லாம் 'மறப்போம், மன்னிப்போம்'னு ஒரு டகல் வுட்டுகினு திரியுறாங்களே அது அத்தினியும் பொய்யி.
சும்மா ஊரை ஏமாத்தறதுக்கவ போடற டிகிரி வேலை.
நெசமாலும் மறந்துட்டீன்னா, அப்பறமா இன்னாத்த மன்னிக்கறது?

மெய்யாவே சொல்றாங்கன்னா, மன்னிப்போம், மறப்போம்னு தானே சொல்லணும்?
நா சொல்றது வெளங்குதா?

இது புரியாம நம்ம சனங்க அல்லாம் இவனுக பின்னாடி உசிரக் குடுத்துகிட்டு அலையுது!
இன்னாமோ போ!
சரி, டயம் ஆச்சு; நீ மேல போ!

"இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை." [153]

போன வாரம் நா சொன்னதே இப்பவும் திரும்பி வருது!

இல்லாமப்போறதுலியெ ரொம்ப மோசமானது வர்ற விருந்தாளிங்களை சரியா கவனிக்காம வுடறதுதான்ன்னு சொன்னேன்ல.
அத்தப்போல, ஒன்னாண்டை இருக்கற பலத்துலியே பெரிய பலம் இன்னான்னு கேட்டேன்னு வையி, புத்தியில்லாம ஒர்த்தன் ஒனக்கு பண்ணின கெட்ட சமாச்சாரத்தை அத்தோட மறந்து, நெனப்புலேர்ந்து தூக்கி எறிஞ்சுர்றதுதான்.
இன்மைன்னா ஏளை, ஒண்ணும் இல்லாதவன்னு அர்த்தம்.

" நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும். [154]

இப்ப ஒரு கொடம் ரொம்ப தண்ணி இருக்குன்னு வெச்சிப்போம்.
அத்த நீ தூக்கியாற. தம்மு தும்முன்னு ஆட்டிக்கினு நடந்தீன்னா இன்னா ஆவும்? அத்தினி தண்ணியும் கொட்டிப் போயிரும்.
அதே நெதானமா பொறுமையா வந்தேன்னு வையி.
கொடந்தண்ணியும் தளும்பாம இருக்கும். சர்த்தானே நா ஸொல்றது?

நீயும் ஒரு கொடம் மாரி.
ஒங்கிட்ட நீ பாத்து பாத்து சேத்து வெச்ச நல்ல கொணம்லாம் தண்ணி மாரி ரொம்பிக் கெடக்கு. ஆத்தரப்பட்டேன்னா, அத்தெல்லாம் கொட்டிப் போயிரும்.
பொறுமையா இருந்தேன்னா, ஒண்ணும் ஒன்னை வுட்டுப் போவாது.
நல்ல மன்சன்னு பேரெடுப்பே நீ.
வெளங்கிச்சா?

"ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. [155]

இதுமாரி ஒரு ஆளு ஒனக்கு ஒரு கெட்டது பண்ணிடறான்.
ஒனக்கு கோவம் கோவமா வந்து அவனைப் பளி வாங்கணும்னு நெனைக்கறே, இப்ப என் மச்சான் இருக்கானே அவன் மாரி!

அப்பால இன்னா ஆவும்?
போலீஸ் வந்து இவனைப் புடிச்சிக்கினு போவும்.
நாலு சாத்து சாத்தும். உள்ளே போடும்.
அவன் பொண்டாட்டி புள்ளைங்கல்லாம் தெருவுல நிக்கும்.
இந்த ஊரு இன்னா சொல்லும் அவனைப் பத்தி.
புத்தி கெட்ட பய.
அறிவில்லாத ஒரு காரியத்தப் பண்ணிட்டு இப்ப அவஸ்தை படறான் பாருன்னு தானே தூத்தும்?

அதே, அப்படி பண்ணினவனை மன்னிச்சு வுட்டான்னு வையி, இதே ஊரு அப்ப இன்னா சொல்லும் தெர்யுமா?
பெரிய மன்சன்யா அவன்!
தங்கமான கொணம்!
ஆத்தரப்படாம, பொறுமையா இருந்தான் பாரு அப்டீன்னு வாள்த்தும்.

இப்ப இத்த வெச்சுகிட்டு, நாட்ல நடக்கற விசயத்தோட கம்பேர் பண்ணிக் கொயப்பிக்காதே.
அது சட்டம் சம்பந்தப் பட்ட விசயம்.
நீ இன்னா பண்ணனும் அத்த மட்டும் பாரு.
அர்சாங்க வேலைய அவங்க கிட்ட வுடு.
அதுக்குள்ள ஆயிரம் ஓட்டை இருக்கு. அது நமக்கு வோணாம்.
சர்யா?

"ஒறுத்தர்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்." [156]

தப்பு பண்ணவனைத் தண்டிச்சேன்னா அன்னிக்கு ஒரு நாளைக்கு மட்டும்தான் ஒனக்கு குஜிலியா இருக்கும்.
மறுநா பொளுது விடிஞ்சவொடனியே ஒனக்கே 'சீ' ன்னு இருக்கும்.
ஆனாக்காண்டி, மன்னிச்சு வுட்டேன்னா, இந்த ஒலகம் இருக்கற வரைக்கும் ஒம் பேரை சொல்லிகினு இருக்குமாம்.
அம்மாம் புகளு வந்து சேரும் ஒனக்கு.

"திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று." [157]

இன்னோர்த்தன் ஒனக்கு கெட்டதே பண்ணினாக்கூட, அதுக்காக கஸ்டபட்டுகிட்டு, அத்தத்தான் ஐயன் 'நோ நொந்து' ன்னு சொல்லியிருக்காரு, நீயும் தப்பான காரியத்துல பதிலுக்கு செய்யாம இருக்கறது தான் நல்லது. பளிக்குப் பளி, ரத்தத்துக்கு ரத்தம், எனக்கு ரெண்டு கண்ணு போனாலும்பரவாயில்ல, ஒனக்கு ஒரு கண்ணாச்சும் போயிறணும்னு எத்தினி நாளைக்குப்பா சண்டை போட்டுகினே இருக்கறது மாறி மாறி ரெண்டு பேரும்.
ஒர்த்தராவது சும்மா இருக்க ட்ரை பண்ணனும்.
போயி உங்க வலைல இருக்கறவங்களுக்கு ஸொல்லு.

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்." [158]

அப்ப இன்னா ஸொல்றே நீ?
அவன் என்னிய அடிப்பான், அடிச்சுகினே இருப்பான்.
நா சும்மா கன்னத்தைக் காட்டிக்கினு இருக்கணுமான்னு கேக்க வரே இல்ல? எனக்கு தெரியுமே! நீ இப்படி கேப்பேன்னு.
ஒன்னிய அங்கே போயி இன்னும் அடிறான்னு காமிக்கச் சொல்லலை நா. நவரு.
அது மெய்யாலுமே கெட்டதுதான்னு தெரிஞ்சுருச்சில்ல?[மிகுதியான்] அப்பறம் ஏன் அங்கியே போயி குந்திக்கினு அடி வாங்கற?
பொறுமையா இரு.
அவனுக்கு பதில் சொல்றத வுட்டு ஒன் வேலையப் பாரு.
அவனுக்கே அலுத்துப் போயிரும்.
சே! இன்னாத்துக்கு இத்த நா பண்ணிக்கினே இருக்கேன்னு ஒன் பொறுமையைப் பாத்து வுட்ருவான்.
அப்டித்தான் கெலிக்கணும்!
அதான் ஒனக்கு பெருமை! [தகுதியான்]

"துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்." [159]

கெட்டவங்க சொல்ற கஸ்மாலப் பேச்சையெல்லாம் பொறுத்துகிட்டு, அதுக்கு போயி பதில் சொல்லாம இருக்காம் பாரு, அவந்தான் நெசமாலுமே அல்லாத்தையும் வுட்ட சாமியாருங்கள வுட சுத்தமானவன்.
அல்லாத்தியும் வுட்டவங்களத்தான் சொல்றேன்!

இங்கே 'இறந்தார்'னு சொல்றது செத்துப் போனவன்ற அர்த்ததுல இல்ல. மனசுல திமிரு, ஆணவம்னு வெச்சிருக்கான் பாரு, அவனைத்தான் சொல்றாரு. அவன்லாம் உசுரோட இருந்தாக்கூட செத்தவனுக்கு சமம்னு நெனைச்சு சொல்லியிருக்காரு.

"உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்." [160]

அல்லாருக்கும் புடிச்ச சாப்பாட்டைக் கூட தான் வுட்டுட்டு, பளம், பொரின்னு மட்டும் துண்ணுகிட்டு நோம்பு நோக்கறாங்களே அவங்களையெல்லாம் பெரிய மகான்னு சொல்லுவாங்க.

ஆனாக்க, அடுத்தவன் நம்மளைப் பாத்து சொல்ற மோசமான வெசவு அல்லாத்தியும் பொறுத்துகிட்டு கம்முனு இருக்கான் பாரு, அவன் இந்த மகான்கள வுட ரொம்ப பெரிய ஆளுங்க.

"சரி, ஆட்டோ வந்திருச்சு. நா கெளம்பறேன். நாயர்ட சொல்லிட்டேன். மறக்காம டீ சாப்ட்டுட்டு போ! அப்பால பாக்கலாம். நா வந்து தகவல் சொல்றேன்"
என்று அந்த அவசரத்திலும் விருந்தோம்பலை மறக்காமல் செய்துவிட்டு, சிட்டாய்ப் பறந்தான் மயிலை மன்னார்!

அவன் வலியுறுத்திச் சொன்ன இன்னொரு விஷயம்.

இங்கு சொன்னதெல்லாம் தனி மனித ஒழுக்கம் குறித்து மட்டுமே!
பொது நிகழ்வோடு தொடர்பு படுத்திக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று அடித்துச் சொல்லிவிட்டுத்தான் போனான்.

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP