Tuesday, March 04, 2008

சிவமாய் நிறைவாய்! "சிவராத்திரி பதிவு"






சிவமாய் நிறைவாய்!




[சிவராத்திரியை முன்னிட்டு ஒரு பதிவு இட வேண்டுமென என் நண்பர் திரு. ராஜா அண்ணாமலை கேட்டிருந்தார்! என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இவை!]


உலகாய் உயிராய் உலவும் பொருளாய்

நிலமாய் நீராய் நெருப்பாய் காற்றாய்
விண்ணாய் விளங்கும் அனைத்திலும் ஒன்றாய்
கண்ணாய் ஒளியாய் சிவமாய் நிறைவாய்!

என்னுள் உறையும் இறையாய் நின்றாய்!
உறையுள் உறையும் வாளாய்ச் சென்றாய்!
எல்லாம் நீயே இயக்கம் என்றாய்!
உறங்கும் போதிலும் நடனம் புரிந்தாய்!

உறைவாய் உறைவாய்! என்னுள் உறைவாய்!
கரைவாய் கரைவாய்! என்னில் கரைவாய்!
பொழிவாய் பொழிவாய்! அன்பைப் பொழிவாய்!
மொழிவாய் மொழிவாய்! முத்தமிழ் மொழிவாய்!

பணிவாய் பணிவாய்! பண்பினில் பணிவாய்!
பனிவாய் பனிவாய்! இமயவன் பனிவாய்!
செவ்வாய் செவ்வாய்! தித்திக்கும் செவ்வாய்!
இசைவாய் இசைவாய்! இன்புடன் இசைவாய்!

அளவாய் அளவாய்! வளமும் அளவாய்!
உணர்வாய் உணர்வாய்! என்னுயிர் உணர்வாய்!
குழைவாய் குழைவாய்! தேனினில் குழைவாய்!
நிறைவாய் நிறைவாய்! என்னில் நிறைவாய்!

அமர்வாய் அமர்வாய்! இதயம் அமர்வாய்!
சொல்வாய் சொல்வாய்! இன்கதை சொல்வாய்!
உருவாய் உருவாய்! உளமே உருவாய்!
வருவாய் வருவாய்! துணையாய் வருவாய்!

தருவாய் தருவாய்! சகலமும் தருவாய்!
அருள்வாய் அருள்வாய்! இணையடி அருள்வாய்!
உறவாய் உறவாய்! என்னுடை உறவாய்!
மலர்வாய் மலர்வாய்! சிவமாய் மலர்வாய்!

வடிவாய் விளைவாய் பொலிவாய் குளிர்வாய்
நகையாய் மணியாய் நலமாய் தவமாய்
வளமாய் வருவாய் அன்பாய் அருள்வாய்
சிவமாய் சிவனாய் செம்மையாய் ஆக்குவாய்!

என்னில் உறையும் இறைவன் இவனே
நம்மை எழுப்பும் நடனம் புரிவான்
தன்னை உணரும் அனைவரின் மனதில்
இன்றே இவனே நடனம் புரிவான்!

சிவனிவன் நடனம் ஆடிடும் இறைவன்
அவனடி நிழலே அடியவர் துணையே!
சுடலையில் நடமிடும் நடுநிசியிரவில்
சிவனுடை நினைவு சுகமும் தருமே
!

************************************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP