Sunday, July 02, 2006

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 2

இறைவன் என்றும் கைவிட மாட்டான்!
நாகை சிவா

*************************************************************************************

நாகை சிவாவிற்கு எனது மனமார்ந்த நன்றி!

முருகனருள் முன்னிற்கும்!!

திருவிளையாடல் திரைப்படத்தில் ஔவையார் ஒரு வசனம் பேசுவார்;
"முருகா! இதன் மூலம் நீ ஒரு விளையாட்டை நடத்த விரும்பினால், அதற்கு யார் என்ன சொல்ல முடியும்!" என.

அதே போல, அறுபது நிமிடங்களுக்குள்ளேயே, இதனைச் சரி செய்த முருகனுக்கும், உறுதுணையாய்ச் செயல்பட்ட நண்பர் நாகை சிவாவிற்கும், ஆறுதல் சொல்லிய, நம்பிக்கை ஊட்டிய அத்துணைப் பேருக்கும் நன்றி சொல்லி, இப்பதிவினை, மறுபதிப்பு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கம்பர் செய்தது போல, நாகை சிவாவின் பெயரை கூடவே இட்டு நன்றி கூறுகிறேன்!
*************************************************************************************



"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 2



'பக்கரை விசித்ர மணி'

ராகம் :: நாட்டை/மோஹனம்
தாளம் :: ஆதி

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன ---- தனதான

.......பாடல்.......

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை யிளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழ மிடிப்பல்வகை தனிமூலம்

மிக்க அடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கினச மர்த்தனெனு மருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய பெருமாளே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"பொருட்கவிதை"


"பக்கரை விசித்ரமணி, பொன் க[ல்]லணை இட்டநடை
பட்சியெனும் உக்ரதுரகமும்"


"அங்கவடியென்னும் அழகான ஆபரணம் தன்னில்
பங்கமில்லா இரத்தினங்களைப் பாங்காகப் பதித்திட்ட
பொன்னாலான சேணத்தை பொலிவோடு அணிந்துகொண்டு
விண்ணையும் சாடுகின்ற வேகநடை கொண்டங்கு
புரவி போல் பறந்திடும் மயிலென்னும் வாகனத்தையும்,

"நீபப் பக்குவ மலர்த்தொடையும், அக் குவடு பட்டு ஒழிய
பட்டு உருவ விட்டு அருள் கை வடிவேலும்"


கடம்ப மரத்தினிலே பக்குவமாய்ப் பூத்திட்ட
மலர்களால் கோத்திட்ட மணமிகு மாலையையும்,
கிரவுஞ்சமெனும் மாயமலை அழிந்து ஒழியவென
விரைந்தங்கு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய
திருக்கையில் ஏற்றிருக்கும் கூரான வேலையும்,

"திக்கு அது மதிக்க வரு குக்குடமும், ரட்சைதரு
சிற்று அடியும், முற்றிய ப[ன்]னிருதோளும்"


அட்டதிக்கும் நடுநடுங்க சிறகசைத்துக் காட்டி
மற்றவரும் மதித்துவர கொடியினிலே வீற்றிருக்கும்
குக்குடம் என்கின்ற வீரமிகு சேவலையும்,
அனைத்துலகும் காத்துவரும் அழகான சிற்றடிகளையும்,
தினந்து நிற்கும் பன்னிரு தோள்களையும்,

"செய்ப்பதியும், வைத்து, உயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கு அருள்கை மறவேனே"


இப்பதிக்கு வாவென்று அப்போது அருணையினில்
செப்பமுடன் உரைத்திட்ட செய்ப்பதியாம் வயலூரையும்,
இப்போது நீயிந்த பெருமைமிகு திருப்புகழில்
விருப்பமுடன் பாடிடுக எனச்சொல்லி அருளிட்ட
நின் கருணைத் திறத்தினையே எந்நாளும் மறவேனே !

"இக்கு,அவரை, நற்கனிகள்,சர்க்கரை, பருப்புடன், நெய்
எள்,பொரி, அவல்,துவரை, இளநீர்"


தித்திக்கும் கரும்புடனே,அவரையும் ,நற்பழ வகைகளும்
சருக்கரையும், பருப்பும், நெய்யும் சேர்த்துவைத்து
எள், பொரி, அவல், துவரை, இவற்றையும் கலந்தெடுத்து
தானுண்ட நீரைத் தலையாலே தருகின்ற தென்னையின்
ருசியான இளநீரும் விருப்புடனே சுவைத்திடவும்,

"வண்டெச்சில், பயறு,அப்பவகை, பச்சரிசி, பிட்டு,வெள
ரிப்பழம், இடிப்-பல்வகை"


கன்னித்தன்மையுடன் மலர்ந்து, ரீங்காரம் செய்கின்ற
வண்டின் எச்சில் பட்டதாலே, மகரந்தம் என்கின்ற
தீஞ்சுவைத்தேனும் ,பயறு, கொழுக்கட்டை என்னும் அப்பவகைகளும்,
பச்சரிசி, பிட்டு, பாங்காகப் பிளந்திடும் வெள்ளரிப்பழமும்,
உடைத்திடித்து செய்திட்ட பலவகைச் சிற்றுண்டிகளும்,

"தனிமூலம், மிக்க அடிசில்,கடலை, பட்சணமெனக்கொள் ஒரு
விக்கின சமர்த்தனெனும் அருள் ஆழி"


சத்தான சுவையான, ஒப்பற்ற கிழங்கு வகைகளும்,
மொத்தமாக வடித்திட்ட பச்சரிசி அன்னமும்,
கடலை முதலான சத்துவ ஆகாரங்களை
விருப்பமுட்ன் உண்கின்ற, வினைகளை நீக்குகின்ற
விக்கினசமர்த்தன் எனும் அருட்பெருங்கடலே!

"வெற்ப,குடிலச் சடில, விற்பரமர், அப்பர் அருள்
வித்தக மருப்புடைய பெருமாளே."


கயிலையெனும் மலை வாழும், வளைகின்ற சடைகளையும்,
பினாகம் என்கின்ற மேருகிரியாம் வில்லினைக் கொண்டவரும்,
காண்பரிய பெரும்பொருளாம், உலகினிற்கு அப்பனுமாய்
விளங்குகின்ற சிவனார் ஈந்த வளர்ஞானச்சுடரே!
கொம்பொடித்து பாரதம் எழுதிய பெருமையுள்ள ஒற்றைக்கொம்பனாரே!

*************************************************************************
[பக்கரை=அங்கவடி; பொற்கலணை-- தங்கத்தால் ஆன சேணம்; துரகம்--குதிரை; மலர்த்தொடை-- மலர்மாலை; குவடு--மலை; குக்குடம்= சேவல்கோழி; செய்+பதி= வயல்+ஊர், வயலூர்; இக்கு=கரும்பு; வண்டெச்சில்= தேன்; தனி மூலம்= ஒப்பற்ற கிழங்குகள்; ஆழி=கடல்; வெற்ப= மலையில் வசிப்பவர்; குடிலம்=வளைந்த; சடிலம்= சடைமுடி; மருப்பு=தந்தம்.]
********************************************************************************

பாடலின் பெருமை:
அருணகிரியாருக்கு, அருணையில் முருகன் உபதேசம் செய்கிறான்.
ஓர் அடியும் எடுத்துத் தந்து மறைகிறான்.
அருணகிரியாரும், அந்த அடியில் ஒரு பாட்டெடுத்து, திருப்புகழ் பாடி யோகத்தில் ஆழ்கிறார்.
முருகன் அசரீரியாக 'நம் வயலூருக்கு வா' என்று அருள் புரிய, அருணகிரியார் வயலூர்ப் போய் இறைவனைத் தொழுது, திருப்புகழ் பாடும் முறைமையைக் கேட்கிறார்.
இன்னின்னவைகளை வைத்துப் பாடு எனக் குமரனும் பணிக்க,
வயலூரில் எழுந்தருளியிருக்கும் பொய்யாக் கணபதி சந்நிதியில் நின்று, "கைத்தல நிறைகனி" பாடிய பின் அண்ணனிடம், அவரது தம்பியான குமரக்கடவுள் தமக்கு அருளிய திறத்தை வியந்து பாடிய பாடல் இது!
அருணையில் முருகன் அடியெடுத்துத் தந்த பாடல்..... அடுத்த வாரம்!
____________________________________________________________________________________
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!

Read more...

"நல்லோர் நினைவில்......"

"நல்லோர் நினைவில்......"

அன்பு நண்பர்களே!!

வலைப்பூவைப் பற்றியோ, கணினியைப் பற்றியோ, அதிகம் அறிந்திராமல்,
ஏதோ எழுதத் தோன்றுவதை எழுதிப் பதிவு செய்து வரும்
சாதாரண வலைப்பதிவாளனாகிய நான்,
இன்று சற்று எதிர்பாராத ஒரு நேரத்தில்,
எனது, அண்மைப் பதிவான
"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - 2"
[பக்கரை விசித்ர மணி]
என்னும் படைப்பை நீக்கி [delete] இருக்கிறேன்.......
திருத்துவதாக [edit] நினைத்துக் கொண்டு!

உங்களில் யாரேனும் இந்தப் பதிவினை பதிவிறக்கம் [download] செய்து வைத்திருந்தால்,
அதனை எனக்கு அனுப்பினால்,
மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்!

நன்றி!!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP