Monday, April 06, 2009

"மீனாட்சியம்மை கலிவெண்பா” -2 [31 முதல் 60 வரை]

"மீனாட்சியம்மை கலிவெண்பா” -2 [31 முதல் 60 வரை]

‘திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்தது!’

Add Image
[பகுதி-1]

[இந்தப் பகுதியில் வரும் பண்ணழகும், சொல்லழகும், பொருளழகும் அம்மையை நம் கண்ணெதிரே கொண்டுவந்து நிறுத்தும்! மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகள் இதில் சுருங்கச் சொல்லி விளங்கியிருக்கும்! படித்து இன்புறுவோம்!]


நெற்றிதனிற் கண்ணாகி நிட்களரூபப் பொருளாய்
உற்றவெளி யாகிநின்ற வுத்தமியே - பத்திநிரை

ஆகாயத் தின்னொளியாய் அந்தரத்தின் ரூபமாய்
மேகாதிக் குள்ளே விளைபொருளாய் - வாகாம்

இடைபிங் கலையாய் இரண்டுக்கும் எட்டாக்
கடையுஞ் சுழிமுனையாய்க் காலாய் - மடலவிழ்ந்த

மூலாதா ரத்தொளியாய் மும்மண் டலங்கடந்து
மேலாதா ரத்திருந்த வெண்மதியாய்ப் - பாலூறல்

உண்ணுஞ் சிவயோக வுத்தமியே மெய்த்தவமே
பண்ணுமறை வேதப் பழம்பொருளே - எண்ணரிய

மெய்ஞ்ஞான வித்தே விளக்கொளியே மெய்ச்சுடரே
அஞ்ஞான மேயகற்றும் அம்மையே - பைந்நாகம்

பூண்டசிவ னாரிடத்துப் பூங்கொடியே பாங்குடனே
தாண்டவமா டப்பவுரி தாளமொத்தி - ஆண்டியுடன்

ஆடுங்கூத் தாடிச்சி யம்மனைபந் தாடிச்சி
தேடியும்மால் காணாச் சிவசக்தி - நாடியுனைப்

போற்றும்அடி யார்கள் வினைபோக்கியே அஞ்சலென்று
தேற்றுகின்ற அம்மை துடியிடைச்சி - சாற்றறிய

பச்சை நிறத்தி பவளக் கொடியிடைச்சி
கச்சைப் பொருமுலைச்சி கைவளைச்சி - கொச்சை [40]

மலையரையன் பெற்ற மலைச்சி கலைச்சி
நிலையறிவே தாந்த நிலைச்சி - அலையாத

அன்ன நடைச்சி யருமறைச்சி யாண்டிச்சி
கன்னல் மொழிச்சி கருணைச்சி - பன்னுதமிழ்

வாய்ச்சி சடைச்சி வடிவுடைய மங்கைச்சி
பேய்ச்சி இளமுலைச்சி பேதைச்சி - காய்ச்சியபால்

வெண்ணெய் மொழிச்சி வெளிச்சி வெளியிடைச்சி
அண்ணுபுரந் தீயிட்ட அம்படைச்சி - நண்ணிலரும்

கொப்புக் குழைச்சி குவளைப் பொருவிழிச்சி
அப்புச் சடைச்சி சிவகாமச்சி - மெய்ப்பாங்

கருப்புச் சிலைச்சி கலைச்சி வலைச்சி
மருப்புத் தனத்திமவு நத்தி - பொருப்பிடத்தி

தாமப் புயத்தி சமர்த்தி தருமத்தி
நாமச் சிவபுரத்தி நாரணத்தி - தேமருவுங்

காரணத்தி பூத கணத்தி தனபார
வாரணத்தி அட்டதிக்கு மாரணத்தி - பூரணத்தி

பாத பரிபுரத்தி பங்கயத்தி செங்கரத்தி
சோதி மணிநிறத்தி சொப்பனத்தி - பாதிமதி

சூடுகின்ற சொக்கருடன் துய்யபுலித் தோலுடுத்திக்
காடுதனில் வீற்றிருக்கும் காரணியே - நாடறியுஞ் [50]

சேணிச்சி நல்ல சிறுத்தொண்டன் பிள்ளையறுத்
தூணிச்சி நஞ்சமுதாம் ஊணிச்சி - பாணிச்சி

பாசாங்கு சக்தி பரத்தி பருப்பதத்தி
காசாம்பூ மேனிக் கனதனத்தி - மாசிலா

அம்பரத்தி ஐம்புலத்தி யானதொரு வேதாந்த
உம்பருக்கும் எட்டாத வுத்தமத்தி - செம்பொன்வளைச்

செட்டிச்சி வைகைதனிற் சென்றுவெட்டி மண்சுமந்த
ஒட்டச்சி பூதியணி யுத்தளத்தி - அட்டதிக்கு

மின்னே விளக்கே விலையில்லாச் சீவரத்னப்
பொன்னே நவமணியே பூங்கிளியே - இன்னமுதே

மாணிக்க வல்லியே மாமரக தப்பணியே
ஆணிக் கனகத் தரும் பொருளே - மாணுற்ற

சிங்கார வல்லியே செம்பொற் சிலைவளைத்த
கங்காளற் கன்பான கண்மணியே - மங்காத

தெய்வக் குலக்கொழுந்தே செம்பட் டுடைத்திருவே
ஐவருக்குந் தாயாய் அமர்ந்தவளே மெய்யருக்குச்

சித்தி கொடுக்குஞ் சிவானந்தி அன்பருக்கு
முத்திகொடுக் குஞ்ஞான மூர்த்தியே - எத்திசைக்கும்

தாயகமாய்ச் சூழ்தா வரசங்க மம்விளக்குந்
தூயசுடர் மூன்றான சூக்குமமே - வேயீன்ற [60]

*******************************
[அருள்கூர்ந்து பொருள் விளக்கமும் படிக்க வேண்டுகிறேன். பல அரிய செய்திகள் விளங்கும். நன்றி.]


அருஞ்சொற்பொருள்:


31. நிட்களம்-குற்றமற்ற தன்மை; வெளி-சிதாகாசம்; உத்தமி-சிறந்த இலக்கணமுடையவள்; பத்தி-வரிசை.

32. ஒளி- சுடர்; அந்தரம்-ஞானாகாசம்; ரூபம்-வடிவு; விளை பொருள்-உண்டாகும் உயிர்ச்சத்து; மேகம்-மழை; வாகு-அழகு.

33. இடை- இடைகலை, இடதுபக்க நாசி மூச்சுக்காற்று; பிங்கலை- வலதுபக்க நாசியில் வரும் மூச்சுக்காற்று; கடை- இறுதியானது; சுழிமுனை-இடைகலையும், பிங்கலையும் சேரும் இடம்; கால்-காற்று; மடல்-இதழ்கள்; அவிழ்ந்த-மலர்ந்த.

34. மூலாதாரம்- ஆறு ஆதாரங்களில் முதன்மையானது, மும் மண்டலம்- சூரிய, சந்திர, அக்கினி எனும் 3 மண்டலங்கள்; கடந்து- சென்று; மேல் ஆதாரம்-உச்சி இடத்துக்கும் மேல்நிலை; ஊறல்- சுரக்கும்[அமுதம்].

35. எண்-நினைத்தல்; அரிய-முடியாத.

36. மெய்ஞ்ஞானம்-உண்மை அறிவு; அஞ்ஞானம்-அறியாமை; பைந்நாகம்-படத்தைப் பெற்ற பாம்பு.

37. பாங்கு-முறை; ஆண்டி-பிச்சாண்டி.

38. கூத்தாடிச்சி- கூத்தாடியின் பெண்பால்; அம்மனை- ஏழாங்காய் ஆட்டம்; பந்தாடிச்சி-பந்தாட்டம் ஆடுபவள்; மால்-விஷ்ணு.

39. வினை-நல்வினை, தீவினை இரண்டும்; அஞ்சல்-பயப்படாதே; தோற்றுதல்-தரிசனம் தருதல்; துடி-உடுக்கை; இடைச்சி-இடுப்பை உடையவள்; ஏத்து-துதித்தல்.

40. நிறத்தி-நிறம் உடையவள்; கச்சு-இரவிக்கை; பொரு-முட்டுகின்ற; முலைச்சி-தனங்களை உடையவள்; வளைச்சி-வளையல்களை அணிந்தவள்; கொச்சை-மழலைப் பேச்சு.

41. மலையரையன் - மலை அரசன் மலையத்வஜன். மலைச்சி- குறிஞ்சி நிலப் பெண்; கலைச்சி- பல கலைகளையும் அறிந்தவள், சிறந்த ஆடைகளை அணிந்தவள்;மேகலை என்னும் ஒட்டியாணத்தை அணிந்தவள்[[மே]கலைச்சி என்பது முதற் குறைந்து வந்தது]; நிலை- உண்மைத் தன்மை; நிலைச்சி- நிலை பெற்றுள்ளவள்;அலையாத-அசையாத.

42.நடைச்சி-நடையை உடையவள்; மறைச்சி- வேதங்களால் புகழ்ந்து கூறப்படுபவள், வேதங்களுக்குள் மறைந்து காணப்பெறும் உட்பொருளாய் இருப்பவள்; ஆண்டிச்சி-எல்லாவற்றையும்ஆளும் தகுதி பெற்றவள்; கன்னல்-கரும்பு; மொழிச்சி-இனிய சொற்களை உடையவள்; கருணைச்சி- உயிர்களிடம் இரக்கம் உள்ளவள்.

43.வாய்ச்சி- இன்சொல்லுடையவள்; சடைச்சி-சடையை உடையவள்; மங்கைச்சி-இளம்பெண்; பேய்ச்சி- பேய்களால் சூழப் பெற்றவள்;அச்சம் தரத் தக்கவள்; இளமுலைச்சி- பிறரால் சுவைக்கப் பெறாத இளமையான தனங்களை உடையவள்; பேதைச்சி-ஒன்றும் அறியாப் பருவத்தை உடையவள்.

44. மொழிச்சி- சொற்களை உடையவள்; வெளிச்சி-வெட்டவெளியை இருப்பிடமாகக் கொண்டவள்; வஞ்சம் அற்ற வெளிப்படையான குணமுடையவள்; வெளி இடைச்சி- வெட்டவெளியின் நடுவே தோன்றாது இருப்பவள்; அண்ணுபுரம்- நெருங்கிய முப்புரம்; படைச்சி-நகை[சிரிப்பு] என்னும் போர்க்கருவியை உடையவள்; நண்னில்-எளிதில் அடையமுடியாத; அரும்-விலையுயர்ந்த.

45. கொப்பு-மேல் காதில் அணியும் கொப்பு என்னும் அணி; குழைச்சி-கீழ்க் காதில் அணியும் குழை என்னும் நகையணியை உடையவள்; பொரு-போன்ற, வென்ற; விழிச்சி-கண்களை உடையவள்; அப்பு-[கங்கை]நீர்; சிவாகமச்சி- சைவ ஆகமத்தின் தலைவி; மெய்ப்பு ஆம்- உண்மை ஆகிய.

46. கருப்பு-கரும்பாகிய; சிலைச்சி-வில்லை உடையவள்; கலைச்சி-கலைகளின் தலைவி; வலைச்சி-மீனவர் குலத்தில் பிறந்த உமை.;மருப்பு-யானைக்கொம்பு; மவுனத்தி-மோன நிலையில் இருக்கும் பரமேஸ்வரி; பொருப்பு-[இமய]மலை.

47. தாமம்-மாலை; சமர்த்தி-சாமர்த்தியமானவள்; தருமத்தி- அறம் வளர்த்த அரசி; நாமம்-புகழ் வாய்ந்த; சிவபுரத்தி-மதுரையைத் தன்இருப்பிடமாக உடையவள்; நாரணத்தி- நாராயணன் தங்கையான வைஷ்ணவி; தே-தெய்வீகத் தன்மை.

48. காரணத்தி-எல்லாவற்றுக்கும் மூல காரணமாயுள்ளவள்; கணத்தி-கூட்டமாக இருப்பவள்; வாரணத்தி-பெண்யானை போன்ற நடையையுள்ளவள்; மாரணத்தி-அனைத்துக்கும் இறுதி தரக் கூடிய வல்லமையுள்ளவள்; [ஆரணத்தி எனப் பிரித்து வேதங்களுக்குத் தலைவியானவள் எனவும் பொருள் கொள்ளலாம்; பூரணத்தி-எங்கும், எதிலும் நிறைந்தவள்.

49. பரிபுரத்தி-பரிபுரம் என்னும் சிலம்பினை அணிந்தவள்; பங்கயத்தி-அடியார்களின் இதய கமலத்தில் அமர்ந்திருப்பவள்; செங்கரத்தி-செம்மை வாய்ந்த கைத்தலங்களை உடையவள்; சொப்பனத்தி-கனவிலும் வந்து அருள் சுரப்பவள்; பாதிமதி- அரைச் சந்திரன்.[பறைச் சந்திரன் எனவும் கொள்ளலாம்]

50. துய்ய-தூய்மையான; காரனி-உலகின் மூல காரணமாக உள்ள தலைவி.

51. சேணிச்சி-நிலையாதார்க்கு எட்டாத தூரத்தில் இருப்பவள்;[ஆடை நெய்யும் குலத்தில் பிறந்தவள், சொர்க்கத்தை விரும்பும் அடியார்க்கு கொடுத்து அருள்பவள் எனவும் கொள்ளலாம்];ஊணிச்சி- நல்ல உணவை விரும்புபவள், உண்டவள்; பாணிச்சி-செங்கரங்களை உடையவள்;விறகு விற்ற படலத்தில் பாணனாக வந்த சிவனின் தலைவி].

52. பாசம்-பாசக் கயிறு; அங்குசம்- யானையை அடக்கப் பயன்படும் ஈட்டி; பரத்தி-மேலான பிராட்டி, பரதர் குலத்தில் பிறந்த பெண்; பருப்பதத்தி-மலை நாட்டில் பிறந்தவள்; மேலான பதத்தைத் தர வல்லவள்; காசாம் பூ- நீலோத்பல மலர்.

53. அம்பரத்தி- குற்றமற்ற சேலையை உடுத்தியவள்; ஆகாயத்தை உருவாக உடையவள்; ஐம்புலத்தி-சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களின் ஆதாரமாயிருப்பவள்; குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலங்களின் தலைவி; ஒரு-ஒப்பற்ற;உம்பர்-தேவர்; உத்தமத்தி-மேலான இலக்கணங்களையுடைய செல்வி.

54. செட்டிச்சி-செட்டி குலப்பெண்; ஒட்டச்சி-மண் வேலை செய்பவள் [சிவனார் மண் சுமந்த படலம் அறிக.] பூதி-திருநீறு; உத்தளத்தி-உடல் முழுதும் பூசியிருப்பவள்.

55. மின் -மின்னலைப் போன்ற பிரகாசம் உடையவள்; விளக்கு-அஞ்ஞான இருளைப் போக்கும் பிரகாசம்போன்றவள்; சீவ ரத்தினம்-ஐந்தலை நாகத்தின் மணி போன்ற; பொன் -அழகிய இலக்குமி.

56. பணி-ஆபரணங்கள் அணிந்தவள்; ஆணிக் கனகம்- பொன்னால் ஆன ஆபரணம்; மாண்-சிறப்பு.

57. சிங்காரம்-அலங்காரம்; சிலை-மலை; கங்காளர்-எலும்பு மாலை அணிந்த சிவபிரான்; மங்காத-ஒளி குறையாத.

58. கொழுந்து-இளந்தளிர் போன்றவள்; திரு-தெய்வத்தன்மை நிறைந்தவள்; ஐவர்-பிரமன். விஷ்ணு,உருத்திரன், மகேஸ்வரன்,சதாசிவன் எனும் 5 கடவுளர்.தாய்-ஆதி சக்தி;மெய்யர்-உண்மை அடியார்கள்.

59. சிவானந்தி- சிவானுபவம் பெற்றொளிரும் பிராட்டி; மூர்த்தி-தலைவி.

60. தாயகம்-பிறப்பிடம்; தாவரம்-நிலைபொருள்; சங்கமம்-இயங்கு பொருள்; சுடர் மூன்று-தீபச் சுடர்கள் மூன்று[சூரிய,சந்திர,அக்கினி];சங்கமம்-நுண்ணிய பொருள்; வேய்-மூங்கில்.

******************************

[நாளை நிறைவுறும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP