Saturday, July 22, 2006

அ.அ.திருப்புகழ் -- 5 "தண்டையணி வெண்டையம்"

அருணகிநாதர் அருளிய திருப்புகழ் -- 5

"தண்டையணி வெண்டையம்"


http://www.musicindiaonline.com/p/x/zJbgYyr0Bt.As1NMvHdW

[மீண்டும் ஒரு நீள் பதிவு! விரித்துக் கூறாமல் அப்படியே சொல்லிவிட்டுப் போக மனம் வரவில்லை. அருள் கூர்க!சிறப்பு இணைப்பாக "திருமுருகனின் திருப்பெருவடிவம்" பற்றிய ஒரு விளக்கம் காண்க!]


ராகம்: சிம்மேந்திர மத்யமம்/தன்யாஸி
தாளம்: கண்டசாபு

தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
தந்ததன தந்தனந் --- தந்ததான

>>>>>>>>பாடல்>>>>>>>>

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் --- கொஞ்சவேநின்

தந்தையினை முன் பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொட மணைந்துநின் --- றன்பு போலக்

கண்டுறக டம்புடன், சந்தமகு டங்களும்
கஞ்சமலர் செங்கையுஞ் --- சிந்து வேலும்

கண்களு முகங்களுஞ் சந்திர நி றங்களுங்
கண்குளிர என்றன்முன் --- சந்தியாவோ?

புண்டரிக ரண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் --- கொண்டபோது

பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் --- சிந்தைகூரக்

கொண்டநட னம்பதஞ் செந்திலிலு மென்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் --- கந்தவேளே

கொங்கைகுற மங்கையின் சந்தமண முண்டிடுங்
கும்பமுனி கும்பிடுந் --- தம்பிரானே !

-------------------------------------------------------------------------------------

------பொருள் விளக்கம்-------


"தண்டையணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும்
தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே"


மாதவம் செய்ததாலே மாசு மிக்க தாரகனும்
மரணிக்கும் போது காணுகின்ற பேறடைந்த
சீலமிகு இரத்தினத்தால் சீராக நிரப்பப்பட்ட
கோலமிகு காலணியும் தண்டை எனும் ஆபரணமும்,

நடனமிடும் வேளையினில் இனிய ஒலி செய்கின்ற
வெண்டையம் என்கின்ற வீரமிகு ஆபரணமும்,

பதினாலுலகும் எக்களித்த[க.அ.93]
பதித்த மணிகளால் அணி செய்த
திருவரையில் திகழுகின்ற
கிண்கிணி என ஒலி செயும் ஆபரணமும்,

பொன்னாலும் மணியாலும் புனைந்து கட்டிய
நான்கு வேதங்களின் கீதமிசைக்கும்
பொன்னடியிலும், திருவிடையிலும் திகழும்
சதங்கை எனும் நல் ஆபரணமும்,

வீரமிகும் பாதங்களில்
சீராக ஒலி செய்திடும்
நல்லோசை கேட்டிடவே
நாமகளும் அமர்ந்திருக்கும்
தண்கழல் எனும் தனி ஆபரணமும்,

கற்பென்பது பொதுவெனக் காட்டுதல் போலக்
கற்றிடும் அடியவரின் துயர் களைய
அற்புதமாய் ஒலி கிளப்பி அழகுறவே
ஆடிடும் சிலம்பு எனும் ஆபரணமும்,

சேர்ந்தங்கு இனிதாய் ஒலித்திட,

"நின் தந்தையினை முன் பரிந்து இன்ப அரி கொண்டு
நன் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போலக் கண்டுற"


நடனத்தின் நாயகனாம் நடராசன் முன் நின்று
பண்புடனே வலம் வந்து பவுரி எனும் கூத்தாடலை
இன்பமுற ஆடியே இனிதே களிப்புற்று
அன்புடனே சேர்ந்து நின்றிட்ட நிலை போல
அடியவனும் கண்டின்று ஆனந்தம் அடைந்திடவே,

"கடம்புடன், சந்த மகுடங்களும், கஞ்சமலர் செம்கையும்
சிந்து வேலும், கண்களும், முகங்களும், சந்திர நிறங்களும்
கண் குளிர என்றன் முன் சந்தியாவோ?"


அழகுறத் தொடுத்த கடப்ப மலர் மாலையும்,
எழிலுற அமைந்த மணி முடி மகுடமும்
கமல மலரொத்த சிவந்த திருக்கரங்களும்,
பகலென ஒளிவீசும் ஞான வேலாயுதமும்,
நிலவின் அருள் பொழியும் விழிமலர் பனிரன்டும்,
மலர்ந்து நகைபுரியும் ஆறு திருமுகமும்,
வளரும் மதி போலும் ஒளிச்சிதறல்களும்,
பலவும் காட்டியே என் விழிகள் குளிர்ந்திடவே
உலவும் இவ்வடியவன் முன் தோன்றி அருள் புரியாவோ?

"புண்டரிகர் அண்டமும், கொண்ட பகிர் அண்டமும்,
பொங்கி எழ, வெம் களம் கொண்ட போது"


தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும்
நான்முகனாம் பிரமனின் உலகமும்,
அதனையும் உள்ளடக்கிய வெளி அண்டங்களும்,
இதனால் நம் துயர் தீர்ந்ததென
மகிழ்வுடன் எழுந்து ஆரவாரம் செய்ய,
தகித்திடும் போர்க்களம் நீ புகுந்த போது,

"பொன்கிரி என அம் சிறந்து எங்கினும் வளர்ந்தும்
உன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூர"


பொன்னாலான மலை போல அழகிற் சிறந்து
அளவற்ற தவஞ் செய்த சூரனுக்கு அருளிடவே,
அகிலமனைத்தையும் நின் திருமேனியில் அடக்கியே
மூவுலகையும் ஈரடியால் அளந்திடவே அன்றொரு நாள்
வாமனனாய் வந்த [பிரமனின் தந்தையாம்]
நாரணனும் தன்வடிவம் அதில் கண்டு வியத்தல் போலே,
----------------------------------------------------------------
[முருகனின் திருப்பெருவடிவம். [மாரியம்மன் தாலாட்டு மெட்டில்]]

ஐயன் திருவடிவில் ஆரார் அடங்கி நின்றார்!
உள்ளடியில் அத்துணை மலைகளும் அடங்கின!
திருவடியின் முற்பாதியில் கடல்களும்,
விரல்களிலே இடி, தாரகை, கிரகங்கள் அடங்கின!
வருணனும், குபேரனும், நிருதியும் இராக்கதரும்
மீதமுள்ள கால் பகுதியில் அடங்கி நின்றார்!
கணைக்காலில் முனிவர்களும், தெய்வமணிகளும்,
முழங்காலில் வித்தியாதரர் எனும் அறவோரும்
தொடையினில் இந்திரனும், அவன் மைந்தன் சயந்தனும்,
தொடைமூலத்தில் இயமனும்,
அரையின் முற்பக்கலில் அசுரரும்
விலாப்பகுதியினில் விண்னவரும்,
யாவருமே அடங்கி நின்றார்!
மூலாதாரத்தில் நாகர்களும்,
கோசநுனியினில் அமிர்தமும்,
உந்தியில் உயிர்களும், மார்பினிலே அனைத்துக் கலைகளும்,
முப்புரி நூலில் ஞானமும், நுனிமுடியில் அண்டங்களும்,
உள்ளங்கையினிலே போகப்பொருள்களும்,
தோள்களிலே திருமாலும், பிரமனும் அடங்கினர்!
கைவிரல்களிலே தெய்வப்பெண்டிரும்,
கண்டத்தில் நாதமும் அக்கினியும்,
திருவாயில் வேதங்களும், தமிழ்மறையும்,
பற்களிலே எழுத்துக்களும்,
நாவினிலே ஆகமங்களும்,இதழினில் எழுகோடி மந்திரங்களும்,
நாசியில் வாயுவுமே அடங்கி நின்றார்!
இருகண்களிலே சந்திர சூரியரும்,
செவிகளிலே ஒரு நூறு உருத்திரரும்,
நெற்றியிலே ஓங்காரமும்,
சென்னியிலே சிவபெருமானும் அடங்கி நின்றார்!
ஐயன் உருவினிலெ அனைவருமே அமர்ந்திருந்தார்!
கூடிக் களித்திருந்தார் குவலயத்தோர் மகிழ்ந்திடவே!
------------------------------------------------------------------------
"கொண்ட நடனம் பதம்"

அத்திருப்பெரும் வடிவு கொண்டு
நீ ஆடிய நடனப் பாதங்கள்

"செந்திலிலும் என்றன் முன் கொஞ்சி
நடனம் கொளும் கந்தவேளே!"


தில்லையிலும், கொடுங்குன்றத்திலும் முன்பெனக்குக்
காட்டியருளிய நின் திருமலர்ப் பாதங்களை
இந்தச் செந்தூரிலும் கொஞ்சும்படி ஆடிக்காட்ட
வந்திருக்கும் கந்தன் எனும் அழகனே!

"கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும்"

மலையிற் பிறந்த சந்தனத்தை
கலையாகப் பூசிகொள்ளும்
மலைக் குறத்தியாம் வள்ளியாரின்
வளைக்கரத்தின் வாசம் நுகரும்

"கும்பமுனி கும்பிடும் தம்பிரானே!"

நீ உரைத்த தமிழ் உரைத்த
மாமுனியாம் அகத்தியனார் வணங்கிடும்
தனிப்பெருந் தலைவனே! குமரனே!
-----------------------------------------------------------------------------------

...அருஞ் சொற் பொருள்...

அரி:
பவுரி எனும் கூத்தாட்டு
சந்தொடம்: மகிழ்ச்சி [சந்தோஷம் என்பதன் திரிபு]
புண்டரிகர்: அரியின் நாபித்தாமரை மலர் மேல் இருக்கும் பிரமன்
பகிர் அண்டம்: அண்டத்தையும் உள்ளடக்கிய வெளி அண்டம்
வெங்களம்: சூடான போர்க்களம்
புண்டரிகர் தந்தை: திருமால் [பிரமனின் தந்தை]
கூர: உவகை அடைய
கும்பமுனி: அகத்தியர்
தம்பிரான்: தனிப்பெரும் தலைவன்
------------------------------------------------------------------------------------
அருணகிரி தாள் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP