Tuesday, July 01, 2008

"இது ஒரு கொலைக் கதை" - 10

"இது ஒரு கொலைக் கதை" - 10

முந்தையப் பதிவு

ஜப்பார் சொல்லத் தொடங்கினார்!

'சத்யன் ஒரு நேர்மையான சிப்பி வியாபாரி.


நியாயமான விலைக்கு சிப்பிங்களை வாங்கி, அதை அடுத்த வியாபாரிகிட்ட விக்கற இடைத் தரகர்.

கிடைக்கற லாபத்துல ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்திட்டு இருந்த ஆளு.

அவரு கையில இந்த சிப்பிங்க கொத்தா கிடைச்சிருக்கு ஒருதரம்~
அது இந்தப் பசங்களுக்கும் தெரிஞ்சதுதான் அவரோட துரதிர்ஷ்டம்.


எப்படியாவது அதை அடிச்சறணும்னு திட்டம் போட்டாங்க!

வெள்ளிக்கிழமை ராத்திரி.
மூணு பேரும் நல்லா தண்ணி அடிச்சிட்டு, அவங்களோட ஓட்டை ஜீப்புல பெட்ரோல் போட்டுகிட்டு, சத்யன் வீட்டுக்குப் போறாங்க.


சத்யன் மட்டும் டி.வி பார்த்துகிட்டு இருக்காரு.

காசி, மாரி, ராசையன் மூணு பேரும் சத்தம் போடாம உள்ளே நுழைஞ்சு, சத்யனை மடக்கறாங்க.

சிப்பி எங்கேன்னு மிரட்டறாங்க!

தன்கிட்ட அப்படி எதுவும் இல்லைன்னு சத்யன் சொல்றாரு.

பொய் சொல்லாதே! எனச் சொல்லி சத்யனை அடிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

சத்யனின் அலறல் சத்தம் கேட்டு மாடியில் இருந்த கலா கீழே இறங்கி வந்திருக்கிறார்.

என்னவெனத் தெரிந்ததும், தடுக்க முயற்சித்திருக்கிறார்.

அப்போதுதான், ஆத்திரத்தில் அறிவிழந்த மாரி இருவரையும் காசியின் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளி இருக்கிறான்.


நிலைமை மோசமாகிப் போனதை உணர்ந்த மற்ற இருவரும் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி வீட்டை எரித்துவிட்டுத் தப்பித்து விடலாம் என ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி இருக்கிறார்கள்.

தடயங்கள் எல்லாம் அழிந்துவிடும் என நம்பினார்கள்.


ராஜேஷின் காரில் இருந்த சிப்பிகளைக் கைப்பற்றி அதை முத்தண்ணனிடமும் விற்றிருக்கிறார்கள்.


குற்றத்தில் பயன்படுத்திய துப்பாக்கியை, காசி கடலில் சென்றபோது வீசி எறிந்திருக்கலாம்.

இன்னும் சரியா, விசாரிக்கற விதத்துல விசாரிச்சா, அதுவும் தெரியவரும்!

மாரியோட காதலி மட்டும், அந்தத் துப்பாக்கி குண்டு பதிஞ்ச மரத்தைப் பத்தி சொல்லலைன்னா, இவங்களை இதுல சம்பந்தப் படுத்தி இருக்கவே முடியாது.

அதே மாரி, சொர்ணத்தம்மாவோட தோழியும் உண்மையைச் சொன்னது நல்லதாப் போச்சு.

இப்படித்தான்! எவ்வளவோ கவனமா இருக்கறதா நினைச்சு செஞ்சாலும், எங்கியாவது ஒரு சின்ன விஷயத்துல கோட்டை விட்டுட்டு மாட்டிப்பாங்க. மாரி மட்டும் தன் ஆளுகிட்ட பந்தா பண்றதுக்காக தோட்டா வீசிக் காமிக்கலைன்னா இந்த சாட்சியம் கிடைச்சிருக்காது நமக்கு!

சரி, இப்ப போயி அந்த மூணு பேரையும் பிடிச்சுகிட்டு வாங்க' எனச் சொல்லிச் சிரித்தார் ராஜேஷ்.


'அதுக்கு முன்னாடி, இதெல்லாம் எப்படி இவ்ளோ சரியாச் சொல்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா' என்றார் பொன்னுசாமி.

ரொம்ப ஈஸிங்க! அதான் முன்னாடியே சொன்னேனே! கார் டயர் அடையாளம், பெட்ரோல் பங்க்காரர் சொன்னது, முத்தண்ணன் வாக்குமூலம், ரோஸி, சொர்ணத்தம்மா சொன்னது, அந்த குண்டு அடையாளம் இதை வைச்சு நான் அனுமானிக்கறது இது! சரி போங்க! கொண்டு வாங்க அவங்களை' என்றார் ஜப்பார்
************

மாரி தப்பிச்சுட்டானுங்கய்யா! அவன் மேலத்தான் கொலைப்பழி விழும்னு ஆரோ சொல்லியிருக்காங்க போல. பட்சி பறந்திடுச்சு.' என வந்தார் பொன்னுசாமி.

'தேடுங்க! நல்லாத் தேடிப் பிடிங்க. மாரி இல்லாம இந்தக் கேஸு ஜெயிக்காது. அவந்தான் சுட்டான்றதை நிரூபிச்சாத்தான் மத்தவங்க இதுக்கு உடந்தையா இருந்தாங்கன்னு காட்ட முடியும். ' எனப் பரபரத்தார்.

பதினெட்டு மாதம் சென்று, திருவனந்தபுரத்தில், ஒரு லாட்ஜில் மாரி கைது செய்யப்பட்டான்.

மரியதாஸ் எனப் பெயர்மாற்றம் செய்துகொண்டு, ஒரு கார் மெக்கானிக்காக இருந்திருக்கிறான் இத்தனைக் காலம்!

வழக்கு நடந்து மூவரும் குற்றவாளிகள் என சந்தர்ப்ப சாட்சியங்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், குற்றமிழைத்த ஆயுதம் கிடைக்காததனால், மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
********************

[இது ஒரு உண்மைக்கதை. கருவை எடுத்துக் கொண்டு நம் நடையில் எழுத முயற்சித்திருக்கிறேன். நன்றி ட்ரூ டி.வி. விரைவில் அடுத்த கதையுடன் சந்திக்கிறேன்!]

Read more...

"இது ஒரு கொலைக் கதை" - 9

"இது ஒரு கொலைக் கதை" - 9

[முந்தைய பதிவு இங்கே]

வெள்ளிக்கிழமை ராத்திரி அந்த மூணு அண்ணன் தம்பிங்களும் வந்து பெட்ரோல் போட்டாங்களா' என அந்தப் பெட்ரோல் பங்கின் உரிமையாளரை விசாரித்தார் பொன்னுசாமி.

'எந்த மூணு அண்ணன் தம்பிங்க? என்ன சொல்றீங்க?' எனப் பரிதாபமாக விழித்தார் அவர்.

'மன்னிச்சுக்கோங்க! நான் காசி, மாரி, ராசையன் பத்திக் கேட்டேன்' எனச் சமாளித்தார் பொன்னுசாமி.

'ஓ! அவங்களா! எப்பவும் இங்கதானே போடுவாங்க. அதுல என்ன விசேஷம்?' என அசுவாரசியமாகச் சொன்னார் உரிமையாளர்.

'எப்பவும் போடறதைப் பத்தியா இப்பக் கேட்டேன்? கேட்ட கேள்விக்கு ஒழுங்கு மரியாதையா பதில் சொல்லணும். அன்னைக்கு.... அதாவது போன வெள்ளிக்கிழமை ராத்திரி, .... இவங்க வந்து பெட்ரோல் போட்டாங்களா? இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. அத்தோட, அன்னிக்கு ராத்திரி இவங்க நடத்தையில எதுனாச்சும் வித்தியாசம் தெரிஞ்சுதா?' என அதட்டினார் பொன்னுசாமி [612]

'ஆமாங்க! நீங்க சொல்றது சரிதான். ஆனா, அன்னிக்கு அவங்க நடத்தையில ஒரு பரபரப்பு தெரிஞ்சுது. அது மட்டுமில்லாம அவங்க சொன்ன ஒரு வார்த்தை என்னால மறக்க முடியாதுங்க.; என அவர் சொன்னதும் சுறுசுறுப்பானார் கண்ணன்.

'என்ன சொன்னாங்க அப்படி?' என்றார்.

'இன்னிக்கு ஒரு வேட்டை இருக்கு'ன்னு சொல்லிட்டு, வண்டியில போட்டது போக, தனியா ரெண்டு 'கேன்'ல வேற பெட்ரோல் பிடிச்சாங்க' என்றார் உரிமையாளர்.

'ஓ அப்படியா? நீங்க என்ன ஏதுன்னு விசாரிச்சீங்களா' என்றதும், 'அதெல்லாம் எங்க வேலை இல்லீங்க' எனச் சொல்லிச் சிரித்தார் அவர்.

'ரொம்ப நன்றிங்க' என விடை பெற்றார் கண்ணன்.
********************

'நமக்குத் தேவையான எல்லாத் தடயங்களும் கிடைச்சாச்சு. குற்றவியல் அதிகாரிங்களும் மரத்துல இருந்த குண்டும், மண்டையோட்டுல இருந்த குண்டும் ஒரே துப்பாக்கியிலேருந்துதான் சுட்டிருக்குன்னு உறுதிப் படுத்திட்டாங்க. கைது பண்ணிறலாமா?' எனக் கேட்டார் ராஜேஷ்.

'இன்னும் ஒரு விஷயம் பாக்கி இருக்கு. இந்தப் பசங்க வைச்சிருக்கற ஜீப்புதான் அந்த இடத்துல இருந்துச்சான்னு உறுதிப் படுத்தணும்' என்றார் ஜப்பார்.

'அதெல்லாம் அப்பவே பண்ணியாச்சே! அந்த இடத்துல இருந்த டயர் அடையாளமும் இந்தப் பசங்க ஜீப்போட டயரும் ஒத்துப் போகுதுங்க.'

'வெரி குட்! இவங்க முத்தண்ணன்கிட்ட வித்த சிப்பி பத்தி என்ன தகவல் கிடைச்சது?;'

'அதான் அப்பவே விசாரிச்சாச்சே! இந்தப் பசங்க வித்த சிப்பிங்கல்லாம், கொஞ்ச நாளானாலும் ஒரே தரத்துல இருந்திச்சுன்னு!' என்று சலிப்புடன் சொன்னார் ராஜேஷ்.

'அப்போ சரி! அண்ணன் தம்பி மூணு பேரையும் கைது பண்ண வாரண்ட் வாங்குங்க' என உத்தரவு பிறப்பித்தார் ஜப்பார்.

'ஐயா! ஒரு கேள்விங்க! எப்படி இவங்கதான் குத்தவாளின்னு முடிவு பண்ணினீங்கன்னு சொல்லுங்க ஐயா! அதுவும் ரொம்ப சுளுவா கண்டுபிடிச்சிட்டீங்களே ஐயா!' எனப் பணிவுடன் கேட்டார் கண்ணன்[404]

சொல்றேன் கேளுங்க! என ஆரம்பித்தார் ஜப்பார்.

**************

[அடுத்த பதிவில் முடியும்!]

Read more...

"இது ஒரு கொலைக் கதை" - 8

"இது ஒரு கொலைக் கதை" - 8

'எலே! காசி! உன்னோட துப்பாக்கியை எடுத்துகிட்டு ஐயா உடனே வந்து பாக்கச் சொன்னாரு!'

'எந்த ஐயா? எந்த துப்பாக்கி?' என்றான் காசி.

'தோ பாரு! சும்மா விளையாடாதே! இப்ப வந்திருக்கற அதிகாரி ஒண்ணும் சாதாரண ஆளுல்ல. ரொம்பவே குடையறாரு. ஒன் பேருல ஒரு துப்பாக்கி பதிஞ்சிருக்கு. அது எங்க இருக்குன்னு சொல்லு, போதும். இல்லேன்னா உன் கதை அவ்ளோதான்' என்றார் 612 என்கின்ற பொன்னுசாமி.

'துப்பாக்கியா? என்கிட்டயா? இருந்துது சாமி ஒரு காலத்துல. அது இப்ப என்கிட்ட இல்லை' என்றான் காசி.

'அப்படீன்னா, உன் கதை கந்தல்தான்! என்ன ஆச்சுன்னு விலாவாரியா சொல்லு' என்றார் பொன்னுசாமி.

'அது எங்ககிட்ட இருந்ததென்னவோ உண்மைதான். அது ஒரு ஆறு மாசத்துக்கு முந்தி கைதவறி கடல்ல விழுந்திடுச்சு. இப்ப அது என்கிட்ட இல்லை. இதான் உண்மை. நம்புங்க.' என்றான் காசி சிரித்தபடியே!

'அப்படீன்ற! சரி. அப்ப ஏன் அதை உடனே ஸ்டேஷன்ல வந்து ஒரு புகாராக் கொடுக்கலை? ' என மடக்கினார் பொன்னுசாமி.


'அப்படீங்களா? அப்படிச் செய்யணும்னு எனக்குத் தெரியாதுங்களே! வைச்சிருந்தாத்தான் சொல்லணும். இல்லேன்னாலும் சொல்லணுமா?' என அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான் காசி.

'என்னமோசொல்றே! இது ஒண்ணும் நல்லதாப் படலை. ஜாக்கிறதைப்பா! போலீஸ் விசாரிப்பெல்லாம் வேற மாதிரி இருக்கும். இப்ப நான் வந்து தன்மையாக் கேட்ட மாரி இருக்காது.சரி, நான் வர்றேன்' என எழுந்தார் பொன்னுசாமி.

'சரீங்க ஐயா! எப்ப வேணும்னாலும் வாங்க! என்னாலானதை செய்யறேன். இப்பல்லாம் நான் ரொம்ப திருந்திட்டேங்க' என வழியனுப்பி வைத்தான் காசி.

'போறதுக்கு முந்தி ஒரு கேள்வி. போன வெள்ளிக்கிழமை ராத்திரி எங்க இருந்தே நீ' என்றார் பொன்னுசாமி.

'அதான் பசங்க சொல்லிட்டாங்களே! எங்க அம்மா வூட்டுக்குத்தான் போயிருந்தோம்' எனச் சிரித்தான் காசி.

'நெனைச்சேன்! இதான் சொல்லுவேன்னு! சரி. நான் வரேன்' எனச் சிரித்தவாறு கிளம்பினார்.
************

'துப்பாக்கியும் இல்லை. இவங்க சொல்றதையும் ஒதுக்க முடியலை. இப்ப என்ன பண்றது?' என்றார் ராஜேஷ்.

'இந்தப் பசங்களைப் பத்தி இன்னும் எதாவது தீவிரமா விசாரிக்கணும்' என்றார் ஜப்பார்.

'என்ன சொல்றீங்க? எனக்கு ஒண்ணும் புரியலியே?' என வினவினார் ராஜேஷ்.

'இவங்களுக்குத் தெரிஞ்சவங்க இவங்களைப் பத்தி என்ன சொல்றாங்கன்னு விசாரிங்க ராஜேஷ்' என நகர்ந்தார் ஜப்பார்.
**************

'உன் பேரு என்னம்மா?' என்றார் ராஜேஷ்.

'ரோஸிங்க' என ஒருவிதப் பயத்துடன் சொன்னாள் அந்தப் பெண்.

கருப்பானாலும் நல்ல களையான முகம்!

இளம் பெண்! வாலிபம் தவழ்ந்தோடியது அவளிடம்!

வாயில் புடவையிலும் இளமையின் எழில் துள்ளிக் குதித்தது.

'மாரியை உனக்கு எவ்வளவு நாளாத் தெரியும்?' என அதட்டினார் ராஜேஷ்.

'இப்பத்தாங்க. ஒரு ரெண்டு வருஷமா' எனத் தயங்கியபடியே சொன்னாள் ரோஸி.


'ரொம்பவே பழகிட்டீங்களோ?' எனக் கேட்டதும் பதறினாள் ரோஸி.

'என்னங்கையா சொல்றீங்க. எதுக்கு இப்படியெல்லாம் கேக்கறீங்க' என ஒரு கண்டிப்புடன் கேட்டாள்.

'சரி. நேரடியா விஷயத்துக்கு வர்றேன். உங்க மாரி எதுனாச்சும் துப்பாக்கி வைச்சுப் பார்த்திருக்கியா?' என்றார்.

'துப்பாக்கியா? ஆமாங்க! அப்பப்ப என்கூட இருக்கறப்ப, ஒரு துப்பாக்கியைக் காமிச்சிருக்காருங்க. சில சமயம் சுட்டுக்கூட காமிச்சிருக்காருங்க, என்னை... என்னை விட்டுருவீங்கதானே!' என்றதும் நிமிர்ந்து உட்கார்ந்தார் ராஜேஷ்.

'எங்கே? எங்கே சுட்டுக் காமிச்சான்' என ஆவலுடன் கேட்டார்.

'தோப்புலதானுங்க. ஒரு மரத்துல கூட சுட்டுக் காமிச்ச தடயம் இருக்குங்க' என வெள்ளந்தியாகச் சொன்னாள் ரோஸி.

'எந்த மரம்? காட்டு அதை' என இன்னமும் தீவிரமானார் ராஜேஷ்.

'காட்டறேன் சாமி. அதுக்கப்புறம் என்னை விட்டுருவீங்கதானே? நான் ஒரு அறியாப் பொண்ணுங்க!' என்றவாறே அவரை அழைத்துச் சென்று ஒரு தென்னை மரத்தைக் காட்டினாள் ரோஸி.

என்ன ஆச்சரியம்!

ஒரு குண்டு அதில் பாய்ந்திருந்தது தெரிந்தது!

மிக மிகக் கவனமாக அந்தக் குண்டு தோண்டி எடுக்கப் பட்டது.

பரிசோதனைக்கு அதை அனுப்பி வைத்தார்.

ஜப்பாரிடம் சொன்னபோது மிகவும் பாராட்டினார்.


'இந்தக் கேஸ் முடிஞ்சதும் உங்களுக்கு ப்ரமோஷன் காத்திருக்கு'
*****************************

[தொடரும்]

Read more...

"இது ஒரு கொலைக் கதை" - 7

"இது ஒரு கொலைக் கதை" - 7

[முன் பதிவு இங்கே]

'எனக்கென்னமோ அந்தக் கிழவி பொய்தான் சொல்றான்னு தோணுது' என்றார் ராஜேஷ். 'இப்ப என்ன பண்றது?' எனக் கையைப் பிசைந்தார்.

'அவ பொய் சொல்றான்னா, அவளுக்குத் தெரிஞ்சவங்களை விசாரிங்க. அது எப்படீன்னு நான் சொல்லியா தரணும்' எனச் சொல்லிச் சிரித்தார் ஜப்பார்.

'அட! இது சட்டுன்னு எனக்குத் தோணாம போயிருச்சே என ஒரு கணம் திகைத்த ராஜேஷ், 'என்ன இருந்தலும், புலனாய்வுத்துறைப் போலீஸ்னா தனி ட்ரெய்னிங்தான்' என மனதுக்குள் சிலாகித்தவாறே கிளம்பினார்.

வேற எதுனாச்சும் ரிப்போர்ட் வந்திருக்கா?' என 404-ஐ வினவினார் ஜப்பார்.

'வந்திருக்குங்க ஐயா! துப்பாக்கிக் குண்டு பத்தின ரிப்போர்ட்' என ஒரு தாளை நீட்டினார் 404.

வாங்கிப் படித்தார் ஜப்பார்.

'இந்தக் குண்டு ஒரு .35 மில்லிமீட்டர் துப்பாக்கியில் இருந்து சுடப்பட்டிருக்கிறது. இதில் இருக்கும் ஒருவித தனி அடையாளங்கள், கீறல்கள், இதற்கான துப்பாக்கி கிடைத்தால், அதனுடன் ஒப்பிட்டுச் சொல்லமுடியும்'

'சம்பவம் நடந்த இடத்துல, எதுனாச்சும் துப்பாக்கி கிடைச்சுதா?' எனக் கேட்டார் ஜப்பார்.

'இல்லீங்க ஐயா! அங்க எதுவும் அப்படி கிடைக்கலை' எனப் பதிலிறுத்தார் 404.

'அப்போ இன்னும் அது கிடைக்கலை. இந்தப் பசங்க மூணு பேருல யாராச்சும் துப்பாக்கி வைச்சிருந்தா, அது ஸ்டேஷன்ல பதிவு செஞ்சிருக்கணுமே. அப்படி ஏதாவது இருக்கான்னு பாருங்க' என ஆணையிட்டார்.

'சரீங்க ஐயா' எனச் சொல்லி ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிய 404, திடீரெனப் பிரகாசமானார்.

'இருக்குங்க! காசிப் பய ஒரு .35 துப்பாக்கியை பதிவு பண்ணி இருக்கான்' எனக் கூவினார்!

'சரி. காசியைக் கூப்பிட்டு விசாரிங்க. அது கிடைச்சா[!!] வாங்கி பரிசோதனைக்கு அனுப்புங்க' என உத்தரவிட்டார்.

'இதோ பண்றேன் ஐயா' என ஜரூரானார் 404.
*****************

'ஏம்மா! உங்களுக்கு சொர்ணத்தம்மாவை எவ்வளோ நாளாத் தெரியும்?' ராஜேஷ் அந்தப் பெண்மணியைப் பார்த்துக் கேட்டார்.

'ரொம்ப வருஷமாத் தெரியுமுங்க. எதுக்குக் கேக்கறீங்க?' என பவ்யமாக பதில் சொன்னார் அந்தப் பெண்மணி.

'அடிக்கடி பார்ப்பீங்களோ' எனத் தூண்டில் போட்டார்.

வாராவாரம் பார்ப்போமுங்க. இப்ப போன வெள்ளிக்கிழமை கூட பார்த்தேனே!' என்ற பெண்மணியை சற்று உற்சாகத்துடன் பார்த்தார் ராஜேஷ்.

'வழக்கம்போலக் காலையில்தானே!' என நோட்டம் விட்டார்.

'காலையிலியும் பார்த்தேனுங்க. ராத்திரி கூத்து கட்டறப்பவும் பார்த்தேனுங்க' என்றார் அந்தப் பெண்மணி.

'ஓ! ராத்திரி கூத்தும் நடந்துச்சா?' என அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார் ராஜேஷ்.

'விடிய விடிய நடந்துச்சுங்க. சொர்ணத்தம்மாவும் நானும் முழுக்க முச்சூடும் பார்த்தோமுங்க'

'அப்போ அவங்க பசங்களும் இருந்தாங்கதானே' என மீண்டும் கொக்கி போட்டார்.

'அந்தத் தறுதலைப் பசங்க எங்கங்க இங்கெல்லாம் வர்றாங்க. எம் பசங்களைப் பார்த்து எம்புட்டு நாளாச்சுன்னு சொர்ணம் கூட ரொம்பவே பொலம்பிச்சுங்க. ஏங்க ஏன் இதையெல்லாம் கேக்கறீங்க' என்ற பெண்மணியின் கேள்வியைப் பொருட்படுத்தாது, அவரது பெயர், விலசத்தைக் குறித்துக் கொண்டு கிளம்பினார் ராஜேஷ்.

நேராக ஜப்பாரிடம் சென்று தகவலைச் சொன்னார்.

ஜப்பாரின் முகம் பிரகாசமாகியது.

'அப்போ சொர்ணத்தம்மா எதையோ மறைக்கறாங்க. இல்லைன்னா யாருக்காகவோ பொய் சொல்றாங்க. முத்தண்ணன்கிட்டப் போயி, அந்த சிப்பி வித்த விஷயத்தை மறுபடியும் கேக்கணும்; அப்படியே, காசியோட துப்பாக்கியையும் விசாரிங்க' என்றார் ஜப்பார்.

'சரிங்க ஐயா!' என்றபடி அடுத்த உத்தரவுகளைப் பிறப்பித்தார் ராஜேஷ்.
*************

[தொடரும்]

Read more...

"இது ஒரு கொலைக் கதை!" - 6

"இது ஒரு கொலைக் கதை!" - 6

[முந்தையப் பதிவு இங்கே]

'வாங்க வாங்க! எதுனாச்சும் துப்பு கிடைச்சுதா என வரவேற்றார் முத்தண்ணன்.

'நீங்கதான் கொடுக்கணும். அதுக்குத்தான் வந்திருக்கோம்.' என அமர்ந்தார் ராஜேஷ்.

'சொல்லுங்க. நான் என்ன செய்யணும்?'

'காசி வித்த சிப்பி பத்தித்தான்! என்ன தரம் அதுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?' என்றார் ஜப்பார்.

நல்ல தரமான சிப்பிங்க! எல்லாம் ஒரே குளிச்சல்ல எடுத்த மாரி அசலா இருந்துது. ஆனா, கொஞ்ச நாளு காஞ்ச சிப்பிங்க. இருந்தாலும் பழுதில்லை' என்றார் முத்தண்ணன்.

'கொஞ்சம் விவரமாச் சொல்லுங்களேன்' என ஆவலானார் ஜப்பார்.

'அது வந்துங்க, அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா திருடிச் சேகரிச்ச சிப்பிங்கன்னா, பலதும் கலந்த மாரி இருக்கும். ஒரே குளிச்சல்ல எடுத்ததுன்னா, ஒரே மாரி இருக்கும். காசி கொண்டு வந்தது ஒரே மாரி இருந்தாலும், கொஞ்ச நாளு கழிச்சு கொண்டு வந்த மாரி காஞ்சு போயிருந்தது. இருந்தாலும் தரமா இருந்ததால அப்படியே மறுபேச்சு சொல்லாம வாங்கிகிட்டேன். அவங்களுக்கும் எங்களை விட்ட யாரு இருக்காங்க சொல்லுங்க' என அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார் முத்தண்ணன்.

'ரொம்ப நன்றிங்க உங்க உதவிக்கு' என எழுந்தார் ஜப்பார்.
*********

'என்னைய்யா, 612! காசி அம்மா வீடு எங்கே இருக்குன்னு கண்டு பிடிச்சீங்களா?' எனச் சலிப்புடன் கேட்டார் ராஜேஷ்.

'தெரியுமைய்யா! அண்ணா தெருவுல 112-ம் நம்பர் வீடுங்க' என்றவுடன், நிமிர்ந்தார் ராஜேஷ்.

அடுத்த சில நிமிடங்களில், அவரது ஜீப் அங்கே நின்றது.

'இங்க சொர்ணம்மான்றது யாருங்க?'

'யாரது? போலீஸா? என்ன வேணும் உங்களுக்கு? என் பசங்க மறுபடியும் எதுனாச்சும் தப்புத்தண்டா பண்ணிட்டாங்களா?' எனக் கேட்டவாறே ஒரு வயதான மூதாட்டி வெளியே வந்தாள்.

'அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க! உங்ககிட்ட சில கேள்வி கேக்கணும். போனவாரம் வெள்ளிக்கிழமை ராத்திரி உங்க பசங்க மூணு பேரும் இங்கே இருந்ததாச் சொல்றாங்க! அது உண்மையான்னு விசாரிக்கத்தான் வந்திருக்கோம்' எனச் சொன்னவுடன், சொர்ணத்தம்மாவின் படபடப்பு கொஞ்சம் அடங்கியது.

'எங்க பசங்க அடிக்கடி இங்க வந்து போறதுதான். ஆத்தாவைப் பாக்க வருவாங்க; போவாங்க. இதிலென்னங்க விசாரணை?' என சற்று கேலியாகக் கேட்டவுடன் சற்று கோபமானார் ராஜேஷ்.

'ஏய் கிழவி! கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லணும். உங்க பசங்க போன வெள்ளிக்கிழமை ராத்திரி இங்க வந்தாங்களா?' எனச் சற்று கடுமையுடன் கேட்டதும் நடுங்கிப் போனார் சொர்ணத்தம்மாள்.

'போன வெள்ளிக்கிழமையா?' என நெற்றியைச் சுருக்கி சற்று யோசித்தவர், ' ஆங்! வந்தாங்களே! வந்து, கோழிக்கொழம்பு வைக்கச் சொல்லி இருந்து சாப்பிட்டுட்டு கருக்காலைதான் கெளம்பிப் போனாங்க!' எனச் சற்று படபடப்புடன் சொன்னார்.

'நல்லா நினைவு படுத்திச் சொல்லுங்க. அது போன வெள்ளிக்கிழமை ராத்திரிதானா?' என சாந்தமாகக் கேட்டார் ஜப்பார்.

'ஆமாங்க. நான் ஏன் பொய் சொல்லப் போறேன். காசி, மாரி, ராசையன் மூணு பேரும் வந்து இருந்து, சாப்புட்டுட்டு, விடியறப்பத்தான் போனாங்க' எனத் தீர்மானமாகச் சொன்னார் சொர்ணத்தம்மா.


'அப்ப சரி. நாங்க கிளம்பறோம்' என எழுந்தார் ராஜேஷ்.
***********************
[தொடரும்]

Read more...

"இது ஒரு கொலைக் கதை!" - 5

"இது ஒரு கொலைக் கதை!" - 5

[முந்தையப் பதிவு இங்கே]

'காசின்னு ஒருத்தன்.... நமக்குப் பழக்கமான ஆளுதான்.... அவந்தான் வித்திருக்கான்'

'யாரு அவன்? கொஞ்சம் அவனைப் பத்திச் சொல்லுங்க' எனப் பதட்டமானார் ராஜேஷ்.

'அண்ணன் தம்பிங்க மூணு பேரு. காசி, மாரி, ராசையன்னு பேரு அவங்களுக்கு. அவங்கள்ல ஒருத்தன்..... ஆங்.... மாரி,..... மாரி ஒரு ரெண்டு நாளைக்கு முந்தி வந்து, தான் கொஞ்சம் சிப்பிங்க சேத்து வைச்சிருக்கறதாச் சொல்லி, வாங்கிக்க முடியுமான்னு கேட்டான். தரம் நல்லா இருக்கேன்னு நான் அதை வாங்கிகிட்டு, பணம் கொடுத்தேன்' என்றார் முத்தண்ணன்.

ஜப்பாரின் முகம் பிரகாசமானது! 'அவனைப் பத்தி வேற எதாவது தகவல் சொல்ல முடியுமா?' எனக் கேட்டார்.

'சொல்றதுக்குன்னு ஒண்ணும் பெருசா இல்லீங்க. இதான் அவங்க தொழிலே! முத்துக் குளிக்கப் போறதில ரொம்பவே துடியா இருப்பாங்க! தான் உண்டு தங்க வேலை உண்டுன்னு இருப்பாங்க! அதே சமயம் கொஞ்சம் முரடு கூட! சண்டை தகராறுல்லாம் ரொம்பவே அத்துப்படி. இவங்க முரட்டுத்தனம் எனக்குத் தெரிஞ்சதினாலியே, ரொம்ப வெவகாரம் வைச்சுக்காம, அந்த சிப்பிங்களைக் கூட நான் வங்கிகிட்டேன்' எனச் சொல்லிச் சிரித்தார்.

'அவங்க எங்கே இருக்காங்கன்னு தெரியுமா? சரி, சரி, வேண்டாம். அதை நாங்க பார்த்துக்கிறோம். உங்க ஒத்துழைப்புக்கு ரொம்ப நன்றி, முத்தண்ணன் ஐயா' என்று ராஜேஷும், ஜப்பாரும் கிளம்பினார்கள்.

'ஏதோ என்னாலான கடமையை நான் செஞ்சேனுங்க. உங்க தயவெல்லாம் எங்களுக்கு எப்பவும் வேணுமில்லியா!' என அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு, ' உஸ்! அப்பாடா! என்னமோ ஏதோன்னு பயந்திட்டேன்' என முகத்தைத் துடைத்துக் கொண்டார்.
*******************

காசி சகோதரர்களைத் தேடுவது பெரிய சவாலாக இருக்கவில்லை ராஜேஷுக்கு.

ஏற்கெனவே ஒரு சில சின்னச் சின்ன விஷயங்களுக்காக கைது செய்யப்பட்டு இருந்ததால், இவர்களைப் பற்றிய விவரங்கள் நிலையத்தில் சுலபமாகக் கிடைத்தது.

" யோவ் 612! போய் அவங்களை ஸ்டேஷனுக்கு இட்டாய்யா' என அனுப்பினார்.

சற்று நேரத்தில், 612 இரண்டு பேருடன் திரும்பி வந்தார்.

'ஐயா! காசி கிட்டலை ஐயா! கடல்ல போயிருக்கானாம். மாரியும், ராசையனும் இருந்தாங்க. கூட்டிகிட்டு வந்திருக்கேன்' என்றார் 612 என்கிற பொன்னுசாமி.

" என்னப்பா மாரி! எப்படி இருக்கே?" என வழக்கமான விசாரணையை ஆரம்பித்தார் ராஜேஷ்.

'ஏதோ இருக்கேன்யா. நாங்க ஒரு தப்புத்தண்டாவும் செய்யலீங்களே ஐயா. எதுக்கு எங்களை இட்டாரச் சொன்னீங்க?' என மரியாதையுடன் கேட்டான்.

'சொல்றேன், சொல்றேன். சொல்லத்தானே போறேன். சிப்பி வியாபாரம்லாம் எப்படிப் போகுது?' என மெதுவாகத் துருவினார் ராஜேஷ்.

'இப்ப சீசன் சுமாராத்தான் இருக்குங்க. நெறையக் கிடைக்கறதில்ல. '

'ஏதோ சிப்பியெல்லாம் வித்தீங்கன்னு சொன்னாங்களே' என ஒரு கொக்கி போட்டார் ராஜேஷ்.

மாரியின் முகம் இருண்டது

'ஓ! அதுங்களா! கடலுக்குள்ள அப்பப்ப போறப்ப கொஞ்சம் சேர்த்து வைப்போம். அதைத்தான் இந்த கஷ்ட காலத்துல வித்தோம்' என்ற ராசையனை நன்றியுடன் பார்த்தான்.

'அப்ப... நீங்க ஒண்ணும் தப்புத்தண்டால்லாம் பண்ணலைதானே' என்றார் ராஜேஷ்.

'இப்பல்லாம் நாங்க ரொம்ப சுத்தமுங்க. நாங்க உண்டு எங்க வேலை உண்டுன்னு இருக்கோமுங்க' என்றான் மாரி.

'போன வாரம் வெள்ளிக்கிழமை ராத்திரி எங்கே இருந்தீங்க நீங்கள்லாம்' விசாரணையை வேறொரு கோணத்தில் துவக்கினார் ஜப்பார். ராஜேஷ் அவரது திறமையை வியந்தவாறே அவரைப் பார்த்தார்.

'எங்கடா இருந்தோம்?' என மாரி, ராசையைனைப் பார்த்தான்!

புருவத்தைச் சுருக்கியபடி ஒரு நொடி யோசித்த ராசையன், சட்டென, 'என்னண்ணே! மறந்திட்டியா! அம்மாவைப் பார்க்கப் போயிருந்தோமே!' என்றான்!

'அட! ஆம்மாமில்ல! மறந்தே போயிட்டேன். அம்மா வூட்டுக்குப் போயி அன்னிக்கு முளுக்க அங்கதாங்க இருந்தோம்' எனத் தெம்பாகச் சொன்னான் மாரி.

'அப்படியா? உங்க அம்மா வீடு எங்கே இருக்கு?' எனத் தன் ஏமாற்றத்தைக் காண்பிக்காமல் கேட்டார் ராஜேஷ்.

'இங்கேதாங்க பக்கத்துலதான்!' என அமர்த்தலாகச் சொன்னான் மாரி.

'சரி! நீங்க போகலாம்! வேணுமின்னா கூப்பிடறேன்!' என அவர்களை அனுப்பி வைத்தார் ராஜேஷ்.

இப்ப அடுத்தது என்ன?' எனக் கேட்டார் ஜப்பாரை.

'வேற என்ன? காசி அம்மாவைப் பார்ப்போம். அதுக்கு முன்னாடி, முத்தண்ணனை மறுபடியும் பார்க்கணும்' என்றார் ஜப்பார் சிரித்தபடி!
*************

[தொடரும்]

Read more...

"இது ஒரு கொலைக் கதை!" - 4


"இது ஒரு கொலைக் கதை!" - 4

[முந்தைய பகுதி இங்கே]

'நீங்க எத்தனை நாளா இந்த தொழில்ல இருக்கீங்க?'

தன் ஆட்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்த மரைக்காயர் நிமிர்ந்தார்.

'ஓ! வாங்க இன்ஸ்பெக்டர் சார்! என்ன விசேஷம்? எங்களுக்கு இதுதாங்க பரம்பரைத் தொழிலு. காலங்காலமா இதைத்தான் பண்ணிகிட்டு வர்றோம். என்ன விஷயமாக் கேக்கறீங்க?' என அன்புடன் கேட்டார் மரைக்காயர்.

'எனக்கு உங்களைப் பத்தி நல்லாவே தெரியும் மரைக்காயரே! நீங்க நேர்மையாத் தொழில் பண்றவர்னு நல்லாவே தெரியும். எனக்கு ஒரு விவரம் தேவைப்படுது! அதுக்குத்தான் உங்களைப் பார்க்க வந்தேன். இது என்னோட பெரிய அதிகாரி ஜப்பார்' என அறிமுகப்படுத்தினார் ராஜேஷ்.

'வாங்கைய்யா! என்ன சாப்பிடிறீக? டேய் பையா! ரெண்டு கூல்ட்ரிங்ஸ் சொல்லு' என உத்திரவிட்டபடியே அவர்களை உபசரித்தார் மரைக்காயர்.

'பரம்பரை பரம்பரையாப் பண்ற தொழிலுங்க இது. முத்து குளிக்கப் போறவங்களைப் பார்த்து, அவங்ககிட்டேர்ந்து சிப்பிகளை வாங்கி, அதைத் தரம் பிரிச்சு மேல விக்கறதுதான் எங்க தொழில்! அல்லா நல்லாவே இதுவரைக்கும் படியளந்துகிட்டு இருக்காரு. நாங்களும் நேர்மையாத் தொழில் பண்றோம்' என்றவரை மறித்து,

'அப்படீன்னா, நேர்மையில்லாம தொழில் பண்றவங்களும் இருக்காங்கன்னு சொல்றீங்களா?' என மடக்கினார் ஜப்பார்.

'எதுல தான் இல்லை சொல்லுங்க! எல்லாத்துலியும் இருக்காங்க ஸார்!' எனச் சலித்துக் கொண்டார் மரைக்காயர்.

'என்ன மாதிரில்லாம் அப்படி பண்ணுவாங்க இந்தத் தொழில்ல?' என ஒரு எதிர்க் கேள்வி போட்டார் ஜப்பார்.

'வேற என்ன? திருட்டுத்தனமா சிப்பிகளை விக்கறது, அடுத்தவனோட சிப்பிகளை திருடி வந்து விக்கறதுன்னு பலானது பலானதெல்லாம் நடக்குமுங்க! ஆனா, நாங்க அதையெல்லாம் வாங்கறதில்லை'

'வேற யாரு வாங்குவாங்க?'

'ஒரு மூணு கடை தள்ளிப் போயி, முத்த்கண்ணன் கடையில விசாரிங்க! அவரு இதுல கை தேர்ந்த ஆளு! லாபம் ஒண்ணுதான் அவருக்கு முக்கியம்! தொழில், தர்மம்னுல்லாம் ஒண்ணும் பாக்க மாட்டாரு. அவரைக் கேட்டா எதுனாச்சும் துப்பு கிடைக்கும்' எனச் சொல்லிச் சிரித்தார் மரைக்காயர்! 'நாந்தேன் சொன்னேன்னு சொல்லிடாதீங்க! 'நமக்கு எதுக்குங்க பொல்லாப்பு!' என ஒரு வேண்டுகோளும் கூடவே விடுத்தார்!
***********

'இங்க முத்தண்ணன் கடை....'

'இதாங்க! உங்களுக்கு என்ன வேணும்? ஆரு நீங்க? என்ன விசயமா வந்திருக்கீக?' என்றான் ஒருவன்.

'நாங்க போலீஸ். ஒரு கேஸ் விசயமா ..... முத்தண்ணனைப் பார்க்கணும்' என்றார் சாதாரண உடையில் இருந்த ராஜேஷ்.

'ஒங்களுக்கு என்ன வேணும்? எதுக்கு வேலை நேரத்துல தொந்தரவு பண்றீங்க?' என்று மீசையை முறுக்கியபடி தடிமனான ஒரு ஆள் வெளியே வந்தார்.

'நீங்கதான் முத்தண்ணனா?'

'அட! நம்ம இன்ஸ்பெக்டர் ஐயாவா? வாங்க வாங்க! ஆங்... என்ன கேட்டீக?? ஆமாம்! நான் தான் முத்தண்ணன். என்ன விசயமா இவ்ளோ தூரம்?' என்றார் முத்தண்ணன்.

'இந்த சிப்பிகளை எல்லாம் மொத்த விலைக்கு வாங்கற ஆளு நீங்க தானா?'

'தப்பு! அது நான் மட்டும் இல்லை! என்னைப் போல பல பேரு இங்க இந்தத் தொழில் பண்றோம்.' எனச் சொல்லிச் சிரித்தார் முத்தண்ணன்.

'கடந்த ஒரு வாரத்துல உங்க கிட்ட சிப்பி வித்தவங்க லிஸ்ட்டு வைச்சிருக்கீங்களா?'

'எதுக்குக் கேக்கறீங்க? என்ன சமாச்சாரம்? எதுனாச்சும் வெவகாரமா?' என்று உஷாரானார் முத்தண்ணன்.

'கொஞ்சம் பொருள் திருட்டுப் போயிருக்கு. சிப்பிதான். உங்க கிட்ட அப்படி யாராவது வந்து பேசினாங்களானு சொன்னா போறும். வேற ஒண்ணும் இதுல சிக்கல் இல்லை. உங்க ஒத்துழைப்புதான் வேணும்' எனத் தன்மையாகப் பேசிச் சிரித்தார் ஜப்பார்.

முத்தண்ணன் கொஞ்சம் லேஸானார்.

'அதுக்கென்னய்யா? பார்த்துறலாமே' என்று ஒரு நோட்டுப் புத்தகத்தைப் புரட்டினார்.

நாங்கள்லாம் முறையா வாங்கறவங்கதான். அதே சமயம், நமக்குத் தெரிஞ்சவங்க கொண்டு வந்தா, மறுபேச்சில்லாம வாங்கிக்குவோம்! எல்லாம் ஒரு தொழில் தர்மந்தான்!' என்று சில்மிஷமாகச் சிரித்தார் முத்தண்ணன்.

'அதான்! அது மாரி யாராச்சும் இந்த வாரத்துல வந்து எதுனாச்சும் சிப்பி வித்தாங்களான்னுதான் தெரியணும்' என்றார் ஜப்பார்.

'கடலுக்குள்ள முங்கி சிப்பி எடுக்கற ஆளுங்க கிட்ட, வாங்க போட்டா போட்டி இருக்கும். ஆனாக்க, அதையும் தாண்டி. சில பேருங்ககிட்ட எக்ஸ்ட்ராவா சில சிப்பிங்க கிடைக்கும். அதை மறைச்சுக் கொண்டு வந்து விப்பாங்க! அது யாரோட சொத்தும் இல்லை. அதனால, அதை வாங்கி அவங்களுக்கு கொஞ்சம் பணம் கொடுப்போம். இதுலியும் தப்பில்ல. சட்டத்துக்குப் புறம்பா எதுவும் நாங்க செய்யறதில்ல.' என்றார் முத்தண்ணன்.

'இப்ப நாங்க உங்களை விசாரிக்கவோ, இல்லை, நீங்க செய்யறது சட்டபூர்வமா இல்லியான்னு குற்றம் சாட்டவோ வரலை. அந்த பயம் உங்களுக்கு வேண்டாம். நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். ஒரு கொலை நடந்திருக்கு. அவர் வைச்சிருந்த சில சிப்பிங்களும் களவாடப்பட்டிருக்கு. சமீபத்துல அப்படி யாராவது நிறைய சிப்பிங்களை யார்கிட்டயாவது வித்திருங்காங்களானுதான் நாங்க தெரிஞ்சுக்க ஆசைப்படறோம். அது மட்டும் சொன்னாப் போதும்.' என்றார் ஜப்பார்.

சற்றே சமாதானமான முத்தண்ணன், 'அதுக்கென்ன! பார்த்திட்டாப் போச்சு! டேய்! சரவணா, அந்தப் பேரேடை எடு!' என அமர்த்தலாகக் கத்தினார்.

சரவணன் கொண்டு வந்த புத்தகத்தைப் பிரித்துப் பார்த்துக் கொண்டு வந்தவர் முகம் சற்று மலர்ந்தது.

'ரெண்டு நாளைக்கு முன்ன ஒரு ரெண்டாயிரம் சிப்பியை யாரோ வித்திருக்காங்க. இருங்க யாருன்னு பார்க்கிறேன்' என மும்முரமானார் முத்தண்ணன்.

[தொடரும்]

Read more...

"இது ஒரு கொலைக் கதை!" - 3

"இது ஒரு கொலைக் கதை!" - 3

3.
பத்திரிகை செய்திகள் நிறையவே தீனி கொடுத்தன!

"சத்யன் ஒரு இளைஞன்.
28 வயது அவனுக்கு. முத்தெடுக்க மூழ்க அனுப்பும் ஆட்களிடமிருந்து சிப்பிகளை மொத்த விலைக்கு வாங்கி, அவற்றைத் தரம் பிரித்து, இதை வாங்குகின்ற மொத்த வியாபாரிகளுக்கு விற்கும் ஒரு இடைத் தரகன்.
செய்கின்ற வேலையைஒழுங்காகச் செய்பவன்.


சில ஆண்டுகளாகத்தான் இந்தத் தொழிலில் இருக்கிறான்.
நாணயமானவன், அதிகமாக ஆசைப்படாதவன் என்பதால், இவனை நம்பி வாங்கும் வியாபாரிகள் அதிகம்.


கொஞ்சம் வசதியாக வாழ்பவன்.

சமீபத்தில்தான், தான் காதலித்த பெண்ணையே திருமணமும் செய்து கொண்டிருக்கிறான்.

இளம் மனைவி கலா!

இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே காலத்தை ஓட்டி வந்திருக்கிறார்கள்.

இது ஒரு இரட்டைக் கொலை!

துப்பாக்கிக் குண்டிருப்பதால், இது கொலைதான்!

கண்டு பிடிக்கப்பட்ட மண்டையோடு ஒரு ஆணுடையது.

எனவே, சத்யனைக் கொலை செய்துவிட்டு, அவர் மனைவி தன்னையும் கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்!

அல்லது இருவரையும் வேறு எவரோ கொலை செய்துவிட்டு வீட்டைத் தீக்கு இரையாக்கி இருக்க வேண்டும்!

தொழில் முறையில் ஏதேனும் தகராறா சத்யனுக்கு?

கலாவுக்கு ஏதேனும் கள்ளக்காதலா?

கள்ளக் காதலன் யார்?

போலீஸார் தீவிர விசாரணை!"
***************************************

மாநில புலனாய்வுத்துறை அதிகாரி ஜப்பார் முட்டம் வந்தார்.


"என்னை இந்த கேஸை விசாரிக்க மேலிட உத்திரவு. அதற்காக நான் உங்க உரிமை எதையும் பறிக்கப் போறதில்லை. உங்க உதவி எனக்கு மிகவுமே தேவை. நாம ஒரு குழுவா இதை விசாரிக்கலாம்னு இருக்கேன்."
ஜப்பாரின் நட்பான சொற்கள் ராஜேஷுக்கு உற்சாகம் அளித்தது.


"என்னாலான எல்லா உதவியையும் உங்களுக்கு தரச் சொல்லி எனக்கு ஆர்டர் வந்திருக்கு சார்! இது நிச்சயமா ஒரு ரெட்டைக்கொலைதான்! யார் செஞ்சிருப்பாங்கன்னு கண்டுபிடிக்கணும் சார்!" எனப் பதட்டத்துடன் சொன்னார் ராஜேஷ்.

"அதுதானே நம்ம வேலை. இதைப் பத்தின எல்லாத் தகவலையும் சொல்லுங்க" என சகஜமாகக் கேட்டார் ஜப்பார்.


"கொலையுண்ட சத்யன் [வயது 28] எந்தத் தப்புத்தண்டாவுக்கும் போகாத ஆளு. திருமணமானவர். இவரையும், இவர் மனைவி கலா [வயது 24]வையும் யாரோ துப்பாக்கியால சுட்டு கொலை பண்ணிட்டு, கொலையை மறைக்க வீட்டையே தீ வைச்சு கொளுத்தியிருக்காங்க. சம்பவம் நடந்ததுக்கு முதல் நாள்தான் சத்யன் ஒரு பெரிய வியாபாரத்தை முடிச்சு. சுமார் ஒரு 2 லட்சம் மதிப்புள்ள சிப்பிகளை விலைக்கு வாங்கி இருக்காரு. வீடு எரிஞ்சு போச்சே தவிர அவர் வண்டி அங்கே இருந்ததா எந்தவொரு அடையாளமும் இல்லை.
அவரோட காரு ஒரு ஒதுக்குப்புறமான இடத்துல இருந்திச்சு.
இப்ப, அதுல ஒண்ணும் இல்லை!


ஆனா, அவர் வாங்கின சிப்பிங்கள்லாமும் கூடவே எரிஞ்சு போச்சான்னும் தெரியலை...இல்லை யாராவது திருடினாங்களான்னும் தெரியலை.

'ரெட்டைக் கொலைன்னு எப்படி சொல்றீங்க?'

கிடைச்சது என்னமோ ஒரு பாதி எரிஞ்சுபோன மண்டையோடுதான்னாலும், மத்த எலும்புங்களை வைச்சு, இதில் ரெண்டு பேரு இறந்திருக்காங்கன்னு தெரியுது.

'இதை எப்படி ஒரு ரெட்டைக்கொலைன்னு சொல்றீங்க? ஒருவரைக் கொலை செய்துவிட்டு, ஏன் இன்னொருவர் தன்னை தற்கொலை செய்திருக்கக் கூடாது?' என தொடர்ந்து மடக்கினார் ஜப்பார்!

ஒருகணம் திகைத்த ராஜேஷ் உடனே சமாளித்துக் கொண்டு, ' அதான் சொன்னேனே சார்! அந்த 2 லட்சம் மதிப்புள்ள சிப்பிகளைக் காணும்னு! அதை வைச்சுத்தான் இதை ஒரு இரட்டைக் கொலைன்னு நினைக்கிறோம்' என்றார்!

'அது காணும்னு எப்படித் தெரியும் உங்களுக்கு?' என்று மேலும் ஒரு கொக்கி போட்டார் ஜப்பார்.

'சத்யனோட வண்டி ஒரு தனி இடத்துல இருந்திச்சு! அதுல அந்தச் சிப்பிங்க இல்லை. அதுல இருந்ததைப் பரிசோதிச்ச போது, சில தடயங்கள் கிடைச்சதை வைச்சு இதைச் சொல்றேன்' என்றார் ராஜேஷ்.

'அப்படி என்ன கிடைச்சுது? அதைச் சொல்லுங்க!' என்று ஆவலானார் ஜப்பார்.

'அதுல சில கைரேகைங்க கிடைச்சிருக்கு. அதுவுமில்லாம, இன்னொரு ட்ரக்கு அங்க இருந்ததுக்கான அடையாளமும் இருக்கு.' என்றார் ராஜேஷ்.

'அப்படீன்னா, இது யாரோ, இதைப் பத்தி நல்லா தெரிஞ்ச யாரோ செஞ்சதுதான்னு சொல்றீங்க இல்லை?' எனக் கொக்கி போட்டார் ஜப்பார்.

'இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்!' என சாமர்த்தியமாகப் பதில் சொன்னார் ராஜேஷ்.

'சரி! நாம இப்ப நம்ம அடுத்த கட்ட நடவடிக்கை பத்தி முடிவு பண்ணலாம்!' என்றபடி எழுந்தார் ஜப்பார்!

'அது என்ன?' என ஆவலுடன் கேட்டார் ராஜேஷ்.

'வழக்கம் போலத்தான்! அக்கம் பக்கம் விசாரிப்போம்! ஆங்! அந்த மண்டையோட்டுல இருந்த குண்டை பரிசோதனைக்கு அனுப்பியாச்சு இல்லை?'

'அனுப்பியாச்சு சார்! ரிப்போர்ட் சீக்கிரமே வந்திரும்' என்றார் ராஜேஷ்.

'நல்லது. நான் போய் ஓய்வு எடுக்கறேன்' என்றபடி நடந்தார் ஜப்பார்.
***************************

[தொடரும்]

Read more...

"இது ஒரு கொலைக் கதை!" - 2

"இது ஒரு கொலைக் கதை!" - 2


2.

உறைகள் மாட்டிய கைகளில் தீயில் கருகிய ஒரு பாதி மண்டை ஓட்டோடு தீயணைப்பு அதிகாரி!!

சாதாரண தீவிபத்து இல்லை; ஒரு மரணமும் இதில் இருக்கிறது எனப் புரிந்த ராஜேஷ், இன்றைய தூக்கம் அவ்வளவுதான் என்ற புரிதலோடு அதிகாரியை நோக்கி நடந்தார்!

"யோவ், 612, அந்த மண்டையோட்டை பத்திரமா ஒரு ப்ளாஸ்டிக் கவர்ல வாங்குய்யா! உடனே அதை பரிசோதனைக்கு அனுப்பு. வீட்டுல ரெண்டு பேர் இருந்ததாச் சொல்றாங்க. வேற ஏதாவது கிடைக்குதான்னு பாருங்க சார்! ஏம்ப்பா, சத்யன், கலா இவங்கள்ல யாரையாவது நீங்க நேத்து பாத்தீங்களா?" எனக் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டவாறே சுறுசுறுப்பானார் ராஜேஷ்.

"நேத்து சாயந்தரம்கூட அவங்க ரெண்டு பேரையும் கடைத்தெருவுல பார்த்தேனுங்க. சிப்பி கூட வாங்கினாங்களே!" என்ற ஒருவனை அருகில் அழைத்தார்.

"உனக்கு அவங்களைத் தெரியுமா?"

"அப்படில்லாம் ஒண்ணும் ரொம்பப் பழக்கம்லாம் இல்லீங்க! ஏதோ வருவாங்க, போவாங்க. வழியில பாத்தா சிரிப்பாங்க. அவ்ளோதாங்க நம்ம பழக்கம்லாம்" என ஜகா வாங்கியவனை,

"என்னமோ சிப்பி வாங்கினாங்கன்னு சொன்னியே. அதைப்பத்தி சொல்லு" எனத் துருவினார் ராஜேஷ்.

"ஓ! அதுங்களா! இந்தப் பக்கம்தான் சிப்பி அள்ளுவாங்கன்னு ஒங்களுக்கும் தெரியுமே! அவரு அதை மொத்த விலைக்கு வாங்கி, தரம் பிரிச்சு, அடுத்தவங்களுக்கு விக்கற ஆளுங்க. அந்த வகையில பார்த்திருக்கேன்" என்றான் அவன்.

"சரி நீ போகலாம்" என அவனை அனுப்பிவிட்டு,
"என்னங்க, எதுனாச்சும் கிடைச்சுதா?' என அதிகாரி பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார்.

"சில எலும்புங்கல்லாம் கிடைச்சிருக்கு. தேடிகிட்டு இருக்கோம்." என்றார் அதிகாரி.

"எல்லாத்தியும் பத்திரமா சேகரிச்சு ஆய்வுக்கு அனுப்பணும்" என உத்தரவிட்டுவிட்டு, "வேற ஏதாவது தகவல் தெரிஞ்சா எங்கிட்ட வந்து சொல்லுங்க" என கூட்டத்துக்கும் சொல்லிவிட்டு காவல்நிலையம் செல்ல ஆயத்தமானார்.

முழு அறிக்கை எழுதி முடிக்காம இன்னிக்கு வீடு போக முடியாது என்ற எண்ணம் கொஞ்சம் வாட்டினாலும், கடமை உணர்வு அவரை நேராகக் காவல்நிலையத்துக்கு இட்டுச் சென்றது.
************************************************************


மறுநாள் காலை.............

பத்திரிகைகளில் முதல் பக்க செய்தியாக வந்தது இதுதான்!

"முட்டத்தில் பயங்கர இரட்டைக் கொலை!"
"துப்பாக்கியால் சுடப்பட்டு தடயத்தை மறைக்க இருவரையும் சேர்த்தே எரித்த கோரம்!!"
"தடயங்கள் ஏதுமில்லாமல் காவல்துறை திணறல்!!!"

ராஜேஷ் தினசரியை விட்டெறிந்தார்!

"இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு. காவல்துறையை திட்றதுக்கு எதுடா சாக்குன்னு காத்துகிட்டு இருக்காங்க! ரெண்டு பேரு செத்துப் போயிருக்காங்க! இல்லை, இல்லை, கொலை செய்யப்பட்டிருக்காங்க! அவங்களைப் பத்திக் கவலையே இல்லை இவங்களுக்கு!" எனப் பொருமினார்!
"இளவயசு! அதான் இப்படி அடிச்சுக்கறாரு!" எனக் கண்ணடித்தார் 612!

2 நாட்களுக்குப் பிறகு....

"404! ரிப்போர்ட் ஏதாவது வந்திருக்கா?" எனக் கேட்டார் ராஜேஷ்!

"உங்க மேஜை மேல வைச்சிருக்கேன் ஐயா!" என்றார் 404.

எடுத்துப் படித்தார் ராஜேஷ்!

'கிடைத்த தடயங்கள்:
பாதி எரிந்த ஒரு மண்டையோடு
இரண்டு கை எலும்புகள்- எரிந்த நிலையில்
மேலும் சில எலும்புத் துண்டுகள்
மண்டையோட்டைத் தவிர, மற்ற தடயங்களில் இருந்து எதுவும் அறிய முடியவில்லை.
மண்டையோடு முழுக்கவும் எரிந்த நிலையில் இருந்தாலும், அதில் ஒரு சிதிலமடைந்த குண்டு இருக்கிறது.
அதிலிருந்து என்ன மேல் விவரங்கள் தெரிய முடியும் எனக் குற்றப் புலனாய்வுத் துறைக்கு[Criminal investigation] அனுப்பி வைத்திருக்கிறோம்."

படித்தவுடன் ஒரு ஏமாற்றம் பிறந்தது ராஜேஷுக்கு.

"இனி நமக்கு இதில் வேலையில்லை. புலனாய்வுத்துறை இதை எடுத்துக் கொள்ளும். நம்மளை ஒரு ஊறுகாயாத்தான் எடுத்துக்கும்! நமக்கு வழக்கம் போல அடிபுடி கேஸ்தான்!" வெறுப்புடன் உமிழ்ந்தார் ராஜேஷ்.

"அப்பிடி இல்லீங்க! நாமளும் இதில் உதவ முடியும்!" அனுபவம் மிகுந்த 612 ஆதரவாய்ச் சொன்னார்.


"நமக்குத்தான் இந்த ஊரைப் பத்தி அவங்களை விட நல்லாவே தெரியும்! அதுனால நாம இதை செஞ்சது யாருன்னு கண்டுபிடிக்கமுடியும்" எனச் சொன்ன 612-ஐ கனிவுடன் பார்த்தார் ராஜேஷ்.

[தொடரும்]
**********************

Read more...

"இது ஒரு கொலைக் கதை!" - 1

"இது ஒரு கொலைக் கதை!"

[என்னருமைத் தமிழ்மனங்களே! இதோ, உங்கள் வீயெஸ்கே மீண்டும் ஒரு கொலைக் கதையோடு உங்களை வதைக்க வந்திருக்கிறேன் ! அனுபவிங்க! அப்படியே ஒரு கருத்தும் சொல்லிட்டுப் போங்க!]


1.
"முட்டம் காவல் நிலையம்! இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பேசறேன்" சிணுங்கின தொலைபேசியை எடுத்து மிடுக்காகச் சொன்னார் ராஜேஷ்.

சொன்னாரே தவிர, "என்னடா, இன்னும் பொழுது கூட விடியலை. நைட் ட்யூட்டி முடிஞ்சு கிளம்பற நேரத்துல இதென்ன தலைவலி?" என ஒரு அலுப்பும் தெரிந்தது அவர் குரலில்.

"ஐயா! இங்க ஊர்க்கோடியில இருக்கற ஒரு வீடு தீப்பிடிச்சு எரியுதுங்க" எனப் பதட்டத்துடன் ஒரு குரல் கேட்டதும் சற்றே விறைப்பானார் ராஜேஷ்.

"உடனே தீயணைப்பு நிலையத்துக்கும் சொல்லிட்டீங்களா இல்லையா? நீங்க யாரு பேசறது? எவ்ளோ நேரமா எரியுது" எனக் கேள்விகளை அடுக்கினார்.

"என் பேரு முருகேசனுங்க. எங்க வீட்டிலிருந்து ஒரு அரை மைல் தள்ளி ஒதுக்காப்புல இருக்குதுங்க அந்த வீடு. தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் சொல்லிட்டேங்கோ. நீங்க உடனே வாங்க! மேட்டுத் தெரு பக்கத்துல இருக்குங்கோ இந்த வீடு. நான் வைச்சிறட்டுங்களா" எனத் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

"யோவ் 404! ஜீப்பை ரெடி பண்ணச் சொல்லுப்பா. அப்பிடியே ஃபயர் ஸ்டேஷனுக்கும் ஒரு தகவல் கொடுத்து,.....ஏற்கெனவே தகவல் சொல்லிட்டாங்களாம். இருந்தாலும் நாமளும் சொல்லிறணும்ல.... அவங்களை மேட்டுத்தெரு பக்கம் வரச் சொல்லு உடனே! ம்ம்.. சீக்கிரம்! " எனச் சொல்லியபடியே, தொப்பியை எடுத்து தலையில் சரி செய்துகொண்டே ஜீப்பை நோக்கி விரைந்தார் ராஜேஷ்.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் சம்பவம் நடந்த இடத்தைச் சென்றடைந்தார்.

தீயணைப்பு வண்டி அதற்குள் வந்திருந்து, காவலர்கள் தங்கள் வேலையைத் தொடங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

ஆனால், பார்த்த உடனேயே ராஜேஷுக்கு புரிந்து போயிற்று, இவர்களுக்கு இன்று அதிக வேலை இருக்காதென.

அந்த ஒற்றையடுக்கு வீடு முழுதுமாக எரிந்து தரைமட்டமாயிருந்தது. தீயின் நாக்குகள் இன்னமும் அங்குமிங்குமாகக் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

அவ்வளவு கருக்கலிலும், ஒரு சிறு கூட்டம் கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

"இங்க யாருப்பா முருகேசன்?" விசாரணையைத் தொடங்க சுறுசுறுப்பானார் ராஜேஷ்.

"நாந்தாங்க ஐயா" என ஒரு பெரியவர் முன் வந்தார்.

"எப்போ, என்ன பாத்தீங்க. கொஞ்சம் விவரமா சொல்றீங்களா?" என்றார் ராஜேஷ்.

"அப்படி ஒண்ணும் அதிகமா எதுவும் பாக்கலீங்க. காலையில வளக்கம் போல வெள்ளன எளுந்து வெளியே வந்தப்ப, இந்த வீடு பத்தி எரியறதைப் பார்த்தேனுங்க. உடனே ஒரு சத்தம் போட்டு எளுப்பறதுக்கு அவ்ளோ வீடுங்களும் இங்க கிடையாதுங்க. அதான் உடனேயே உங்களுக்கு ஒரு ஃபோன் போட்டேன்" என ஒருவகை ஜாக்கிரதையுடன் பதில் சொன்னார் முருகேசன்.

"சரியாத்தான் செஞ்சிருக்கீங்க. இங்க குடியிருக்கறது யாருன்னாவது தெரியுமா?"

"சத்யன்னு ஒருபுள்ளாண்டைங்க. கல்யாணம் கூட இப்பத்தான் சமீபத்துல ஆச்சுங்க. கலான்னு பேருங்க அவங்களுக்கு. ரொம்பத் தங்கமானவங்க. எப்பப் பார்த்தாலும் மரியாதையாப் பேசும் அந்தத் தம்பி. ஜாஸ்தி பார்த்ததில்லீங்க. ஏங்க அவங்களுக்கு ஒண்ணும் ஆயிருக்காதில்ல?" எனப் பதட்டத்துடன் கேட்டார்.

எரிச்சலாக வந்தது ராஜேஷுக்கு.

"நானும் இப்பத்தானே வந்திருக்கேன். அவங்க வீட்டுலதான் இருந்தாங்களா இல்லியான்னு கூட தெரியாது. ம்ம்... பார்க்கலாம். எதுக்கும் நீங்க ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கையெழுத்து போட்டுக் கொடுங்க ... இப்ப நீங்க சொன்னதுக்கு. 404 !, இவர்கிட்ட ஒரு ஸ்டேட்மெண்ட் வாங்கிக்கப்பா" எனச் சொல்லிவிட்டு, தீயணைப்பு அதிகாரிகளை நோக்கி நகர்ந்தார்.

"என்னங்க? எதுனாச்சும் தேறுமா?" என ஒரு அதிகாரியைப் பர்த்துக் கேட்டார்.

"ம்ஹூம்..சுத்தமா எரிஞ்சு போச்சு. இந்தக் கட்டையையெல்லாம் அப்புறப்படுத்திட்டுத்தான் பார்க்கணும்" என்றபடி தன் வேலையை அவர் தொடர்ந்தார்.

"612! இங்க பந்தோபஸ்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. அவங்க வேலையை முடிக்கறவரை ஒருத்தரும் கிட்ட அண்டவிடாதீங்க. எதாவது தகவல் கிடைச்சா எனக்கு சொல்லியனுப்புங்க. நான் வீட்டுலதான் இருப்பேன்" என்றபடி கிளம்பினார்.

"சார்! ஒரு நிமிஷம்! இதைப் பாருங்க" என்ற தீயணைப்பு அதிகாரியின் குரல் அவரைத் திரும்ப வைத்தது!

அங்கே!.......

[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP