Sunday, September 30, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 7

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 7

முந்தைய பகுதி இங்கே!



5. "ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இனிஒருவற்கு

அஃதிறந்து வாழ்தும் எனல்" [971]






சட்டென நிமிர்ந்தான் கந்தன்!

இவருக்கு எப்படி நான் ஆடு மேய்க்கறவன்னு தெரிஞ்சுது?

ஒரு விதமான பயத்துடன் அவரைப் பார்த்து,
"ஏதோ, தேவையானது இருக்கு."
எனச் சொன்னான்.

"அப்போ பிரயோசனமில்லை. இது கொஞ்சம் கஷ்டம். ஒனக்குத் தேவையானது ஒன்கிட்ட இருக்குன்னா, என்னால ஒண்ணும் பண்ண முடியாது"
என்றவரைப் பார்த்து,

'நான் இவர்கிட்ட எதுவும் உதவின்னு கேக்கலியே. இவரா வந்து ஏன் இப்படிச் சொல்றார்'னு சற்றுக் கோபமானான் கந்தன்.

"தோ! நீயா வந்தே, சோறு கேட்டே. குடுத்தேன். புத்தகத்தைப் பாத்தே. இப்போ எதெதையோ சொல்றே! எனக்கு ஒண்ணும் புரியலை.
என் புஸ்தகத்தைக் கொடுங்க! நான் போவணும்" என்றான்.

'ஒங்கிட்ட இருக்கற ஆடுங்கள்ல பத்துல ஒரு பாகம் எனக்கு குடு. புதையல் எங்கே இருக்குன்னு நான் ஒனக்கு சொல்றேன்"
என்றான் கிழவன் அமைதியாக!

உறைந்து போனான் கந்தன்!

'அந்தக் கிழவியாவது ஒண்ணுமே வாங்கிக்கலை என்கிட்ட! இவரு அதை ஒட்டுக் கேட்டிருப்பாரு போல. அதை வெச்சு என்னோட ஆட்டை வாங்கப்
பாக்கறாரு. சீக்கிரமாக் கிளம்பிறணும் இந்த இடத்தை விட்டு' என எண்ணியவாறே, எழ முயற்சித்தவன்,

கிழவன் இவனை லட்சியமே செய்யாது, பக்கத்தில் கிடந்த ஒரு குச்சியை எடுத்து தரையில் ஏதோ வரைவதைக் கவனித்தான்.

கிழவன் மார்பில் இருந்த துணி சற்றே விலகி இருந்தது.

மார்பில் ஒரு தங்க ஒளி!

இலைகளால் கோத்த ஒரு தங்கமாலை போல ஏதோ ஒன்று சூரிய ஒளியில் மின்னியது.

சரேலென்று, தன் துணியை மூடினான் கிழவன்!

கந்தன் அவன் என்ன எழுதுகிறான் எனப் பார்வையைத் திருப்பினான்.

அங்கே.....

கந்தனின் தாய் தந்தையர் பெயர்களும், செல்லி என ஒரு பெயரும் எழுதப் பட்டிருந்தன!

"எனக்கு எப்பிடி இதெல்லாம் தெரியும்னு அதிசயப் படறியா? நாந்தான் சொன்னேனில்ல சிதம்பரத்துக்கு ராசா நானுன்னு!" எனச் சிரித்தான் கிழவன்!

'ஒரு ராசா வந்து எதுக்கு என்னியப் போல ஒரு ஆடு மேய்க்கறவனோட பேசணும்?' என தயக்கத்துடன் கேட்டான், கந்தன்.

'அதுக்கு எத்தினியோ காரணம் இருக்கும். இப்போதைக்கு, நான் சொல்றதை மட்டும் கேளு! நீ ஒன்னோட லட்சியம் எதுன்னு தெரிஞ்சுகிட்டே; அதுக்காவத்தான் நான் இப்பிடில்லாம் பேசறேன்னு
வெச்சுப்போமே! சின்ன வயசுல ஒவ்வொருத்தனுக்கும் தான் இன்னா பண்ணனும்னு ஒரு நெனப்பு வரும். அந்த வயசுல எல்லாமே
தெளிவா இருக்கும். இதான்,.... இன்ன வளியிலதான் பண்ணனும்னு ! தான் இன்னாவா ஆவணும்,
அதுக்கு என்னல்லாம் பண்ணனும்னு கூடத் தெளிவாத் தெரியும். ஆனா, நாளாவ, நாளாவ, அவனுக்கே தெரியாம,
ஒரு அவநம்பிக்கை அவன் மனசுல வர ஆரம்பிக்கும். இது நம்மால முடியாது. இதுக்கு யாரும் ஒதவ மாட்டாங்கன்னு
அவனே இப்ப முடிவு பண்ண ஆரம்பிச்சிடுவான்.'

கந்தன் ஒன்றுமே புரியாமல் அவரைப் பார்த்தான். கிழவன் பேசிக்கொண்டே போனான்.

'தொவக்கத்துல பாத்தியானா, இது ஒன்னோட லட்சியத்துக்கு நேர்மாறா இருக்கற மாரித்தான் தோணும். ஆனா, கவனமாப் பாத்தியானா,
இந்த லட்சியத்தை நீ அடையறதுக்கான தடைங்களைத்தான் இது பட்டியல் போட்டுக் காட்டுதுன்னு புரியும். ரொம்பப் பேருக்கு இது புரியறதுல்ல.
ஆகா!இத்தினி கஷ்டம் இதுல இருக்கான்னு மலைச்சிப் போயி, சரி, நம்ம விதி அவ்ளோதான்னு அப்பிடியே விட்டுருவானுக!



கொஞ்சப் பேருங்கதான், இந்த சூட்சுமத்தைப் புரிஞ்சுகிட்டு, இதான் நமக்கு இந்த ஆண்டவன் செய்யணும்னு விதிச்சிருக்காரு. இது என்னோட
ஆத்மா சொல்ற விசயம். இந்தத் தடையை எல்லாம் அதுதான் எனக்கு காட்டுது. அதைத் தாண்டி உடைச்சுகிட்டு நான் இதை செஞ்சு முடிப்பேன்னு
கிளம்புவானுங்க! இப்ப அதான் உனக்கும் புரிஞ்சு இருக்கு!"

இன்னமும் விளங்காமல், கந்தன், அவரைப் பார்த்து,



"பல ஊருக்கும் போவணும். செல்லியோட பேசணும். ஆடு வளக்கணும்.
இதான் என் லட்சியம்னு இருக்கற எனக்குமா?" என அவநம்பிக்கையோடு கேட்டான்.

'ஆமா! அது மட்டுமில்ல! கனவுல கண்ட புதையலை அடையணும்னு ஒரு வெறி இப்ப ஒனக்கு வந்திருக்கு. ஒனக்கு இருக்கற மாதிரியே
இந்த ஒலகத்துக்கும் ஒரு ஆத்மா இருக்கு.அதுக்கு இந்த ஒலகத்துல இருக்கற மனுஷங்களோட சந்தோசம்தான் முக்கியம்.



கூடவே துக்கம், பொறாமை, வெறுப்பு இதெல்லாமும் அதுக்கு இருக்கு. ஆனா, இதெல்லாமே அதுக்கு ஒண்ணுதான். வேறுபாடே இல்லை அந்த ஆத்மாவுக்கு!
நீ இதுல எதுனாச்சும் ஒண்ணை... அது சந்தோசமோ, துக்கமோ, இல்லை பொறமையோ எதுன்னாலும் சரி,... தீர்மானமா விரும்பினியானா
அந்த ஆத்மா உன்கூடவே இருந்துகிட்டு, அதை உனக்கு கிடைக்க ஒதவும். இதான் சூட்சுமம்."

இருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தனர். கிழவன் கந்தன் முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
கந்தன் கிழவர் சொன்னதை மனதில் உள்வாங்கி யோசித்துக் கொண்டிருந்தான்.

"இன்னமும் எம்மேல நம்பிக்கை வரலைல்ல ஒனக்கு? சரி!....உங்க வாத்தியாரு என்ன சொன்னாரு உனக்கு?" எனத் திடீரெனக் கேட்டார் கிழவர்!

திகைத்துப் போனான் கந்தன்!

......."கந்தா! உலகம் இந்த ஊரோட நின்னு போகலை. இதுக்கு மேலேயும் இருக்கு. உன்னைச் சுத்தி நடக்கற ஒவ்வொண்ணுத்தையும்
கவனமாப் பாரு.எதையும் மறக்காதே! எல்லாமே ஒருநாளைக்கு உனக்கு உதவும்.பல இடத்துக்கும் போகப் பாரு.
எங்கே இருந்தாலும் நீ நல்லா இருப்பே"...........


வாத்தியார் சொன்னதை அப்படியே ஒப்பித்தான் கந்தன்.

'அதெப்படி ஒங்களுக்குத் தெரிஞ்சுது?' அவன் குரலில் ஒரு மரியாதை தானாக வந்தது!

"அதை விடு! அதோ அங்கே கடை போட்டிருக்கான் பாரு! அவனும் ஒன்னிய மாரித்தான். பல ஊரும் பாக்கணும்னு நினைச்சான். ஆனா, அதுக்குப் பணம்
வேணுமேன்னு நினச்சு, அந்தக் கடையைப் போட்டு, கொஞ்சம் கொஞ்சமா பணம் சேத்துகிட்டு வரான்!
வயசானதும் ஒருநாளைக்கு, பட்டணம்லாம் போவணும்னு முடிவு பண்ணியிருக்கான்! நெனைச்சிருந்தா, எப்போ வேணும்னாலும் போயிருக்கலாம்.
ஆனா, அதுக்கு முந்தி, தான் ஒரு பணக்காரன் ஆவணும், பணம் சேக்கணும்னு ரூட்டை மாத்திகிட்டான். நெனச்ச மாரி, அப்பவே
கிளம்பியிருந்தான்னா, இந்நேரம் பல ஊருங்களைப் பாத்திருப்பான். ஆனா செய்யலை." என நிறுத்தினான்.


"ஆமா. இப்ப எனக்கு ஏன் இதையெல்லாம் சொல்றீங்க?" எனக் கேட்டான் கந்தன்.


"ஏன்னா, இப்ப நீ என்ன செய்யணும் நாமன்னு ஒரு முடிவு எடுக்கற எடத்துல நிக்கறே! அதையெல்லாம் விட்டுட்டு, திரும்பவும்ஆடு மேய்க்கவே போயிறலாமான்னும் யோசிக்கறே! அதான்!" என்றான் கிழவன்.


'ஓ! அப்ப இது மாரி இருக்கறப்பத்தான் நீங்க ஒவ்வொர்த்தர்கிட்டேயும் வருவீங்களோ?' எனச் சற்று ஏளனமாக வினவினான் கந்தன்.


அவனது ஏளனத்தைச் சட்டை செய்யாமல், "இதே மாரி வருவேன்னு சொல்ல முடியாது. ஆனாக்க, எதுனாச்சும் ஒரு வளியில நான் வருவேன்!என்ன பண்றதுன்னு பம்மிகிட்டு இருக்கறப்ப ஒரு தீர்மானமா, இல்லேன்னா, யார் மூலமாச்சும் ஒரு ஆலோசனையா, வருவேன். சில சமயம், கடைசி நிமிஷத்துல வந்து பிரச்சினையை சுளுவா தீத்து வைப்பேன்.இதையெல்லாம் லட்சியம் பண்ணாம அவன் போறானா, அதையும் சிரிச்சுகிட்டே பாப்பேன்! ரொம்ப நேரத்துல நாந்தான் வந்தேன்னே தெரியாது. தானே சமாளிச்சிட்டதா நெனைச்சிக்குவான். சர்த்தான் போடான்னு விட்டிருவேன்!


இப்பிடித்தான் ஒர்த்தன், எதுவானாலும் சரி, முட்டம் கடலாண்டை கிளிஞ்சல் பொறுக்கியே பெரிய ஆளாயிடுவேன்னு சதா சர்வகாலமும் அதையே செஞ்சுகிட்டு இருந்தான்.ஒருநாளு, அவனுக்கும் பொறுமை போயிடுச்சி.இன்னிக்குத்தான் கடைசி நாளு. இன்னிக்கும் ஒண்ணும் கிடைக்கலைன்னா, சர்த்தான் போடான்னு விவசாயம் பண்ணப் போயிடலாம்னு முடிவுபண்ணிட்டான்.அன்னிக்கும் ஒண்ணும் கிடைக்கலை.கிளம்பற நேரம்.அப்பவும் அவனுக்கு இந்த லட்சியத்தை விட மனசில்ல.கடைசி கடைசியா ஒரு தடவை பார்த்துறலாம்னு சல்லடையைப் போட்டான்.அவனோட விடாமுயற்சியப் பாத்த நான், ஒரு பெரிய சிப்பியா என்னை மாத்திகிட்டு, அந்த சல்லடையில போயி விளுந்தேன்.அவனுக்கா ஒரே கோவம்!வெறுப்புல என்னைத் தூக்கி ஒரு கல்லு மேல எறிஞ்சான்.சிப்பி உடைஞ்சுது.உள்ளேருந்து இம்மாம் சைசுல ஒரு பெரிய நல்முத்து!இன்னிக்கு அவன் பெரிய பணக்காரன்!இன்னமும் சல்லடை போடறான்.... ஆளுங்களை வெச்சு!" என்றார் கிழவர்.


'அதெல்லாம் சரி! என்னோட புதையலைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?"


"அது தெரியணும்னா, எனக்கு நீ பத்துல ஒரு பங்கு ஆட்டைக் கொடுக்கணும்!"
கிழவி நினைவு சட்டென வர, 'கிடைக்கற புதையல்ல பத்துல ஒரு பங்குன்னு வெச்சுப்போமே' என்ற கந்தனை ஏமாற்றத்துடன் பார்த்தார் கிழவர்.


"இல்லாத ஒண்ணுல எனக்கு பங்கு தர நீ ஆரம்பிச்சேன்னா, அதை அடையறதுக்கான ஆசை ஒனக்கு இல்லாமப் போயிடும்" என்றார்.


'இல்லே! அதுதான் அந்த சோசியக்கார கிளவிக்கு தர்றதா சொல்லியிருக்கேன். அதான்...." என இழுத்தான் கந்தன்.


'அது அந்தக் கிளவியோட! எனக்கு என்ன வந்திச்சு அதுல? பரவாயில்லை! அந்த மட்டுக்கும் எதுவும் சும்மாக் கிடைக்காதுன்னு புரிய வெச்சாளே கெளவி. அந்த மட்டுக்கு அது உத்தமம்தான்" எனச் சொல்லியவாறே, புத்தகத்தைத் திருப்பி கந்தனிடம் கொடுத்துவிட்டு எழுந்தார் கிழவர்!


"நாளைக்கு இதே நேரம், இதே எடம்! உன்கிட்ட இருக்கற ஆடுங்கள்ல பத்துல ஒரு பங்கை ஓட்டிகிட்டு வா! நான் ஒனக்கு புதையல் எங்கே இருக்குன்னு சொல்றேன்" எனச் சொல்லிவிட்டு, விறுவிறுவென நடந்த கிழவர் கடையைத் தாண்டி திரும்பியதும் மறைந்து போனார்!


[தொடரும்]


*******************************

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 6

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 6


முந்தைய பகுதி இங்கே!

4. "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது." [377]



கிழவி சொன்னதை அசைபோட்டுக் கொண்டே வழியில் இருந்த மற்ற கடைகளைப் பார்த்துக் கொண்டும், சில பொருட்களை வாங்கிக் கொண்டும் கந்தன் சந்தையில் சற்று நேரம் சுற்றினான்.

அப்படிச் சுற்றுவது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

இங்கு வருவோர், போவோர் எல்லாரும் அவனுக்கு அதிகம் தெரியாதவர்கள்!

சிலரை அவ்வப்போது பார்த்தாலும், மிக நெருக்கமாக எவருடனும் பழக வேண்டிய நிர்ப்பந்தம் இங்கில்லை!

அடிக்கடி பார்த்துப் பேசுவதில் ஒரு அபாயம் இருக்கிறது.

நன்கு தெரிந்து போவதாலேயே, ஒருவரைப் பற்றி ஒரு விசேஷ அக்கறை பிறக்க ஆரம்பிக்கிறது.

அவர்கள் நலனில் கொண்ட அக்கறை, இவனை அவர்கள் விருப்பத்துக்குத் தக்கவாறு மாறணும் என அவர்களை நினைக்க வைக்கிறது!

அப்படி நிகழாவிட்டாலோ, உடனே கோபம் வரத் துவங்குகிறது, அவர்களுக்கு.

அடுத்தவர் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெளிவாக இருக்கும் இந்த மனிதர்கள் தன்னைப் பற்றி அவ்வாறு சிந்திக்கிறார்களோ
என்றால் அதுதான் கிடையாது!

சட்டெனச் சிரிப்பு வந்தது கந்தனுக்கு!
கூடவே கோபமும் வந்தது!
செல்லியையும் காணவில்லை.
வயிறு பசிக்க ஆரம்பித்தது.

அருகில் இருந்த பலகாரக் கடைப் பக்கம் சென்று, சோறு வாங்கிக் கொண்டு, கையிலிருந்த புத்தகத்தைப் பிரித்து, சாப்பிட்டுக் கொண்டே,
விட்ட இடத்திலிருந்து படிக்கத் துவங்கினான்!

'எப்ப படிச்சாலும் இந்த வாயுல நுழையாத பேருங்களை எல்லாம் நினைவுல வெச்சுக்கவே முடியறதில்ல!' என வாய் விட்டுச் சொல்லிக் கொண்டே
படிக்கும் போது,


'தம்பி ஏதோ படிக்கறாப்புல இருக்கு' எனச் சொல்லிக் கொண்டே பக்கத்தில் வந்து அமர்ந்தான் ஒரு வயதானவன்.

செல்லியைப் பார்க்க முடியாமல் போன கடுப்பில் இருந்த கந்தனுக்கு, இந்த ஆளின் வருகை எரிச்சலூட்டியது.

'அதான் தெரியுதில்ல' எனச் சொல்லிக் கொண்டே அவனை ஒதுக்கி மேலும் படிப்பது போல பாவனை செய்தான்.

கிழவன் விடுவதாயில்லை.

'சாப்ட்டு ரெண்டு நாளாச்சு! கொஞ்சம் அரிசி சோறு கொடேன்' எனக் கெஞ்சவே, அரை மனதோடு, தன் சாப்பாட்டு இலையைப்
பாதியாகக் கிழித்து, ஒரு பகுதி சோற்றை அதில் தள்ளி, 'இந்தா. சாப்பிடு!' என அவனுக்கு அளித்தான்.

'என்னா புஸ்தகம் அது?' ஒரு வாய் சோற்றை அள்ளி வாயில் போட்டுக் கொண்டே, கிழவன் தொடர்ந்தான்.

'அதான் சோறு குடுத்தாசில்ல? இன்னும் எதுக்கு என்னிய தொந்தரவு பண்றே?' எனக் கேட்க வாயெடுத்தவனுக்கு,
அவன் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது..."பெரியவங்க ஆராயிருந்தாலும், மரியாதையா நடந்துக்கோ"!

'ஆமா! இதான் படிக்கறேன்' என்றபடி புத்தகத்தை அவரிடம் நீட்டினான்.... படிக்க முடியாமல் அவர் இடத்தைக் காலி பண்ணிடுவார்
என நினைத்து!

"ம்ம்ம்! இதுவா?" என்றபடி சில பக்கங்களைப் புரட்டிவிட்டு, "நல்ல புஸ்தகம் தான். ஆனா படிக்கக் கொள்ள எரிச்சலா இருக்கும்"
என்றவுடன் கந்தனுக்கு ஒரே அதிர்ச்சி!

இந்தாளுக்கு படிக்க மட்டுமில்ல, இந்தப் புத்தகத்தையும் படிச்சிருக்காரு என்ற உண்மை புரிய, அவர் மேல் ஒரு மதிப்பு வரத் துவங்கியது.

"வேற எதுலியும் சொல்லாத பெரிய விசயம் எதுவும் இதுல சொல்லிறலை. ஒலகத்துல எவனுக்கும் தன்னோட லட்சியம் எதுன்னு தெரியறதில்ல
அப்படீன்றதைத்தான் இதுவும் சொல்லுது. அது மட்டுமில்ல.இந்த ஒலகத்துல இதுவரைக்கும் சொன்ன மஹா பெரிய பொய்யைத்தான்,
ஒவ்வொர்த்தனும் நம்பறான்னு இது முடியுது" என்று சொன்னவரை ஆச்சரியத்துடன் பார்த்தான் கந்தன்!

அதென்ன உலக மகா பொய்யி? என்றான்.

"அதுவா? ஒவ்வொருத்தனும், அவனவன் வாழ்க்கையில ஒரு கட்டத்துல, போராடிப் போராடிப் போயி, அதையும் மீறிகிட்டு தனக்கு நடக்கறதை பொறுத்துக்க முடியாம,
எல்லாம் விதிப்படி நடக்குது, விதி எனக்கெதிரா சதி செய்யுதுன்னு முடிவு பண்ணிடறான். அதான் மிகப் பெரிய பொய்யி!"


"கொளப்பறீங்களே சாமி!"

"என்னா சொல்ல வரேன்னா, தோல்வியைக் கண்டு தொவண்டு போயிடறான். மேலே தொடராம விட்டுர்றான். அதுக்கு விதி மேல பழியைப் போட்டுடறான். அதான் பொய்யின்னு சொல்றேன்."

'நல்லவேளையா அப்படில்லாம் எதுவும் எனக்கு ஆவலை! படிக்கணும்னு நினைச்சேன், இப்போ ஆடு மேய்க்கறேன்" என்றபடி சிரித்தான் கந்தன்

ரொம்ப நல்லது! அப்பத்தான் நீ நெனச்ச மாரி பல ஊருக்கும் போவ முடியும். இல்லியா?"

"நான் நினைக்கறதை இவர் கரெக்டா சொல்றாரே" என்று எண்ணிய கந்தன், கொஞ்சம் மரியாதையோடு,
"அய்யாவுக்கு எந்த ஊரு?" என வினவினான்.

"நமக்கு எல்லா ஊருந்தான்" என்றான் கிழவன்!

"அதெப்படி? எல்லா ஊருக்கும் வேணுமின்னா போவலாம் . ஆனா, எதுனாச்சும் ஒரு ஊருலேர்ந்துதானே வரணும் யாரும்?" என அவரை
மடக்கினான் கந்தன்.

"அப்டீன்றியா? அப்போ சரி. எனக்கு ஊரு சிதம்பரம்னு வெச்சுக்க"

சிதம்பரம் என்ற பெயரை இதற்கு முன் கேள்விப்பட்டிராத கந்தன், அதை வெளிக்காட்ட விரும்பாமல்,


'ஓ! சிதம்பரமா? அங்கே ஆளுங்கள்லாம் எப்படி?' என அமர்த்தாலாக கேட்டான்.

'ஆளுங்களா? அவங்களுக்கென்ன? நல்லாத்தான் இருக்காங்க, அவங்க அவங்க சண்டையை விடாமப் போட்டுகிட்டு!' எனப் பிடி கொடுக்காமல் கிழவன் சொல்ல,பேச்சை மாற்ற எண்ணி,

'அங்கே நீங்க என்ன பண்றீங்க?' என்றான்.

'நான் என்ன பண்றேனா? நல்லாக் கேட்டே போ! நாந்தான் சிதம்பரத்துக்கு ராசா!' என்று ஒரு போடு போட்டான் கிழவன், சிரித்துக் கொண்டே!

'சரியான பைத்தியம் போல! இவருக்கு என்னோட ஆடுங்க எவ்ளவோ மேலு. அதுங்க இது மாரி உளறாது' என மனதுக்குள் எண்ணியபடியே
மீதி சாப்பாட்டை முடிக்க ஆரம்பித்தான்.

பெரியவர் விடுவதாயில்லை.

"என் பேரு கூத்தன்! உம்பேரு கந்தன் தானே! அது சரி.....எவ்ளோ ஆடு வெச்சிருக்கே நீ ?" என்றார்!


[தொடரும்]
********************

அடுத்த பதிவு இங்கே!






Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP