Thursday, February 12, 2009

"உந்தீ பற” -- 18 “ஞானமே யோகம்!”

"உந்தீ பற” -- 18

“பகவான் ரமணரின் உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

“ஞானமே யோகம்!”

அடுத்து வரும் பாடலகள் சொல்லும் செய்தி ‘ஞான யோகம்’ !

'கர்மயோகம், பக்தியோகம் ஞானயோகம்’ என அனைத்து வழிகளுமே ‘தன்னை அறிதல்’ என்னும் ஒரு இலக்கை நோக்கியே அமைகின்றன.

இதுவரை சொன்னதெல்லாம், முதல் இரு வழிகளால் இதை எப்படி அடைவது என்பது பற்றி!

இதன் முடிவில் கிடைக்கும் விடை அந்த சாதகனுக்கு ஒரு ஆச்சரியமான உண்மையை உணர்த்துகிறது!

முதல் இரு வழிகளுமே முடிவடைவது இந்த ஞான யோகத்தில் தான் என்பதை!

தனக்கென இல்லாமல் ஒரு செயல் செய்வதை உணர்பவனும், 'இந்தப் பலன் தான் எனக்கு வேண்டும்' என எண்ணாது ’நிஷ்காமியமாக’..... பலன் கருதாது இறைவன் மீது பக்தி செலுத்துபவனும், இறுதியில் உணர்வது இந்த ஞானத்தையே!

ஒரு பிரச்சினை என வரும்போது, அதைத் தடுக்கவே முதலில் முனைகிறோம்.

இந்தப் பிரச்சினை ‘உண்மை’ என நம்பி இதற்கு ஒரு வழி தேட அதில் கவனத்தைச் செலுத்துகிறோம்.
இது உண்மையிலேயே ஒரு பிரச்சினைதானா என உணரக்கூட மறுக்கிறோம்.
இதை எப்படித் தீர்ப்பது என்பதிலேயே நம் கவனம் முழுதுமாகச் செல்கிறது.

சரி! அப்படி ஒரு பிரச்சினை தீர்ந்தவுடன், நம் மனம் அமைதியடைகிறதா என்றால், அதுதான் இல்லை!
இந்தத் தீர்வின் மூலமாகவோ, அல்லது, அதன் பிற விளைவாகவோ மேலும் ஒரு பிரச்சினை இப்போது வந்து ஒட்டிக் கொள்கிறது!

“வினையின் விளைவு வினைக்கடல் வீழ்த்திடும்” என்னும் இரண்டாம் பாடலை இங்கு கவனத்தில் கொள்ளலாம்.

இப்போது கவனம் இதை எப்படித் தீர்ப்பது எனப் போகிறது!

இதற்கெல்லாம் என்ன காரணம் என ஆராய்ந்தால், ‘மனம்’ என்கின்ற ஒன்றே இதையெல்லாம் செய்கிறது எனப் புரியவரும்!

இந்த ’மனம்’ தான் எதையோ ஒன்றைப் பிரச்சினை எனக் கருதி அதை எப்படித் தீர்ப்பது என நம்மைப் பாடாய்ப் படுத்துகிறது!

இதன் போக்கிலேயே போய், அல்லல் படுபவரை விட்டுவிடுவோம்!

இதன்,..... இந்த ‘மனத்தின்’ பிடியிலிருந்து விடுபட ஒரு சிலரே விழைகிறார்கள்!

அவர்களே இதுவரை நான் சொல்லிவந்த ‘சாதகர்கள்’! ‘பயிற்சியாளர்கள்’!

பலவகையிலுமாக முயற்சி செய்து, கர்மயோகம், பக்தியோகம் என எதையாவது ஒன்றினைத் தேர்ந்தெடுத்து, அதிலே தீவிரமாக ஈடுபடுகிறார்கள்!

பிராணாயாமம், ஜெபம், தியானம் எனத் தம்மை ஈடுபடுத்தி, இதில் சிலர் ஜெயிக்கிறார்கள்! சிலர், ‘இதுவே போதும்’ என நிறுத்திக் கொள்கிறார்கள்!; ஒருசிலரே மேலும் பயிற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்!

கர்மம், பக்தி எல்லாம் தன்னை இழுப்பது ஞானமே என இவருக்கு இப்போது புரிகிறது!

இப்போதும் இதை விட்டு விலகும் சாதகர்களும் இருக்கிறார்கள்!

’பிரச்சினை’ என ஒன்றுமே இல்லை; இதெல்லாம் ‘மனம்’ செய்கின்ற மாயை என்பதைப் புரிந்த சாதகன் இதை மேலும் ஆராயத் துவங்குகிறார்!

தாற்காலிகத் தீர்வுகள் எதனையும் தீர்ப்பதில்லை; முழுமையான தீர்வே முதன் முடிவு எனத் தெளிந்த ‘சாதகன்’ ’மனம்’ என்கிற ஒன்றினால் விளைகின்ற எதுவுமே பொய் எனத் தெளிந்து, மனத்தில் இருந்து இதனை அகற்ற முயற்சி செய்து, அதன் மூலம், மனத்தையே அழிக்க முற்படுகிறார்!

‘எல்லா பிரச்சினைகளுமே மனத்தினால் விளைந்த ஒன்றே’ என்னும் உண்மை இப்போது புலப்பட்டு,

‘இது எதனால் விளைகிறது?’ என சிந்திக்கத் துவங்கும் ‘சாதகன்’ அடைவதே ’ஞானம்’!

இதனைப் பயிலுவதே ‘ஞானயோகம்’

இது பற்றி பகவான் என்ன சொல்கிறார்?

திங்கட் கிழமை பார்ப்போம்!

***********************************

[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP