Wednesday, November 12, 2008

"கந்தன் கருணை" [கவிதைத் தொடர்] - 3

"கந்தன் கருணை" [கவிதைத் தொடர்] - 3
[ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்]




காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்

தம்பிகள் இருவரும் அழிந்ததினால்
தமையனும் கோபம் மிகக் கொண்டான்
தானே போருக்குச் சென்றிடவே
சூரனும் வாளை எடுத்துவிட்டான்

அருமைமகனும் அருகில் வந்தான்
தன்னை அனுப்பிடக் கேட்டுக்கொண்டான் [காலையில்]

தனயன் இருக்கையில் தந்தை செல்லல்
முறையல்லவெனவே பணிந்துநின்றான்
சிறுவனை அழித்திடச் சிங்கமிங்கு
செல்வது தவறென வாது செய்தான்

மதிகெட்ட அரக்கன் மனமகிழ்ந்தான்
மகனை வாழ்த்தி அனுப்பிவைத்தான் [காலையில்]

மாயப்போரினில் வல்லவனாம்
பானுகோபனும் தேரேறி
போர்க்களம் வந்து நின்றிருந்தான்
அரக்கர்படையும் மகிழ்ந்ததுவே

தன்னைப் போருக்கு அனுப்பவென
வீரவாகுவும் வேண்டிநின்றான் [காலையில்]

அனைத்தும் அறியும் எழில்முருகன்
'அப்படியே!' என அனுமதித்தான்
தினவுடைத் தோளன் வீரவாகுவும்
பூதப் படைகளுடன் எழும்பிவந்தார்

கொடியதோர் போரினில் பானுகோபன்
வாகுவை வாளால் வீழ்த்திவிட்டான் [காலையில்]

தலைவனை இழந்த பூதங்களும்
செய்வது அறியா நிலையடைந்து
தாறுமாறாகச் சிதறியதுவே
அரக்கர்படைகளும் மகிழ்ந்தனவே

கந்தன் கண்மலர் திறந்தான்
பூதகணங்களும் உயிர்பெற்றார் [காலையில்]

மறைந்தே தாக்கும் கொடுமரக்கன்
பானுகோபனை அழித்திடவே
மீண்டும் வீரவாகு எழுந்துநின்றார்
முருகனின் அருளால் கதை முடித்தார்

அரக்கர் கூட்டம் அயர்ந்ததுவே
வருத்தம் மிகுந்தே சென்றதுவே [காலையில்]

உற்றமும் சுற்றமும் அழிந்ததினால்
உறவும் அற்றுப் போனதினால்
செய்வது எதுவென திகைத்திருந்தான்
சூரனும் மயங்கித் தத்தளித்தான்

வந்தது சிறுவன் அல்லன்
எனும் தெளிவினை சூரன் பெற்றான் [காலையில்]

அழகிய மனையாள் அழுதுற்றாள்
கணவனைக் காத்திட முறையிட்டாள்
வேலனைப் பணிதல் நலமென்றாள்
மாங்கல்யம் காத்திட வேண்டிநின்றாள்

மனைவியைக் கருணையாய்ப் பார்த்தான்
அவள் கரங்களைப் பற்றி உரைத்திட்டான் [காலையில்]

எவரும் இல்லா ராச்சியத்தை
எவர்க்கென நானும் ஆளுவது
அனைவரும் இருக்கும் பொழுதினிலே
இதைச் சொல்ல ஏனுன்னால் முடியவில்லை

வீரனின் மரணம் வீரன்கையில்
அதை விடுவது முறையல்ல எனச் சொன்னான் [காலையில்]

போர்க்களம் ஏறி சூரன்வந்தான்
புதுபலம் கொண்டது அரக்கர்சேனை
“யாரடா என்னை எதிர்ப்பதிங்கு?”
இடியினைப்போலே முழங்கிட்டான்

வந்தான் முருகன் அவனெதிரே
கண்கள் கூசிடும் பேரொளியாய் [காலையில்]

கண்டவர் வியக்கும் எழில்தோற்றம்
அவன் கருணைக்கடலின் அவதாரம்
கையினில் வேலினைத் தாங்கி நின்றான்
கனியிதழ் புன்னகை பூத்துநின்றான்

என் முருகன் இவனே இவனே
என் தலைவனும் இவனே இவனே [காலையில்]


***************************************************
[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP