"உந்தீ பற!" -- 11
"உந்தீ பற!" -- 11
பகவான் ரமணரின் "உபதேச உந்தியார்"
[முந்தைய பதிவு]
உளமு முயிரு முணர்வுஞ் செயலு
முளவாங் கிளையிரண் டுந்தீபற
வொன்றவற் றின்மூல முந்தீபற. [12]
உளமும் உயிரும் உணர்வும் செயலும்
உளவாம் கிளை இரண்டு உந்தீ பற
ஒன்று அவற்றின் மூலம் உந்தீ பற.
உள்ளம் என்னும் ஒன்றின் இருப்பால்
உயிரும் ஆங்கே ஓம்பியே வளரும்
உணர்வெனும் ஆக்கம் இருத்தலின் விளைவால்
செயலெனும் ஒன்றின் பிறப்பும் நிகழும்
உள்ளம் கொடுக்கும் உணர்வின் உந்தல்
உயிரின் செயலை ஓங்கியே வளர்க்கும்
இரண்டு கிளையாய்ப் பிரிந்து நிற்கினும்
சக்தியே இவற்றின் மூலம் ஆகும்.
உள்ளம் அறிவு சார்ந்தது. இந்த அறிவு, புலன்களின் வழியே கண்டு, கேட்டு, சுவைத்து, முகர்ந்து, தொடுதல் வழியாக உணரப்பட்டு, அறிந்து கொள்ளப் படுகிறது. உயிர் எனப்படும் பிராணன் அந்த அறிவைச் செயல்வடிவாக்குக்கிறது.
இந்த இரு கிளைகளும் சக்தி என்னும் பரம்பொருளின் [சிலர் இதனை இயற்கை எனச் சொல்லக்கூடும்], மூலத்திலிருந்து பிறக்கிறது.
பிராணன் என்கிற உயிர்மூச்சு, கிரியா சக்தியாகச் செயல்படுகிறது.
மனம் என்னும் ஞான சக்தி, தன்னறிவைக் கொண்டு வழிநடத்துகிறது.
புலன்கள் உணரும் பொருட்களை மனம் இன்னதென உணர்ந்து, தெரிந்து, புரிந்து கொள்கிறது.
இந்த இரண்டாலுமே தனித்தனியாக எதனையும் அறிய முடிவதில்லை என்பதைக் கவனிக்கவும்.
நம் மனம் ஏதோ ஒரு உணர்வின் வாயிலாக கோபமோ, பயமோ, ஆத்திரமோ அடையும்போது, நமது உடல் பதறி, மூச்சுக்காற்று வேகமாக வரத் துவங்குகிறது என்பது அனைவருக்குமே தெரியும்!
அதே மனம் சமாதானமாகும்போது, மூச்சும், உடலும் சீராகின்றன.
பிராணன், மனம் இரண்டிற்கும் இடையிலுள்ள சம்பந்தம் இந்த உதாரணத்தால் புரிய வரலாம்.
முந்தைய பாடலில் சொல்லப்பட்ட, 'மூச்சுக் காற்றை மட்டுமே கவனித்து வருதல்' என்கிற பிராணாயாமத்தைச் செய்யும்போது, எந்தவித அவசரமும் இல்லாமல் மூச்சு சீராக வருவதையும், உடல் லேசாக இருப்பதையும், மனம் வேறெதையும் நினையாமல், ஆராயாமல், அமைதியாவதையும் உணரலாம்!
பயிற்சி செய்யும் சாதகன் ஒருநிலைப்பட இது உதவுகிறது.
இந்த இரு கிளைகளுக்குமே ஆதாரமாக "சக்தி" விளங்குகிறது என்பதே இப்பாடலின் உட்பொருள்!
*********************
[தொடரும்]