"ஆடேலோர் எம்பாவாய்" - 10 [20] இரண்டாம் பகுதி
"ஆடேலோர் எம்பாவாய்" - 10 [20] இரண்டாம் பகுதி
பதின்மூன்றாம் பாடல் மனதைக் கவர்ந்தது போலவே, இப்பாடலும் உருக்கியது!
இப்பாடலில் எட்டு அடிகள்!
அதில் முதல் ஏழு அடிகளில் போற்றப்படுவது ஈசன் திருவடிகள்!
அதைப் பற்றிய விளக்கம் ஒன்றை ஓர் உரையில் படித்தேன்.
சைவ சித்தாந்தத் தத்துவத்தை அப்படியே இந்த ஒரு பாடலில் பிழிந்து தந்திருக்கிறார், வாதவூரார்!
நான் அறிந்ததை இங்கு உங்களுடன் பங்கிட விழைகிறேன்!
திருவெம்பாவையின் முதல் பாடலில் "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி" என இறைவனைப் புகழ்ந்த மாணிக்கவாசக சுவாமிகள், இந்த இருபதாம் இறுதிப் பாடலில் ஆதிக்கு ஒரு வணக்கம், அந்தத்திற்கு ஒரு வணக்கம் என முதல் இரு அடிகளில் போற்றுகிறார்.
அடுத்த ஐந்து அடிகளில், ஒரு ஐந்து நிகழ்வுகளைச் சொல்லி, அதற்கும் இத் திருவடிகளையே போற்றுகிறார்!
இவை என்னென்ன எனப் பார்க்கலாம்!
ஐந்தொழில் புரிய திருவுளம் கொண்டு இந்த சிவம் என்னும் சோதி எல்லாவற்றிற்கும் பிறப்பிடமான "ஆதி" [முதல்]ஆயிற்று.
இந்த ஐந்து தொழில்களும் முடிந்த நேரத்திலோ, அனைத்தும் ஒடுங்கும் 'அந்தம்" [இறுதி] ஆயிற்று!
முதலும், முடிவும் இல்லாத முழுமுதற்பொருள், நமக்குக் கருணை செய்யும் பொருட்டு, ஐந்தொழில் புரிந்து ஆதியும், அந்தமும் ஆயிற்று!
அப்படிப்பட்ட, ஆதியும், அந்தமும் நம் சிவனாரின் சேவடிகளே!
அவை நம்மைக் காத்து அருளட்டும்!
இப்போது இந்த ஐந்தொழில்களைப் பார்ப்போம்!
முதலில் வருவது "படைப்பு"... தோற்றம்!
தோன்றிய ஒன்று நல்ல முறையில் காக்கப்பட வேண்டுமேயானால், இன்பம்.....போகம் துய்க்க வேண்டும்! இதுவே "காத்தல்"!
பிறந்தவை யாவும் ஒரு நாள் அழியத்தான் வேண்டும்! இந்த "அழித்தல்" ...ஈறு எனப்படும்!
இம்மூன்றும் தவிர, வேறு இரு தொழில்களும் எல்லாம் வல்ல இறைவனுக்கு உண்டு!
ஒன்று "மறைத்தல்"...காணாமை! தன் திருவடிகளை மறைத்து சோதிப்பிழம்பாய், மாலறியா, நான்முகனும் 'காணா' மலையாக நின்றது குறிப்பால் காட்டப் பட்டது.
அடுத்த, ஐந்தாவது தொழில், "அருளல்"....உய்ய ஆட்கொண்டு அருளுவது! நாம் கடைத்தேற வகை செய்வது!
இந்த "படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்" என்னும் ஐவகைத் தொழில்களையும் திருவடிகளே செய்யும்!
இப்படி ஏழடியிலும், இறைவன் திருவடிகளே போற்றப்பட்டது.
எட்டாம் அடியில் இம்மாதத்திற்கு உகந்த "மார்கழி நீராடல்" போற்றப்பட்டது!
இப்போது மீண்டும் ஒருமுறை பாடலைப் பார்ப்போம்!
போற்றி அருளுக நின் "ஆதியாம்" பாதமலர்
போற்றி அருளுக நின் "அந்தமாம்" செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் "தோற்றமாம்" பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் "போகமாம்" பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் "ஈறாம்" இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் "காணாத" புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டு "அருளும்" பொன்மலர்கள்
போற்றியாம் "மார்கழி நீர் ஆடேலோர்" எம்பாவாய். 20
அருவம், அருவுருவம், உருவம் மூன்றும் கடந்த இறைவனாரின் ஞானசொரூபத்தில்,
பெண்ணாகி, ஆணாகி, அலியாகி நின்ற நிலையில்,
விண்ணாகி, மண்ணாகி, இத்தனையும் வேறாகி கண்ணார் அமுதமாய் நின்ற தோற்றத்தில்,
திருவடிகளும் ஒரு ஞான பாவனையாகவே அமையும்.
உண்மையில் உருவமில்லாதவன் அவன்!
இதனை உணர்ந்த ஞானமே அம்பலம்.... திருக்கோயில்.... அண்ணாமலை !
அதில் விளையும் ஆனந்தமே இறைவனாரின் திருக்கூத்து!
இப்பேரானந்தத்தை நாளை முதல், நம்முள் "திருப்பள்ளி எழுச்சி" பாடுவோம், இன்னும் பத்து நாட்களுக்கு!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
திருச்சிற்றம்பலம்.