Friday, September 08, 2006

“மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 4”

“மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 4”


பயந்த மாதிரியே நடந்தது!

கொஞ்சம் கோபம், வருத்தம், மகிழ்ச்சி எல்லாம் கலந்த ஒரு பார்வையை என் மேல் வீசிவிட்டு, ‘நாயர், நம்ம ஐயருக்கு ஒரு ஷ்ட்ராங் டீ யும் , ரெண்டு மசால் வடையும் ரெடி பண்ணு’ என்று அதோடு தனது வழக்கமான அன்பையும் விடாமல் சொல்லித் திரும்பினான் மயிலை மன்னார்!

‘என்ன இது? புதுசா ஐயர் என்றெல்லாம் சொல்கிறாயே?’ என்று கேட்டேன்!

‘உன்னை எல்லாம் இப்ப அப்படித்தானே கூப்புடறாங்களாம் நீ எளுதற வலையில! அத்தான் நானும் சொல்லிப் பாக்கலாமேன்னு ….’ என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்தான் மன்னார்.

ஏதோ கந்தசாமி புகளை எளுதினே, சரி,; ஐயன் குறளுக்கு விளக்கம் என்னைக் கேட்டு சொன்னே அதுவும் சரி; அப்பொறம் புச்சா ஏதோ கொளந்தங்களுக்கு பெத்தவங்க எத்தையெல்லாம் சொல்லணும்னு வேற ஆரம்பிச்சேன்னு கேள்விப்பட்டேன்!
ஸரி; நம்ம புள்ளையாண்டான் ஏதோ உருப்படியா செய்றானேன்னு இருக்கக்கொள்ளே, இப்போ புச்சா இன்னாமோ ஒர்த்தருக்கு பதில் கவுத எளுதி செமத்தியா வாங்கிக் கட்டிக்கினியாமே! அது இன்னாத்துக்கு ஒனக்குன்னு நெனச்சேன். இப்படி எதனாச்சும் வெவகாரத்துல மாட்டிக்கினு எங்கையில தான் வந்து நிப்பேன்னு நெனச்சேன்.
பொறவால, அத்தைப் படிச்சேன். நல்ல விசயத்த தான் சொல்லியிருக்கே நீ. ஆனா, அது எம்மாம்பேருக்கு புரியுண்ற நீ? ஆனாக்காண்டியும், சொல்லணும்னு நெனச்சத தெகிரியமா சொன்னே பாரு, அத்தான் நமக்கு ரொம்ப புடிச்சுது நண்பா!” என ஒரு நீண்ட சொற்பொழிவே ஆற்றி விட்டு,

“சரி, சரி! டீ ஆறிப்போவுது! சீக்கிரமாக் குடி! அப்பால ஒனக்கு இத்த பத்தி நம்ம ஐயன் இன்னா சொல்லியிருக்காருன்றதச் சொல்றேன்” எனச் சொல்லி என் ஆர்வத்தைத் தூண்டினான் மன்னார்.

அவசர அவசரமாக டீயையும் மசால் வடையையும் முடித்துவிட்டு, ஆவலுடன் அவனைப் பார்த்தேன்.

சிரித்தவாறே, “இப்ப ஸொல்லணும்னு நெனச்சத தயங்காம சொன்னேல்ல! அதப்பத்தி நம்ம ஐயன் நிறைய இடத்துல ஸொல்லியிருக்காரு. அல்லாத்தையும் இப்ப ஸொல்ல முடியாது! அந்த 73 – வது அதிகாரத்தப் பொறட்டு! நா ஸொல்றத எளுதிக்கோ!” என்றான் கம்பீரமாக!

இனி வருவது, குறளும், மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம் எண் 73 “அவை அஞ்சாமை”

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். [721]

கரீட்டா வந்திருக்கும்மா மொதக் குறளே! இப்ப நீ பலான பலான விசயம்லாம் நடந்திச்சின்னு ஒன் பதிவுல சொல்றேன்னு வையி! அதத் தப்பில்லாம சொல்லணும் ஒரு சபையில போயி ஸொல்றப்ப!
எப்படி ஸொல்லணும்னு தெரிஞவன், எந்த ஆளுங்க நடுவுல பேசணும்னு தெரிஞ்சிகிட்டு, தப்பா ஸொல்ல மாட்டான்.

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். [722]

படிச்சவங்கள்லாம் இருக்கற ஒரு எடத்துல போயி, உனக்குத் தெரிஞ்சதை அவங்க ஏத்துக்கற மாதிரி சொல்லணும். அப்போதான் ஒன்னிய படிச்சவன்னு சொல்லுவாங்க.
அல்லாரும் ஏத்துப்பாங்கன்னு நம்பிறாத அதுக்காவ. ! அங்கியும் சிலபேரு வருவாங்க, இது தப்பு, அது நொள்ளையின்னு சொல்லிகிட்டு, மெஜாரிட்டியா ஏத்துக்கறாங்களா, அதப்பாரு!

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர். [723]

சண்டை போட்டு சாவறதுக்கு ஆயிரம் பேர் வருவான். ஆனாக்க, ஒரு சபையில நின்னு தெம்பா பயமில்லாம ஸொல்றதுக்கு வர்றவன் கொஞ்சப் பேருதான் கிடைப்பான்.
பின்னாடி நின்னுகிட்டு வீரமா சவடால், பீலாவெல்லாம் வுடுவான். ஒரு மேடைல ஏத்து! ஸும்மா, கிடுகிடுன்னு தொடையெல்லாம் ஆடும்!

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்
கற்றமிக்காருள் மிக்க கொளல். [724]

அப்படி ஒருக்கா, ஒரு சபையில போயி ஒனக்குத் தெரிஞ்சத சொல்லிட்டு அப்டியே அம்பேல் ஆயிடக்கூடாது.
அங்கே இன்னும் ஒன்ன விட ஜாஸ்தியா படிச்சவங்ககிட்டேர்ந்து அல்லா விசயத்தையும் கறந்துக்கணும்!

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு. [725]

ஒன் எடத்துல நீ சொல்றது சரி. ஒனக்கு எதுர் கருத்து இருக்கற எடத்துல போயி அங்க, நீ சொல்றத எதுத்து கேள்வி கேட்டாக்கூட, அதுக்கும் பதில் சொல்ற அளவுக்கு தெரிஞ்சு வெச்சுக்கிட்டு போவணும்.
இல்லேன்னா போயி வாயக் குடுக்காதே!

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு. [726]

இப்ப, சண்டை போடப்போறேன்னா நீ கத்தியைப் பாத்து பயப்படக்கூடாது! பயந்தீன்னா வேல ஆவுமா? ஆவாது. இல்லியா?
அதேபோல, ஒரு சபைல ஏறி பேசறதுக்கு பயப்படறவனுக்கும், அவன் படிச்ச பொஸ்தவத்துக்கும் என்னா சம்பந்தம் இருக்குன்ற?
ஒண்ணும் இல்லை. பட்சதெல்லாம் வேஸ்டு!

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல். [727]

இங்கியும் கிட்டத்தட்ட அத்தையேதான் சொல்றாரு.
சண்டைக்கி நிக்கறப்போ, ஒன் கைல இருக்கற கத்தி வெடவெடன்னு ஆடுச்சின்னா இன்னா பிரயோசனமோ, அத்தேதான், சபைல ஏறிப் பேச தொடை நடுங்கறவனுக்கும் அவன் படிச்ச பொஸ்தகத்துக்கும் இருக்குதாம்!

பல்லவை கற்றும் பயனிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தவர். [728]

நல்ல மனுஷங்கள்லாம்,…. கெவனி …. மனுஷாள்னு சொல்லலை, நல்ல மனுசங்கன்னு சொல்லிருக்காரு!…., இருக்கற மண்டபத்துல அவங்க அதை ஒத்துக்கற மாதிரி சொல்லத் தெர்லைன்னா, அவன் எத்தினி படிச்சும் பிரயோசனமே இல்லை.

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார். [729]

"அதோ போறாரே! அவரு இம்மாம் படிப்பு, எத்தினி பொஸ்தகம்லாம் படிச்சிருக்காரு தெரியுமா? ஆன, கூப்ட்டு கேட்டுப்பாரு! ஒரு தபா நம்ம சங்கத்துல வந்து பேசு ஸார்'னு சொல்லிப்பாரு. அப்படியே ஜகா வாங்கிடுவார்"னு ஒருத்தனைப் பத்தி சொல்லும்படியா ஆச்சுன்னா,
அவனை வுட கேடு கெட்டவன் வேற எவனும் இல்லியாம்.
இவனுக்கு படிக்காதவனே மேலுன்றாரு நம்ம ஐயன்!

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்செல்லா தார். [730]

இங்கியும் அதேதான்! இதுமாதிரி, பொது எடத்துக்கு வந்து சொல்றதுக்கு பயப்படறவன் உசிரோட இருந்தாக் கூட சரி;
செத்தவனுக்கு சமானம்தான்!
*****************************************************

இப்ப ஒன்னக்கூட எனக்கு ஏன் புட்சிருக்கு தெரியுமா?
நீ சும்மா இப்படி அப்படின்னு பம்முறவன் இல்லை.
ஒன் பதிவுல தலப்புல ஏதோ போட்டுருக்கியே; ஆங்… இன்னா அது? …அதான் நல்லது ஸொல்றதுக்கு நடுங்க மாட்டேன், பொல்லாத்த எடுக்கறதுக்கு தயங்க மாட்டேன் அப்படீன்னு ஏதோ ஒண்ணு!
அத மாரிப் போட்டுட்டு சும்மா இருக்காம உனக்கு சரின்னு பட்டத நறுக்குன்னு சொன்னே பாரு!
அதான் எனக்கு பிடிச்சுது!
இன்னோரு டீ போட ஸொல்ட்டுமா”
என வாஞ்சையுடன் கேட்ட மன்னாரை மறுக்க மனமின்றி,
நாயர் டீயும் நல்லாஇருக்கும் என்ற ஆசையும் சேர “சரி” என்றேன்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP