Wednesday, October 22, 2008

"தமிழச்சாதி" - "பாரதி- சில காட்சிகள்" -- 3

"தமிழச்சாதி" - "பாரதி- சில காட்சிகள்" -- 3

முந்தையப்பதிவு

'நால்வகைக் குலத்தார் நண்ணும் ஓர் சாதியில்

அறிவுத் தலைமை ஆற்றிடும் தலைவர்—

மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும்--

இவர்தாம்.

உடலும் உள்ளமும் தம் வசம் இலராய்

நெறி பிழைத்து இகழ்வுறு நிலைமையில் வீழினும்

பெரிதிலை; பின்னும் மருந்து இதற்குண்டு;

செய்கையும் சீலமும் குன்றிய பின்னரும்

உய்வகைக்கு உரிய வழி சில உளவாம்,

மற்றிவர்.

சாத்திரம்--[அதாவது, மதியிலே தழுவிய

கொள்கை, கருத்து, குளிர்ந்திடு நோக்கம்]--

ஈங்கிதில் கலக்கம் எய்திடுமாயின்

மற்றதன் பின்னர் மருந்து ஒன்று இல்லை
.'


எல்லாச் செயல்களுக்கும் ஒரு பரிகாரம் உண்டு என ஒரு சாராரும்,

பகுத்தறிவு கொண்டு சாத்திரத்தைத் தள்ளாவிடின் பின் மருந்தே கிடையாது

என இன்னொரு சாராரும் செய்துவரும் குழப்பத்தில் தமிழச்சாதி

குலைந்துபோகின்ற அபாயத்தைச் சுட்டுகிறான் பாரதி.

இதனை இன்னமும் விரித்துச் சொல்ல விழைகிறான்.



'இந்நாள் எமது தமிழ்நாட்டிடையே

அறிவுத் தலைமை தமது எனக் கொண்டார்

தம்மிலே இருவகை தலைப்படக் கண்டேன்;

ஒருசார்.

மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின்

செய்கையும் நடையும் தீனியும் உடையும்

கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை

யவற்றினும் சிறந்தன. ஆதலின் அவற்றை

முழுதுமே தழுவி மூழ்கிடின் அல்லால்,

தமிழச் சாதி தரணி மீது இராது.

பொய்த்தழி வெய்தல் முடிபு' எனப் புகலும்.


நன்றடா! நன்று! நாமினி மேற்றிசை

வழியெலாம் தழுவி வாழ்குவம் எனிலோ

'ஏ ஏ! அஃது உமக்கு இசையா' தென்பர்;

'உயிர்தரும் மேற்றிசை நெறிகளை உவந்து நீர்

தழுவிடா வண்ணம் தடுத்திடும் பெருந்தடை

பல அவை நீங்கும் பான்மைய வல்ல;

என்றருள் புரிவர். இதன் பொருள் சீமை

மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச்

சாதியின் நோய்க்குத் தலை அசைத்து ஏகினர்'

என்பதேயாகும்; இஃதொரு சார்பாம்.'



மேலை நாகரிகத்தைத் தழுவினாலன்றி

தமிழருக்கு வாழ்வில்லை எனச் சொல்லி, அதே சமயம்

அவையெல்லாம் தழுவுவது உமக்கு வராது என

சிலபல தடைகளையும் போட்டு

ஒருசாரார் நம்மைக் குழப்புவர்!

இவர்களைச் சீமை மருத்துவருடன் ஒப்பிட்டுக் கேலி செய்கிறான்.

நமக்குத் தெரியா மருந்துகளைத் தான் மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு,

அவற்றை நமக்கு விளக்காமல், தலை அசைத்துச் செல்லுவர் என!

அப்படியானால், அந்த இன்னொரு சாரார் எவர்?

நாளை வரும்!
****************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP