Monday, May 28, 2007

மயிலை மன்னாரின் திருக்குறள் விளக்கம் -- 13 "பொழுது கண்டு இரங்கல்"

மயிலை மன்னாரின் திருக்குறள் விளக்கம் -- 13 "பொழுது கண்டு இரங்கல்"

"நீ சொன்னதெல்லாம் கற்பனையின் உச்சம். எல்லாமே பொய். திருவள்ளுவர் கூட காதல்னு வந்தா, கன்னாபின்னான்னு சொல்றார் அப்படீன்னு போன அதிகாரத்தைப் படிச்சவங்க சொன்னாங்க" என்ற பீடிகையுடன் மன்னாரைச் சீண்டினேன்.

"என்னை இன்னா பண்ணச் சொல்றே! அவரு ஸொன்னதை அப்பிடியே ஸொன்னேன். அவ்ளோதான். நா இன்னா செய்யமுடியும்? ஆனா, அதுக்காவ, ஐயனைக் கொறை சொல்லாதே! உள்ளதை உள்ளபடியே சொல்லணும்னாலும் அதையும் சொல்லுவாரு அவரு. இப்போ அது மாரி, ஒரு அதிகாரம் ஸொல்றேன். சாயங்காலம் ஆச்சுன்னா ஒரு பொண்ணோட மனஸு இன்னா பாடு படும்னு புட்டு புட்டு வெச்சிருக்காரு ஐயன்! ம்... எளுதிக்கோ!" என்றான் மயிலை மன்னார்.

இனி வருவது குறளும், அதற்கான அவன் விளக்கமும்!


"அதிகாரம் -- 123" "பொழுது கண்டு இரங்கல்"

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்


வேலைநீ வாழி பொழுது. [1221]


"பொளுதெல்லாம் நல்லாத்தான் போகுது. காலைல எளுந்துரிச்சதும், பரபரன்னு வேலை செஞ்சு, அவருக்கு ட்ரெஸ்ஸு எடுத்து வெச்சு, நாஷ்டா பண்ணிப் போட்டு, மத்தியானத்துக்கு சோறு கட்டிக் கொடுத்து, அவரை அனுப்பி வெச்சதுக்கு அப்பொறம், வீட்டு வேலையெல்லாம் செஞ்சு முடிச்சு, சாப்ட்டுட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டு, சாயங்காலம் ஆச்சுன்னா, மொகம் களுவி, பொட்டு வெச்சு, பூ வெச்சு, சீவி சிங்காரிச்சுகிட்டு, அவரு வர்ற வளியையே பாத்துகிட்டு நிக்கறப்ப ஒரு தவிப்பு வருதே, அது என் உசிரையே குடிக்கற மாரி இருக்குது.

அதே மாரி, அவனுக்கும், வேலையெல்லாம் முடிச்சிட்டு, எப்போடா பொண்டாட்டியைப் போய் பார்ப்போம்னு துடிப்பான்.

இப்பிடி ரெண்டு பேரையும் இந்தப் பாடு படுத்தற மாலைப்பொளுதே! நீ நல்லா இரு கண்ணு! ஒனக்கு புண்ணியாமாப் போவட்டும்! ஏன் எங்க உசுரை இப்பிடி வாங்கறே நீ?"

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்

வன்கண்ண தோநின் துணை. [1222]

"இன்னும் கோவம் தீரலை இந்தப் பொண்ணுக்கு! இந்தப் பாட்டிலியும் தொடர்ந்து திட்டறா!"

" ஏ மங்கிப் போன மாலைக்காலமே! நீ நல்லா இருடி அம்மா! ஆமா, ஏன் நீ இப்பிடி மங்கிப் போயிருக்கே! பகல்லே எல்லாம் பளபளன்னு இருந்தே! இப்ப 'டல்'லாயிட்டியே! ஒன்னோட ஆளும் எங்காளைப் போல நெஞ்சில ஈரமில்லாத ஆளா? இன்னும் வரலியா? அதான் சாயம் போயி மங்க ஆரம்பிச்சிட்டியோ?"

எனக் கிண்டல் செய்யறா!


பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துளிஅரும்பித்

துன்பம் வளர வரும். [1223]

"இன்னும் அவர் வரலை. நான் இங்க வாசல்லியே நிக்கறேன். வெளிச்சமும் கொஞ்சம் கொஞ்சமா நடுங்கிக்கிட்டே ஒளியறமாரி மங்குது.
இது மங்க மங்க, துளித்துளியா என்னோட மனக்கவலை அதிகமாயிட்டே வளருதே!"

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து

ஏதிலர் போல வரும். [1224]

இந்த சாயங்காலப் பொளுது இன்னா மாரி இருக்குன்னு சொல்லுது அந்தப் பொண்ணு இந்தக் குறள்ல. கேட்டுக்கோ!

"6 மணி ஆச்சுது. இந்தப் பொண்ணு நல்லா சிங்காரிச்சுகிட்டு வாசக் கதவாண்டை நிக்குது.
வெய்யிலு சுளீருன்னு அடிக்குது. லேஸா வேர்க்குது. கர்ச்சீப்பை எடுத்து அப்பப்ப துடைச்சுக்குது.
இன்னும் அவரு வரலை.
வெய்யில் கம்மியாகி, மெதுவா இருட்டு பரவ ஆரம்பிக்குது.
இப்பிடி, வெய்யில் கொறைஞ்சு, இருட்டு வர்றது எப்பிடி இருக்குதுன்னா,

தூக்கு தண்டனை இடத்துல கைதி நிக்கறான்.
கொஞ்சங்கொஞ்சமா, தூரத்துல இருந்து அந்த தண்டனையை நிறைவேத்தற ஆளு வர்றப்போ எப்பிடி இருக்குமோ, .....அப்பிடி இருக்குதாம்!"

காலைக்குச் செய்ந்நன்று என்கொல் எவன்கொல்யான்

மாலைக்குச் செய்த பகை. [1225]

"ராத்திரியெல்லாம் கணவனோட கூடி முடிச்சு, சந்தோசமா எளுந்திரிக்கைல காலைப்பொளுது ரொம்பவே நல்லா இருக்கு.
அதே, சாயங்காலம் ஆச்சுன்னா, அவரு இன்னும் வரலியேன்னு ஒரே வருத்தாமா கீது.
இந்தக் கார்த்தாலைக்கு நான் செஞ்ச நல்லது இன்னா?
சாயங்காலத்துக்கு நான் இன்னா தீங்கு பண்ணினேன்னு அது இப்பிடி என்னை வாட்டுது?"


மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்தது இலேன். [1226]

"அவரு என்னோட இருந்த வரைக்கும், என்னை விட்டுப் பிரியாம இருந்த வரைக்கும், இந்த சாயங்காலம் அப்படீங்கற ஒண்ணு இம்மாம் தொல்லை பண்ணும்னு எனக்குத் தெரியாமப் போச்சு.
அதே, அவரு இல்லாம இருக்கறப்போ, அல்லாம் புரியுது! "


காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய். [1227]


மொதப்பாட்டுல சொன்னதையே திரும்பவும் வேற விதமா சொல்லிக் காட்டறாரு இதுல.
"காலைல அவரு கிளம்பிப் போனதுக்கப்புறம், கொஞ்சங்கொஞ்சமா அரும்பு விட்டு, ஆரம்பிச்சு, பகல் பொளுதெல்லாம் வளர்ந்து, சாயங்காலம் ஆச்சுன்னா முளுசா மலர்ந்து என்னை வாட்டுதே இந்த துன்பம்!"


அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை. [1228]


இப்ப கொஞ்சம் கற்பனை கலந்து சொல்றாரு ஐயன்!
கிராமத்துல இருக்கறவங்களுக்கு, இல்லாட்டி, அங்கே இருந்தவங்களுக்கு இது நல்லாவே புரியும்.


" மாலை நேரம்!
இந்தப் பொண்ணு காத்துகிட்டு நிக்குது.
இன்னும் அவன் வரலை.
அப்போ, தூரத்துல இருந்து ஒரு புல்லாங்குழல் சத்தம் கேக்குது.
மேய்ச்சலுக்குப் போன மாடுங்கல்லாம் வூட்டுக்கு திரும்பற நேரம்.
மாடுங்களை எல்லாம் ஒண்ணு சேர்க்கறதுக்காவ, மாட்டுக்காரன் புல்லாங்குழலை எடுத்து ஊதறான்.
இது இந்தப் பொண்ணு காதுல விளுது.
ஆஹா! நேரம் ஆயிப்போச்சே! இந்த மாலை அப்படீங்கற கெட்ட பொளுது வர்றதுக்கு தூது சொல்ற மாரி இது இருக்கே" ன்னு ஏங்குது இது.


பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து. [1229]

இப்போ அந்தப் பொண்ணோட கோபம் ஜாஸ்தியாவுது.
வர்ற கோபத்துல, அல்லாருக்கும் சாபம் கொடுக்க ஆரம்பிக்குது! எதுக்காவ?


இந்தப் பொண்ணு சாயந்தரமா வூட்டுக்காரனுக்காவ காத்துகினு நிக்குது.
அவனோ வந்தபாடில்லை இன்னும்!
சாரிசாரியா ஜனங்கல்லாம் அவங்கவங்க வூட்டுக்கு வந்து சேர்றாங்க.

ஒடனே, அந்தந்த வூட்டுக்காரிங்களும் அவங்களுக்கு வக்கணையா சோறாக்கி போடறாங்க!
சிலபேரு வயிறு முக்க துண்றாங்க
இன்னும் சில பேரு சோறு துண்றதுக்கு முந்தி கொஞ்சம் தண்ணி அடிக்கறாங்க.

இது ஒரு கண்ணால அத்தினியையும் பாத்துகினே கீது.

வெய்யில் தீந்து போயி, வெளிச்சம் மங்குது இப்ப.

இவனும் வந்த பாடில்லை.
ஆத்திரமும், துக்கமும் பொத்துகிட்டு வருது இதுக்கு.

"இங்கே நா காஞ்சு கருவாடா நிக்கறேன், அவரு இன்னமும் வரலியேன்னு; இவனுக இன்னாடான்னா தின்னுபுட்டு, குடிச்சுகிட்டு குஷாலா ஆட்டம் போட்டுக்கினு கீறாங்க.

நா எப்பிடி இங்கே அவரைக் காணாம தும்பப்பட்டுக் கீறேனோ, அதேமாரி, இவனுகளும் துண்ணது செரிக்காம, குடிச்சது தலைக்கேறி தும்பப்படட்டும்னு ஒரு சாபம் கொடுக்கறா!"
" என் புத்தியே மயங்கிப் போற மாரி வருது இந்த சாயங்காலம்.
எப்பிடி இங்கே நான் வருத்தப்படறேனோ, அதே மாதிரி, இந்த ஊர்ல இருக்கற அல்லாரும் மயங்கி துன்பத்தை அனுபவிக்கட்டும்!"


பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை

மாயும்என் மாயா உயிர். [1230]

இத்தான் டாப்! இந்த வருத்தம் இந்தப் பொண்ணை இன்னா பண்ணுதுங்கறதை கொஞ்சம் ஓவராவே சொல்லிக் காட்டுது இந்தக் குறள்.

" சம்பாரிச்சுகிட்டு வர்றதுக்காவ போனவரு இன்னமும் வராத இந்த சாயங்காலத்துல, இதுவரைக்கு போவாத என்னோட உசிரு, இன்னைக்கு, இப்ப, இந்த நேரத்துல, அவரை நெனைச்சே போயிரும் போல இருக்கே!"

இதுல எதுவுமே ஜாஸ்தியா ஐயன் சொல்லலை.
இது மாரி காதலனுக்காவ, புருசனுக்காவ ஏங்கிகிட்டு இருக்கற அன்பான பொண்ணுங்களைக் கேட்டுப் பாரு.
உண்மை புரியும் ஒனக்கு.

சொன்ன டயத்துக்கு வூட்டுக்கு போகாங்காட்டி, ஒங்க அண்ணி கண்ணைக் கசக்கிகிட்டு இருக்கும்.
சீக்கிரமா டீயைக் குடிச்சுமுடி.
நா வூட்டுக்கு போவணும்" என்று அசடு வழியச் சிரித்தான் மயிலை மன்னார்.

"சரி, சரி, நீ கிளம்பு" என அன்புடன் விடை கொடுத்தேன், என் நண்பனுக்கு!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP